24 ஜூலை 2011

வாதம்,பித்தம்,கபம்-முக்குற்றம்.

                               வாதம்,பித்தம்,கபம்-





       வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். 
         உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. . இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
      “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும்.
       மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவு தெரிந்திருக்க வேண்டும். .
          ”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படுகிறது.
          
            இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். 

        பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. 


         கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. 
       இந்த மூன்று வாத பித்த கபமும்
 ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட  அவசியமானது.
      ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள்.
      இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். 
         . புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும்.
        மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும்.
        வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில்  சேர்ப்பது வாதத்தைக் குறைத்திட உதவும்.

          பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். 
    அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் நீளும்..
   இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். 
      நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! 
     பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் 
       கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். 
    அரிசி சாப்பிடலாம்.கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும்.
    பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. 
     மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரணமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பளு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

         அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. 
        பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.
       மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். 
      மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். 
       தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். 
        தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்றினையும் காப்பதில், சமையல்கூடத்திற்கு  பங்கு உண்டு.
   அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. 
      அதனை முட்டாள்தனம் என்றோ பழையது என்றோ ஒதுக்குவது கூடாது. அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். 
     ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். 
      அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது.
     இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

பக்கவாதம்- தீர்வு காண

       
           பக்கவாதம் -பிரச்சினைக்கு தீர்வு


  பக்கவாதம் வந்த பின் பழைய நிலைக்கு திரும்புவது சாதாரண விஷயம் கிடையாது. பெரும்பாலும் நடுத்தர வயதினரைத் தான் பக்க வாதம் தாக்கும்.            
        இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் பக்க வாதம் தாக்குகிறது. 
        உடல் பருமன், அதிகக் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்னை உள்ளவர்களை வாதம் எளிதில் தாக்கும். 
        

          நடுத்தர வயதினரின் உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இந்த இரண்டும் தான் வாதம் ஏற்படக் காரணம் ஆகிறது. 
      ரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வாத நோய் வரலாம். ரத்த அழுத்தத்தின் அடுத்த கட்டமாக மூளைக்கு செல்லும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
       ரத்த ஓட்டம் தடை பட்ட மூளைப் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
       மூளையில் உண்டாகும் பாதிப்புக்கு ஏற்ப முகம், கை, கால் அல்லது முழு  பக்கவாதம் ஏற்படலாம்.

       இத்துடன் தலையில் அடிபட்டு உண்டாகும் மூளை பாதிப்பின் காரணமாக வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
      நாள்பட்ட நோய்களான இதய நோய், சிறுநீரகப் பழுது, அறுவை சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்கள்,  ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் ரத்தக் கட்டிகள் ஆகியவற்றாலும் வாத நோய் வரலாம்.
         குழந்தைகளுக்கு ஏற்படும் பிளீடிங் டிஸ்ஆர்டரின் காரணமாகவும், ரத்த சம்பந்தப்பட்ட வியாதிகளாலும் பக்கவாதம் தாக்கலாம். 
         ரத்த ஓட்டம் தடைபட்டு சிவப்பு அணுக்கள் பிளேட் ஒன்றன் மீது ஒன்றாக படிந்து பிளேட் திரம்டஸ் ஏற்பட்டு ரத்த நாளங்கள் அடைபட்டும் பக்கவாதம் வரலாம்.

         பொதுவாக பக்கவாதத்துக்கு முன்பே உடலில் சில அறிகுறிகள் தென்படும். தலைவலி, வாந்தி மற்றும் சுயநினைவை இழத்தல், கை கால் மரத்துப் போதல், பேச்சு குளறுதல், நடுக்கம், தலைசுற்றல், கை கால் வலு இழத்தல் போன்ற பிரச்னைகள் வரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

        இந்த அறிகுறி தென்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, ரத்த ஓட்டம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.          
          ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதையும் சோதனை மூலம் தெரிந்து கொண்டு தக்க சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

            பாதுகாப்பு முறை:

       இந்தியாவில் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய் ஆகியவை பெரும்பாலானோருக்கு உள்ளது. 
      இவர்களது வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.
      உடலில் உள்ள நோயுடன் எப்போதும் பரபரப்பாக மன அமைதியின்றி இருத்தல், சரியான நேரத்துக்கு தூங்காமல் இருத்தல், தொடர் மன அழுத்தம் ஆகியவை பக்கவாதம் வர வழியமைத்துக் கொடுக்கிறது.
       சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையை அமைதியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

      சரியான நேரத்துக்கு தூங்குவதும், குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுவதும் அவசியம். 
      சரிவிகித சத்துணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது. 
       ஏனெனில் கொழுப்பு கட்டிகள் ரத்த ஓட்டத்தை தடுப்பதாலும் வாதநோய் தாக்கும். 
       சீரான உடற்பயிற்சியும் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். 
      இதேபோல் வாதநோய்க்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பெரிய அளவிலான உடல் பாதிப்புகளை தடுக்க முடியும்.
       வாதத்தின் அடுத்த கட்டமாக உடல் செயலிழத்தல், நினைவிழத்தல் போன்ற பிரச்னைகளை தடுக்கலாம்.

      வழக்கமாக சாப்பிட வேண்டியவை

           புதினா சப்பாத்தி: புதினா ஒரு கட்டு சுத்தம் செய்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். 
       சின்ன வெங்காயம் ஒரு கப் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை அரை கப். கோதுமை மாவை புதினா சாறு சேர்த்து சப்பாத்தி பதத்துக்கு பிசையவும்.
        இதில் உப்பு, மிளகாய்த்தூள், வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். 
       பின்னர் சப்பாத்தியாக போடவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளது.

           மிக்சட் வெஜ் புலவு: கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, காலிபிளவர், முட்டைக் கோஸ், வெங்காயத் தாள், புதினா இலை ஆகியவை இரண்டு கப் கட் செய்து வைக்கவும். 
         இரண்டு கப் பாசுமதி அரிசியை உப்பு சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சாதம் வேகும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். 
       வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாத்தூள், மஞ்சள் தூள், புதினா இலை, கட் செய்த காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
      பாதி வெந்த பின்னர், பாசுமதி சாதம் சேர்த்து கிளறி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். இதில் புரதம், நார்ச்சத்து உள்ளது.

            சிறு கீரை முட்டைப் பொறியல்: சிறு கீரையை 2 கட்டுகள் நன்றாக சுத்தம் செய்து கட் செய்து கொள்ளவும்.
         2 முட்டையை தனியாக அடித்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து சின்ன வெங்காயம் மற்றும் வறமிளகாய் சேர்த்து வதக்கவும். 
        இதில் கீரை சேர்த்து பாதி வெந்த பின் முட்டை சேர்த்து கிளறவும். முட்டை ஊற்றிய பின் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.
        தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும். இதில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உள்ளது.


       பாட்டி வைத்தியம்

           வாதநாராயணன் கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 3 பல் பூண்டு, சுண்டைக்காய், பெருங்காயம், விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி அரைத்து சாப்பிட்டால் முடக்கு வாதம் மற்றும் விரை வாதம் குணமாகும்.

          வாதநாராயணன் கீரை உலர வைத்து அத்துடன் அரிசித் தவிடு, புறா எச்சம் இரண்டையும் சேர்த்து வறுத்து துணியில் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தால் பக்கவாதம் குணமாகும்.

           வேளைக் கீரை, வாதநாராயணன் கீரை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் தீரும்.

                வல்லாரைக் கீரைச் சாற்றில் பூனைக்காலி விதைப் பருப்பை ஊற வைத்துக் காய வைத்துப் பொடியாக்கி, சம அளவு மிளகுத் தூள் சேர்த்து காலை, மதியம் இருவேளையும் சாப்பிட்டு வந்தால் காக்காய் வலிப்பு மற்றும் முடக்குவாதம், கை, கால் வாதம் ஆகியவை குணமாகும்.

           லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு, இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து காலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

            ருத்திராட்சப் பொடி 100 கிராம், முத்துச்சிப்பி பஸ்பம் 100 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து தொடர்ந்து 96 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளையும் அரை கிராம் அளவுக்கு சாப்பிட வேண்டும். முடக்குவாதம் மற்றும் நரம்பு வாதம் குணமாகும்.

             டயட்

                சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கும், கிட்னியில் பிரச்னை உள்ளவர்களுக்கும் ரத்தக்குழாய் தடிமனாக இருக்கும்.             
        இவர்களது உடலில் ரத்த ஓட்டம் குறையும். இதனால் வலியை உணர்வது கடினம். பக்கவாதத்துக்கான அறிகுறிகள் இருந்தாலும் தெரியாது.
         இது போன்ற பிரச்னை உள்ளவர்களை பக்க வாதம் திடீரென தாக்க வாய்ப்புள்ளது.
      உணவில் அதிகளவு கெட்ட கொழுப்பை எடுத்துக் கொள்ளுதல், எப்போதும் டென்ஷனாக இருத்தல், 
       நீண்டகால ரத்த சோகை போன்ற பிரச்னை உள்ளவர்களை பக்கவாதம் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.

              இவர்கள் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை மாதம் ஒருமுறை சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
         மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்தஅளவு பரிசோதனையும் செய்து கொள்ளவும்.
        தினமும் வாக்கிங் மற்றும் சரிவிகித சத்துணவும் அவசியம். உணவில் எண்ணெய் மற்றும் தேங்காய் சேர்ப்பதை கட்டாயம் தவிர்க்கவும்.                               
          வெளியிடங்களில் உணவு சாப்பிடுவது, பாஸ்ட் புட், ஜங்க் புட், சாக்லெட், ஐஸ்கிரீம் வகைகள், நெய் ஆகியவற்றையும் கண்டிப்பாக விட்டுவிடவும்.

        நார்ச்சத்து உள்ள பச்சைக் காய்கறிகள் கட்டாயம் உணவில் இருக்கட்டும். ராகி, கம்பு, சோளம் போன்ற முழு தானியங்களை உணவில் தினமும் ஒரு வேளை சேர்த்துக் கொள்ளவும்.
            பழங்கள், காய்கறி சாலட் மற்றும் சூப் வகைகளும் அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். 
           அசைவம் மாதம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். கோழி மற்றும் மீன் எடுத்துக் கொள்ளலாம்.
       மீன் எண்ணெயில் பொரித்ததாக இல்லாமல் குழம்பாக சாப்பிடலாம். முடிந்த அளவு எண் ணெய் இல்லாமல் சமைப்பது நல்லது

மூல நோய் விரட்ட இளநீர்& வெந்தயம் போதுமே...

மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம். மூலநோயை விரட்ட இதோ....
    
                  ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து எட்டு எண்ணிக்கை எடுத்துக்கோங்க.... ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில வெறும் வயித்துல பத்து  நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் பத்து  நாள் குடிச்சா... மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.
                இளநீரில் ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி, வீட்டு மொட்டை மாடியில ஒரு ராத்திரி வச்சிரணும். காலையில அந்த இளநீரை குடிச்சிட்டு, வெந்தயத்தையும் சாப்பிடணும். தொடர்ந்து ஐந்து  நாள் இதே மாதிரி செய்தா மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கணக்கா... மூலம் ஓடிப்போயிரும். அப்படியும் சரியாகலைனா.... ஐந்து  நாள் கழிச்சி திரும்பவும் சாப்பிட்டா கண்டிப்பா சரியாயிரும்.

            வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா... பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து ஐந்து  தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.

               சோத்துக்கத்தாழை மடல் எடுத்து மேல்தோலை நீக்கி நல்லா கழுவணும். அதுல ரெண்டு அங்குல அளவு துண்டு போட்டு, அப்படியே சாப்பிடணும். தண்ணியில கழுவினாலும் லேசா கசப்பு இருக்கும். அதனால பனைவெல்லத்தையும் சேர்த்துச் சாப்பிடணும். மூலத்தை குணமாக்கற இந்தக் கத்தாழை, கேன்சரைகூட குணமாக்கும். முக்கியமா கர்ப்பப்பை புற்றுநோய்க்கு நல்ல மருந்து இது.

           அடுத்ததா, ஒரு கைகண்ட மருந்து குப்பைமேனி. இந்த செடியைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. சிலர் இதை ஒண்ணுக்கும் ஆகாத செடினு சொல்வாங்க. ஆனா, மூலத்துக்கு இது நல்ல மருந்து. குப்பைமேனி இலையை காய வச்சு நல்லா தூளாக்கி வச்சுக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டா, எல்லா வகை மூலமும் சரியாயிரும்.
                    மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம்  அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.

            மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். 

                 மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும்.

முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.

பாதுகாப்பு முறை:  நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. கேரட் ஜூஸ் தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு குடித்தால் ஓரளவு தீர்வு காணலாம். அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும்.                

ரெசிபி

கருணைக்கிழங்கு குழம்பு: கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும்.

வெந்தயக் கீரை கட்லட்: கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.

பூண்டு சாதம்: பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

டயட்

உணவுதான் மூலத்துக்கு தீர்வு. தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும். முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த  பிரச்னையில் இருந்து விடுபடலாம். வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும். சில்லி சிக்கன், சில்லி மீன் என எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம். சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும்.

அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும்.

அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.

ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும்.

ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும்.

ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும்.

அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.

ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.

இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம்.

இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும்.

இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.

பத்தியம் அவசியம்!




                                 பத்தியம் அவசியமா?
 


         
      ஒரு நோயாளி நோயுற்றிருக்கும் போது உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். அந்நோய் எந்தப் பொருள் சாப்பிட்டால் அதிகமாக ஆகிவிடுமோ அந்தப் பொருளை உண்பதைத் தவிர்க்கவும். 
       
    எந்த செயலால் அந்நோயின் பாதிப்பு அதிகமாக இருக்குமோ அந்தத் தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் கூறுவதே பத்தியமாகும்.
     
     இது போன்ற பத்திய முறையை சித்த மருத்துவர்கள்,  நவீன மருத்துவர்கள், ஆயுர்வேத யுனானி மருத்துவர்கள் அனைவருமே கூறுவதுதான் மரபு. 
    
    அதே நேரத்தில் பத்தியம் என்பது மருத்துவம் செய்து கொள்ளும்போது தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியதும் ஆகும்.
       
    ஆனால் இன்று சித்த மருத்துவர்கள் மட்டுமே பத்தியம் என்ற பெயரில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் மக்கள் மத்தியில் பரவியிருப்பது வருந்தத்தக்கது.
      
      பொதுவாக மருத்துவத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள் கூட அவர்களின் குடும்பத்தில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால், நோயுற்ற நோயாளிக்கு நொய் அரிசிக் கஞ்சியோ அல்லது ரொட்டியோ கொடுப்பார்கள். 
          
     காரணம் காய்ச்சல் நோய் வந்துள்ளபோது வழக்கமான இட்லி, தோசை, சாம்பார், ரசம், மோர் போன்ற உணவை நீக்கி எளிதாக ஜீரணிக்கக் கூடிய அரிசி நொய்க்கஞ்சி, பார்லி, அரிசிக்கஞ்சி, கோதுமை ரவைக்கஞ்சி போன்றவை பொதுமக்கள் மருத்துவர் சொல்லாமலேயே தாமே கடைப்பிடிக்கும் பத்திய முறையாகும்.



        
        
        எனவே பத்தியம் என்பது ஒரு கட்டுக்கு உட்படுதல் ஆகும். நோயுற்ற ஒருவன் அந்த நோய்க்கு ஒவ்வாத பொருட்களை நீக்க வேண்டும் என்பது மிகமிக அவசியம்.
        

      காய்ச்சல் வந்தவர்கள் கஞ்சி சாப்பிடும் வழக்கமில்லை என்று கூறி பட்டினி கிடப்பார்களேயானால் நன்மையே பயக்கும் 
         
     அதைவிட்டு வழக்கமான உணவையே உண்டால் நோய் குணமாவதற்குப் பதிலாக அந்நோயின் தாக்கம் அதிகமாகும்.
             
       எனவே மருத்துவத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்களே இதுபோன்று தாமாகவே ஒருசில உணவு முறைகளைப் பின்பற்றும்பேது மருத்துவர்கள், 
           அதாவது எந்த மருத்துவமுறையை செய்துவரும் மருத்துவர்களாக இருந்தாலும் இதுபோன்ற உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க சொல்ல வேண்டியது கடமையல்லவா!
         
      சித்த மருத்துவர்கள் ஒவ்வொரு நோய்க்கு மருத்துவம் அளிக்கும் போதும் அந்த நோய்க்கு எந்தெந்த பொருள் ஆகாதோ அதனை நீக்கி உணவு உட்கொள்ள வேண்டும் என நோயாளிகளுக்குக் கூறுவார்கள்.
           
      பொதுவாக உடல் வீக்கமுள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் செய்கின்ற போதும் உணவில் உப்பு நீக்கி உணவு உண்ணும்படி கூறுவார்கள். இதற்குப் பெயர் உப்பில்லாப் பத்தியமாகும். இந்த நோய்க்கு எவர் மருத்துவம் செய்தாலும் உப்பு நீக்கியே உணவு உட்கொள்ளச் சொல்வார்.

 உடலில் உப்பு நீர் அதிகரித்து இருப்பதால் உணவிலே உப்பு நீக்கி உட்கொண்டால்தான் வீக்கம் குறையும். 

          ஆனால் அதற்கு மாறாக நோயுற்றிருப்பவர் அதுபோன்ற பத்தியம் தன்னால் இருக்க முடியாது என்றும், தன்னால் அதுபோன்று சாப்பிட முடியாது என்றும் கூறுவாரேயானால் அவரால் அந்த நோயிலிருந்து விடுபட முடியாது. 
         அது எந்த மருத்துவ முறையில் அவர் மருத்துவம் செய்து கொண்டாலும் சரி, மேற்சொன்ன உப்பு நீக்கிய உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை கடைப்பிடிக் கவில்லை என்றால் அந்த நோயாளி குணமடைவது கடினமே.

            சிலேத்துமம் மிகுதியால் (கபம் மிகுதியால்) நிமோனியா காய்ச்சல் இருமல் சுவாசகாசம் போன்ற வியாதிகள் உண்டாகும் போது உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கக் கூடிய உணவுகளான தக்காளி, முள்ளங்கி, கல்யாணி, பூசணி, கீரைத்தண்டு, சௌசௌ போன்ற காய்கறிகள், மோர், ஐஸ் தண்ணீர் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் நோயின் தன்மை அதிகரித்து நோயாளி மிகவும் துன்பத்திற்கு ஆளாவார், நோய் குணமடையாது.
           .

             சித்த மருத்துவர்கள் பொதுவாக இச்சாபத்தியம் இருங்கள் என்று கூறுவார்கள். இச்சாபத்தியம் என்றால் இச்சைக்குரிய ஆண், பெண் சேர்க்கை, லாகிரி பொருட்களை பயன்படுத்துதல், புகைப்பொருட்கள், மாமிச வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
 

             உடம்பு அதிக உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டோ அல்லது மாமிச வகைகளை அதிகமாக உண்டோ சீதபேதியால் துன்பப்படும் போது சூட்டை தரக்கூடிய, அதற்கு காரணமான உணவுகளைத் தவிர்க்கும்படி எல்லா மருத்துவர்களுமே கூற வேண்டும்.
        மேல்நாட்டு மருத்துவர்கள் மற்றும் மேல்நாட்டு மக்களும் பத்தியம் என்றால் என்னவென்று அறியத் தொடங்கி இருக்கிறார்கள்.

          முக்கியமாக மகோதரம், நீராம்பல் எனக்கூடிய பெருவயிறு நோய்க்கு கட்டாயம் பத்தியம் இருக்க வேண்டும் என உணர்ந்துள்ளார்கள். 

      உப்பை நீக்க வேண்டும் என்று முடிவு செய்து பெரும்பான்மையாக உப்பை நீக்கி உணவு உட்கொள்கின்றனர்.
        இதற்குப் பெயர் உப்பில்லா பத்தியம் அல்லவா?
       நமது நாட்டில் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவே இத்தகைய வியாதிகளுக்கு உப்பு, காரம், புளி ஆகியவற்றை நீக்கி உணவு உட்கொள்ள வேண்டும்.

         இதுபோன்ற பொருட்கள் உதவாது எனவும் கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளனர்.
 


         பத்தியம் என்பது பல அர்த்தத்தை உள்ளடக்கிய பொருளாகும். மருந்து சாப்பிடும் போது அம்மருந்து இரத்தத்தில் கலந்து வேலை செய்யாதவாறு தடுக்கும், மருந்து முறிவு உணவுகளை நீக்குதல் ஆகும்.












           இரத்தத்தில் உஷ்ணத்தை உண்டாக்கி இரத்தத்தை கொதிக்கச் செய்யும் பிராந்தி, சாராயம் போன்ற சில பொருட்களை மருந்து சாப்பிடும் போது நீக்க வேண்டியது முக்கியம்.
 

           ரசம், கந்தகம், தாளகம், பூரம், வீரம், நாகம், வங்கம், தாம்பிரம் போன்ற மருந்துப் பொருட்களுக்கு புகையிலை, பாகற்காய், கல்யாண பூசணிக்காய், உளுந்து, கடலை சிறுகீரை ஆகியவை முறிவுப் பொருட்களாகும். 
       எனவே இவை சம்பந்தப்பட்ட மருந்து உபயோகிக்கும் போது அவ்வகை முறிவுப் பொருட்களை நீக்கும்படிக் கூறுவர்.
 

           கொடுக்கப்படும் மருந்துகள் நல்ல வீரியமுடன் நோய் நீக்குவதற்காகவே அவ்வகையான பத்தியத்தைக் கடை பிடிக்க வேண்டியது அவசியம்.

           வாதநோய் முழுமையாக குணமாக வேண்டுமானால் அவ்வகை கட்டுப்பாட்டுடன் இருந்து மருந்து உட்கொள்வதே சிறந்தது. 
        இதுபோன்ற கட்டுப்பாடுகளை மேற்கொள்ள விரும்பாதவர்களுக்கு எவ்வகை மருத்துவம் செய்தாலும் நோய் முழுமையாக குணமாகாது.
 

          வயிற்று வலியால் கஷ்டப்படும் ஒருவனுக்கு கொத்தவரங்காய், சேப்பங்கிழங்கு உதவாது. மருத்துவர் பத்தியம் கூறினால் அதைப் பொருட்படுத்தாமல் உண்டால் வயிற்றுவலி அதிகமாகும்.

         குன்ம வயிற்று வலியால் துன்பப்படும் ஒருவர் தமக்கு துன்பத்தை தரக்கூடிய இத்தகைய உணவு வகைகளை மருத்துவர் கூறுவதற்கு முன்பாகவே தரமாகவே நீக்கி எளிய உணவை உண்டு வந்தால் அதுவே பத்தியம் காப்பதாகும்.
 

      நவீன மருத்துவத்திலும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும்போது இது போன்ற பொருட்களை நீக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றனர். ஆனால் அதை பத்தியம் என்று கூறுவதில்லை.

      ஒரு நோய்க்கு மருத்துவம் செய்து கொள்ளும் நோயாளி மருந்தையும் உண்டு. தன் இஷ்டம் போல் தவறான உணவுகளையும் உண்டு வந்தால், எந்த வகையான மருத்துவ முறைகளாலும் அவரை நோயிலிருந்து விடுபட வைக்க முடியாது.

          மருத்துவம் செய்து கொள்ளும் போது ஒவ்வொருவரும் பத்தியம் காக்க வேண்டும் என்பது முக்கியம். எனவே  மருநதையும் உண்டு தவறான உணவையும் உண்டால் மருந்தின் உண்மையான பலன் கிடைப்பது அரிது என்பதை ஒவ்வொரு நோயாளியும் உணர வேண்டும்.
 

       நோயுள்ளவர்கள் மருந்து உட்கொண்டாலும், உட்கொள்ளாவிட்டாலும் பத்தியம் மேற்கொள்வது அவசியம்.
  
      சீதபேதியால் துன்பப்படும் ஒருவர் சூட்டை தரக்கூடிய பச்சை மிளகாய், மாமிச உணவுகள் தூதுவளைக் கீரை, அரைக்கீரை, மாம்பழம் போன்றவற்றை உண்டால் சீதபேதி குணமாகாது. அதற்குப் பதிலாக நோயின் தன்மைதான் அதிகமாகும்.

        எனவே சித்த மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்து கொடுக்கும் போது கண்டிப்பாக பத்தியம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவார்கள். 

      இது எல்லா மருத்துவ முறைகளுக்கும் பொதுவானதே. ஆனால் சித்த மருத்துவர்கள் மட்டுமே மக்களின் நலம் கருதி பத்தியம் என்பதை கட்டாயமாக இருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

 அதுபோல் மக்களை நேசிக்கும் ஒரு சில நவீன மருத்துவர்களும் இதுபோன்ற பத்தியத்தை கடைப்பிடிக்க சொல்கிறார்கள்.

   
           பத்தியம் என்பது அனைத்து மருத்துவ முறைகளில் உள்ள மருத்துவர்களும் நோயாளிகளிடம் கட்டாயம் கூற வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல இது நோயாளியின் உயிர் சம்பந்தமான விஷயமும்கூட.

    இன்று பல்வேறு முறைகளைச் சார்ந்த சில மருத்துவர்களும், குறிப்பாக சில சித்த மருத்துவர்களும் பத்தியம் என்பதை வைத்தால் எங்கே தம்மிடம் நோயாளிகள் வராமல் போய்விடுவார்களோ? என பயந்து,

       தங்களிடம் வரும் நோயாளிகளிடம் பத்தியம் இல்லை என்று கூறி மருத்துவம் செய்கி றார்கள். இதுபோல் இவர்கள் செய்வது இவர்களுடைய நோக்கம் பணம் பறிப்பது மட்டும் தானே தவிர, மக்களுடைய உடல் நலம் பற்றியதாக கருத முடியவில்லை.
              நன்றி= மருத்துவர்; மு. மணிமேகலை அவர்களுக்கு.  

சித்த மருத்துவம்

            பருவகாலங்களில் மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தி தன்மை குறையும் சூழலைப் பொருத்து குறிப்பிட்ட நோய்கள் பரவுகின்றன.​ 
        மழை,​​ குளிர்,​​ பனி,​​ வெயில் காலங்களுக்குத் தகுந்தபடி குறிப்பிட்ட சில நோய்கள் மொத்தமாக பெரும்பாலான பகுதிகளில் பரவுகின்றன.​


         சித்த மருத்துவக் கூற்றுப்படி கார்காலத்தில் நீர்மூலம் பரவும் நோய்களும்,​​    பனிக் காலத்தில் கொசுக்கள்,​​ பூச்சிகள் மூலம் பரவும் நோய்களும்,​​ 
     வெயில் காலத்தில் தொற்று நோய்களும் அதிகம் காணப்படும்.​                                   பருவகாலத்தில் பூச்சி,​​கொசுக்களின் மூலமாக பரவக்கூடிய நோய்களே அதிகளவில் பரவுகின்றன.​ சிக்குன்-குனியா,​​ டெங்கு,​​ மலேரியா,​​ ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகியவை கொசுக்கள் மூலம் பரவுகின்றன.​ சுற்றுப் புறத்தை சுகாதாரமாக பேணிக்காத்து வந்தாலே இத்தகைய நோய் பரவாமல் தடுக்கலாம்.
      கொசுக்கள் மற்றும் பூச்சிகளை அழிக்க வேப்பிலை,​​ நொச்சி,​​ தும்பை ஆகியவற்றை பயன்படுத்தி புகை போடுதல்,​​ நீரில் கற்பூரம் போட்டு வைத்தல்,​​ கொசு வலை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை தடுக்க முடியும்.​ 
     கார்காலம்,​​ கூதிர்காலம்,​​ முன்பனிக்காலம்,​​ பின்பனிக்காலம்,​​ இளவேனில்காலம்,​​ முதுவேனில்காலம் என அந்தந்த காலங்களுக்கேற்ற உணவு,​​ உடை பழக்கங்களை பின்பற்றிவந்தாலும் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க முடியும்.

     இந்திய மருத்துவத்தில் ஆயுஷ் என அழைக்கப்படும் ஆயுர்வேதம்,​​ இயற்கை மருத்துவம்,​​ யுனானி,​​ சித்தா,​​ ஹோமியோபதி என்ற 5 மருத்துவமுறைகள் உள்ளன.​ 
    ஆங்கில மருத்துவத்தில் செய்யக் கூடிய அறுவை சிகிச்சை தவிர- இதர அனைத்து வகையான சிகிச்சைகளும் இந்திய மருத்துவத்தில் மேற்கொள்ள முடியும்.​

இந்தியாவிலேயே சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழகம் மட்டுமே.​ 
     நாட்டில் 3 சித்த மருத்துவ கல்லூரிகளில் 2 தமிழகத்தில் உள்ளது.​ மற்றொன்று திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.​
     இவைத்தவிர தேசிய சித்தா ஆராய்ச்சிமையம் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது.​ ​
        ஆயுர்வேத சிகிச்சை முறை குறித்த நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.​ 
      சித்தா குறித்த மொழிபெயர்ப்புகள் இல்லை.​
     இந்த மருத்துவமுறை குறித்து பொதுமக்களிடையே அனைத்து தரப்பினரும் பிரபலப்படுத்த வேண்டும்

குடல் புண்



             குடல் புண்   அல்லது வயிற்றுப் புண்

       வயிற்றுப்புண் (Ulcer)  என்று சொல்லப்படும் நோய் மக்களிடையே மிகவும் பரவலாக காணப்படும் ஒன்று. 
       மக்களின் தரம், பலவகை வேறுபாடுகள், செய்யும் தொழில், வசிக்கும் சூழ்நிலை பழக்கவழக்க வேறுபாடுகள், ஆண், பெண் பகுப்பு உணர்ச்சி நிலைகள் போன்றவற்றால் பல தரப்பினருக்கும் சூலை நோய் (வயிற்றுப்புண்) வரும்.
    அடிவயிறு, முன் சிறுகுடல் இவற்றில் தோன்றும் புண் பற்றிய நோய் தமிழில் நீண்ட காலமாக சூலை நோய் என்று வழங்கி வருகிறது. வடமொழியில் குன்மம் எனப்படும்.
 
      வயிற்றுப்புண்ணின் (அல்சர்) வகைகள்

       1. வாயிலிருந்து இரைப்பைக்கு செல்லுகிற வழியில் உணவுக்குழாயில் தோன்றும் ஒரு விதமானது.

        2. இரைப்பை கீழ்ப்பகுதி மேற்பகுதி என இரண்டாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இரைப்பைக்குச் செல்லும் உணவை செரிந்து, செரிந்த பகுதியையும் முன் சிறுகுடலுக்கு அனுப்பும் தொழிலில் ஈடுபட்டிருப்பது இரைப்பையின் கீழ்ப்பகுதிதான். 
     இது கீழ்வயிறு என்று குறிக்கப்படும். கீழ்வயிற்றில் தோன்றும் புண் ‘காஸ்டிரிக் அல்சர்’ எனப்படும்.

          3. இரைப்பை ஏதேனும் ஒரு காரணத்தில் சேதமடைவதுண்டு. அது சேதமடைந்தால் இரைப்பையின் மேற்பகுதியில் புண் தோன்றுவதுண்டு. ஆங்கிலத்தில் இது  ஸ்டமக் அல்சர் எனப்படும் உணவுப் பாதையில் தோன்றும்.
      மூன்றாவது (அல்சர்) புண் இது. கீழ் வயிற்றுப் புண் வேறு. மேல் வயிற்றுப்புண் வேறு. இரண்டும் வேறு வேறு காரணங்களால் தோன்றுகிறது.


        4. சிறு குடல் மிக நீளமானது. வளைந்து வளைந்து இருப்பதனால் அது மிகச்சிறிய இடத்தில் அடங்கி இருக்கின்றது. 
     சிறுகுடலின் முன்பகுதி வயிற்றை அடுத்து இருக்கிறது. இது வடிவில் ஆங்கில எழுத்து யூ (U போன்றது. 
       இந்த முன்பகுதி ஆங்கிலத்தில டுயோடனம் எனப்படும். இங்கு ஏற்படும் புண்ணைத்தான் முன் சிறுகுடல் புண் என்கிறோம்.
         இரைப்பையில் சுரக்கும் காஸ்ட்ரிஜூஸ் என்னும் புளிப்புள்ள ஒரு செரிப்பு நீரின் கோளாறினால் கீழ் வயிற்றுப் புண்ணும், முன் சிறுகுடல் புண்ணும் தோன்றுகின்றன. 
            இந்த ஒற்றுமை பற்றி இரண்டும் பெப்டிக் அல்சர் என வழங்கப்படுகிறது. புளிப்புள்ள திரவம் அல்லது நீ¢ர் பொருள் அமிலம் (Acid) பெப்டிக் என்ற ஆங்கில சொல்லுக்கு ஜீரணிக்கின்ற என்பது பொருள். 
     பெப்ஸிஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு ஜீரணம் என்பது பொருள். அந்தச் சொல்லில் இருந்து திரிந்ததே பெப்டிக் என்ற சொல். 
       ஜீரணமாகாத கோளாறினால் ஏற்படும் ஆறாத புண்ணையே அல்சர் (சூலை நோய்) என்கிறோம்.
      வாய், வயிறு அல்லது இரைப்பை முன்சிறுகுடல், பெருங்குடல் இவையெல்லாம் உணவுப் பாதையில் உள்ள ஜீரண உறுப் புக்கள்,
      உணவை வாயில் போட்டு மெல்லும்போது உமிழ்நீர் என்ற செரிப்புநீர் வாயில் தோன்றி ஸ்டார்ச் என்னும் மாவுப்பொருளையும் சர்க்கரையையும் ஜீரணமாகாத வேறுஉணவுப் பொருட்களுடன் இரைப் பைக்கு செல்கின்றன.

              இரைப்பையில் காஸ்டிரிக் அமிலம் என்ற புளிப்பு நீர் சுரந்து சில சத்துக்களை இங்கே சேகரிக்கும் நிலைக்குகொண்டு வருகின்றன. பொருட்களைச் செரிக்கச் செய்யக் காரணம் சுரப்பு நீ¢ர்களுக்கு என்ஸைம் (Enzyme) என்னும் ஒரு வேதிப் பொருளாகும். 
     காஸ்டிரிக் சுரப்பு நீருக்கு உதவுவன பெப்ஸின், ரெனின் என்ற இரு என்ஸைமினால் புரோட்டீன்கள் என்ற ஊண்சத்துப் பொருட்கள் பெப்டோன் (Peptone)  என்னும் எரிபொருளாக, இரைப்பையில் மாற்றப்படுகின்றன.
           இரைப்பையில் சேர்ந்துள்ள எல்லா பொருட்களும் பாகுபோலாகி முன் சிறுகுடலுக்கு சிறிது சிறிதாக செல்லுகின்றன, 
       காஸ்டிரிக் அமிலம் சில காரணங்களால் சுரக்க வேண்டிய அளவுக்கு அதிகமாக சுரக்கிறது. மிகுதியாக உள்ள இந்த அமில நீர் இரைப்பையிலிருந்து முன் சிறுகுடலுக்கு செல்கிறது. 
            அங்கு ஏதேனும் ஒரு காரணத்தால் சிறிய புண் ஒன்று தோன்றி இருந்தால் அதனை இந்த நீர் ஆறவொட்டாமல் இரணமாக இருக்கும். 
                  இதுதான் குடல் புண் எனப்படும்.
 

மூலம் எனும் நோய்



                                         மூல நோய்




                  பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. 

    மூல நோய் என்றால் என்ன? 
   அதில் எத்தனை வகைகள் உள்ளன? 
    அது எந்தெந்த காரணங்களால் வருகிறது?
   இதைச் சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் ?

         மனித உடலில் கீழ் குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடலில் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீங்கி மலவாயில் எச்சல், நமைச்சல், அப்பு 
       சில நேரங்களில் வலி முதலிய செய்கைகளை உண்டாக்குவது மூலத்தின் அறிகுறிகள் ஆகும்.
 

            மலம் கழிக்கச் செல்லும்போது மலத்தை இறுகச் செய்து மலம் போக முடியாத அளவிற்கு கஷ்டத்தைக் கொடுக்கும். 
      நாமே முயற்சி செய்து மலத்தை வெளியாக்க முயலும்போது நீர் வறண்டு மலம் தீய்ந்து இறுகி இரத்த நாளங்களைக் கீறி அதிலிருந்து கசியும் இரத்தத்தோடு மலம் கழியும்.
           மேலும் ஆசனவாய் வளையங்களில் கிழங்குகளின் முனைகளைப் போலும், வேர்களைப் போலும் மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயில் வலி, கடுப்பு, எச்சல், நமைச்சல், அப்பு வீக்கம் முதலியவையையும் உண்டாக்கும்.

          நோய் வரும் வழி:

*                    கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் உண்ணும்போது அவை மலக்குடலின் கீழ் பாகத்தில் வாதத்தை அதிகம் உண்டாக்கி மலத்தை இறுகச் செய்து இந்த நோயினை உண்டாகும்.
*                  கிழக்கு வகைகளை அதிகம் உட்கொள்வதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும், மாமிச உணவுகளை உண்ணுவதாலும், உணவில் காரத்தை அதிகம் சேர்த்துக் கொள்வதாலும் மூல நோய் வரலாம்.

*           மலவாயை உறுத்தும்படி எப்போதும் உட்கார்ந்திருப்பதும், குதிரை, யானை, ஒட்டகம் இவற்றில் சவாரி செய்வதாலும், உண்ட உணவு செரிக்காமல் இருப்பதாலும் வயிற்றில் மந்தத்தை உண்டு பண்ணக்கூடிய உணவுகளை உட்கொள்வதாலும் வரலாம்.

*       யோக நிலையில் தன்னுடைய உடலின் தன்மைக்கும், வன்மைக்கும் அதிகமாக நிலைத்திருந்தல் காரணமாகவும், அதிக நேரம் மூச்சை அடக்குவதன் காரணமாகவும் இந்த நோய் வரக்கூடும்.

*          பெண்கள் கருத்தரித்துள்ள போது குழந்தை வளர வளர கீழ்க்குடல் அழுத்தப்படும்போதும், ஒரு சிலருக்கு வயிறு பெருத்து பெருவயிறு நோய் முதிர்ந்து பெரியதாகும்போது இந்த நோய் உண்டாவதும் உண்டு.

*        சில நேரங்களில் தாய் தந்தையருக்கு இந்த நோய் இருந்தால் அப்பெற்றோர்களின் உடல் வாகைப் பொறுத்து அவர்களின் சந்ததியினருக்கும் இந்த நோய் வரலாம்.

*          மேலும் பசி நேரங்களில் சாப்பிடாமல் பசியை அடக்குவதாலும், பட்டினி கிடப்பதாலும் மூலாதாரத்தில் வெப்பம் அதிகத்து மூச்சூடு உண்டாகி மலத்தை வெளியில் போகாத படி அடக்கி மலவாயில் அனலை அதிகம் உண்டாக்கி இந்த நோய் உண்டாகும்.

*           மேலும் வாயுவைப் பெருக்கக் கூடிய உணவுகளாலும், செயல்களாலும் மலபபாதை கெட்டு மலத்தை இறுகச் செய்து மலம் வெளிவராதபடி செய்யும்.

*          மலவாய் எச்சல்,  வயிறு இரைதல், வயிறு நொந்து கழிதல், பசியின்மை, புளி ஏப்பம், நீர்வேட்கை, உடல் மெலிதல், உடல் பலம் குறைதல் போன்ற நிலைகளை உண்டாக்கும்.

*              மூலநோயானது மனரீதியாகவும் பாதிப்படையச் செய்யும். மனம் தளரும், அடிக்கடி கோபம் கொள்ளச் செய்யும். தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் சீறி விழச் செய்யும். முகம் வேற்றுமை அடையும். முகத்தில் விளக்கெண்ணெய் பூசியது போலிருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் மூலநோய் உண்டானவர்களுக்கு ஆரம்பக் காலத்தில் அறியலாம்.

      மூலநோயைப் பற்றி ஒவ்வொரு நூல்களிலும் அவரவர் கொள்கைப்படி பல வகைகளாக பிரித்திருக்கிறார்கள். சேகரப்பா 254வது பாடலில் மூலநோயை பத்து வகைகளாக தேரர் வகுத்துள்ளார்.
அவையாவன:

     சீழ் மூலம்: மல வாயிலிருந்து வருவது; சீழ் ஒழுகுவது.

   புண் மூலம்: மலவாயிலிருந்து புண்ணீரொழுகுவது.

   தீ மூலம்: மலவாயிலிருந்து சூட்டுடன் எச்சல் கூடி கழிவது.

   நீர் மூலம் : மலவாயிலிருந்து நீர் போலும், பிசுபிசுப்புடனும் தன்னை அறியாமல் வழிவது.

   முளை மூலம்: மலவாயின் அருகில் முளைபோல் உண்டாவது.

  சதை மூலம்: காய்போல முளை கடுப்போடு வெளியாவது.

  வெளுப்பு மூலம்: மோர்போல் வெளுத்து சிறுகச் சிறுக வெளியாவது.

  காற்று மூலம்: அடிக்கடி காற்று பிவது போல் வெளியாவது.

  பெருமூளை மூலம்: கீழ்க்குடல் கருணைக் கிழங்கின் முளைபோல் ஆடுவது.

யூகிமுனி சிந்தாமணி என்னும் நூலில் மூல நோயை இருபத்தோரு பிரிவுகளாக வகுத்துள்ளார்.

அவை:
1. நீர் மூளை மூலம் (நீர் மூலம்)

நீர் மூல நோயில் வயிறு வலித்தல், கீழ் வயிறு இரைச்சல், மலம் வறண்டு வெளியாகாமல் காற்று மட்டும் பிதல், மலவாயில் நுரையுடன்கூடிய நீர் வழிதல், மலம் வருவது போன்று தோன்றும். ஆனால் மலம் வெளிவராமல் நீர் மட்டும் கசியும் தன்மை கொண்டது.


2 செண்டு முளை (செண்டு மூலம்)

செண்டு மூல நோயில் கருணை கிழங்கு முளைவிடும் போது இருக்கும் வடிவமாய் மலவாயின் பகுதியில் உண்டாகி சிவந்து, பருத்து வெளியாகும். அதை உள்ளுக்கு தள்ளினாலும் உள்ளுக்குப் போகாமல் கடினத்துடன் வறண்டு கன்றிப் போன நிறத்துடன் மிகுந்த வலியை உண்டாக்கும். வயிறு இரையும், மலம் கட்டுப்படும் மலவாயில் வலி ஏற்படும்.

3. பெருமுளை (முளை மூலம், பெரு மூலம்)

முளை மூலம் என்னும் பெருமுளை நோயில் மஞ்சளின் முளையைப் போல் மலவாயில் தோன்றி எச்சல் உண்டாகி தடித்து அடி வயிறு கல்போலாகும். மலவாய் சுருங்கி அப்பு உண்டாகும். இந்த மூலநோயில் இரத்தம் வெளியாகும். வயிற்றுக்குள் காற்றுக்கூடி இரைச்சல், ஏப்பம் இவையுண்டாகும். மலம் காய்ந்து வெளியாகும்.

4. சிறுமுளை (சிற்று மூலம்)

சிற்று மூலம் என்னும் சிறு முளை நோயில் உடலெரியும். மயக்கமுண்டாகும், வயிறு ஊதி பளபளப்பாகும். வயிற்றில் குத்தல், இரைதல், வயிறு இழுத்து பிடித்தது போல் வலித்தல் போன்றவை உண்டாகும். உடல் இளைக்கும். சிறிய முளைகள் மலவாயில் உண்டாகும். அதிலிருந்து ரத்தம் வடியும். உடல் வெளுக்கும். பசி குறையும். இது போன்ற அறிகுறிகள் சிறுமூலத்தில் உண்டாகும்.

5. வறள் முளை (வறள் மூலம்)

வறல் மூலநோயில் உடலில் வெப்பம் மிகுந்து குடல் வறட்சியடைந்து மலம் உலர்ந்தும், இறுகியும் மலம் வெளியாகாமல் தடைப்படும். மலத்தை முக்கி வெளியாக்குகையில் அதனுடன் இரத்தமும் துளிதுளியாக விழும். உடல் வெளுக்கும், பலம் குறையும். இதுபோன்ற அறிகுறி தென்படும்.

6. குருதிமுளை (ரத்த மூலம்)

ரத்த மூல நோயில் தொப்புளில் வலி உண்டாகும். மலம் கழிக்கும்போதெல்லாம் இரத்தமானது குழாயில் இருந்து பீச்சுவதுபோல் பாயும். உடல் வெளுத்து, பலம் குறைந்து கை கால் உளைச்சல் உண்டாகும். மயக்கம், மார்பு நோய், தலை வலி, கண்கள் மஞ்சள் நிறம் அடைந்து காணப்படும்.

7. சீழ்முளை (சீழ் மூலம்)

சீழ் மூல நோயில் மலவாயை சுற்றிலும் கடுப்பும், எச்சலும் உண்டாகும். மலம் போவதற்கு முன்பு சீழோடு நீர் வடிந்து பிறகு மலம் கழியும். அதில் இற்றுப்போன சதை துணிக்குகள் காணப்படும். உடல் வெளுத்தும், மஞ்சள் நிறமாயும், உடல் மெலிந்தும் காணப்படும். சிறுநீர் மஞ்சல் நிறமாக வெளியாகும். இதுபோன்ற தன்மைகளை கொண்டதாக இருக்கும்.

8. ஆழிமுளை (ஆழி மூலம்)

ஆழி மூல நோயில் மலவாயில் வள்ளிக்கிழங்கைப் போன்று பருத்து நீண்டு, ஒரே முளை யாய் தோன்றும். அதை உள்ளுக்குத் தள்ளினாலும் செல்லாது. அதிலிருந்து நீரும், சீழும், இரத்தமும் வடியும். மலம் வெளியாகாது. மலம் தடைப்பட்டு தாங்க முடியாத வலி உண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் ஆழிமூல நோயில் காணலாம்.

9. தமரகமுளை (தமரக மூலம்)

தமரக முளை நோயில் மலவாயிலில் முளை வெளியே தோன்றி தாமரைப் பூப் போல பெதாய் காணும். ரத்தம் அதிகமாய் வெளியாகும். அரிப்பும், நமைச்சலும் உண்டாகும். உடல் மெலியும், மேல் மூச்சு வாங்கும், அசதியும் உண்டாகும். செரியாமை, வயிறு ஊதல், நீராக கழிதல், பசியின்மை போன்ற தன்மைகள் இந்நோயில் உண்டாகும்.

10. வளிமுளை (வாத மூலம்)

வாத மூல நோயில் மலவாய் கோவைப்பழம் நிறத்தில் சிவந்தும் அதில் மூல முளைகள் வளர்ந்து கருத்து, மெலிந்து கடுப்பு, நமைச்சல், குத்தல் இவைகள் உண்டாகும். தலை நோகும், குடலுக்குள் வலிக்கும். இதுபோன்றவை இவ்வகை மூலத்தின் அறிகுறிகள் ஆகும்.

11. அழல் முளை (பித்த மூலம்)

பித்த மூலத்தில் மலவாயில் பருத்திக் கொட்டை போலும், நெல்லைப் போலும் அளவுள்ள முளைகள் தோன்றும். உடலில் பித்தம் மிகுதியாகி மலம் வறண்டு, உருண்டும், தித்தியாகவும் வெளியாகும். இரத்தமும், சீழும் வடியும். வயிற்றுவலி, மலவாய்க்கடுப்பு, தலைநோய், கோபம் உடல் பலம் குறைதல் போன்றவை உண்டாகும்.

12. ஐயமுளை (ஐய மூலம்)

ஐயமூல நோயில் மலவாயில் வெண்மையான முளை தோன்றும். அதில் எந்நேரமும் எச்சல், கடுப்பு உண்டாகும். சீழும், தண்ணீரும் கலந்தாற் போல் மலம் கழியும். சிறுநீர் சூடாய் வெளியேறும். தாது நஷ்டம் உண்டாகும். உடல் வெளுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்.

13. முக்குற்ற முளை (தொந்த மூலம்)

தொந்த மூல நோயில் மலவாய் இறுகி முளை யானது கோழிக் கொண்டையை அவ்விடத்தில் பதித்து வைத்ததுபோல் இருக்கும். நடக்க முடியாது. வயிறு முழுவதும் ஒருவித வலி உண்டாகும். உடல் வியர்க்கும். நடுக்கம், நீர் வேட்கை, கழிச்சல் உண்டாகும். உடல் இளைக்கும். இவை போன்ற அறிகுறிகள் இந்த நோயில் உண்டாகும்.

14. வினை முளை (வினை மூலம்)

வினை மூல நோயில் உணவு செயாமை, புளியேப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், கோபம், மலம் கட்டுதல் ஆகியவை உண்டாகும். மேலும் கை, கால் உளைச்சல், கடுப்பு, உடல் காந்தல் முதலிய அறிகுறிகள் வினை மூல நோயில் உண்டாகும்.

15. மேகமுளை (மேக மூலம்)

மேக மூல நோயில் ஆண் குறியில் வெள்ளை விழும். முளையிலிருந்து இரத்தம் கசியும். வயிறு இரைந்து பேதியாகும். சிறுநீர் எரிச்சலுடன் வெளியாகும். தலைவலியும், உடலில் திமிரும் உண்டாகும். சிறுநீர் இனிப்பு பொருந்தியதாக இருக்கும். இதுபோன்ற குணங்களை கொண்டிருக்கும்.

16. குழி முளை (பவுத்திரம்)

குழி முளை மூலநோயில் எருவாயின் முளைக்கு பக்கத்தில் சிறு கட்டியைப் போல் தோன்றி உடையும். உடைந்து எளிதில் உலராது. புடம் வைத்ததுபோல் உள்ளே துளைத்துக் கொண்டு போகும். சீழும் கசியும். கை, கால்களை வீங்கும் பவுத்திரம் உண்டாகும். முளையானது சேவல் கோழியின் கொண்டையைப் போன்ற வடிவம் போல் சிவந்து காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் பவுத்திர மூல நோய்க்கு உரியவையாகும்.

17. கழல் முளை (கிரந்தி மூலம்)

கழல் முளை நோயில் ஆண் குறியில் புண் உண்டாகி மலவாய் வரையில் பரவி அதிலிருந்து முளைகள் உண்டாகும். சீழும் இரத்தமும், நீரும் கலந்து வடியும். எச்சலும், கடுப்பும் உண்டாகும். கை, கால்கள் கடுக்கும். மலம் வறண்டு கெட்டியாகும். மலவாய் வெடித்து மலமிறக்கும். இந்த அறிகுறிகள் கிரந்தி மூலநோய்க்கு உயதாகும்.

18. அடித்தள்ளல் முளை (குத மூலம்)

அடித்தள்ளல் மூலநோயில் மலவாயிலில் மூங்கில் குருத்தது போல் தடித்து அடிக்குடல் வெளியாகித் தோன்றும். அதை உள்ளே தள்ளினால் போகும். சிலருக்கு மீண்டும் வெளியே வரும். சீழும் இரத்தமும் வடியும். வயிறு உப்புசம் உண்டாகும். நாவறண்டு நீர் வேட்கை உண்டாகும். தொடைகள் வலிக்கும். இவைபோன்ற அறிகுறிகள் குதமூல நோயில் உண்டாகும்.

19. வெளிமுளை (வெளிமூலம்)

வெளிமூல நோயில் மலவாயில் சிறு பருக்களைப்போன்ற முளை வெளிப்புறமாய் தோன்றும். எண்ணெயைப் போலும், தண்ணீர் போலும் கடுப்புடன் சீழ்கசியும். அரிப்பு, எரிச்சல் ஆகியவை உண்டாகும். உடம்பில் சொறி, சிரங்கு உண்டாகும். புறமூலநோயில் இவ்வறிகுறிகள் உண்டாகும்.

20. சுருக்கு முளை (சுருக்கு மூலம்)

சுருக்கு மூல நோயில் மலவாய் சுருங்கி தடிப்பு உண்டாகும். பெருங்குடல் வலியுடன் உப்பும், மலத்துடன் இரத்தமும், நீரும் வெளியாகும். உடல் வெப்பம் கொண்டு வெளுக்கும். உடல் சிறுக்கும். மயக்கமுண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் சுருக்கு மூலத்தில் உண்டாகும்.

21. சவ்வு முளை (சவ்வு மூலம்)

சவ்வு மூலநோயில் மலவாயிலில் முளையானது நீண்டு ஜவ்வு போல் கீழே தொங்கும். சீழும் இரத்தத்தோடு நீரும் கசியும். அடிவயிறு நொந்து எயும். இதுபோன்ற அறிகுறிகள் சவ்வு மூல நோயில் உண்டாகும்.
இந்த 21 வகையான மூல நோய்களில் 12 வகையான நோய்கள் எளிதில் தீரக்கூடியவை.

1. நீர் மூளை, 2. பெருமுளை, 3. வறல் முளை, 4. குருதி முளை,

5. வளி முளை, 6. தீமுளை, 7. மேக முளை, 8. குழி முளை,

9. கழல் முளை, 10. புறமுளை, 11. சுருக்கு முளை, 12. சவ்வு முளை, இவைகள் எளிதில் தீரக்கூடியவை.

1. செண்டுமுளை, 2. சிறு முளை, 3. சீழ் முளை,

4. ஆழி முளை, 5. வினை முளை, 6. ஐயமுளை,

7. குதமுளை, 8. முக்குற்ற முளை, 9. தமரச முளை போன்றவை எளிதில் தீராதவையாகும்.

ஒவ்வொரு வகையான மூலத்திற்கும் மருந்து களை சித்தர்கள் தங்களது பாடலின் மூலம் எழுதி வைத்து சென்றுள்ளனர். தேர்ந்த, தகுதியான மருத்துவரை அணுகி மருந்து பெற்று மூலநோயில் இருந்து முற்றிலுமாக குணம் பெற முடியும்.
  நன்றி= மருத்துவர், மு . சங்கர் அவர்களுக்கு.

யோகாசனம்





             யோகாசனம்.



இன்றைய அவசர உலகில் பெருகிவரும் பரபரப்பு, பதட்டம் அதனால் ஏற்படும் மனக்கவலைகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை எல்லாம் அதிகமான மனபாரத்தை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன. அப்படி ஏற்படும் மன இறுக்கத்தை தளர்த்தி மன அமைதி பெறும் வழிகளை இங்கே பார்ப்போம்.


            முதலாவதாக உடல் மற்றும் உள்ளத்தை தளர்த்தி ஆழமாக சுவாசிக்க வேண்டும். மூச்சை உள்வாங்கி, பின்னர் மெதுவாக வெளியிடுவதும் முக்கியமானது.
 
          உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மனதையும், உடலையும் தளர்த்தி ஓய்வு எடுப்பது அவசியம்.
        அதேபோல் நாம் எப்போதும் செய்யும் வேலையை விட்டுவிட்டு, மாறுபட்ட நமக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு வேலையை செய்வதும், அல்லது அதைப்பற்றி தெரிந்து கொள்வதும் மனதை நிம்மதியாக்கும்.  

       தோட்ட வேலை செய்தல், புத்தகம் அல்லது பத்திரிகை வாசித்தல், விளையாடுதல் ஆகியவற்றை பொழுது போக்காக செய்தால் உடல் புத்துணர்வாகி, மனம் அமைதி பெறும்.




       தினமும் குறிப்பிட்ட நேரம் யோகாசனம் செய்தால் ரத்த அழுத்தம் குறைந்து, மன அழுத்தமும் குறைகிறது. ஆனால் யோகாசனம் செய்பவர்களுக்கு எவ்வித கெட்டப் பழக்கமும் இருக்கக் கூடாது.

      மதுவகைகள், புகை பிடித்தல், புகையிலை பழக்கம் ஆகியவற்றை தொடவே கூடாது.           அதேபோல் உணவு முறையில் கட்டப்பாடு இருந்தால் மட்டுமே ரத்த அழுத்தம் சீராகும்.
      யோகாசனம் செய்வதற்கு முன்பு, மனதில் அச்சம், பீதி, படபடப்பு, மன இறுக்கம் போன்றவை மனதுக்குள் வைத்திருக்கக் கூடாது 
      யோகாசனத்தை காலையில் செய்வது அவசியம். அப்படி தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால் கண்டிப்பாக மனம் நிம்மதி அடையும்.


            முதலில் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள நம் மீது முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, `நான் யார்?, எனது செயல்கள் எப்படிப்பட்டவை? எனது குறிக்கோள் என்ன? அதை அடைய நான் செய்து கொண்டிருக்கும் முயற்சி என்ன?’ என்பது போன்ற கேள்விகளுக்கு விடை!
இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் போது இறுதியில், அந்த `நான்என்பதற்கான விடை உங்களுக்கு கிடைக்கிறது
        எந்த விதமான எண்ணங்களும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்துவதே தியானம். ஒரே ஒரு நினைப்பை மட்டும் விடாப்பிடியாக எண்ணத்தில் வைத்து, அப்படியே ஒரே சிந்தனையுடன் தியானத்தில் ஈடுபட்டால், மற்ற நினைவுகள் அகன்று விடும்
       இப்படி தொடர்ந்து செய்து வரும்போது மனவலிமையை பெற்று விடலாம்.
     ஒவ்வொருவருடைய இயல்புக்கு தக்கவாறு தியான முறைகள் மாறுபடுகின்றன.  
     அகப்பயிற்சி செய்து வருபவர்கள் நேரடியாக ஆன்ம விசாரணையைத் தொடங்கலாம். இந்த முறையில் தொடர்ந்து செய்து வந்தால், வேறு எந்த எண்ணங்களும் மனதில் எழுவதில்லை. ஒவ்வொருவருடைய எண்ண அலைகளின் ஆற்றலானது அவற்றின் முக்கிய விருப்பத்திற்கேற்ப, நன்மை அல்லது தீமையை உண்டாக்கும்.
 
     அதேபோல், அந்த எண்ணங்களைப் பற்றிய நினைப்பில் உள்ளவர்களுக்கும் தாக்கத்தை உண்டாக்கும் என்கிறார், ரமணர்.  

     இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒருவன் செயல்களில் மட்டும் அல்லாது எண்ணங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
நேரடியான ஆன்மவிசாரணைக்கு சிறந்த வழி, அதற்கு முதலில் நாம் யார் என்பதைத் தெரிந்து கொள்வது தான்.
      நாம் தூங்கிக் கொண்டு இருக்கும்போது உலகம் மறைந்து விடுகிறது. எழும்போது மனம் விழித்துக் கொள்கிறது.  

        அதனால், உலகம் வந்து விடுகிறது. அதனால், உலகமே மனதை அடிப்படையாகக் கொண்டு தான் செயல்படுகிறது
     ஆனால், மனமற்ற ஆழ்ந்த தூக்க நிலையிலும் நாம் இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த நிலையில் இருப்பதைப் போல நாம் எல்லா நிலைகளிலும், தொடர்ந்து இருக்கும்போது தான் தன்னை உணர முடியும்.
              யோகாசனம்

மைடியர் மைண்ட்பவர்


        ஆல்ஃபா நிலையில் ஒரு இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதித்தால் அது நம் வாழ்க்கையில் சுலபமாக நிறைவேறும் என்பதை பார்த்தோம்.           அந்தக் காட்சியை சரியான முறையில் அமைப்பது மிகவும் முக்கியம். அது எப்படி என்பதை பார்ப்போம்.
 
     நமது மூளையின் ஆல்ஃபா நிலை என்பது மிக அற்புதமான, சுகமான நிலையாகும். மூனையின் வேகம் வினாடிக்கு 7லிருந்து 14 வரை இருக்கும் நிலை ஆல்ஃபா நிலை
    நாம் சற்று அமைதியாக இருக்கும் நிலை இது. தியானத்தின் மூலம் இந்த நிலையை அடைகிறோம். இதற்கு பயிற்சி தேவை

     ஆல்ஃபா நிலையை நாம் அடைந்தவுடன் நமக்குள் இருக்கும் ஆழ்மனம் திறக்கிறது.              அங்கிருக்கும் வியக்கத்தக்க சக்தியை அந்த நேரத்தில் நாம் பயன்படுத்த முடிகிறது.
     நமது
இலட்சியங்களை ஆல்ஃபா நிலையில் மனத்திரையில் ஒரு காட்சியாகப் பார்க்க வேண்டும்.  
       அப்படிப் பார்க்கும் காட்சி, ஆழ்மனத்தில் பதிந்து அங்கிருந்து பிரபஞ்ச சக்திக்கே ஒரு செய்தியாகப் போய் சேர்ந்துவிடுகிறது
     பிரபஞ்ச சக்தி பல விதத்தில் செயல்பட்டு நமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறது.  
     தகுந்த சூழ் நிலைகளை நமது வாழ்க்கையில் உருவாக்கி, தகுந்த மனிதர்களைச் சந்திக்க செய்து அந்த இலட்சியம் நிறைவேற வழி வகுக்கிறது.
     இப்படி
ஆல்ஃபா நிலையில், இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதிக்கும் பொழுது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது அந்தக் காட்சிகளின் அமைப்புதான்.                                                 இலட்சியத்தை மனத் திரையில் உருவாக்கும் பொழுது அந்த இலட்சியம் நிறைவேறிவிட்ட காட்சியை மட்டும் கண்டால் போதும்
      இதை எப்படி அடையப்போகிறோம், வழிமுறைகள் என்ன, என்பதைப் பற்றி தியானத்தில் யோசிக்க வேண்டாம்.      
      வழிமுறைகளை யோசிக்கும் பொழுது நமது மனம் பல இடங்களில் செயல்பட முடியாமல் தடுமாறும்.

நாமாக
யோசிக்கும் பொழுது நமது இலட்சியம் நிறைவேற ஏதேனும் ஒருவழிதான் நமக்கு புலப்படும். ஆனால் வழிமுறைகளை பிரபஞ்சத்திடம் விட்டுவிட்டோமானால் நம் கண்ணுக்குத் தெரியாத பல கதவுகள் திறக்கும். பல வழிகள் பிறக்கும்.
பிரபஞ்ச சக்தி ஒரு தாய் போன்றது. நமக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு குழந்தையைப் போல் காண்பித்தால் போதும். அந்தத் தாய் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பாள். வழிமுறைகளை நாம் தியானத்தில் செல்லும் பொழுது பல சமயம் அது நமக்கு சரியான வழியாக இல்லாமல் போகலாம். அப்பொழுது பிரபஞ்ச சக்தியால் கூட நமது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அதனால்தான் இலட்சியம் நிறைவேறும் காட்சியை மட்டும் காண வேண்டும். எந்த நிபந்தனைகளும் இன்றிக் காண வேண்டும். அப்படிச் செய்தால் நமது இலட்சியங்கள் ஒவ்வொன்றாக நாம் நினைத்ததைவிட மிகவும் சுலபமாக நடைபெறுவதை நாம் காண முடியும்.
பிரபஞ்ச
சக்தி நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அவற்றை குறைவின்றிப் பெற்றுக் கொள்ள நாம் தான் தயாராக வேண்டும்.
             யோகாசனம்

யோகாவில் அழகு


யோகாவின் உதவியால் உடலை கட்டுக்குலையாமல் காப்பாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு  `கண்டிப்பாக முடியும்என்று கூறுகிறார் யோகா பயிற்சியாளர்  
* யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.
* யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!
* நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
* யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.
* நீங்கள் எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோஅதைப் பொறுத்து உங்களுடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி.
* யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும். மற்ற பயிற்சிகளைவிட யோகாவில் மட்டுமே, ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகை பாதுகாக்கிறது. இதனால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும்.
* யோகா உடம்பை சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும். குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும்!

வயதுக்கேற்ற `யோகா

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம்.
குழந்தைகள்: குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை ரையீரலே உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. கல்லீரலும், பித்தப்பைகளும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. இவர்களுக்கு மார்புச்சளி, பசியின்மை, ஆஸ்துமா, செரியாமை, மலச்சிக்கல், வயிற்றுப் பூச்சி ஆகியவை ஏற்படலாம்.
செய்ய வேண்டிய பயிற்சி:- 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வளர் இளம்பருவம்:- 10 முதல் 20 வயதுள்ளவர்கள் யோகாசன பயிற்சிகளோடு பிராணாயாமம், தியானம், கண் பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ஒழுக்க கட்டுப்பாடு வளர வேண்டிய முக்கியமான பருவம். இளமை:- 20 முதல் 30 வயது வரையான பருவம் இளம் பருவம். என்றாலும் இதுதான் முதுமையின் தொடக்கமும் கூட.
பயிற்சிகள்:- பின்னால் வளைந்து செய்யும் ஆசனங்களை செய்ய வேண்டும். இதனால் முதுகுத்தண்டு பலம் பெறும். மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கும். இந்த வயதில் பகலில் உறங்காமல் இருக்க வேண்டும். அப்படி பகலில் உறங்கினால் மூளை மந்தமாக இயங்கும்.
பின் இளமை:- 30 முதல் 40 வயதுக்குள்ளாக உடல் இளமையை இழக்கத் தொடங்கும். புருவங்களுக்கு மத்தியில் சுருக்கம் தோன்றும்.
பயிற்சி:- யோகாசனம் மற்றும் பிராணாயாம பயிற்சிகளை தொடர்ந்து வர வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளும் அவசியம்.
முதுமையின் தொடக்கம்:- 40 முதல் 50 வயதிற்குள்ளாக கண்களுக்கு பக்கத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். பயிற்சி:- தவறாது யோகாசனங்கள் செய்து வர வேண்டும். பெண்களும் யோகா செய்து வந்தால் மெனோபாஸ் பருவத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கால் கருப்பையை அகற்ற வேண்டிய அளவுக்கு சிக்கல் வராமல் தடுக்கலாம்.
முதுமை:- 50 வயதுக்கு மேல் பெரும்பாலானவர்களின் உடல் வியாதிகளின் சங்கமமாக மாறிவிடும். காதுகள் கேட்கும் ஆற்றல் குறைய ஆரம்பிக்கும். இதய நோய்கள் அதிகரிக்கும். எலும்பு முறிவு, சளி பிடித்தல் போன்ற கோளாறுகள் தோன்ற ஆரம்பிக்கும். பயிற்சி:- தினம் தவறாது விபரீதகாரணி, பத்ராசனம் போன்ற ஆசனங்கள் செய்ய வேண்டும். சிறு வயது முதலே யோகாசனம் செய்து வந்திருந்தால் இவற்றில் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்


அர்த்தஎன்றால்பாதிஎன்று பொருள். அதாவது பாதி திருகிய நிலை ஆசனம் என்பதாகும். யோகி மச்சேந்திரர் இந்த ஆசனத்தை ஹடயோக மாணவர்களுக்கு முதன்முதலாகக் கற்றுக் கொடுத்தார். அதனால் அவனுடைய பெயர் இந்த ஆசனத்திற்கு வைக்கப்பட்டது.
செய்முறை

1. கால்களை முதலில் நேராக நீட்டி விரிப்பின் மீது விறைப்பாக நேரே நிமிர்ந்து உட்காரவும்.
2. வலது காலை மடக்கிக் கொள்ளவும்.
3. வலது கணுக்காலின் மேல் உட்கார்ந்து கொள்ளவும்.
4. இடது காலைத் தூக்கி, கீழே வைக்கப்பட்டிருக்கும் வலது காலுக்குக் குறுக்கே அப்புறம் (வலப்புறம்) கொண்டு சென்று வைக்கவும். இடது காலை இன்னமும் தரைப்பக்கம் அமர்த்தி பாதத்தைப் பிறப்பு உறுப்புக்குக் கீழே அமைத்துக் கொள்ளவும். இடது முழங்கால் செங்குத்தாய் நிற்பதுபோல் இருக்கவும்.
5. வலது கையின் கை இடுக்கிற்குள் இடது முழங்காலானது போகும் வண்ணம் செய்யவும்.
6. பின்னர் வலது உள்ளங்களையினால் வலது கால் மணிக்கட்டைப் பிடித்துக் கொள்ளவும்.
7. இடது கையை முதுகுப்பக்கம் கொண்டு வரவும்.
8. இடது கையினால் இடது கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும்.
9. மூச்சை விட்டுக்கொண்டே இடது பக்கமாக இடுப்பை நன்றாகத் திருப்புங்கள். மார்பை நேராக நிறுத்தி வைக்கவும்.
10. தலையை நன்றாகத் திருப்புங்கள்.
11. அப்போது உங்களின் கண்பார்வை இடது பக்கமாக அமையக் கூடாது. வலது பக்கம் உள்ள பொருட்கள் மீது நிலைபெற வேண்டும்.
12. இவ்வாறு இரண்டு மூன்று முறை செய்தபின் சிறிது சிறிதாகப் பிடிகளைத் தளர்த்தி கை, கால்களை விடுவித்து யதார்த்த நிலைமைக்குத் திருப்பவும்.
பலன்கள்

1. நரம்புத்தளர்ச்சி அடைந்தவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறது. முதுகெலும்பினை வளைத்து நெகிழுந்தன்மையானதாக்கி, வளமுடன் செயல்படச் செய்கிறது. வயிற்றுத் தசைகளை வளமாக்குகிறது. முதுகெலும்புப் பகுதி முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. பிடரியில் ஓடக்கூடிய நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.
3. நோய்களை உருண்டு திரளச் செய்கிறது.
4. இடுப்புவலி, முதுகு வலிகளைப் பறந்தோடச் செய்யும்.
5. வயிற்றுக் கோளாறுகளை நீக்குகிறது. மலச்சிக்கல், பசி மந்தத்தையும் இது நீக்கும். சிறுநீரக நோய்கள் நீங்கும்.
6. இளமையுடன் இருக்கச் செய்யும் ஆசனம் இது.

தனுராசனம்


வில் போன்று தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது இந்த ஆசனம். தனுர் என்ற சமஸ்கிருதச்
சொல்லுக்கு வில் என்று பொருள்.
இது
சலபாசனமும் புஜங்காசனமும் இணைந்து உருவான ஆசனம். உடலின் தொப்புளுக்கு
மேற்பட்ட பகுதி புஜங்காசனத்தில் இருக்க, கீழ்ப்பகுதி சலபாசனத் தோற்றத்தில் இருக்கும்.
அதனுடன் கைகள், கால்களைப் பிடித்திருக்க முழங்கால் மடங்கி வில்போன்று
தோற்றமளிக்கும்.
முதுகெலும்பு
பின்புறம் வளையும் புஜங்காசனம் ஒருவகை. தனுராசனத்தில் வேறு வகையாக
அமையும்.
செய்முறை

1. ஒரு விரிப்பை நீளவாட்டில் மடித்து அதன்மீது குப்புறப்படுக்கவும்.
2. கால்களை நீட்டிக் கொள்ளவும்.
3. இடக்கை விரலால் வலக்கால் கட்டை விரலைப் பிடித்துக் கொள்ளவும்.
4. மெதுவாக இடக்காலை பின்புறமாக மடக்கி வரவும்.
5. இந்த நிலையில் தொடை வயிறுக்குச் சமீபம் அமையும்.
6. இப்போது கைகள் இரண்டையும் முதுகுப்புறமாக நீட்டி மடங்கிய கால்களைப் பற்றிக்
கொள்ளவும்.
7. இந்நிலையில் வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் படிந்திருக்க வேண்டும். தலை தூக்கிய
நிலையில் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை இரண்டு நிமிடம் செய்யலாம்.
பயன்கள்

1. ஆஸ்துமா, மார்புச்சளி, ஈசினோபீலியா நோய்கள் குணமாகும்.
2. இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக்
கோளாறுகள் நீங்கும்.
3. அட்ரீனல் நாளத்தை நன்கு இயக்கி உடல் முழுவதும் சுறுசுறுப்படையச் செய்யும்.
4. பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச்
சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.
5. நரம்புகளும் முதுகெலும்பும் வளையும். கூன் முதுகு, முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும்.
சிறுநீரக நோய்கள் நீங்கும்.
6. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச்சதை குறையும்.
7. அஜீரணம், வயிற்று வலி நீங்கும்.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்


அர்த்தஎன்றால்பாதிஎன்று பொருள். அதாவது பாதி திருகிய நிலை ஆசனம் என்பதாகும். யோகி மச்சேந்திரர் இந்த ஆசனத்தை ஹடயோக மாணவர்களுக்கு முதன்முதலாகக் கற்றுக் கொடுத்தார். அதனால் அவனுடைய பெயர் இந்த ஆசனத்திற்கு வைக்கப்பட்டது.
செய்முறை

1. கால்களை முதலில் நேராக நீட்டி விரிப்பின் மீது விறைப்பாக நேரே நிமிர்ந்து உட்காரவும்.
2. வலது காலை மடக்கிக் கொள்ளவும்.
3. வலது கணுக்காலின் மேல் உட்கார்ந்து கொள்ளவும்.
4. இடது காலைத் தூக்கி, கீழே வைக்கப்பட்டிருக்கும் வலது காலுக்குக் குறுக்கே அப்புறம் (வலப்புறம்) கொண்டு சென்று வைக்கவும். இடது காலை இன்னமும் தரைப்பக்கம் அமர்த்தி பாதத்தைப் பிறப்பு உறுப்புக்குக் கீழே அமைத்துக் கொள்ளவும். இடது முழங்கால் செங்குத்தாய் நிற்பதுபோல் இருக்கவும்.
5. வலது கையின் கை இடுக்கிற்குள் இடது முழங்காலானது போகும் வண்ணம் செய்யவும்.
6. பின்னர் வலது உள்ளங்களையினால் வலது கால் மணிக்கட்டைப் பிடித்துக் கொள்ளவும்.
7. இடது கையை முதுகுப்பக்கம் கொண்டு வரவும்.
8. இடது கையினால் இடது கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும்.
9. மூச்சை விட்டுக்கொண்டே இடது பக்கமாக இடுப்பை நன்றாகத் திருப்புங்கள். மார்பை நேராக நிறுத்தி வைக்கவும்.
10. தலையை நன்றாகத் திருப்புங்கள்.
11. அப்போது உங்களின் கண்பார்வை இடது பக்கமாக அமையக் கூடாது. வலது பக்கம் உள்ள பொருட்கள் மீது நிலைபெற வேண்டும்.
12. இவ்வாறு இரண்டு மூன்று முறை செய்தபின் சிறிது சிறிதாகப் பிடிகளைத் தளர்த்தி கை, கால்களை விடுவித்து யதார்த்த நிலைமைக்குத் திருப்பவும்.
பலன்கள்

1. நரம்புத்தளர்ச்சி அடைந்தவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறது. முதுகெலும்பினை வளைத்து நெகிழுந்தன்மையானதாக்கி, வளமுடன் செயல்படச் செய்கிறது. வயிற்றுத் தசைகளை வளமாக்குகிறது. முதுகெலும்புப் பகுதி முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. பிடரியில் ஓடக்கூடிய நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.
3. நோய்களை உருண்டு திரளச் செய்கிறது.
4. இடுப்புவலி, முதுகு வலிகளைப் பறந்தோடச் செய்யும்.
5. வயிற்றுக் கோளாறுகளை நீக்குகிறது. மலச்சிக்கல், பசி மந்தத்தையும் இது நீக்கும். சிறுநீரக நோய்கள் நீங்கும்.
6. இளமையுடன் இருக்கச் செய்யும் ஆசனம் இது.

ஆசனங்கள்


உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவ்வளவு ஆசனங்கள் உள்ளன. பரமசிவனால் 84 லட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என புராணங்கள் கூறுகின்றன. அதில் 84 எல்லாவற்றிலும் சிறந்தன. அவற்றுள்ளும் 32 மிகப் பயன்படத்தக்கவை. ஆசனங்கள் பலவகை.
1. நின்று செய்யக்கூடியன.
2. அமர்ந்து செய்யக்கூடியன.
3. படுத்துச் செய்யக்கூடியன.
4. மேலாகச் செய்யக்கூடியன.
ஒவ்வொரு
ஆசனமும் ஒருசில நோய்களை நீக்குவதாகும். எனவே, நோயின் தன்மை அறிந்து அவ்வகை ஆசனங்களைச் செய்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
1. சலபாசனம்
சலபம்என்ற வடசொல்லுக்குவெட்டுக்கிளிஎன்று பொருள். நோய்கள் அனைத்தையும் வெட்டி எறிவதால் இவ்வாசனம்சலபாசனம்என்று பெயர் பெற்றது. மேலும் இந்த ஆசனத் தோற்றம் வெட்டுக்கிளி வடிவில் இருப்பதாலும் இப்பெயர் கொள்ளலாம். இருதய நோயுள்ளவர்களும் இரத்த அழுத்த நோயுள்ளர்களும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.
செய்முறை

1. தரை விரிப்பின் மீது முதலில் குப்புறப்படுக்க வேண்டும். கால்கள் சேர்ந்து இருக்க வேண்டும். கைகளைப் பின்புறம் நீட்டிக் கொள்ளவும்.
2. முகவாய்க்கட்டை தரையில் படும்படி முகத்தை சற்று உயர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
3. கை விரல்களை நன்கு மடக்கி தொடைகளுக்குக் கீழே வைத்துக்கொள்ள வேண்டும்.
4. பின்னர் மூச்சை இழுத்துக் கொண்டே கைகளைத் தரையில் அழுத்திக் கொண்டு தலை, நெஞ்சுப் பகுதி இரண்டு கால்களையும் சேர்ந்த மாதிரி ஒரே சமயத்தில் மேலே உயர்த்த வேண்டும்.
5. கால்களை வளைக்காமல் 45 டிகிரி வரை உயர்த்த வேண்டும்.
6. இதே நிலையில் பத்து முதல் இருபது வினாடிகள் வரை இருக்கலாம். இப்போது உடலின் எடை தரையோடு தரையாக இருக்கின்ற மார்பு, கைகள் இவற்றின் மீதுதான் விழும். தொடைப் பகுதிகள், கால்கள், முன் பாதங்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் நீட்டியிருக்க வேண்டும். 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.
7. பின்பு மெதுவாக மூச்சை விட்டபடி கால்களை மெல்லக் கீழே இறக்க வேண்டுத்தரையில் படியும்படி கால்கள் வளையக்கூடாது. களைப்பு வரும் வரை இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. முதலில் கால்களை பின்புறமாக அதிக உயரம் தூக்குவது கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சியில் எளிதாகச் செய்ய முடியும்.
8. இப்படி மூன்று முதல் ஐந்து தடவைகள் செய்யலாம்.
9. கால்களை மேலே தூக்கும் போது தொப்புளுக்குக் கீழேயுள்ள பாகம் மட்டுமே உயர்த்தப்பட வேண்டும். உடம்பின் அடிவயிற்றின் முன்பகுதி மட்டும் தரையில் படிந்தவாறு இருந்து உடல் எடையைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
10. உள்ளங்கால்கள்¢வளையாமல் ஆகாயத்தை நோக்கி இருத்தல் வேண்டும்.
11. பிட்டத்தைச் சுருக்கி, இறுக்கமாக வைக்கவும். தொடை தசைகளை விரித்தவாறு வைக்கவும்.
12. கால்கள் விரைப்பாகவும், சேர்ந்தும், ஒன்றோடு ஒன்று தொடை, முட்டி மற்றும் கணுக்கால் பகுதியில் சேர்ந்திருக்க வேண்டும்.
13. உடல் எடையைக் கைகளால் தாங்கக் கூடாது. கைகளை நன்கு பின்புறம் நீட்டிக் கொள்ள வேண்டும்.
14. முடிந்த அளவுக்கு இயல்பாகச் சுவாசித்தவாறு இருக்கவும். ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியையும் தொடைகளையும் தரையிலிருந்து உயர்த்துவது சிரமமாகத்தான் இருக்கும். அடிவயிற்றுத் தசை நார்கள் உறுதி அடைந்து விட்டால் இரு கால்களையும் நெஞ்சுப் பகுதியையும் நன்கு உயர்த்த முடியும்.
பலன்கள்

1. சிறுநீரகம் நன்கு செயல்படுவதற்கும் சிறுநீரக நோய்கள் நீங்குவதற்கு துணை புரிகிறது.
2. வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால் உடலின் கீழ்ப்பகுதிக்கு அதிகப் பலன்கள் கிடைக்கின்றன. பெருவயிறு எனப்படும் தொந்தி கரைகிறது.
3. வயிற்றுப் பகுதிக்கு அதிகமான இரத்த ஓட்டம் ஏற்படுவதால் பாலுறவுச் சுரப்பிகள் வலுவடையும். இல்லறத்தில் நீடித்த இன்பம் துய்க்க வழிவகுக்கும்.
4. கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகளின் கோளாறு நீங்கும்.
5. மூலம் என்கிற கொடிய வியாதியை அறவே அழித்து ஒளிப்பதில் இந்த சலபாசனம் முன் நிற்கிறது.
6. நுரையீரல் நன்கு விரிவடைந்து பலமடைவதுடன் ஆஸ்துமா போன்ற நோய்களை நீக்கும்.
7. முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றை நெருங்க விடாது.
8. குடல்கள் நன்கு இழுக்கப்படுவதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு நீங்கும்.
9. என்றும் இளமையுடன் இருக்க வைக்கும் ஆசனம் இது. இந்த ஆசனம் முதுகெலும்பை பின்னால் வளைக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால் சோம்பேறித்தனத்தை ஒழித்துக் கட்டுகிறது.

சித்தர்கள் அருளிய யோகாசனம்


தமிழ் மருத்துவ முறையில் கற்பம் மருந்துகள் முதன்மையானது. இதுசித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. கற்பம் என்பது உடம்பினை நோயுறாதபடி நல்ல நிலையில் வைத்திருந்து நரை, திரை, மூப்பு இவற்றையும் பிணியினையும் நீக்கும். உடம்பின் மேன்மையை நன்குணர்ந்த சித்தர்கள் நரை, திரை, மூப்பு அறியா நல்லுடலைப் பெற்றவர்கள்.
மனிதன்
இல்லறத்தானாயினும் துறவறத்தானாயினும் உடலைப் பேணுதல் முதன்மையானது. இதனைத் திருமூலர் தம்திருமந்திரத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.
உடம்பார்அழியில்
உயிரார் அழிவர்
திறம்பட
மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை
வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை
வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
உடலைக்
காப்பது கற்பம். இது உடலைக் கல்லைப் போலாக்கும். கல்லினால் செய்த சிலை பன்னெடுங்காலமானாலும் நரை, திரை, மூப்பு, பிணி அடைவதில்லை. கற்பம் உண்டால் காயம் அழியாது என்கிறார் திருமூலர்.
கற்பம்
பொது, சிறப்பு என இருவகைப்படும். பொதுக் கற்பம் உடலைக் காத்து, மேனிக்கு எழிலும் பலமும் தந்து நரை, திரை, சாக்காடு வராமல் தடுக்கும். சிறப்புக் கற்பம் உடல் உறுப்புகளிலாவது உடல் முற்றுமாவது கண்ட பிணியை நீக்கி உடலுக்கு வலிமை தந்து பலம் ஊட்டும்.
பொது
, சிறப்பு என்று பிரித்துக் கூறப்பட்ட கற்பத்துள் மூலிகை, தாது, சீவப்பொருள், அவிழ்தங்களும், மேலும் உடலைக் காக்கும் யோகாசனப் பயிற்சிகளும் பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுப் பயிற்சியும், யோகம், முப்புவும் அடங்கும். யோகாசனத்தாலும், மூச்சுப் பயிற்சியாலும் பிராணாயமத்தாலும் உடல் கற்பமாகும் என்கின்றனர் சித்தர்கள்.
யோகாசனம்

சிவயோகம்
என்னும் இராஜ யோகம் பண்ணுங் காலத்துச் சித்தாசனம் என்னும் ஆசனமும், இல்லறத்தாருக்கு அவர்கள் வாயுதாரனை என்னும் உயிர்ப்பு பண்ணும் காலத்து பத்மாசனமும் சிறந்ததென்று அட்டாங்க யோக நூல்கள் கூறுகின்றன.
பொதுவாக
ஆசனங்கள் யாவும் உடற்பயிற்சி போன்றவையே. என்றாலும் ஆசனங்கள் உடற்பயிற்சிகளிலிருந்து செயலிலும் நிலையிலும் வேறுபடுகின்றன. பொதுவான உடற்பயிற்சிகள் உடலின் மேற்புறமுள்ள உடல் தாதுக்களையே வலிமைப்படுத்துகின்றன. ஆனால் யோக இருக்கை என்னும் ஆசனங்கள் உடலின் உள்உறுப்புகளை வலிமைப்படுத்துகின்றன.
ஆசனங்கள்
தொகையால் எண்ணற்றன. இதனைத் திருமூலர்பல் ஆசனம்’, ‘எண்ணிலா ஆசனம்என்று குறிப்பிடுவதால் அறியலாம். இருப்பினும் இவற்றுள் இன்று ஒரு சில ஆசனங்களே நடைமுறையில் உள்ளன. திருமூலர் தம் தமிழ் மூவாயிரத்தில் பதுமாசனம், பத்திராசனம், குக்குடாசனம், சிங்காசனம், சொத்திராசனம், வீராசனம், கோமுகாசனம் என்ற சிலவற்றை மட்டுமே கூறியுள்ளார். இதில் பத்திரம், வீரம், பதுமம், கோமுகம், குக்குடம் ஆகிய ஐந்து ஆசனங்களும ஞான சாதனைக்கு உரிய ஆசனங்களாகும்.
ஆசனப்
பலன்
யோகாசனப்
பயிற்சியினால் உடல் உள்ளுறுப்புகள் பலம் அடைகின்றன. உடலில் வீணான சதைப் பிடிப்புகள் உண்டாவதில்லை. உடல் அழகுடன் திகழ்ந்து நோயின்றியும் வலுவுடனும் விளங்கும். உடல் முழுமைக்கும் இரத்த ஓட்டத்தை உண்டாக்கும். சுறுசுறுப்பு, புத்தித் தெளிவு, நினைவாற்றல், மனத்தூய்மை முதலிய உண்டாகும். மேலும் உடலை நல்ல நிலையில் வைத்திருப்பதுடன் பிணிகள் உடலில் சேராதும் தடுக்கின்றன. வந்த பிணியை நீக்குகின்றன.
யோகாசனம்
செய்ய மான் தோல், புலித்தோல் சித்திரக் கம்பளம், வெண் துகில், தருப்பை ஆகிய ஆசனங்கள் சிறந்த என்கின்றனர் சித்தர்கள். மேடு பள்ளம் இல்லாத சமதளத்தில் யோகாசனம் செய்ய வேண்டும். கூனுதல், குறுகுதல் தவிர்த்து நிமிர்ந்து நேராய் இருந்து அசனம் செய்ய வேண்டும். பயிற்சிகளை மெதுவாயும், நிதானமாயும் செய்ய வேண்டும்.
கோபம்
தவிர்
பொதுவாக
மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. மனதை ஒருமைப்படுத்தும் எண்ணத்துடனேயே நம் முன்னோர்கள் இறைவழிபாடு, தவம் முதலியன செய்தனர். ஒவ்வொரு உடல் உறுப்புடனும் இணைக்கப்பட்டிருக்கும் நரம்பு உணர்ச்சிகளை மனம் சார்ந்து நிற்கிறது. அதனால்தான் அளவுக்கு மீறிய கோபம் ஏற்படும்போது கண் சிவந்து உடல் சூடேறுகிறது. கோபம் தணிந்ததும் களைப்பும் சோர்வும் ஏற்படுகின்றன. மனதில் மாற்றம் ஏற்பட்டால் உடலிலும் தளரும். ஒன்று வலிவு பெறும் போது மற்றதும் வலிவு பெறும். மனம் தூய்மையானால் அது உடலுக்குக் கேடு விளைவிப்பதில்லை. நன்மை உண்டாக்கும். உடலை நல்ல நிலையில் வைத்திருக்க மனத்தூய்மை வேண்டும். மனதால் உண்டாகும் காமம், வெகுளி, மயக்கம், அவா, துன்பம் ஆகியவை நீங்கின் உடலில் பிணி சேராது. இதனால்தான்,
மனமது
தூய்மை யானால்
மந்திரம்
செபிக்க வேண்டாம் என்றனர் ஆன்றோர்.

நௌலி


உட்டியான செய்யச் செய்ய நௌலி தானாக வந்துவிடும். கால்களை அகற்றி நின்று கைகளை படத்தில் காட்டியபடி தொடை மேல் அமர்த்தி உடலை முன்னால் குனிந்து கொள்ளவும்.சுவாசம் முழுமையும் மெதுலவாய் வெளியில் விட்டு வயிற்றை உட்டியானா செய்யவும். பின் தளர்ச்சியடைந்த வயற்றின் சதைகளை இருகச் கட்டிச் செய்யவும். இப்படி
இறக்கியவுடன்
மேல் சென்ற வயறு தானாக முன்னால் துருத்தும். பின் வயறு தடிபோல் முன் வந்து நிற்கும். சில வினாடிகள் நின்ற பிறகு சதையை நழுவ விட்டி சுவாசத்தை உள்ளிழுத்து 2 முதல்  3 முறை செய்யலாம். வலது கை, இடது கையைத் தொடைகளிள் அதிகமாக அதிகமாக குடலை வலது பக்கம், இடதுபக்கம் தள்ளலாம்.
பலன்கள்
உன்னதமான ஆசனம் இழந்த ஆண்மையை மீண்டும் பெறலாம். விந்து ஒழுங்குவதைத் தடுக்கும் விந்து கட்டிப்படும் வயிற்றுக்கிருமி பூச்சி ஒழியும்மலச்சிக்கள் நீக்கி பசி உண்டாகும்.குடலில் அமிலங்கள் உண்டாகாது. வயற்று வலி குடல்புண் குணமடைபும், உடலில் தேஜஸ் உண்டாகி புத்துணர்வு ஏற்படும். விந்து நோய், வெள்ளை, வெட்டை நீக்கி இளமை மேலிடும். மன கட்டுப்பாடு உண்டாகும்.பெண் வியாதி தீரும். ஜீரண உறுப்புக்கள் அனைத்திற்கும் நல்ல ரத்தம் கிடைக்கும்.

உட்டியானா


கால்களை ஓரடி அகற்றி நின்றுகொள்ளவும். உடலை வாந்தி செய்வது போல முன் வளைந்து கைகளை தொடையில் வைத்துக் கொள்ளவும். மூச்சை முழுவதுமாக வெளியே விட வேண்டும். வயிற்றை எக்கி கைகளை தொடையில் அழுத்தி குடலை படத்தில் காட்டியபடி ஏற்றவும். இவ்வாசனத்தை மிக மெதுவாக அவசரப்படாமல் செய்ய வேண்டும். 5 வினாடிகள் நிறுத்தி இளைப்பாறவும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யலாம்.
உட்டியானா வெறும் வயிற்றில் காலையில்தான் செய்ய வேண்டும். ஆகாரம் உண்டு 8 மணி நேரத்திற்குப் பிறகு செய்ய வேண்டும்.
பலன்கள்:
வயிற்றுப் பகுதி உள் உறுப்புகள் வீரியமடையும். விந்து கட்டிப்படும். அல்சர், குடல்புண், வயிற்று வலிகள் நீங்கும். ஜீரண சக்தி அதிகமாகி இளமை மேலிடும். சொப்பன ஸ்கலிதம் நீங்கும். தொந்தி, ஊளைச்சதை கரையும்.

கோணாசனம்

நேராக நின்று கொண்டு கால்களை 2 அடி அகற்றி வைக்கவும். கைகளைப் படத்தில் காட்டியபடி தலைக்கு மேலே தூக்கிக் கோத்துக் கொள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடல் திருகாமல் வளைய வேண்டும். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப் பக்கம் சாய வேண்டும். 3 முறை செய்யலாம்.
பலன்கள்:
விலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும். பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால் இடுப்பு, பிருஷ்டம் இவற்றில் சதை போடாமல் தடுக்கலாம்

திரிகோணாசனம்


கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும், பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக நிமிரவும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யலாம். கால் மூட்டு வளையவிடக் கூடாது.
பலன்கள்:
முதுகுத் தண்டு சக்தி வளரும். நுரையீரலுக்கு நல்லது. குடல்களிலிருந்து மலம் சுலபமாய்க் கழியும். முதுகுத் தசை புத்துணர்வு பெறும். இடுப்புவலி, முதுகுத் தசை புத்துணர்வு பெறும். இடுப்புவலி, முதுகுவலி, பக்கபிளவை, கண்டமாலை, கிளாண்டு முதலிய நோய்கள் நீங்கும்.

பாதஹஸ்தாசனம்


பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலைத் தளர்த்திக் குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும். முழங்கால் கொஞ்சமும் வளையக் கூடாது. கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும். முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரலைப் பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் முழங்காலுக்குப் பின்னால் கட்டி, கிட்டிபோட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஓரிரு வாரங்களில் படத்தில் காட்டியபடி முழுநிலை அடையலாம். ஒரு முறைக்கு 10 முதல் 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.
பலன்கள்:
முதுகுத் தசைகள் நன்றாக இளக்கப்பட்டு பலம் பெறும். அடிவயிற்று உறுப்புகள் அழுத்தப்பட்டு புத்துணர்வு பெறும். வயிறு சம்பந்தப்பட்ட எல்லா நோயும் நீங்கும்.
நீரிழிவு, மலட்டுத்தனம், வயிற்றுவலி, அஜீரணம், தலைவலி, மூலக்கடுப்பு, முதுகுவலி, இடுப்பு வலி, நரம்பு பலவீனம், இரத்த வியாதி, பசியின்மை, மலேரியா கட்டி, பித்த சோகை, வாதங்கள், மாதவிடாய் சம்பந்தமான நோய் நீங்கும். இளமை உண்டாகும்.

பிறையாசனம்


இவ்வாசனத்தை அர்த்த (பாதி) சக்கராசனம் எனக் கூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளைய வேண்டும். கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.
பலன்கள்:
முதுகுத் தண்டு பலம் பெறும். இளமை மேலிடும். உடலில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பெற்று புத்துணர்ச்சி பெறும். சோம்பல் ஒழிந்து சுறுசுறுப்பு உண்டாகும். கூன் முதுகு நிமிரும். நெஞ்சுக் கூடு விரிந்து நுரையீரல், சுவாச உறுப்புகள் பலம் பெறும்.

நின்ற பாத ஆசனம்


இவ்வாசனம் சிரசாசனம், அர்த்த சிரசாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம். ஒற்றைக் காலில் நிற்பது. வலது காலில் நின்று கொண்டு இடது காலை மடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து ஆசனவாயில் படும்படி நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக் கூடாது. பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். நின்று கொண்டு காலை பத்மாசனத்திற்குப் போடுவது போன்றும் செய்யலாம். மூச்சு சாதாரணமாக விடலாம். பழங்காலக் கோவில்களில் இதுபோன்ற ஆசன நிலையில் உள்ள சிற்பங்கள் பல காணலாம்.
பலன்கள்:
இவ்வாசனம் பார்வைக்கு மிக இலகுவாகத் தோன்றினாலும் இதன் பலன் மிக அதிகம். தியானம், மன ஒருமைப்பாடு, திடசிந்தனை இவைகளுக்கு சிறந்த ஆசனம். வாதம், நரம்புத் தளர்ச்சி, சோம்பேறித்தனம் இவைகள் ஒழியும். மனச் சஞ்சலம் ஒழியும். திடமனது ஏற்படும். காரியங்களைச் செம்மையாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பயம் ஒழியும். ரத்த ஓட்டம் சீர்படும். மன அமைதி பெறும். சஞ்சலங்கள் ஏற்படாது.

அர்த்த சிரசாசனம்


கெட்டியான விரிப்பில் மண்டியிட்டு உட்காரவும். விரல்களைச் சேர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மேல் அமர்த்தவும். உச்சந்தலையைத் தரையில் அமர்த்தி, பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு குனிந்து அமரவும். பிருஷ்டபாகத்தைத் தூக்கி கால்களை அருகே இழுத்து முக்கோண வடிவமாக நிற்கவும். சாதாரண மூச்சு. கண் மூடியிருக்க வேண்டும். உடல் கனம் யாவும் கையால் தாங்கும்படியாக இருக்க வேண்டும். ஒரு முறைக்கு 1 முதல் 2 நிமிடம் வரை இருக்கலாம். பின் மெதுவாக ஆசனத்தைக் கலைக்க வேண்டும். 2 முதல் 5 முறை செய்யலாம். சிரசாசனம் செய்யுமுன் 15 நாட்கள் இவ்வாசனம் கண்டிப்பாய்ச் செய்ய வேண்டும்.
பலன்கள்:
சிரசாசனத்தில் சொல்லப்பட்ட பலன்கள் 80 சதம் இதற்குக் கிடைக்கும்.
மிகப் பலகீனமானவர்கள், வயதானோர், மாணவர்கள், சிறுவர், பெண்கள் இவ்வாசனத்தை மட்டும் தினம் காலை மாலை 3 நிமிடம் செய்தால் நல்ல ஆரோக்கியம், உடல் பலம், சுறுசுறுப்பு, ஞாபகசக்தி, உடல் தெம்பு, கண்பார்வை உண்டாகும்.

அர்த்த மத்ச்யேந்திராசனம்


உட்கார்ந்து இடது காலை மடக்கி இடது குதியை தொடைகள் சந்திற்குக் கொண்டு வரவும். வலது முழங்காலை மடக்கி நிறுத்தி, இடது முழங்காலருகே வலது பாகத்தைக் கொண்டு வந்து தூக்கி இடது தொடையைத் தாண்டி பக்கத்தில் சித்திரத்தில் காட்டியவாறு நிறுத்தவும். உடலை வலது பக்கம் திருப்பவும். இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி, பின்புறமாய் முழங்காலை அமர்த்திட இடது கையால் இடது முழங்காலையும் பிடித்துக் கொள்ளவும். முதுகை வலது பக்கம் திருப்பி, வலது கையைப் பின்னால் வீசி மூச்சை வெளியேவிட்டு வலது விரல்களால் வலது காலில் மாட்டிக் கொக்கி போல் உடலை நன்றாகத் திருப்பி இழுக்கவும். ஆசனத்தைக் கலைத்து இடது பக்கம் மறுபடியும் அம்மாதிரி மாற்றிச் செய்யவும்.
பலன்கள்:
முதுகெலும்பு திருகப்பட்டு புத்துணர்ச்சி ஏற்படும். நாடி மண்டலம் நன்கு வேலை செய்யும்.இளமை மேலிடும், முகக்கவர்ச்சி உண்டாகும். விலா எலும்பு பலப்படும். தொந்தி கரையும்.

புஜங்காசனம்


குப்புறப் படுத்துக் கொண்டு கைகளைப் பக்கங்களில் காதுக்கு நேராக தரையில் பொத்தியவாறு வைத்து தலையை மட்டும் பாம்பு போல் மெதுவாக முடிந்தவரை தூக்கி கழுத்துக்குப்பின் வளைக்கவும். சாதாரண மூச்சு. பின் மெதுவாகத் தலையைக் கீழே இறக்கவும்.
ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.
புஜங்கம் என்றால் பாம்பு எனப் பொருள். பாம்பு படம் எடுப்பதைப் போல் வளைவதால் இவ்வாசனம் புஜங்காசனம் எனப் பெயர் பெற்றது.
பலன்கள்:
வயிற்றறையில் தசைகள் இழுக்கப்படுவதால் அங்கு ரத்த ஓட்டம் ஏற்படும். முதுகெலும்பு பலம் பெறும். மார்பு விரிந்து விலாவில் பலமடையும். ஆஸ்துமா நோய்க்கு முக்கிய ஆசனம்.

ஹலாசனம்


சர்வாங்க ஆசன நிலையில் இருந்து விபரீத கரணி நிலைக்கு வந்து, இரு கால்களையும் தலைக்குப் பின்பக்கம் மெதுவாகக் கொண்டுவந்து தரையைத் தொட முயற்சிக்கவும். ஆரம்ப காலத்தில் தரையைத் தொட இயலாது. ஓரிரு வாரங்களில் தரையைத் தொடும்.
அல்லது விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி கைகளை உடல் பக்கத்தில் தரையில் வைத்துக்கொண்டு உள்ளங்கையைக் குப்புற வைக்க வேண்டும் கால்களை நேராக ஒட்டியவாறு இருக்க வேண்டும். மூச்சைச் சிறிது உள்ளிழுத்து கால்களை இடுப்பிலிருந்தும் மேல் கிளப்பி உயர்த்தி சரீரத்தின் மேல் வளைத்து சுவாசத்தை வெளியே விட்டு கட்டை விரல்களை தலைக்குப் பின் கொண்டு வந்து தரையைத் தொட முயற்சிக்கவும். நாடி நெஞ்சைத் தொட வேண்டும்.
ஒரு முறைக்கு ஒரு நிமிடமாக 2 முதல் 3 முறை செய்யலாம். ஆசன நிலையில் சாதாரண மூச்சு.
பலன்கள்:
முதுகுத் தண்டுவடம் பலம் பெறும். நாடி மண்டலங்கள் அனைத்தும் நன்கு வேலை செய்யும். முதுமை ஒழிந்து இளமை மேலிடும். சோம்பல் ஒழியும். இடுப்பு, முதுகு, கழுத்து பலம் பெறும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையின்றி வாலிபத்தில் ஆண்குறியைத் தவறாகப் பயன்படுத்தி வீரியம் பெற்று இளமை பெற இவ்வாசனம் மிகவும் பயன்படும். பெண்கள் கருவுற்ற இரண்டு மாதம் வரை செய்யலாம். பின் செய்யக்கூடாது. நீரிழிவு நோய் வெகு விரைவில் குணமாகும்.

மகாமுத்ரா


உசர்ட்டாசனத்திற்கு மாற்று ஆசனம், வஜிராசன நிலையில் கைகளை முதுகின் பின்புறம் படத்தில் காட்டியபடி கட்டிக் கொண்டு, தலையைத் தரையில் தொடும்படி முன்னால் குனியவும். உடலை 3 மடிப்புகளாக வளைப்பதால் உடல் விறைப்புத்தன்மை குறையும். சாதாரண மூச்சு 20 எண்ணும் வரை இருந்தால் போதுமானது. 3 முறை செய்யவும்.
பலன்கள்:
வாத நோய்க்கு சிறந்த ஆசனம். யோக முத்ரா ஆசனத்திற்கு உள்ள பலன்கள் இதற்குக் கிடைக்கும்.

உசர்ட்டாசனம்


உசர்ட் ஆசனம் என்றால் ஒட்டக ஆசனம் எனப் பெயர். மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் பின்னால் இரு கணுக்கால்களையும் பிடித்துக் கொண்டு பிருஷ்ட பாகத்தை காலில் உட்கார்ந்து இருப்பதிலிருந்து கிளப்பி தலையைப் பின்னால் படத்தில் காட்டியபடி தொங்கப் போட வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்:
முதுகெலும்பு பலப்படும். மார்பு விரியும். சுவாசக் கருவிகள் நன்கு வேலை செய்யும். மூக்கடைப்பு, ஆஸ்துமா நீங்கும். மூச்சுத் திணறல், பலகீனம் ஒழியும்.
போலீஸ், மலிட்டரிக்கு வேலைக்குப் போகிறவர்கள் மார்பு அகலம் வேண்டும் என்றால் 15 நாள் இப்பயிற்சியைச் செய்தால் 2 முதல் 3 அங்குலம் மார்பு விரியும். ஆஸ்துமாவுக்கு மிக முக்கியமான ஆசனம். தரையில் கையை வைத்தே முதலில் பழக வேண்டும். பின் 15 நாள், ஒரு மாதம் சென்றபின் கால்களில் கைகளை வைத்து செய்யலாம்.

சுப்தவஜிராசனம்


முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமர வேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து அமரவும். பின்னர் கைகளைக் கோர்த்து மார்பில் வைக்க வேண்டும். சித்திரத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை
வளைத்து
படுக்க வைக்க வேண்டும். அடுத்து ஆசன நிலையில் இருக்கும் போது ஒரே நிலையில் மெதுவாகச் சுவாசம் செய்ய வேண்டும். சுவாசத்தை மெதுவாக வெளியிட்டவாறு ஆசனத்தைக் கலைக்க வேண்டும்.
பலன்கள்:
ஜனனேந்திரிய பாகங்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளக்கிறது. தசை நாளங்கள், நரம்புக் கோளங்கள் முதலியவற்றை நன்கு இயங்கச் செய்கிறது. கர்ப்பாசய உறுப்பு நன்கு அழுத்தப்படுவதால் வலுப்பெறும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். கருத்தரித்த மாதத்திற்குப் பின்னும் மாதவிடாய் ஆன காலத்திலும் இந்த ஆசனம் செய்தல் கூடாது. மச்சாசனம் செய்ய முடியாதவர்கள் இவ்வாசனம் செய்யலாம்.

விபரீத கரணி


விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இளக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் பிருஷ்டத்தையும் முதுகையும் உயரக் கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் பிருஷ்டத்தைத் தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும்.
ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் பிருஷ்ட பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து நிற்கலாம். அல்லது சுவரின் ஓரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து பிருஷ்ட பாகத்தைத் தூக்கி நிறுத்திச் செய்யலாம். காலை விறைப்பாக வைக்காமல் சாதாரணமாக வைக்கவும்.
ஒரு முறைக்கு 2 நிமிடமாக 2 முதல் 3 முறை செய்யலாம். சாதாரண மூச்சு.
கீழே இறங்கும் போது காலை மடக்கிக் கைகளால் பிருஷ்ட பாகத்தை வழுக்கி இறக்க வேண்டும்.
பலன்கள்:
சர்வாங்காசனத்தின் 80 சதவீதப் பலன்கள் இந்த ஆசனத்திற்குக் கிடைக்கும்.
குறிப்பு:
நேரம் கிடைக்காதபோது 2 நிமிடம் இவ்வாசனத்தை மட்டும் செய்தால் நல்ல உடல் நலம் சுறுசுறுப்புக் கிடைக்கும்.

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...