23 செப்டம்பர் 2011

பி.எட். தொலைதூரக்கல்வி

அன்பு நண்பர்களே,வணக்கம். பி.எட்.பட்டப்படிப்பு தொலைதூரக் கல்விமுறை பற்றி இங்கு காண்போம்.           

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் பி.எட்.மற்றும் எம்.எட்., பட்டப்படிப்புகள் விரைவில் துவக்கப்படும் என்று துணைவேந்தர் ஜி.திருவாசகம் தெரிவித்தார்.

          ஆசிரியர் பணிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாணவ -மாணவிகள் போட்டிபோட்டுக்கொண்டு பி.எட். படித்து வருகிறார்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நடைபெறும் என்பதால் பி.எட். படிப்புக்கு மவுசு இன்னும் கூடியுள்ளது. 

         காரணம் இளம் பி.எட்., பட்டதாரிகள் பாடங்களை தற்போது படித்து முடித்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு பாடங்கள் பசுமரத்தாணிபோல் மனதில் நிற்கும். இதனால் போட்டித் தேர்வுகளில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

        அதற்காக பல ஆண்டுகளுக்கு முன் பி.எட்.மற்றும்  எம்.எட்., பட்டப்படிப்பு முடித்தவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் சொல்லிவிட முடியாது.

        தமிழ்நாட்டில் முன்பு கிட்டத்தட்ட அனைத்து பல்கலைக் கழகங்களிலும் அஞ்சல்வழியிலும் பி.எட். படிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் பட்டதாரிகள் சேர்ந்து பி.எட். பட்டம் பெற்றுவிடலாம். ஆனால் காலப்போக்கில் அஞ்சல்வழி பி.எட். படிப்பு நிறுத்தப்பட்டது.

       தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக மட்டும் தொலைதூரக் கல்வியில் பி.எட். படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் சேர வேண்டுமானாலும் ஏதாவது ஒரு பட்டம் அவசியம். அத்துடன் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரவேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.

         இத்தகைய பி.எட். படிப்பு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், தஞ்சை தமிழ், மதுரை காமராஜர், நெல்லை மனோன்மணியம் ஆகிய பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகள் படிப்பான இப்படிப்பிற்கு நுழைவுத் தேர்வுகள் நடத்தி மாணவர்களை தேர்வு செய்கிறார்கள்.

       இந்நிலையில் சென்னை பல்கலைக் கழகமும், பணியில் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் தொலைதூரக் கல்வியில் பி.எட்.மற்றும் எம்.எட்., படிப்புகளை விரைவில் கொண்டுவர உள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறியதாவது:

       தொலைதூரக் கல்வியில் பி.எட்.மற்றும்  எம்.எட்., படிப்புகளை கொண்டுவருவது தொடர்பாக தொலைதூரக் கவுன்சில்(டெக்) அனுமதி கோரி விரைவில் விண்ணப்பிக்கப்படும். டெக் அனுமதி கிடைத்ததும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு (என்.சி.டி.இ.)விண்ணப்பிப்போம். என்.சி.டி.இ. அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு நடத்துவார்கள்.

        சென்னை பல்கலைக் கழகத்தில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் அனுமதி கிடைப்பதில் சிரமம் இருக்காது. எனவே விரைவில் என்.சி.டி.இ. அனுமதி கிடைத்துவிடும் என்று நம்புகிறோம். அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் நடப்பு கல்வியாண்டிலேயே பி.எட்.மற்றும் எம்.எட்., படிப்புகள் தொடங்கப்படும். பி.எட். படிப்பில் 500 மாணவர்களும், எம்.எட். படிப்பில் 200மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...