30 அக்டோபர் 2012

கரட்டூர்-சொர்க்க பூமி-03, crematorium-Karattur

 மரியாதைக்குரிய நண்பர்களே,
                               வணக்கம்.
                          சத்தியமங்கலம் வட்டம் - அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் குக்கிராமத்திற்குச் சொந்தமான  சொர்க்க பூமியை மண் கொட்டி மேம்படுத்தி, மரக்கன்றுகள் நட்டு,அழகிய பூங்காவனம் அமைத்து அதனுள் அனைவருக்கும் பயன்படும் மூலிகைபண்ணை அமைக்க கரட்டூர் பொதுமக்கள் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட 
                     மகாசக்தி ஆண்கள் குழு உறுப்பினர்கள் 
    இன்று மரக்கன்று நடவு செய்ய! காலை ஆறு மணிக்கே! சொர்க்க பூமி சென்றனர்.ஆனால் நீலம் என்று பெயரிடப்பட்ட புயலின் தீவிரத்தால்   கொட்டிய மழையால்  இன்று செய்ய இருந்த வேலை வரும் ஞாயிற்றுக்கிழமை 04-11-2012 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.மரக்கன்றுகளைப்பாதுகாக்க கம்பிவலைக்கூண்டுகளை தற்காலிகமாக பாடுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது. 
மீண்டும் ''சமூக நலனுக்கான பொது வேலை'' தொடரும்.........
  POST BY:-
  PARAMESWARAN.C
 TAMIL NADU SCIENCE FORUM
THALAVADY
ERODE-Dt.

கரட்டூர்-சொர்க்கபூமி-02,crematorium-Karattur

மரியாதைக்குரிய நண்பர்களே,
                                      வணக்கம்.
                           சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் குக்கிராமத்தில் சொர்க்கபூமி மேம்பாடு மிக அசுரவேகமாக நடைபெற்றுவருகிறது.
                  அதற்கு(பொதுமக்கள் நலனுக்காக ) முழுநேர உழைப்பினைக் கொடுக்கும் மகாசக்தி ஆண்கள் குழுவினருக்கு சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
     இரண்டாவது வேலையாக நேற்று (30-10-2012) வனத்துறையிடம் நாற்றுக்கள் பெற்று வாடகை ஊர்தியில் எடுத்துவரப்பட்டது.அதன் புகைப்படத்தொகுப்பு கீழே காண்க!




        30-10-2012அன்று மாலை3-00மணிக்கு மரக்கன்றுகள் எடுத்துவர! 
            எத்தனை ஆனந்தம் பாருங்கள்!! மகாசக்தி ஆண்கள்குழு உறுப்பினர்களுக்கு!!இதுவல்லவோ மகத்தான சமூகசேவை! மகிழ்ச்சியான சேவை!!






      இதோ! கருமமே கண்ணாய் இருக்கும் இன்னொரு சமூகநலன் ஆர்வலர்!!அமர்ந்திருப்பதில்தான் அடக்கம்! செயலில் தீவிரம்!!
 
                                 ஈரோடு மாவட்டம் -சத்தியமங்கலம் வனக்கோட்டம் 
                     பண்ணாரி மத்திய நாற்றாங்கால்!   நினைவுக்காக!!





   வனத்துறை,மாண்புமிகு முதல்வரின் 64-வது பிறந்த நாள்- மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்ட நாற்றுக்களைத்தான் வழங்கியுள்ளது.எந்த வடிவில் கிடைத்தால் என்னங்க? நமக்குத்தேவை,கரட்டூர்- சொர்க்கபூமிக்கு மரக்கன்றுகள்!!


    வனத்துறைக்குட்பட்ட  பண்ணாரி மத்திய  நாற்றாங்காலில், 
              மகாசக்தி ஆண்கள் குழு செயல்வீரர்கள்! நல்ல கன்றுகளைத் தேர்வு செய்யும் காட்சிங்க! இதுதான் பொதுநலனிலும் சுய நலன்! என்பதோ?!?.





     வாடகை வாகனத்தில் நாற்றுக்களை இன்முகத்தோடு ஏற்றும் காட்சிங்க!நாமும் அவர்களோடுஇணைந்து கொள்ளும் எண்ணத்தை நமக்கும் உருவாக்குதுங்க!





  பொதுச்சேவையின் கடின உழைப்பிலும் கலகலப்பான முகங்களைக் கண்டால் நம்மையும் சுண்டி இழுக்குதுங்க!அருகில் வன நாற்றாங்கால் பராமரிப்பு ஊழியர்!



    வாடகை கொடுப்பதென்றாகிவிட்டது! முடிந்தவரை ஏற்றிக்கொண்டோம்!?என்ற உவகையோ? இவற்றை நடவு செய்து பராமரிப்பதுதாங்க கடின வேலைங்க!

                    கரட்டூர்-சொர்க்க பூமி வந்தாயிற்று.அடுத்து என்ன செய்ய? எந்த இடத்தில் இறக்கிவைக்க?என மகாசக்தி ஆண்கள் குழுவின் மற்ற பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளும் வேகம் பாருங்க!.





       இறக்கி வைக்க இடம் தேர்வு செய்தாகிவிட்டது.இறக்குவோம் மரக்கன்றுகளை! எனத் தயார்நிலையில் சமூக நல தீவிரவாதிகள்!அருகில் பட்டதாரிப்பெண் உட்பட பொதுமக்களில் சிலர்.
                                                          இன்னும் தொடரும்............ பார்வையிட்ட தங்களுக்கு மிக்க நன்றிங்க!!!!!!!!.........

 Post By:-
 Parameswaran.c
Tamil nadu science forum 
 Thalavady
Sathyamangalam-638402
Erode Dt.






  

27 அக்டோபர் 2012

கரட்டூர்-சொர்க்க பூமி--01, Crematorium-Karattur

மரியாதைக்குரிய நண்பர்களே,
       வணக்கம். 
                 இந்தப்பதிவில் சத்தியமங்கலம்-வட்டம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சி(5-வது வார்டு)-கரட்டூர் குக்கிராமம்- சொர்க்க பூமி (மயானம்) மேம்பாடு பற்றிய விபரம் சிறிது காண்போம்.


     மயானத்தை மேம்படுத்துவோம்!                    மன நிறைவு பெறுவோம்!!
               27-10-2012 இன்று சத்தியமங்கலம் வட்டம்-அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் குக்கிராமம் ஊர்ப்  பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஓடைகளும்,பாறைகளும் நிறைந்த, புதர் மண்டிக்கிடந்த மயானத்தை சுத்தம் செய்து,அமரர்களை அடக்கம் செய்ய போதுமான மண் ஓட்டி மண்தளத்தை உயர்த்தி, மின்விளக்கு அமைத்து,தண்ணீர்த்தொட்டி கட்டி,மயானத்தின் உட்புறமாக சாலை ஒன்று தற்காலிகமாக அமைத்து,மரங்கள் நட்டு,முகப்புவாயிலில் அழகிய பூங்காவனம்,மூலிகைப்பண்ணை,சொர்க்க ரதம் மற்றும் நிறுத்த கொட்டகை, சுகாதாரம் பேணுதல், என பல்வேறு திட்டங்களின் முதற்கட்ட வேலை துவங்கப்பட்டுள்ளது.
       நீண்ட நாட்கள் முயற்சிக்குப்பிறகு தற்போதுதான்(27-09-2012) மகாசக்தி ஆண்கள் குழு என்ற பெயரில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
 சொர்க்க பூமியை பசுமைபூமியாக மாற்ற ஆர்வத்துடன் செயலாற்றும் சிறுவன்.

  மக்கள் பிரதிநிதி மற்றும் செயல்வீரர்கள்.


 மரக்கன்று நட குழி தோண்ட நில அளவையிட்டு உதவிடும் செயல்வீரர்கள்



   மண் தோண்டும் இயந்திரம் அதாங்க! JCB ,ஒருபுறம் வேலையில் ஈடுபட இன்னொருபுறம் துடிப்புடன் அளவிடும் பட்டதாரி இளைஞர்.
    

                  மற்ற பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு  திட்டமிடும் செயல்வீரர்கள்


 கால்வைக்கமுடியாத இடத்திலும் கவனமாக அளவையிடும் ஆர்வலர்கள்.



    மண்தோண்டும் இயந்திரம் பூமியை சமப்படுத்தும் காட்சி.




                    

           
                 27-10-2012 இன்று மண்தோண்டும் இயந்திரம் கொண்டு (J.C.B) அன்றைய தினம் ஊரில் இருந்த நண்பர்கள் மேற்பார்வையில் காலை எட்டு மணிக்கு துவங்கிய வேலை மதியம் மூன்று மணிக்குத்தான் வேலை நிறைவு பெற்றது.

        அடுத்ததாக,  ஆர்வமும் விருப்பமும் உள்ள தொழிற்சாலைகள்,தனியார் நிறுவனங்கள்,சமூக சேவை அமைப்புகள்,தன்னார்வலர்கள்,தனிநபர்கள், என அனைவரிடமும் நிதியுதவி,பொருளுதவி போன்றவைகளைப்பெற்று அனைத்தையும் முழுமையாக சொர்க்க பூமிக்கே செலவிடுவது என முடிவு செய்யப்பட்டது.

                அவ்வாறு உதவி செய்யும் அனைத்து நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் உதவி விபரத்தை  காண்போர் அனைவருக்கும் சமூக சேவை மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம்,வருங்கால சந்ததிகள் அத்தகைய நல்லோரை போற்றி வணங்கும் வண்ணம் பெயர்ப்பலகையில் பெயர்களைப்பதித்து பராமரிப்பது.

        பொதுமக்கள் நலன்கருதி அரசு மற்றும் அரசுத்துறையைச் சேர்ந்தவர்களை அணுகி  உதவி பெற்று செயல்படுத்துவது.இன்னும் பல செயல்பாடுகளைச் செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது. 
இன்னும் தொடரும்................பார்வையிட்ட தங்களுக்கு மிக்க நன்றிங்க!
  POST BY;-
 PARAMESWARAN.C
TAMIL NADU SCIENCE FORUM
THALAVADY
ERODE Dt.

19 அக்டோபர் 2012

பேருந்துப் பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகள்-2012


அன்பு நண்பர்களே,வணக்கம்.
  இந்தப்பதிவில் பேருந்துப்பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகள் பற்றி சிறிது அலசுவோம்.கீழ் கண்ட புகைப்படம் (Face book Friend)  ஃபேஸ்புக் நண்பர் மரியாதைக்குரிய ஆதித்யா அவர்கள் பதிவிட்டது.


மரியாதைக்குரிய ஆதித்யா விசாகா, சோதிடர் அவர்கள் தமது ஃபேஸ்புக் பதிவில்  பயணத்தின்போது
பேருந்தில் நடத்துனர்களின் அணுகுமுறை சரியில்லை! எனத் தெளிவாக்கியுள்ளார்.
      (அதுவும் தனியார் பேருந்து மற்றும் அதில் பணி புரியும் நடத்துனர் புகைப்படத்துடன்)
      யாராக இருப்பினும் மரியாதைக்குறைவு என்பது! அதுவும் பொதுஜன ஊழியன் மரியாதைக்குறைவாக சமூகத்தினரிடம் நடப்பது ஏற்க முடியாதுங்க! தண்டனையே பெற்றுத்தரலாம்.முக்கியமான விசயம் மனித சமூகமாகிய நாமே ஒருவருக்கொருவர் நாகரீகம் கருதி ஏற்றதாழ்வு கருதாமல் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.அதுதாங்க நமது  பண்பாடு.அதுதாங்க ஒழுக்கமுள்ள நாகரீகம்.சரி விசயத்திற்கு வருவோம்.
 பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் படும்பாடு!
      அரசுப்பேருந்து ஓட்டுனர் என்பதால் எங்களுக்கு உள்ள சிரமங்கள் மற்றும் அனுபவங்கள்  சமூகத்தின் பார்வைக்கு கொண்டுவரவே இந்தப்பதிவுங்க!
       குறிப்பு;- சிலரின் தவறான அணுகுமுறையால் எங்களுக்கும் பாதிப்புங்க! நாங்களும் சமூகத்தின் அங்கத்தினரே!
  (1)பயணிகளுக்கான  சில்லறைப் பிரச்சினை;-
   பேருந்தில் பணிபுரியும் நடத்துனர்கள் தங்களது பணப்பையில் சொந்தப்பணம்  ஏதும் வைத்திருக்கக்கூடாது.அப்படியானால் சில்லறை எப்படிங்க வைத்துக்கொள்வது.(அதற்காகத்தான் நிர்வாகம், பேருந்தின் உட்புறம் சரியான சில்லறை கொடுத்து பயணச்சீட்டு பெறவும் என எழுதி வைத்துள்ளதுங்க!)அடுத்து நடத்துனர் பணப்பையின் கொள்ளளவு (SIZE) தங்களது கண்முன்னே தெரியும்.அனைவரும் சில்லறையாகக் கொடுத்தால் நடத்துனரால் தாக்குப்பிடிக்க முடியாதுங்க!.சாக்குப்பை ஒன்று (அதாங்க கோணிப்பை) வைத்துக்கொள்ள வேண்டியதாகிவிடும். அதே சமயம் நான்கு பேராவது சில்லறை கொடுத்து ஒருவர் பணமாகக்கொடுத்தால் சில்லறை கொடுக்க இயலும்.அவ்வாறு நடைமுறை இருந்தால் பிரச்சினைக்கே இடமில்லைங்க!

 (2) ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிச்சுமை;-
   (அ) நடத்துனர் ;-
    அடுத்த கட்டண நிலை வருவதற்குள் பேருந்தில் ஏறிய அல்லது ஏற்றிய அனைத்து பயணிகளுக்கும் மிக விரைவாக பயண தூரத்திற்குண்டான சீட்டு மற்றும் அதற்குண்டான தொகை பெறுதல் மற்றும் வாங்கும் ரூபாய்நோட்டு நல்ல நோட்டா? கள்ளநோட்டா? என சரி பார்த்து  சரியான சில்லறை கொடுத்தல் வழிவசூல் தாளில் பதிவிடுதல் போன்ற வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்ய வேண்டும்.அதுவும்  ஓட்டுனரின் ஓட்டும் தன்மை,பேருந்தின் நிலை,போக்குவரத்து நெரிசல்,பாதையின் தன்மைக்கேற்ப இதற்கிடையே பயண நேரம் கணக்கில் கொண்டு இயக்கும் சூழலில் அனைத்துக் குலுக்கல் மற்றும் பயணிகளின் நெருக்கமான இடிபாடுகள் என அனைத்து இடையூறுகளிலும் தமது தொழிலிலேயே கண்ணும் கருத்துமாக கால தாமதமின்றி! தன்னை சமநிலைப்படுத்திஒரு கையில் பேனா,ரூபாய் நோட்டுக்கள்,இன்னொரு கையில் வழிவசூல் தாள்,பயணச்சீட்டுக்கட்டுக்கள்,அக்குளில் பணப்பை அதுவும் சரியான தொகையுடன் -குறித்த நேரத்தில் இவைகள் அனைத்தையும்  ஒவ்வொரு பயணக்கட்டண நிலையிலும்!(Fare stage)செய்து முடிக்க வேண்டும் கிட்டத்தட்ட சர்க்கஸ் வேலை போல!?!?!!?! குறிப்பாக கிராமப்பகுதி இயக்கம் மற்றும் நகர்ப்புற பேருந்து இயக்கம் அதிலும் கோயமுத்தூர்,திருப்பூர் போன்ற பெருநகர்ப்பகுதி பேருந்துப்பணியில் நடத்துனரின் பணிச்சூழலின் கடுமையைதாங்கள் இனியாவது கண்ணுற வேண்டும்.இதில் போதிய கால அவகாசம் இல்லாமல் பணியின்போது பத்து ரூபாய்க்கு பதிலாக நூறு ருபாய் பெற்றதாக எண்ணி சில்லறைகளைக் கொடுத்துவிட்டு இரவு பதினொன்று மணியளவில் வசூல் கணக்கில் பற்றாக்குறை ஐநூறு,அறுநூறு பேருந்து பணிமனைக்குள் நுழைந்த ஒரு மணி நேரத்திற்குள் வசூல் பிரிவில் கணக்கு கட்ட நடத்துனர் படும்பாடு!?! தங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைங்க!

 (ஆ) ஓட்டுனர்;-
   
      நல்லமனநிலையில் பணி ஆரம்பிக்கும் ஓட்டுனர்  பேருந்தின் தன்மை,சாலையின் தன்மை,பிற வாகன ஓட்டிகளின் தன்மை,போக்குவரத்து நெருக்கம்,சாலையைப் பயன்படுத்தும் பிற வகையினரின் தன்மை,நடத்துனரின் தன்மை,பயணிகளின் தன்மை,முக்கியமாக நிர்வாகத்தின் கால நிர்ணயத்திற்குள் குறிப்பிட்ட இடம் செல்ல வேண்டிய கட்டாயம்
        (இந்த பயணதூரத்திற்கான காலம் நிர்வகித்து பல பல ஆண்டுகள் ஆகிவிட்டதுங்க!அன்றைய காலத்தில் போக்குவரத்திற்கு வாகனங்களைத் தேடிப் பிடிக்க வேண்டியதாக இருந்ததுங்க!) 
         என விவரித்துக்கொண்டே செல்லலாம்.அந்த அளவு மோசமான இடையுறுகளை எல்லாம் தாங்கி,சகித்துக்கொண்டு மனநிலை பாதிக்கும் அளவுக்கே செல்ல வேண்டிய சூழல் ஒவ்வொரு நாளின் பணியின் போதும் ஏற்படுவது தங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைங்க!
           குறிப்பாக நிர்வாகம் எரிபொருள் சிக்கனம் என்பதைக் காரணமாகக்கொண்டு ஓட்டுனருக்கு நெருக்கடி கொடுத்து  கட்டுப்படுத்திவிடுவது.ஆனால் வழித்தடத்தில் சமூகம் மத்தியில்   ஓட்டுனர்  குற்றச்சாட்டுக்கு ஆளாவது.கால தாமதம் செய்யறது ஓட்டுனர்தாங்க! என சிறிதும் இரக்கமின்றி ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு கூறுவது.ஐம்பத்தைந்து நபர்களுக்கான பேருந்தின் கொள்ளளவில் நூற்றிஐம்பதுக்கும் அதிகமான நபர்களை ஏற்றிச்சென்றும்.பேருந்தில் ஏற்ற இடமில்லாமல் விட்டுச்செல்லும் சூழலில், வழித்தடத்தில் பயணிகளை ஏற்றிவரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகுவது.
         அடுத்து அரசுப்பேருந்துகளில் மட்டும் ஒலிப்பான்களை ஒலிமாசு காரணம் காட்டி  தடை செய்வது.மற்றும் ஒளிமாசு காரணம் காட்டி முகப்பு விளக்குகளையும் வெளிச்சம் குறைவானதாகப் பொருத்துவது.
         அடுத்து பேருந்தில் பயணிக்கும் படித்த பண்பாளர்களே,விவரம் தெரிந்தவர்களே,அவர்கள்  விருப்பப் பட்டபோது அருகிலேயே இறக்கிவிட எதிர்பார்ப்பது.அவரது மாறான விருப்பத்தின்போது விரைவுப்பேருந்தாக அடுத்த முனையத்தில்தான் நிறுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது.இதற்கு மாறாக நடக்கும்சூழலில்  ஓட்டுனருக்குக் கிடைக்கும் திட்டு சொல்லி மாளாதுங்க! ஆனால் பேருந்தில் பயணிக்கும்போது திட்டியவரே, தனி வாகனப் பயணத்தின்போது பயணிகள் பேருந்துக்கு வழிவிட மறுப்பது.மற்றும் வேகமாகச் செல்லாமல் (வழிவிட இடமிருந்தும்) நடு ரோட்டில் சென்று கால தாமதம் ஏற்படுத்துவது.ஓட்டுனரைப் பகையாளியாகப் பார்ப்பது.ஓட்டுனரைப் பழிவாங்குவதாக எண்ணி பயணிக்கும் சமூகத்திற்கு கால தமதத்தை ஏற்படுத்துவது.வழக்குரைஞர் போன்ற மோட்டார் வாகன சட்ட நுணுக்கம் தெரிந்தவர்களின்
   (நல்ல குணமுள்ள பலரைப் புண் படுத்துமாயின் மன்னிக்க வேண்டுகிறேன்.இது எனது அனுபவத்தின் பதிவுங்க!) 
       மிகச் சிலருடைய  அதிகார மிரட்டல்,ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பெயரைப்பயன்படுத்தி சில அடிநிலை அரசியல்வாதிகளின் (அவர்களது சொந்த நலனுக்காக மிரட்டல்) அடுத்து காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்கும்,மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கட்டுப்பாட்டிற்கும்,நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கும்,நடத்துனரின் கட்டுப்பாட்டிற்கும்,பிற வாகன ஓட்டிகளின் கட்டுப்பாட்டிற்கும்,பயணிகளின் கட்டுப்பாட்டிற்கும் (இங்கு கவனிக்க வேண்டியது ஓட்டுனர் கட்டுப்பாடு மற்றும் வாகனக் கட்டுப்பாடு தவிர்த்து) என கட்டுப்பட்டு ஒவ்வொருநாளும் பணி முடிக்கும்போது மனநிலை பாதிக்கும்நிலைக்கு ஆளாகித்தான் வீடு செல்கிறார்.இன்னும் பல உள்ளன.
          எத்தனையோ விழா! எடுக்கும் நாம் சமூக நலன் கருதி போக்குவரத்து மற்றும் விபத்து பற்றிய விழிப்புணர்வு விழா எடுத்தால் அனைத்து பகுதிகளிலும்,வருடந்தோறும் இளைஞர்களையும்,அனைத்து ரக வாகன ஓட்டுகளையும்,சொந்த வாகன ஓட்டுகளையும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து கருத்தரங்கம் நடத்தினால் பொதுவான நல்லதொரு முடிவு காண முடியும்.சமூகத்தைக் காக்க முடியும்.விலைமதிப்பிடமுடியாத மனித உயிர்களைக் காக்க முடியும்.பொருட்சேதமும் தவிர்க்க முடியும்.நாட்டின் பொருளாதாரமும் காக்க முடியும்.
     
அரசு நிர்வாகமும்,தனியார் நிர்வாகமும்,காவல்துறை,போக்குவரத்துத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசுத்துறையும்,  சமூக நலனில் அக்கறையுள்ள தன்னார்வ அமைப்புகளும் ஒன்றிணைந்து சாலையின் தன்மை,சாலையைப் பயன்படுத்தும் பிறவகையினரின் தன்மை,பொதுமக்கள்,பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை,நிறுத்தங்களின் எண்ணிக்கை,போக்குவரத்து நெரிசலில் ஏற்படும் கால தாமதம்,இதற்கான தீர்வு காண பயணநேரத்தில் மாறுதல் செய்வது.பயணிகள் ஏறும் எண்ணிக்கை அளவு (இலவசப்பயணதாரர்கள் கணக்கு அப்போதைய வழிவசூல்தாளில் பதிவிட வாய்ப்பில்லை என்பதால் கணக்கு வருவதில்லை.பள்ளிக்குழந்தைகள் உட்பட இலவசப் பயண அட்டையில் பயணிப்போரையும் பேருந்து ஏற்றத்தில் கணக்கில் கொண்டுவந்து ) பொதுவான முடிவு எடுத்தால் முடிந்தவரை சிரமங்களும்,எதிர்பார்ப்பிற்கான தோல்விகளும் தவிர்க்கப்படும் என்பதே எனது தாழ்மையான கருத்துங்க!
இதனை முழுமையாகக் கண்காணிக்க இயலாது என்ற முடிவு சிலருக்கு ஆறுதலாக இருக்கலாம்.ஆனால் தற்போதைய சூழலில் கண்காணிக்க இயலாது என்ற பேச்சுக்கே இடமில்லைங்க.அந்த அளவு நவீன கண்டுபிடிப்புகளும்,தொழிற்நுட்பங்களும் மேம்பாடு அடைந்துள்ளதுங்க!              
             உதாரணமாக வேலூர் மாவட்டம் காட்பாடி-பாகாயம் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் இரண்டில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னால் பொருத்தப்பட்ட கண்காணிப்பு காமெரா போல அனைத்து பேருந்துகளிலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்திவிட்டால் பொதுமே!செலவும் மிகக்குறைவுதாங்க!இருபத்திநாலு மணி நேரமும் கண்காணிக்கலாம்.இதனால் உண்மையான நிலை பற்றி நடுநிலையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.இதனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது பொய்ப்புகார் பதிவு செய்வதும் தவிர்க்கப்படும்.
      
      
          யார் எங்கு தவறு செய்கிறார்கள்.எனக் கண்டறிந்து தண்டிக்க அல்லது அறிவுறுத்த வாய்ப்பு ஏற்படுத்தி திருந்த வைக்கலாம்.
இன்னும் பல அனுபவ சம்பவங்கள் உள்ளன. காலச்சூழல் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.நன்றிங்க! 
         குறிப்பு;- நண்பர்களே,தங்களது அனுபவங்களை,மனதில் பட்ட கருத்துக்களை,ஆலோசனைகளை,சமூக நலன் கருதி பதிவிடுங்கள்.இதுவும் நம்மை நாமே திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அமைத்துக்கொள்ளலாம்.
          தங்களது கருத்துகளுக்காக எதிர்நோக்கும் 
      அன்பன் -PARAMESWARAN.C //DRIVER // அரசுப்போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை.

கூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி? | கற்போம்




மரியாதைக்குரிய நண்பர்களே,
      வணக்கம். தற்போது எந்த ஒரு புதிய ஊர் அல்லது இடத்திற்குச் சென்றாலும்  தேடி அலைய வேண்டியதில்லைங்க! அவ்வாறு தேடும் இடம் அல்லது ஊர் அல்லது நமக்குத்தெரிந்த இடம் என எதனை வேண்டுமானாலும் கூகுள் மேப்-இல்  தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளலாம்.அவ்வாறு குறிப்பிட்ட ஊர் அல்லது இடம் கூகுள் மேப் - இல் கிடைக்காவிடில் நாமே சேர்த்துக்கொள்ளலாம்.அது பற்றிய பதிவுங்க! இது. பிரபுக்கிருஷ்ணா அவர்களுக்கு நன்றிங்க! என PARAMES DRIVER - THALAVADY - ERODE Dt.



கூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி? | கற்போம்

11 அக்டோபர் 2012

தாளவாடியில் சாலைப் பயன்பாட்டிற்கு ஆர்ப்பாட்டம்-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,
      வணக்கம். 


   ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம்  வட்டத்திற்குட்பட்டது தாளவாடி ஊராட்சி ஒன்றியம். அது கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மலைப்பிரதேசம் ஆகும். 
    தாளவாடி போக்குவரத்திற்கு 
          (1) சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி திம்பம்,ஆசனூர்,காரப்பள்ளம் செக்போஸ்ட், அதன்பிறகு கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரத்திற்குட்பட்ட வனப்பகுதிக்குள் சென்று புளிஞ்சூர் செக்போஸ்ட்,கோழிப்பாளையம்,கும்பாரக்குண்டி,பிறகு தமிழ்நாடு எல்லைக்குள் இரண்டு கிலோமீட்டர் நெடுஞ்சாலைப்பகுதி.அதன்பிறகு கர்நாடகா மாநிலத்திற்குட்பட்ட நான்கு கிலோமீட்டர் நெடுஞ்சாலைப்பகுதி அதன்பிறகு தமிழ்நாட்டிற்குட்பட்ட பகுதியான கும்டாபுரம், தாளவாடி என எசகுபிசகாக  வழித்தடம் செல்கிறது.அடுத்து
                
   (2) சத்தியமங்கலம்,பண்ணாரி,திம்பம் மலைப்பாதை,திம்பம் சென்று இடதுபுறமாகத்திரும்பி முழுக்க வனத்துறைக் கட்டுப்பாட்டிலிருக்கும்  வனப்பாதையில் காளிதிம்பம்,மாவநத்தம்,பெஜலட்டி,ராமரணை,வழியாக தலைமலை,தொட்டபுரம்,முதியனூர்,நெய்த்தாளபுரம்,சிக்கள்ளி,தாளவாடி செல்கிறது.இந்தப்பாதை முழுக்க வனவிலங்குகள் நிறைந்த  குறுகிய சாலை மற்றும் கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் மிகக்குறுகிய வளைவுகள் நிறைந்த அதிக ஏற்ற,இறக்கமுள்ளஆபத்தான பாதையாகும் மற்றும் இருபது கிலோமீட்டர் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கெடுபிடி அதிகமுள்ள பாதையாகும்.
        
     
   (3)ஆசனூரை அடுத்துதேசிய நெடுஞ்சாலை209-இல்  சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இடது புறமாக வனப்பகுதிக்குள் செல்லும் பாதை இந்தப்பாதை நான்கு கிலோமீட்டர் மட்டும் வனப்பகுதிக்குள் சென்று பாளப்படுகை ஊர் சேர்கிறது.அங்கிருந்து இக்கலூர்,சிக்கள்ளி,தாளவாடி மிக எளிதாகச்செல்ல மிகப் பயனுள்ள பாதையாகும்.குறைந்த தூரத்தில் பாதுகாப்பாக தாளவாடி செல்ல ஏற்றதான பாதையாகும்.இதுவும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
     

(4) அடுத்து முக்கியமான பாதை என்றால் அது இசுலாமிய மன்னர் திப்புசுல்தான் சாலையாகும்.இந்த சாலைதான் முன்னர் திப்புசுல்தான் ஆட்சிகாலத்தில் அவரது ஆளுகைக்குட்பட்ட சத்தியமங்கலம்,பவானிசாகர் போன்ற நகரங்களில் கோட்டை அமைத்து வரிவசூல் உட்பட ஆட்சிக் கண்காணிப்பிற்காகவும் திப்புசுல்தான் கோவைக்கு  பெண் கொடுத்து அதன் காரணமாக சம்பந்த உறவுமுறைக்காகவும் போக்குவரத்துக்காக அவர்தம் படை சூழ சென்றுவர திப்புசுல்தான் அமைத்த பாதையாகும்.இந்தப்பாதை தாளவாடி வழியாக தலைமலை சென்று அங்கிருந்து வலதுபுறமாக வனத்துறை அலுவலகங்கள் ஒட்டியவாறு நேராக கராச்சிக்கொரை சென்று அங்கிருந்து சத்திக்கும்,பவானிசாகருக்கும் செல்கிறது.சுமார் நூறு அடி அகலத்திற்கும் சற்று அதிகமான இரு புறமும் ஆல மரங்கள் நடப்பட்டுள்ள அகலமான பாதையாகும்.(இந்தப்பாதை வழியாகத்தான் ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டு அது பல காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளது.)இந்தப்பாதை இரு வளைவுகள் மட்டுமே கொண்டது.அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்கிறது.வனத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ளது.பயண தூரமும் குறைவு.




      
     
   மற்ற சாலைகள் என்றால் கூடலூர்,கர்நாடகா மாநிலம் குண்டல்பேட்டை வழியாக தமிழக எல்லைக்குள் வந்து அருளவாடி,மெட்டல்வாடி,சூசையாபுரம்,தொட்டகாஜனூர்,தாளவாடி வரலாம்.அல்லது குண்டல்பேட்டை,சாம்ராஜநகர்,சிக்கொலே டேம்,எல்லக்கட்டை வழியாக தாளவாடி வரலாம்.  
  

      தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோழிப்பாளையம்,புளிஞ்சூர்,ஆசனூர் வழி சாலை பல காரணங்களுக்காக அடிக்கடி  தடுக்கப்படுவதால் தமிழத்தைச் சேர்ந்த தாளவாடிப்பகுதி தனித்தீவாகத் தத்தளிக்கிறது.அங்குள்ள மக்கள் போக்குவரத்துக்கும்,விவசாயிகள் விளைபொருட்ளை சந்தைப்படுத்தக் கொண்டு செல்லவும்,அனைத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச்செல்லவும் என தமிழகம் செல்ல முடியமல் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.அந்த நேரங்களில் அருகில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் செல்ல முடியாமல் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.இதனால் தாளவாடியில் உள்ள விவசாயிகள் உட்பட அனைத்து மக்களும் பொருள்விரயம்,நேர விரயம் என மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
அதற்காகத்தான்தற்போது எளிதாக அனுமதிக்கும் வகையில் உள்ள ஆசனூர்- பாளப்படுகை-தாளவாடி சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டு அதன்படி  வருகிற 15-10-2012 அன்று தாளவாடியில் மரியாதைக்குரிய நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்-தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் தலைமையில் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்களும்,மக்கள் பிரதிநிதிகளும்,பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.  இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக (1)மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள்,(2)மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள்,(3) மாண்புமிகு  முதலமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(4)மேதகு ஆளுநர் அவர்கள்-தமிழ்நாடு,(5)மாண்புமிகு  வனத்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(6)மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(7)மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு, (8)மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(9)உயர்திரு வனத்துறைச் செயலாளர் அவர்கள் -சென்னை(10)உயர்திரு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அவர்கள்(நிர்வாகம்) சென்னை       (11)உயர்திரு  மாவட்ட ஆட்சியர் அவர்கள்-ஈரோடு மாவட்டம்,(12) உயர்திரு  கோட்டாட்சியர் அவர்கள்-கோபி செட்டிபாளையம்,(13) உயர்திரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்-ஈரோடு மாவட்டம்,(14) உயர்திரு  துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள்-சத்தியமங்கலம்  , (15) உயர்திரு மாவட்ட வனஅலுவலர் அவர்கள்,சத்தியமங்கலம்,(16) உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்.சத்தியமங்கலம், ஆகிய அனைத்து அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

09 அக்டோபர் 2012

தமிழில் சுருக்கெழுத்துப் பயிற்சி - 05

அன்பு நண்பர்களே,
       வணக்கம்.  
                    தமிழில் சுருக்கெழுத்துப் பயிற்சியின் ஐந்தாவது பதிவுங்க! இது.







இது தனிக்குறிச் சொற்கள் நன்கு கவனித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.



    இது தமிழில் உள்ள எட்டு வேற்றுமை உருபுகளின் குறிச்சொற்கள்.நன்கு கவனித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.




தமிழின் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் சுருக்கங்கள் இது. நன்கு கவனிமாகப் படித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.








  வினைச்சொற்களின் சுருக்கங்கள் இது. நன்கு கவனித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.





 வினைச் சொற்களின் சுருக்கங்கள் தொடர்ச்சி இது. நன்கு கவனித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.
   அடுத்த பதிவில் தொடர்ச்சி.............நன்றிங்க!
    தேவைப்படும் அன்பர்கள் எனது பதிவில் உள்ள அனைத்தையும் அனுமதியின்றி தாராளமாக நகல் எடுத்துப் பயன்பெறவும்.
  கவனியுங்கள்! தமிழில் சுருக்கெழுத்துப்பயிற்சியினை நான் நன்கு கற்றுத்தேர்ந்து அதன்பிறகு  எனது பணி பாதிக்காத வண்ணம் நேரம் கிடைக்கும் பொழுது மிகச் சிறப்பாக காணொளியில் அதாங்க YOU TUBE -இல் விளக்கமாகப் பதிவிட உள்ளேன்.பொறுமை காக்க வேண்டுகிறேன்.
           PARAMES DRIVER // 
          TAMIL NADU SCIENCE FORUM // 
            THALAVADY - ERODE Dt.


     

தமிழில் சுருக்கெழுத்துப் பயிற்சி-04

ன்பு நண்பர்களே,
   வணக்கம். 
             இங்கு தமிழ் சுருக்கெழுத்துப் பயிற்சியின் நான்காவது நாள்.



இங்கு அட்டவணையில் உள்ள மெய்யெழுத்துக் குறிகளை சற்று கவனமாகப் படித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.







 மெய்யெழுத்துக்குறிகள் எழுதிப் பயிற்சி செய்யவும்.







 உயிரெழுத்துக்குறிகள் கவனமாகக் கவனித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.




    ஈற்று உயிரெழுத்துக்குறிகள் கவனமாகப் படித்து எழுதிப் 
            பயிற்சி செய்யவும்.







 உயிரெழுத்துக்குறிகள் மற்றும் குறியிடப்படும் இடங்கள் பற்றிய புகைப்படம் இது.கவனமாகப் படித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.



   இடைப்படும் உயிர்களும், எழுதும் இடமும்.தனிக்குறிச் சொற்கள் கவனமாகப் படித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.


தனிக்குறிச் சொற்கள் தொடர்ச்சி இது.கவனமாகப்படித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.
          தொடர்ச்சி அடுத்த பதிவில்................நன்றிங்க!

PARAMES DRIVER// THALAVADY - ERODE Dt.   

08 அக்டோபர் 2012

தமிழில் சுருக்கெழுத்துப் பயிற்சி-03

  மரியாதைக்குரிய நண்பர்களே,
       வணக்கம். 

                                 

இன்று தமிழ் எழுத்து  பற்றி காண்போம்.
 (1)எழுத்து;- சொல்லிற்கு முதற்காரணமான ஒலியே எழுத்து எழுத்தெனப்படும்.எழுத்திற்கு ஒலிவடிவம்,வரிவடிவம் என இருவகை வடிவங்கள் உண்டு. எழுத்துக்கள் பேசப்படும் போது ஒலி வடிவம் பெறுகிறது.எழுதும்போது வரிவடிவம் பெறுகிறது. பேசப்படும்போது எழுத்துக்கள் பெறும் ஒலி வடிவத்திற்குத் தக்கபடியே சுருக்கெழுத்து அமையும்.
 (2)  முதலெழுத்து;- எழுத்துக்கள் முதலெழுத்துக்கள்,சார்பெழுத்துக்கள் என இருவகைப்படும்.மற்ற எழுத்துக்கள் உண்டாவதற்குக் காரணமான  எழுத்துக்கள் முதலெழுத்துக்களாகும். முதலெழுத்துக்கள் உயிரெழுத்துக்கள்,மெய்யெழுத்துக்கள் என இரு வகைப்படும்.
 (3) மெய்யெழுத்துக்கள்;- க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன், மற்றும் ஜ்,ஷ்,ஸ்,ஹ்,க்ஷ் என்ற வடமொழி எழுத்துகள் ஐந்துமாகச்சேர்ந்து மெய்யெழுத்துக்கள் 23 ஆகும்.
   (4) மெய்க்குறிகள்;- எல்லா மெய்யெழுத்துக் குறிகளுக்கும் -நேர்கோடு,(, ), கால் வட்ட வளைவு கோடுகளைக் கொண்டே மெய்க்குறிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ண், ய், ழ், ள், ற், ன் ,க்ஷ் இவைகளுக்கு மட்டும் (டிக் மார்க் என்னும்)கொக்கியிட்ட கோடுகள் போடப்படும்.
(5) ஜோடி மெய்க்குறிகள்;- இந்த ஜோடி மெய்க்குறிகள் பற்றி மற்ற மொழிக்காரர்களுக்கு பிரச்சினை இல்லை.தமிழில் மட்டும் வல்லின மெய்களான க்,ச்,ட்,த்,ப் மட்டும் ஜோடி மெய்க்குறிகள் வரும். சிறிது உன்னிப்பாகக் கவனிக்கவும். உதாரணமாக ;-  (1)டமை,ங்கம்,(2) க்கரம்,ஞ்சள்,(3) டப்பா,ண்டம், (4) த்தி  ,சொந்தம், (5) லகை,ம்பம்,
இந்த வார்த்தைகளில் முதலில் உள்ள வார்த்தைகளையும்,இரண்டாவதாக உள்ள (அடிக்கோடிட்ட) வார்த்தைகளையும் உச்சரித்துப்பாருங்கள். 
 மின்தடை காரணமாக அடுத்த பதிவில் இன்னும் விரிவாக.................நன்றிங்க!

PARAMES DRIVER // THALAVADY// ERODE -Dt

தமிழில் சுருக்கெழுத்துப் பயிற்சி-02

மரியாதைக்குரிய நண்பர்களே,
         வணக்கம். 
    
    தமிழில் சுருக்கெழுத்துப்பயிற்சி புத்தகத்தின் 
                  

ஒவ்வொரு பக்கங்களையும் புகைப்படம் எடுத்து இங்கு பதிவு செய்து விளக்கம் கொடுக்க உள்ளதால் பொறுத்தருள வேண்டுகிறேன். 
               நன்றிங்க!
 PARAMES DRIVER // THALAVADY - ERODE Dt.

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...