23 செப்டம்பர் 2018

மாடு சுழிகளும்,குணங்களும்.

மாடுகளை சுழி பார்த்து வாங்க வேண்டும் !






புத்தகக்கண்காட்சியா?


அனைவருக்கும் இனிய வணக்கம்.
நம்ம மாநிலத்தில் எந்தெந்த ஊர்களில் ஆண்டுதோறும் புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது என்ற விபரத்தினை இங்கே பதிவிடுங்க..
(1)சென்னைபுத்தகக்கண்காட்சி- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி) நடத்துகிறது.
(2)ஈரோடு புத்தகக்கண்காட்சி-230 புத்தக அரங்குகளுடன்,நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களது தலைமையிலானமக்கள் சிந்தனைப் பேரவை நடத்துகிறது.
(3)கோவை புத்தகக்கண்காட்சி- கொடிசியா, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்துகிறது.
(4)திருப்பூர் புத்தகக்கண்காட்சி- பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம்இணைந்து நடத்துகிறது.
(5)சேலம் புத்தகக்கண்காட்சி- பாவை கல்வி நிறுவனங்கள் மற்றும் திவ்யம் ஜூவல்ஸ்நடத்துகிறது.
(6)நாமக்கல் புத்தகக்கண்காட்சி-சென்னை மக்கள் வாசிப்பு இயக்கம்,நாமக்கல்லில் நடத்தியது.&.மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தின.
(7)மதுரை புத்தகக்கண்காட்சி-
(8)பொள்ளாச்சி புத்தகக்கண்காட்சி-நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்துகிறது.
(9)கன்யாகுமரி புத்தகக்கண்காட்சி- மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா சார்பில் நடத்துகிறது.
(10)கடலூர் புத்தகக்கண்காட்சி-
(11)நெல்லை புத்தகக்கண்காட்சி-அரசு சார்பில் நடத்தப்பட்டது.வணிக வரித்துறை இணை ஆணையர் பொறுப்பில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
(12)ஓசூர் புத்தகக்கண்காட்சி-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஒசூர் அனைத்து குடியிருப்பு நலச்சங்கம் நடத்துகிறது.
(13)நெய்வேலி புத்தகக்கண்காட்சி-என்.எல்.சி., இந்திய நிறுவனம் நடத்துகிறது.
(14)பேராவூரணி புத்தகக்கண்காட்சி-
(15)ராணிப்பேட்டை அம்மூர் புத்தகக்கண்காட்சி-
(16)சிதம்பரம் புத்தகக்கண்காட்சி-அபிநயா புக்ஸ் நடத்துகிறது.
(17)சத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி-விதைகள் வாசகர் வட்டம் நடத்துகிறது.
(18)தாளவாடி புத்தகக்கண்காட்சி-சமூக ஆர்வலர்கள் ஈரோடு பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்துகிறது.


20 செப்டம்பர் 2018

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.

தனக்கு மட்டுமே வாழ்ந்து மடிவது இறகைவிட லேசானது!
 மக்களுக்காக வாழ்ந்து மடிவது மலையைவிடக் கடினமானது.-மாவோ

மரியாதைக்குரிய ஆசிரியப்பெருமக்களே,
 ஆசிரியர் பணி அறப்பணி,அதற்கே உன்னை அர்ப்பணி என்ற சான்றோர் வாக்குப்படி அறிவுலகத்தின் முதுகெலும்பாகத் திகழும் தங்களுக்கு,சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
                        தங்களைப்போன்ற கல்வியாளர்களிடமும்,சமூக சிந்தனையாளர்களிடமும் என்னைப்போன்றோர் வாசிப்பு,யோசிப்பு!,அதுவே நேசிப்பு என்னும் சுவாசத்தை செவி மடுத்ததன் விளைவாக,

                     நமது முன்னோர்கள் தமது வாழ்க்கை அனுபவங்களை அறம்,பொருள்,இன்பம்,வீடுபேறு இந் நான்குமே நற்பண்புள்ள மனிதனாக வாழ்வதற்குத்தேவை என்பதை (இலக்காக இயம்பி) இலக்கியமாக படைத்துள்ளனர்.

                         அவ்வாறான முன்னோர்களின் அனுபவச்சிந்தனைகளை எழுத்துக்களாக விதைத்த புத்தகங்களை  பொது அறிவை வளர்க்க மக்கள் மனதிலே விதைக்க வேண்டும்.குறிப்பாக மாணவச்செல்வங்களின் மனதிலே விதைக்க வேண்டும் என்ற சமூக  முன்னேற்றத்திற்கான குறிக்கோளினை இலக்காக வைத்து ,

                         அரசியல்,சாதி,மதம்,இனம் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்ட சமத்துவத்துடன்கூடிய சமூக முன்னேற்றத்திற்காக, விதைகள் என்ற பெயரிலேயே வாசகர் வட்டத்தினை நம்ம சத்தியமங்கலத்திலே தொடங்கி, தங்களைப்போன்ற கல்வியாளர்களையும்,சமூக சிந்தனையாளர்களையும்,சான்றோர்களையும், எழுத்தாளர்களையும் இணைத்துக்கொண்டு,
                       மாணவர் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தகதினமான ஏப்ரல் 23 ந்தேதி குழந்தைகள் புத்தகத்திருவிழாவாகவும், ஒவ்வொரு ஆண்டும் மகாத்மாகாந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி ஐந்துநாட்கள்  மக்கள் திருவிழாவும் நடத்தி வருகிறோம்.
                            இந்த ஆண்டும் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதிவரை ஐந்து நாட்கள் புத்தகத்திருவிழாவோடு தினசரி மாலை 6மணிக்குமனமகிழ்ச்சிக்கான இலக்கியச்சொற்பொழிவுகள் உட்பட பல்வேறு அறிவுசார் நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் ,

         'தொட்டனைத்தூறும் மணற்கேணி-மாந்தர்க்குக்
                   கற்றனைத்தூறும் அறிவு'.
              என்ற குறளின் வாக்குக்கேற்ப ஆசிரியப்பெருமக்களாகிய தாங்கள் நட்பு சூழ,தங்களது குடும்பத்தோடு  தங்களிடம் பயிலும் மாணவக்குழந்தைகளையும் அவரவர் பெற்றோருடன் வரச்சொல்லி பொது அறிவுக்கான புத்தகங்களை வாங்குவதோடு,அக்டோபர் 2ஆம் தேதி முதல் அக்டோபர்7ஆம் தேதிவரை தினசரி மாலை6மணிக்கு நடைபெறும் சான்றோர்களின் அறிவுசார்ந்த உரைகளையும் கேட்டு இன்புற்று மனமகிழ்வோடு செல்ல வலியுறுத்துமாறு சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்.
                                  +++++++++++++++++++++++++++++++++=
 சொல்லுதல் யார்க்கும் எளிய-அரியவாம்
 சொல்லிய வண்ணம் செயல் .
                  என்னும் குறளோசையும் செவிகளில் ரீங்காரமிடுகிறது! என்றபோதிலும் தன்னம்பிக்கையை ஆயுதமாகக் கொண்டு  பொது அறிவுத் திங்கள் இதழாக,                நம்ம  சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்டபகுதிகளிலுள்ள  எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதோடு,மாணவக்குழந்தைகளின் படைப்பாற்றலை   வெளிக்கொணரும்வகையிலும், எழுத்தாளுமைமிக்க மாணவ,மாணவியர்,இருபால் ஆசிரியர்கள்,கல்வியாளர்கள்,சாதனையாளர்கள்,சான்றோர்கள்,
கொடைவள்ளல்களை இணைத்து மாதம்தோறும் இலக்கியச்சிற்றிதழ்  நடத்தும் திட்டம் உள்ளது.
 துணிந்து செயலாற்ற தங்களது ஆதரவும் ஆலோசனைகளும் தேவைப்படுகிறது. ஆசிரியப்பெருந்தகையீர்,தங்களைப்போன்ற கல்வியாளர்களும்,சமூக சிந்தனையாளர்களும் மனது வைத்தால் எந்த தடையையும் உடைத்தெறிந்து நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான சிறந்த படைப்பாளிகளையும், அறிவியலார்களையும்,அரசியல்வாதிகளையும்,அரசு அலுவலர்களையும்,சாதனையாளர்களையும் ,தொழிலதிபர்களையும் உருவாக்கமுடியும்.ஆதலால் நம்ம சத்தியமங்கலத்தின் 3வது ஆண்டு புத்தகத்திருவிழாவிற்கு தினமும் வாங்க.புதியதோர் உலகு செய்வோம் என மீண்டும் சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
                                            என அன்புடன் வரவேற்கும்,
                                               சி.பரமேஸ்வரன்,
                                                         செயலாளர்,
                                                விதைகள் வாசகர் வட்டம்,
                                              சத்தியமங்கலம்,
                                                    ஈரோடு மாவட்டம்.
          

15 செப்டம்பர் 2018

Valaikkappu Paadal வளைகாப்பு பாடல் சீமந்தம் பாடல் Lyrics Displayed in th...

ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது.....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.இன்றைய மனிதவாழ்வின் சூட்சுமம் இதுதாங்க!...
எல்லாமும் ஒருவனுக்கு இருந்து விட்டால் அந்தக் கடவுளுக்கும் அது பொருக்காது....... !!!!!!!

             முகநூல் நண்பர் திரு. செந்தில்குமார் அவர்களது அனுபவத்தை நாமும் அறியலாமே!
                       நான் கோவை காளப்பட்டியில் கட்டி விற்கும் வீடுகளில் ஒரு வீட்டின் இரவு நேரத்து புகைப்படம் !!
இன்று ஒரு சகோதரர் என்னிடம் கேட்டார் "செந்தில் அண்ணா, தாங்கள் முகநூலில் நீங்கள் கட்டும் வீடுகளையும், உங்கள் கொடநாடு வீட்டையும் போடும் போது வாடகை வீட்டிலிருப்போரின் எண்ணம் எப்படியிருக்கும்?
அதற்கு என்ன பதில் மிகச்சரியாக சொல்வதென்று தெரியாமல் ஒரு பதிலை சொல்ல முற்படுகிறேன்.

கடினப்பட்டு நான் கோத்தகிரி கொடநாட்டில் கட்டிய வீட்டில் ஒரு நாளாவது நிம்மதியாக தங்கியிருந்திருக்கிறேனா என்றால் செய்யும் தொழிலின் மீது சத்தியமாக இதுவரையில் ஒரு நாள் கூட தங்கியது இல்லவே இல்லைங்க சகோ....
சைனாவிலிருந்து சோபா செட்களை வாங்கி வந்து இரவோடு இரவாக கொடநாடு வீட்டில் போட்டு விட்டு அதிகாலை 5 மணிக்கு கிளம்பி 7 மணிக்கு கோயம்புத்தூர் வந்து 10 மணிக்கு ஒரு கிரையம் செய்து விட்டு கிட்டத்தட்ட 30 மணி நேரங்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்திருக்கிறேன்....
என் உழைப்பை பறைசாற்ற நிச்சயமாக சொல்லவில்லை சகோதரா.... வாடகை வீட்டில் இருந்தாலும், எட்டடுக்கு மாளிகையில் இருந்தாலும் நிம்மதியான மனம் வேண்டும், நல்ல குடும்பம் வேண்டும், நல்ல நண்பர்கள் வேண்டும், மகிழ்ச்சியான தருணங்கள் வேண்டும்.....
நிம்மதியாக தொலைபேசி அழைப்பை அனைத்து விட்டு ஒரு வேளை உணவு சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது..... எனது கொடநாடு வீட்டை கட்டி முடிப்பதற்குள் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகள் பல காரணமாக "சிலைடிங் ஹியட்டஸ் ஹெர்னியா" என்று ஒன்று வந்து விட்டது !! அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்தால் உண்ட உணவு வாந்தியாக வந்து விடும் !! கோவை ஜெம் மருத்துவமனையில் நிவாரணம் தேடிக்கொண்டேன் சகோதரா !!
ஒரு காரை எந்த தொழில் சிந்தனையுமின்றி அரை மணி நேரம் என்னால் ஓட்ட முயற்சித்தாலும் ஓட்ட முடியாது..... இதயத்தை எப்போதும் நிமிடத்திற்கு 72 தடவை மட்டுமே துடிக்கச்செய்யும் வகையிலான நிலையையும் ஏற்படுத்திக்கொள்ள இதுநாள் வரையில் முடியவில்லை......
அப்படி என்ன சாதனையை நீங்கள் செய்து விட்டீர்கள் என்று கேட்டாலும் எதையும் செய்ததாக சொல்ல முடியவில்லை..... ஏதோ ஒரு வெற்றியை நோக்கி பயனிக்கிறேன் என்பதை மட்டுமே சிறு தைரியத்துடன் சொல்ல கொஞ்சம் துனிவு இருக்கிறது !!!
எனது குடும்பத்தாருடன் இரண்டு நாட்கள் தொடர்ந்தார் போல் கூடி மகிழ முடியவில்லை..... அதற்கான முயற்சியிலும் இதுவரை இறங்கியதில்லை....எனது குடும்பத்தாரை சுற்றுலா போன்று அழைத்து சென்று சில வருடங்கள் ஆகி விட்டது !! கடந்த ஒரு வருடத்தில் எனது கொடநாடு வீட்டிற்கு எனது குடும்பத்தாரை அழைத்து சென்று காண்பிக்க இயலவில்லை..... அதற்கான கால சூழ்நிலைகளும் ஏற்படவில்லை.... ஏற்படுத்துக்கொள்ள முயலவுமில்லை.....
நீங்கள் கேட்கலாம், பெருமைபட்டுக் கொள்ளவா கொடநாடு வீட்டின் புகைப்படத்தை முகநூலில் போடுகிறீகள் என்று...... முகநூலில் "அருமை" என்று வரும் ஒரு சொல்லில் தான் சிறு ஆனந்தத்தை சில நொடிகளாவது அடைகிறேன் !!
நீங்கள் கேட்கலாம், பின்னர் அதை ஏன் கட்டினீர்கள் என்று..... நீங்கள் கேட்கலாம், அப்படி என்ன கோவையில் நீங்கள் பிசியா என்று..... என்னிடம் சரியானதொரு பதில் ஏதுமில்லை...... 1000 பேருக்கு வேலை கொடுக்க தொழில் செய்ய முனைந்தேன்..... இன்று புலி வாலை பிடித்த கதையாகவும், கண்ணை விற்று அழகோவியம் ஒன்றை வாங்க முயன்று ஏமாந்த கதையாகவும் என் கதை ஆகிவிட்டது !!
நான் சொல்லிக்கொண்டிருக்கும் விளக்கங்கள் யாவும் கூட உங்களுக்கு எத்தகைய மன நிலையை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியவில்லை.....
ஆனால், நான் சென்ற பாதையிலிருந்து திரும்பி வந்து மீண்டும் ஒரு அழகிய ஞாயிரன்று நாட்டுக்கோழி வறுவலாவது நிம்மதியாக வேலையின் கவலை (work stress)யின்றி உண்ணும் ஒரு உண்ணத நாளுக்காக காத்திருக்கிறேன்.....
நல்ல துணிகளை எடுத்துடுத்தும் நாளை எதிர்பார்க்கிறேன்.... பணம் இருந்தால் மட்டும் வாழ்வில் வெற்றி பெற முடியாது.... என் வாழ்நாளில் நான் பியட் யூனோ வைத்திருந்து ஊர் சுற்றிய காலத்து சந்தோசங்களை இன்றைய வோல்வோ கார்கள் தருவதில்லை......
நான் குடிசையில் நிம்மதியாக கஞ்சி குடிப்பவனையும் கண்டதுண்டு..... கோவை ரேஸ்கோர்சில் 40 கோடி வீட்டில் தூக்கிட்டு சுயமரணத்தை முத்தமிட்டு இறந்தவனையும் கண்டதுண்டு
வாழ்ந்தாலும் ஏசும் உலகம் தான் இது சகோதரா.... ஆனால், தினமும் ஓடியோடி திரிவதால் ஏசுவோரின் வசைசொற்கள் என் காதுகளில் விழுவதில்லை......
அதனால், கலக்கம் வேண்டாம்..... எந்தவொரு பெரிய + (பிளஸ்) சிலும் ஆயிரம் சின்ன -- (மைனஸ்) கள் இருக்கும்...... அதுவே தான் வைஸ் வெர்சா.......
நான் கோவையில் கடைசியாக புரூக் பீல்ட்சில் ஒரு திரைப்படம் காண சென்ற போது என்னிடம் வேலை செய்யும் ஒரு கட்டிடத் தொழிலாளியை இடைவேலையில் பார்த்தேன்.... மகிழ்ச்சியாக இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.... அத்தொழிலாளி என்னிடம் கேட்டார் "சார், கிளைமாக்சில் என்ன முடிவை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
நான் சொன்னேன் "எனக்கு போன் வந்தது அதனால் வெளியே சென்று பேசிக்கொண்டிருந்தேன்.... திரைப்படத்தை சரியான முறையில் கவனித்துப் பார்க்க இயலவில்லையப்பா" என்று..... அத்தொழிலாளி "ஏங்க சார், குடும்பத்துடன் வரும் போது போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாதா? என்றார்..... அதற்கான சரியான பதிலை எனக்கு சொல்லத் தெரியவில்லை..... ஆனாலும் சொல்ல முயன்றேன்..... " என்னிடம் வீட்டினை புக் செய்தவர் பேசினார்" என்று..... அத்தொழிலாளி சொன்னார் "போங்க சார் தினமும் இதைத் தான செய்கிறீர்கள்.... குடும்பத்துடன் வெளியே செல்லும் போதும் அப்படியே செய்யலாமா? அதற்கு நான் என்னுடைய சிரிப்பை மட்டுமே பதிலாக்கினேன்......


வாசிப்போம் வாங்க!

‘புத்தகங்களால் என்ன செய்துவிட முடியும்’என்று கருதுபவர்களே உங்களுக்காக இந்தப்பதிவு...
எஸ். ராமகிருஷ்ணன்
              தெரிந்த ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் பணி ஒய்வு பெற்றார். அப்போது, 30 ஆண்டுகளாக தான் சேகரித்து வைத்திருந்த 4 ஆயிரம் புத்தகங்களையும் பள்ளி நூலகத்துக்குப் பரிசாக அளித்துவிட்டார்.
                         எனக்குத் தனது பணிக் காலத்தில் மூன்று கொள்கைகளைத் தொடர்ந்து கடைப் பிடித்து வந்ததாக அவர் கூறினார்.

                           ஒன்று, பிரைவேட் டியூசன் எடுத்து காசு சம்பாதிக்கக் கூடாது.

                            இரண்டாவது, தன்னால் முடிந்த அளவு வசதியில்லாத மாணவர்களுக்குத் தேவையான உதவி களை செய்வது.

 மூன்றாவது, வகுப்பறை யில் மாணவர்களுக்கு தான் படித்த புத்தகங்களை அறிமுகம் செய்து வைப்பது.
             இந்த மூன்றையும் உறுதியாக தான் கடைப்பிடித்ததாகக் கூறினார்
‘உங்கள் ஆசிரியர் அனுபவத்தில் எதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்’ எனக் கேட்டேன். அதற்கு அவர் பெருமிதமான குரலில் சொன்னார்:


                    “மாணவர்களை ஒருமுறை கூட நான் அடித்ததே இல்லை. அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குக் கற்றுத் தந்தவர் ஏ.எஸ்.மகரன்கோ. 30 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய ‘தி ரோடு டு லைஃப்’ (The Road to Life) என்ற புத்தகத்தைப் படித்தேன். அதுதான் எனது வாழ்க் கையை மாற்றியமைத்தது!’’ என்றார்.

‘புத்தகங்களால் என்ன செய்துவிட முடியும்’ என அறியாமையில் பலர் கேலி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்படி எத்தனையோ மனிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கை வழிகாட்டியாக புத்தகங்களே இருந்திருக்கின்றன என்பதே உண்மை!

                 ஏ.எஸ்.மகரன்கோ எனப்படும் ஆன்டன் செமினோவிச் மகரன்கோ… ரஷ்யாவின் மிகச் சிறந்த கல்வியாளர். புதிய கல்விமுறையை உருவாக்கிய சிந்தனையாளர்.
               அநாதை சிறார்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குக் கல்வி புகட்டியவர். ‘கார்க்கி காலனி’ என்ற இவரது ‘கல்வியகம்’ ரஷ்யாவின் முன் மாதிரி கல்வி நிறுவனமாக கருதப்பட்டது.
                         மகரன்கோவின் புத்தகங்கள் எதுவும் தமிழில் வெளியாகியிருப்பதாகத் தெரியவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பாக கல்விகுறித்த கட்டுரைத் தொகுப்பில், மகரன்கோ ஆற்றிய சொற்பொழிவு ஒன்றினைப் படித்தேன்.
அது பெற்றோர்களின் பொறுப் புணர்வு பற்றியது.
                     “பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டதோடு பொறுப்பு முடிந்து விட்டதாக பெரும்பான்மையான பெற் றோர்கள் கருதுகிறார்கள். மாணவனுக்கு அறிவை மட்டுமே பள்ளிக்கூடம் புகட்டும். பண்பாட்டினை குடும்பம்தான் உருவாக்க வேண்டும்!
குறிப்பாக, பெற்றோரின் உணவுப் பழக்கம், உடை அணியும் விதம், நடத்தை, பேச்சு, சண்டை, கோபம் போன்றவை குழந்தைகளை மிகவும் பாதிக்கும். இவ்வளவு ஏன்? பெற்றோர் கள் எதை கேலி செய்து சிரிக்கிறார் களோ, அதை பிள்ளைகளும் காரணம் இல்லாமல் கேலி செய்து சிரிப்பார்கள்.
ஆகவே, பெற்றோர்கள் வீட்டில் நடந்துகொள்ளும் விதமே பிள்ளைகள் வளர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெரும்பான்மை பெற்றோர்கள் தாங்கள் சொல்வதைப் பிள்ளைகள் கேட்க மறுக்கிறார்கள், அடிபணிவதே இல்லை எனக் குறை கூறுகிறார்கள். இதில் தவறு பிள்ளைகளிடம் இல்லை. பெற்றோர்களிடமே இருக்கிறது.
காரணம், அவர்கள் தங்கள் பிள்ளைகளையும் வேலையாள் போல, அடிமைகள் போல, சர்க்கஸ் மிருகங்களைப் போல அதிகாரத்தால் அச்சுறுத்துவதாலும், ஆத்திரப்பட்டு கத்துவதாலும் அடிபணிய வைத்துவிட பார்க்கிறார்கள்.
ஒருபோதும் அது சாத்தியமாகாது. முடிவாக, ‘நீ என் பேச்சை கேட்பதாக இருந்தால் நீ கேட்பதை எல்லாம் வாங்கித் தருகிறேன்’ என ஆசை காட்டுகிறார்கள். அது ஒரு வகையான லஞ்சம். மோசமான வழிமுறை. பெற்றோர்களின் அலட்சியமே பிள்ளைகளை மோசமான நடத்தை உள்ளவர்களாக மாற்றுகிறது’’ என அந்தச் சொற்பொழிவில் குறிப்பிடுகிறார் மகரன்கோ.
இந்தக் கட்டுரையை வாசித்தப் பிறகு, மகரன்கோவின் நூல்களைத் தேடித் தேடிப் படித்தேன். அதில் ஒன்றுதான் ‘மகரன்கோ: ஹிஸ் லைஃப் அண்ட் வொர்க்’ (Makarenko: His Life and Work ) என்ற புத்தகம். ஐதராபாத்தில் உள்ள நடைபாதை புத்தகக் கடையில் தற்செயலாக கிடைத்தது.
மகரன்கோவின் வாழ்க்கை மற்றும் அவர் உருவாக்கிய கல்வி முறை, அவரிடம் படித்த மாணவர்களின் நினைவுக் குறிப்புகள், கட்டுரைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
புரட்சிக்குப் பிறகான ரஷ்யாவில் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் படிப்பை கைவிட்டு, பசிக்காக எந்தக் குற்றத்திலும் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். அத்துடன் சீர்திருத்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் பலர், பள்ளியை விட்டுத் தப்பியோடி இளம் குற்றவாளிகளாக அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான பொறுப்பு மகரன்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மகரன்கோ ‘கார்க்கி காலனி’ என்ற கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கினார். அதில் 14 முதல் 18 வயது வரையுள்ள கைவிடப்பட்ட, அநாதை சிறார்கள் 30 மாணவர்களாக சேர்க்கப்பட்டார்கள்.
கல்வியும் உழைப்பும் ஒருங்கிணைந்த முறை ஒன்றினை மகரன்கோ உருவாக்கினார். அதாவது, படிப்போடு வாழ்க்கைக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகள், அடிப்படை வேலைகள் அத்தனையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, உடல் உழைப்பும் அறிவு வளர்ச்சியும் ஒன்றிணைந்த கல்விமுறை உருவாக்கப்பட்டது.
உக்ரைனில் உள்ள ஏழை தொழிலாளியின் மகனாக பிறந்த மகரன்கோ, 1905-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்து ரயில்வே பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.
‘கார்க்கி காலனி’ என்கிற கல்வி நிலையத்தை உருவாக்குவது மகரன்கோவுக்குப் பெரிய சவாலாக இருந்தது. காலனி அமைக்கபட்ட இடத்தில் இடிந்து போன கட்டிடம் ஒன்று மட்டுமே இருந்தது. அது, முன்பு சிறுவர் ஜெயிலாக இருந்த கட்டிடம். சுற்றிலும் 100 ஏக்கர் பரப்பளவு நிலம் செடிகளும் புதர்களுமாக இருந்தது. அதை சுத்தப்படுத்தி கதவு இல்லாத அந்தக் கட்டிடதை ஒரு உறைவிடப் பள்ளியாக மாற்றினார்.
இரண்டு ஆண்டுகளில் அந்தப் பள்ளிக்கூடம் பெரும் வளர்ச்சி பெற்று உயர்ந்தோங்கியது. 124 மாணவர்களுடன் 16 பசுக்கள், எட்டு குதிரைகள், 50 பன்றிகளைக் கொண்ட கூட்டுப்பண்ணையைப் போல மாறியது. ஒரு பக்கம் பழத்தோட்டம், மறுபக்கம் காய்கறித் தோட்டம்.
அவற்றை மாணவர்களே உழைத்து உருவாக்கினார்கள். தங்கள் தேவைகளுக்குப் போக மீதமுள்ளவற்றை சந்தையில் விற்றுப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கினார்கள்.
இளம் குற்றவாளிகளாகக் கருதப் பட்ட அந்த மாணவர்களை, கல்வியிலும் உழைப்பிலும் சிறந்தவர்களாக மேம்படுத்தினார் மகரன்கோ. அதை எப்படி சாத்தியமாக்கினார் என்பதை இந்நூல் விவரிக்கிறது.
மகரன்கோ தனது மாண வர்களின் துஷ்டத்தனங் களைக் கண்டு அவர்களை வெறுக்கவில்லை, தண் டிக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தைப் புரியவைத் தார்.
ஒரு மாணவனை பள்ளியைவிட்டு துரத்திவிடுவதைப் போல மோசமான செயல் வேறு எதுவுமே இல்லை. கல்வியின் வழியே தனிமனிதன் மேம்படுவதுடன், தனது சமூகத்தையும் அவன் மேம்படுத்த வேண்டும். அதற்கு கல்விமுறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
குறிப்பாக, பாடம் நடத்தி மாணவனை மதிப்பெண் பெற வைப்பதுடன் தனது வேலை முடிந்துவிட்டதாக ஓர் ஆசிரியர் நினைக்கக் கூடாது.
ஆசிரியர்கள் எவ்வளவு கற்றுக் கொள்கிறார்களோ, அந்த அளவே அவர்கள் சிறப்பாக கற்றுத் தருவார்கள். ஆகவே, ஆசிரியர்கள் நிறையப் படிக்க வேண்டும். தங்களுக்குள் கூடி விவாதிக்க வேண்டும். முன்மாதிரி மனிதர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் மகரன்கோ.
கல்வி வணிகமயமாகிவிட்ட இன்றையச் சூழலில் நாம் விரும்புவதும் அதைத்தானே!
- இன்னும் வாசிப்போம்…

விவசாயத்தின் அவலம்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இன்றைய வேளாண்மையின் அவலநிலையினை கவிதையாக உள்ளத்தில் வேல்பாய்ச்சுகிறமாதிரி எழுதியுள்ளமை அர்த்தமுள்ள புரிதலைத்தருகிறது.இதோ...

நானறிஞ்ச விவசாயம்!
----------------------------
நதிக்கரை நாகரிகம்
நாம் வாழ்ந்த காலமடா,
நாதியத்து போனதடா
நாமறிஞ்ச செல்வமடா.

சொன்ன நாளில் மழைபெஞ்சு
சுத்தியுள்ள குளம் நிறைஞ்சு
மண்ணெல்லாம் பொன்னா விளைஞ்சு
மனையெல்லாம் நெல் நிறைஞ்ச காலமடா...
விளக்கிருக்கும் மூலையிலே,
எடுத்து வச்ச விதை நெல்லை ,
விதைபாவி முளைச்ச பின்னாலே
வறுத்து, வாசனையா விதை அரிசியாக்கி
இனிக்க இனிக்க தின்னதெல்லாம்
இனி வரவே வராதோடா..
தொளி உழவில் ஏரைப் பூட்டி
சவதியிலும் தடுமாறாத் தடம் புடிச்சு
உழுதுபோட்டு,வரப்பு வெட்டி,மரம் தடவி
கொளைமிதிச்சு,உரம் போட்டு,நாத்தை வீசி
கொலவை போட்டு நடுவை நட்டு எல்லாரும்
குடும்பத்தோட பாத்த நம்ம விவசாயம்
தன் சாயம் இழந்து தறிகெட்டும் போனதேடா...
களைபறிச்சு நீர்பாச்சி கதிரான பயிர் அறுத்து
களத்துமேட்டில் வரவு வச்ச காலம் இனி வராதோடா..
அவுலும் பயிரும்,சிரட்டைபுட்டு,சீனிகிழங்குன்னு
நெல்ல போட்டு தின்னநாள் நினைவிலின்னும் இனிக்குதடா.
வீட்டுக்கு நெல் ஒதுக்கி, வேலை செஞ்ச சனத்துக்கெல்லாம்
ஆண்டுக்கு இவ்வளவுன்னு அளந்த போட்ட காலமடா.
காலம் இனி கலிகாலம் தலவனெல்லாம் களவாணி
மணல் எடுத்து நதி சுரண்டி மண்அள்ளி தலமேல
பூ அள்ளி போட்டது போல் புதுமையா கொள்ளையிட்டான்.
விவசாயம் செத்துப் போனா விவசாயி பொழைப்பானா?
பல சாயம் பூசி வந்து பணத்துக்கு வித்துபுட்டான்.
இனி எங்கே நாத்து நட்டு நம்மாளூ வாழப் போறான்?
 நன்றி;
Parimelazhagar Pari
11 செப்டம்பர், 2015

திருக்குறளில் வாஸ்துமுறை-01

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். திருக்குறளிலும் வாஸ்துமுறை அறிந்துகொள்ளுங்க..
                    பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களின் அமைப்பு முறைக்கான புதியதொரு விளக்கமும்.
அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்திய குறளினைக் கசடறக் கற்றுப் பொருள் கூறியுள்ளனர் தமிழ் அறிஞர்கள்.
பாயிரம் என்பது நூலுக்கு முன்னுரை யாகும். திருக்குறளின் பாயிரத்தில், முதல் அதிகாரமாகக் கடவுள் வாழ்த்தும், இரண்டாவது அதிகாரமாக வான் சிறப்பும், மூன்றாவது அதிகாரமாக நீத்தார் பெருமையும், நான்காவது அதிகாரமாக அறன் வலியுறுத்தலும் உள்ளன.
கடவுள் வாழ்த்திற்கு அடுத்தபடியாக வான்சிறப்பு கூறப்படுவதன் காரணம் என்ன? அதன்பின்னர் நீத்தார் பெருமையும் அறன் வலியுறுத்தலும் அமைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன? இக் காரணத்தை ஆராயாத அறிஞர்களே இல்லை எனலாம்.
இவ்வாறான பாயிர அமைப்பு முறையானது, வேறு எந்த ஒரு தமிழ்நூலிலும் இடம் பெறவில்லை. வேறுபிற மொழிநூல்களில் இவ்வாறான பாயிர அதிகார அமைப்பு இல்லை.
பாயிர அதிகார அமைப்பு முறைக்கான புதிய விளக்கம்
வாஸ்து விஞ்ஞானம், திருக்குறளின் பாயிர அதிகார அமைப்பு முறைக்கு, ஒரு ​தெளிவான விடையைக் கூறுகிறது.
திசைகள் 1) கிழக்கு 2) மேற்கு 3) தெற்கு 4) வடக்கு என்ற வரிசையில் அறியப்படுகின்றன. வாஸ்து விஞ்ஞானம். 1) கிழக்குத் திசைக்கு அதிபதியாக இந்திரன் மற்றும் கடவுளரையும், 2) மேற்குத் திசைக்கு அதிபதியாக வருணனையும், 3) தெற்குத் திசைக்கு அதிபதியாக எமனையும், 4) வடக்குத் திசைக்கு அதிபதியாக அறக்கடவுளையும் குபேரனையும் திசைத்தெய்வங்களாகக் கூறுகிறது.
இந்நான்கு திசைகளுக்குமான, திசைதெய்வங்களை வணங்கிப் பாயிரத்தின் நான்கு அதிகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
திருக்குறளின் பாயிர அதிகாரம்
1 கிழக்குதிசை - இந்திரன் மற்றும் பிற கடவுளர் - கடவுள் வாழ்த்து
2 மேற்கு திசை - வருணன் - வான்சிறப்பு
3 தெற்கு திசை - யமன் - நீத்தார்பெருமை
4 வடதிசை - தரும தெய்வம் மற்றும் குபேரன் - அறன்வலியுறுத்தல்
திசை தெய்வங்களைத் துதிக்கும் நான்கு வேதங்களின் சாரமாகத் திருக்குறளின் பாயிரத்தில் நான்கு அதிகாரங்கள் அமைக்கப் பெற்றுள்ளன என்பதும், திருவள்ளுவர் திருக்குறளில் திசைதெய்வங்களை வணங்கிப் பாயிரம் பாடியுள்ளதும் வியப்பினும் வியப்பாக உள்ளது.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
இக் கட்டுரையைக் கண்ணுறும் அறிஞர்கள், மற்ற உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருளுடன் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் ஒன்றுசேர ஆராய்ந்து குறளின் மெய்ப்பொருளை உய்த்து உணருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
http://thirukkural-kalairajan.blogspot.com/…/09/blog-post.h…

நிறங்களின் தமிழ்ப்பெயர்கள்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
150 வண்ணங்களின் தமிழ்ப் பெயர்கள்.
இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ்வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியலில் இதோ.
1. அடர் சிவப்பு - Cramoisy
2. அடர் நீலம் - Perse / Smalt
3. அடர் மஞ்சள் - Gamboge
4. அயிரை/ அசரை - Sandy colour
5. அரத்த(ம்) (நிறம்) - Heliotrope / Haematic
6. அருணம் - Bright red, colour of the dawn
7. அவுரி(நிறம்) - Indigo
8. அழல் நிறம் - Reddish colour of fire
9. ஆழ் சிவப்பு - Cinnabar
10. ஆழ் செந்நீலம் (ஊதா) - Claret
11. ஆழ் பழுப்பு - Brunneous
12. ஆழ் பைம்மஞ்சள் - Citrine
13. ஆழ்சிவப்பு - Cramoisy
14. ஆழ்நீலச் சிவப்பு - Aubergine
15. இடலை (ஆலிவ்வு) (நிறம்) - Olivaceous
16. இருள் சிவப்பு - Puccoon
17. இருள்சாம்பல் - Slate
18. இள மஞ்சள் - Flavescent / Primrose
19. ஈய(ம்) (நிறம்) - Plumbeous
20. ஈரல்நிறம் - Dark red colour, purple colour
21. உறைபால்(நிறம்) - Whey
22. எண்ணெய்க்கறுப்பு - Dark black colour
23. எலுமிச்சைம் - Citreous
24. ஒண்சிவப்பு - Cardinal
25. ஒளிர் செஞ்சிவப்பு - Phoeniceous
26. ஒளிர் செம்மை - Coccineous
27. ஒளிர் வெண்கலம் - Aeneous
28. ஒளிர் வெண்கலம் (நிறம்) - Aeneous
29. ஒளிர்சிவப்பு - Puniceous
30. ஒளிர்மஞ்சள் - Sulphureous / Vitellary
31. கசகசாச் சிவப்பு - Ponceau
32. கடல்நீல (நிறம்) - Ultramarine
33. கடற்பச்சை - Cerulean
34. கத்தரிநீலம் - Periwinkle (நித்திய கல்யாணி)
35. கபிலை / புகர்நிறம் - Tawny, brown or swarthy colour
36. கரு (நிறம்) - Sable
37. கருஞ்சிவப்பு - Porphyrous / Purpureal
38. கரும்பச்சை - Corbeau
39. கருமை - Nigricant / Nigrine
40. காயாம்பூ (நிறம்) - Purple colour
41. காளிமம் - Black colour
42. கிளிச்சிறை - Gold resembling the parrot's wing in colour
43. குங்குமச் சிவப்பு - Vermeil
44. குங்குமப்பூ(நிறம்) - Croceate / Saffron
45. குரால் - Dim, tawny colour
46. குருதிச்சிவப்பு - Erythraean / Sanguineous / Incarnadine
47. குருதிச்செம்மை - Vermilion
48. கோமேதக(நிறம்) -Topaz
49. சருகிலை (நிறம்) - Filemot
50. சாம்பல் - Cinerious
51. சாம்பல் பச்சை - Caesious / Sage
52. சாம்பல் மஞ்சள - Isabelline
53. சுடர் (நிறம்) - Flammeous
54. சுடுமண் (நிறம்) - Terracotta
55. சுதை வெண்மை - Cretaceous
56. செக்கர் - Reddish sky
57. செங் கருநீல (நிறம்) - Violet / Violaceous
58. செங்கருப்பு - Piceous
59. செங்கல்மங்கல் - Dim red colour
60. செங்கற்சிவப்பு - Lateritious / Testaceous
61. செந்தீவண்ணம் - Colour of glowing fire
62. செந்தூரச்சிவப்பு - Minium
63. செப்புநிறம் - Dark red colour
64. செம்பட்டை - Brown colour of hair
65. செம்பவளம் (மிகு சிவப்பு) - Deep red colour, Crimson colour
66. செம்பழுப்பு - Sinopia / Sorrel
67. செம்பு - Copper colour
68. செம்பூச்சி - Kermes
69. செம்பொன் - Titian
70. செம்மஞ்சள் - Jacinthe
71. செவ்வல் (செந்நிறம்) - Redness
72. சோணம் - Red colour, crimson colour
73. தசை (நிறம்) - Sarcoline
74. தவிட்டுநிறம் - Brown, dun colour
75. திமிரம் - Colour of Darkness
76. தும்பை நிறம் - Pure white colour
77. துமிரம் - Deep red colour
78. துரு (நிறம்) - Ferruginous
79. துருச் சிவப்பு - Rubiginous
80. துவர் (சிவப்பு) - Scarlet Red colour
81. துவரி (காவிநிறம்) - Salmon colour
82. தூயபழுப்பு - Sepia
83. தெள்ளுப்பூச்சி (நிறம்) - Puce
84. நட்டுச்சினைமண் - A kind of earth of the colour of crab's spawn
85. நல்சிவப்பு - Coquelicot
86. நறுமஞ்சள் - Lutescent
87. நன்மஞ்சள் - Luteolous
88. நன்னிறம் - White colour
89. நீல (நிறம்) - Azuline
90. நீல மணி - Sapphire
91. நீலச்சாம்பல் - Glaucous / Cesious / Gridelin / Lovat
92. நீலச்சிவப்பு - Amaranthine / Solferino
93. நீலப்பச்சை - Turquoise / Viridian
94. பச்சை - Chlorochrous
95. பசுமை - Virid
96. பழுக்காய் - Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut
97. பழுப்பு மஞ்சள் - Fulvous
98. பழுப்புச் சிவப்பு - Castaneous / Rufous / Russet / Umber
99. பழுப்புச்சாம்பல் - Greige / Taupe
100. பளீர்சிவப்பு - Stammel
101. பனிவெண்மை - Niveous
102. பாணிச்சாய் (கள்போன்ற முத்துநிறம்) - Colour of a class of pearls, resembling that of toddy
103. பால்வண்ணம் - White colour
104. புகர் நிறம் - Tawny / Tan
105. புகைக்கரி - Fuliginous
106. புள்ளிச் சாம்பல் - Liard grey
107. புற்பச்சை - Prasinous
108. புறவு (நிற) - Columbine
109. பூஞ்சல் (மங்கனிறம்) - Brownish colour
110. பூஞ்சாயம் (அழுத்தமான சிவப்பு) - Deep, ruddy colour
111. பூவல் - Red colour
112. பைந்நீல(நிறம்) - Teal
113. பைம்பொன் - Chrysochlorous
114. பொன் மஞ்சள் - Goldenrod
115. பொன்மஞ்சள் - Luteous
116. பொன்மை - Aurulent
117. மகரம் - Pink colour
118. மங்கல் பழுப்பு - Fuscous
119. மங்கல் பழுப்பு - Khaki
120. மங்கல்பச்சை - Eau-de-nil
121. மஞ்சள் - Xanthic / Icterine / Icteritious
122. மஞ்சள் பச்சை - Chartreuse / Zinnober
123. மஞ்சள் பழுப்பு - Lurid / Ochre
124. மஞ்சள்சிவப்பு - Wallflower
125. மணிச்சிவப்பு - Rubious
126. மணிநிறம் - Dark blue colour, as of sapphire
127. மயில்நீலம் - Pavonated
128. மரகதப்பச்சை - Smaragdine
129. மருப்பு (தந்தம்) - Eburnean
130. மல்லிகை மஞ்சள் - Jessamy
131. மாமை - Dark-brown colour
132. முக்கூட்டரத்தம் - Red colour produced by chewing betel, arecanut and lime
133. முத்துச்சாம்பல் - Griseous
134. வளர்பச்சை - Virescent
135. வாதுமை (நிறம்) - Ibis
136. வான் நீலம் - Cyaneous
137. விண் நீலம் - Celeste
138. விழி வெண்மை - Albugineous
139. வெங்காயப் பச்சை - Porraceous
140. வெண்சாம்பல் - Hoary
141. வெண்மங்கல் - Leucochroic
142. வெண்மஞ்சள் - Ochroleucous
143. வெளிர் நீலம் - Azure
144. வெளிர் பச்சை - Celado
145. வெளிர் மஞ்சள் - Nankeen
146. வெளிர் மஞ்சள் பச்சை - Tilleul
147. வெளிர்நீலம் - Watchet
148. வெளிர்பழுப்பு - Suede
149. வெளுப்பு - Albicant
150. வைக்கோல் (நிறம்) - Stramineous
நன்றி: திரு Ve Sangkar
நன்றி ma go m

டயர்களில் காற்றழுத்தம். (Pascal's law)


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.   நாம் பயன்படுத்தும் வாகனங்களின் டயர்கள் நீண்டநாள் உழைக்கவும்,எரிபொருள் சிக்கனத்திற்காகவும் டயர்களில் காற்றழுத்தம் சரியான அளவு பராமரிக்கப்படவேண்டும். அதன் விளக்கமே இந்தப்பதிவு.                      
   பாஸ்கல் விதிப்படிதான் நாம் காற்றழுத்தத்தினை குறிப்பிடுகிறோம்.

                              ஒரு பொருள், நறுக்கு விசை தன் மேல் செலுத்தப்படும் பொழுது தொடர்ந்து தன் உரு மாறிக் கொண்டே இருந்தால் அதனை பாய்மம் என்று கொள்ளலாம். காற்று, நீர், எண்ணெய், ஆகியவற்றினை பாய்மத்திற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.







                     
                       பொதுவாக மீட்டர் கேஜ் என்ற காற்றழுத்தமானியை பார்த்தாலே அதில்lb/in2  (PSi )மற்றும்  Kg/cm2 (KPa) (Bar) என  குறிப்படப்பட்டிருக்கும்.நாம் பெரும்பாலும் பவுண்டு அளவினைத்தான் வழக்கமாக சொல்வோம்.
 பாஸ்கலின் விதி (Pascal's law)ப்படி
(1)பவுண்டு என்பதன் ஆங்கில குறியீடுதாங்க lb/in2  (PSi )    ஒரு சதுர அங்குலத்திற்கு பவுண்டு அழுத்தம் என்பதன் சுருக்கமே  lb/in2 (or) PSi ஆகும்.அதாவது lb/in2 (or) PSi -  means -   Pounds per Square Inch .

(2) Kilo Gram Force Per Square Centimeter அல்லது kilo pascal என்பதன் குறியீடு அல்லது சுருக்கம்தாங்க    Kg/cm2 (KPa) இதனை Bar என்றும் குறிப்பிடுவர்.
 அப்படியானால் நாம் டயரில் ஏற்றப்படும் காற்றழுத்த அளவானது ஒரு சதுர செமீ.அல்லது ஒரு அங்குலத்திற்கு அழுத்தவீதத்தில் என்பதை புரிந்துகொள்ளுங்க.

பாஸ்கலின் விதி (Pascal's law)  என்பது பாய்மங்களின் அழுத்தத்தைப் பற்றிய விதியாகும்.இவ்விதி பிரெஞ்சு கணிதவியலாளர் பிலைசு பாஸ்கல் என்பவரால் எடுத்துரைக்கப்பட்டது.
                     இவ்விதியின் படி முழுவதும் திரவத்தால் நிரப்பப்பட்ட மூடிய கலனில் கொடுக்கப்படும் அழுத்தமானது கலனிலுள் அனைத்து பகுதியிலும் சம அளவில் இருக்கும். அவ்வழுத்தத்தால் உருவாகும் விசை கலனில் சமபரப்பில் சம அளவில் இருப்பதோடு கலனின் உட்பரப்பிற்கு செங்குத்தாகவும் அமையும். இவ்வழுத்தம் கொள்கலனின் வடிவத்தைப் பொறுத்ததல்ல.
ஒரு பொருள், நறுக்கு விசை தன் மேல் செலுத்தப்படும் பொழுது தொடர்ந்து தன் உரு மாறிக் கொண்டே இருந்தால் அதனை பாய்மம் என்று கொள்ளலாம். காற்று, நீர், எண்ணெய், ஆகியவற்றினை பாய்மத்திற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். பாய்ம ஓட்டத்தினை நாம் உயிர்வாழ எடுக்கும் மூச்சிலிருந்து உடலில் ஓடும் செந்நீர், பித்தநீர், சிறுநீர் ஆகியவற்றிலும், இந்த புவியில் உயிர்கள் வாழ காரணமாயிருக்கும் நீரோட்டத்திலும், அது ஓட துணை புரியும் கார்மேகங்களின் ஓட்டத்திலும், கார்மேகம் புடைசூழ கிளம்பும் கடல், ஆறு, ஏரி, ஆகிய நீர்நிலைகளில் இருக்கும் ஓட்டத்திலும், தானூர்ந்து, வானூர்தி, கப்பல், ஏவுகணை, விண்கல‌ ஏவூர்தி ஆகியவற்றின் இயக்கிகளிலும், மின் எடுக்கும் அனல்மின் நிலையம், அணுமின் நிலையம், நீர் தேக்க மின் நிலையம், காற்றோட்ட மின் நிலையம் ஆகியவற்றிலும் காணலாம்.




  என அன்புடன்
 C.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
.ஈரோடு மண்டலம்.


13 செப்டம்பர் 2018

இந்திய அரசியல் சாசனம் - CONSTITUTION OF INDIA

இந்திய அரசியல் சாசனம் ஒரு அறிமுகம்...
   மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.
                    இம்மென்றால் சிறைவாசம்;ஏனென்றால் வனவாசம்.,என்ற வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு பலியாகி அல்லலுற்ற நமது மக்கள் பெற்ற விடுதலையை பேணி காக்கவும்,தமக்காகத் தம் உரிமைகளை வலியுறுத்தி நிலைநாட்டிக்கொள்வதற்கும் வழங்கிக்கொண்ட அடிப்படை உரிமை சாசனம் இந்த இந்திய அரசியல் சாசனம் ஆகும்.

  இந்திய அரசியல் சாசனம் பிரிவு  51(A) ன்படி 
                       இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும்,
உட்பிரிவு (அ) ன்படி
                அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவும்,அதன் நோக்கங்களையும்,அதன்படி உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளையும் தேசக்கொடியையும் தேசீய கீதத்தையும் மதிக்கவும்,
உட்பிரிவு(ஆ)ன்படி
                       நமது தேசீய விடுதலை போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்துள்ள புனிதமான கொள்கைகளை போற்றவும்  கடைப்பிடிக்கவும்,
உட்பிரிவு(இ)ன்படி
              இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஒப்புயர்வற்ற தன்மையையும் நிலை நிறுத்தவும் பாதுகாக்கவும்,
உட்பிரிவு(ஈ)ன்படி
             தேசத்தைப் பாதுகாப்பதற்கும் அப்படி அழைக்கப்படும்போது தேசத்திற்கு சேவை செய்ய முன்வரவும்,
உட்பிரிவு(உ)ன்படி
                        சமயம்,மொழி,பிராந்தியம் ஆகியவற்றை தாண்டி வந்து இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ஒன்றுபட்ட உணர்வையும் உண்டாக்கவும், பெண்களின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் பழக்கவழக்கங்களை தவிர்த்திடவும்,
உட்பிரிவு(ஊ)ன்படி
                        நமது விலை மதிப்பற்றதும் பல்வகைப்பட்டதும் தொன்றுதொட்டு வருவதும் ஆன பண்பாடுகளை மதிப்பதற்கும் காப்பதற்கும்,
உட்பிரிவு(எ)ன்படி
                    காடுகள்,ஏரிகள்,ஆறுகள்,காட்டுவிலங்குகள் மற்ற உயிரினங்கள் உட்பட நம்மிடையே சுற்றியுள்ள இயற்கைச்சுற்று சார்புகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மற்றும் உயிரினங்களிடத்தில்கருணை காட்டவும்,
உட்பிரிவு(ஏ)ன்படி
                   அறிவியல்ரீதியாக அணுகுமுறை,மனிதாபிமானம் மற்றும் ஆராய்வு ஊக்கம்,சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் காப்பதற்கும்,
உட்பிரிவு(ஐ)ன்படி
                  பொதுச்சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் வன்முறை கண்டு அஞ்சி விலகுவதற்கும்,
உட்பிரிவு(ஒ)ன்படி
                      முன்னேற்றப்பாதையில் நாடு முனைந்து வெற்றிபெற அனைத்து துறைகளிலும் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் சிறப்படைய முயற்சி செய்வதற்கும்,
       ஆவணபுரிவதை தமது கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------
இந்திய அரசியல் சாசனம் பிரிவு  38 ன்படி
நீதி,சமூகம், பொருளாதாரம், மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.அவற்றைக் காப்பதற்கும்,அவற்றை அனைவரும் பெறுவதற்கும் தேவைப்படக்கூடியவற்றை மக்களின் நலன் கருதி,மேம்பாட்டிற்காக அரசு முயற்சி எடுத்துக்கொள்ள  வேண்டும்.தேசீய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.
 இந்திய அரசியல் சாசனம் பிரிவு  39 ன்படி
உட்பிரிவு(அ)ன்படி
               குடிமக்கள் அனைவரும் ஆண்,பெண் பேதமின்றி சரிசமமாக வாழ்வதற்குத்தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்,
உட்பிரிவு(உ)ன்படி
                  தொழிலாளர் நலத்தையும்,வேலைத்தறனையும்,ஆண்,பெண்,குழந்தைகள் ஆகியோரைத்  தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களை தமது வயதிற்கும்,சக்திக்கும் தகுதியற்ற ஒரு வேலைக்குப் பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தள்ளப்படாமல் தடுப்பதற்கும்,
உட்பிரிவு(ஊ)ன்படி
                  குழந்தைகள் சுதந்திரமான சூழ்நிலையிலும் கண்ணியத்தோடும்,நல்வாழ்வுடன் வளர்வதற்கும்,அப்படி வாழ்வதற்கான வாய்ப்புகளை அளிப்பதற்கும்,இளைஞர்களை,சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பளிப்பதற்கும்,ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும்,
 உரியவகையில் தமது கொள்கைகளை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்திய அரசியல் சாசனம் பிரிவு  39(A) ன்படி
 சட்ட அமைப்புகளை நீதிப்பூர்வமாக இயங்குவதற்கும்,அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதற்கும், உரிய சட்டதிட்டங்கள் மூலம் இலவச சட்ட உதவி கிடைப்பதற்கும்,பொருளாதாரம் அல்லது வேறு குறைபாடுகளினால் எந்த குடிமகனுக்கும் தன் பிரச்சினைகளில் நீதி வழங்கப்படாதிருப்பதைத் தவிர்ப்பதற்கும் உண்டான வழிகளை வலியுறுத்த வேண்டும்.
 
இந்திய அரசியல் சாசனம் பிரிவு  43 ன்படி
வேளாண்மை,தொழிற்சாலை மற்றும் வேறுவிதமான தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் அனைவருக்கும் வாழ்வதற்குரிய ஊதியம்,தொழிலாற்றுவதற்கேற்ற சுமூகமான சூழ்நிலையில்,போதுமான ஓய்வு,சமூக மற்றும் பண்பாட்டுப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஆகியவை கிடைப்பதற்கும் உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவோ,அல்லது பொருளாதார அமைப்புகள் மூலமாகவோ உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

  இந்திய அரசியல் சாசனம் பிரிவு  46 ன்படி
பிற்பட்ட மக்களிடையே,அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை மிகுந்த அக்கறையோடு அமல்படுத்த வேண்டும்.சமூக அநீதிகளிலிருந்தும்,எல்லாவகையான சுரண்டல்களிலிருந்தும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

  இந்திய அரசியல் சாசனம் பிரிவு  47 ன்படி
 உணவுச் சத்துக்களை மேம்படுத்தவும்,அடிப்படை வாழ்க்கைவசதிகளைப் பெருக்கவும்,நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும்,உடலுக்குத்தீங்கு பயக்கும் நச்சுப்பொருட்களையும் மருந்தாக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இந்திய அரசியல் சாசனம் பிரிவு  48(A) ன்படி
    தேசத்திலுள்ள காடுகளையும் காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு மேற்படியான அரசியல் சாசனப்பிரிவுகளின்படிதாங்க மாணவர்களின்,கல்வி வளர்ச்சி,பாதுகாப்பு,முன்னேற்றத்திற்கான சமூக சேவை புரிந்து வருகிறேன்.

11 செப்டம்பர் 2018

தனிச்சிறப்பு பெற்ற தமிழ் மருத்துவம்

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.தமிழ் மருத்துவத்தின் சிறப்பினைக் கூறும் இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. கொஞ்சம் பொறுமையா படித்து பாருங்கள்.
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!
நன்றி;*நலமுடன் வாழ - மருத்துவ தகவல்களின் சங்கமம்*

10 செப்டம்பர் 2018

சமூகப்பணி செய்வது சொந்தத் தேவைக்காக???????


அனுப்புதல்,
                        C. பரமேஸ்வரன்,
                       தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை,
                        தாளவாடி கிளை,
                       ஈரோடு மண்டலம்.

 பெறுதல்;
                     திரு.பொதுமேலாளர் அவர்கள்,
                   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை,
                     ஈரோடு மண்டலம்.


                           ஐயா,

                              பணிவான வணக்கம்.
            நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,ஈரோடு மண்டலத்தில் சீரிய முறையில் ஓட்டுனராகப்பணிபுரிந்து நிரந்தரம் செய்யப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகம்,ஈரோடு மண்டலத்தின் சிறந்த உடலுழைப்புத்தொழிலாளியாவேன்.
சராசரி ஓட்டுனராகிய எனக்கு நற்பண்புகள் கற்பித்து, சமூகப்பொறுப்புள்ள குடும்பஸ்தனாக்கி ,என்னை பண்புள்ள மனிதனாக்கிய நமது கழகமாகிய தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக்கழகம்,ஈரோடு மண்டலத்திற்கும்,கோபி கலை அறிவியல் கல்லூரிக்கும், சத்தி மற்றும் தாளவாடி வட்டார சமூக ஆர்வலர்களுக்கும்,நன்றி செலுத்தும்விதமாகவும்,நமது அரசாங்கத்திற்கும்,நமது போக்குவரத்துக்கழகத்திற்கும் நற்பெயர் ஈட்டித்தரும்வகையிலும்,நமது எல்லோருக்கும் எஜமானர்களாகிய பொதுமக்கள் நலன் கருதி சாதி,மதம்,இனம்,மொழி,அரசியல் வேறுபாடுகளைக்கடந்து மதச்சார்பற்று ஒன்றுபட்ட சமூகமாக முன்னேறுவதற்காக தன்னால் இயன்றளவு சேவை புரிய வேண்டும் என்று அறிவுரை நல்கி ஊக்கமளித்த நமது கழகத்தின் முன்னாள் பொதுமேலாளர்கள் மற்றும், முன்னாள் கிளைமேலாளர்களின் வழிகாட்டுதல்படியும்,ஈரோடு மாவட்டத்தின் 2011ஆம் ஆண்டு ஆட்சியாளர் திரு.வெ.க.சண்முகம் இ.ஆ.ப.,அவர்களது பாராட்டுடன்கூடிய அறிவுரைப்படியும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 51(A)க்குட்பட்ட அனைத்து பிரிவுகளின்படியும்,குறிப்பாக இந்திய அரசியல் சாசனம் பிரிவு 38,39,43,46,47பிரிவுகளின்படியும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி,பாதுகாப்பு,முன்னேற்றத்திற்கான சமூகப்பணிகளை இலக்காகக்கொண்டு குறிப்பாக நம்மைவிட 50ஆண்டுகள் பின்தங்கியுள்ள வாழ்க்கைச்சூழலிலிருக்கும் தாளவாடி சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் நமது போக்குவரத்துக்கழகத்தின் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் இதர அரசுத்துறைகளின் ஆதரவோடும்,தனித்தும்,சமூகத்தின் அக்கறைகொண்டவர்களை இணைத்தும் கடுமையான பணியான எனது ஓட்டுனர் பணி நேரம் போக ஓய்வேடுக்கவேண்டிய மீதி நேரங்களில் சமூக நலப்பணி புரிந்து வருகிறேன்.
சமூகத்தின் மீது அக்கறைகொண்டவனாக பொதுமக்களிடமும்,மாணவக்குழந்தைகளிடமும்,கல்வியாளர்களிடமும் அறிமுகமாகிவிட்ட நான் வழக்கம்போல கடந்த மாதமும் தாளவாடியில் பிரசித்திபெற்ற புத்தக பதிப்பாளர்களையும்,சென்னையிலிருந்தும்,சேலத்திலிருந்தும், மேட்டூரிலிருந்தும்,ராமனாதபுரத்திலிருந்தும் இலவச வழிகாட்டுதல் முகாம் நடத்திவரும் சான்றோர்களை வரவழைத்து பொது அறிவை வளர்க்கும் மூன்றுநாட்கள் புத்தகக்காட்சி,மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடத்தியதற்காக (தலைமை நிர்வாகம் எனக்கு ஒதுக்கியுள்ள 255நாட்கள் மொத்த விடுப்புகளில்) எனது வார ஓய்வு நாளும் சேர்த்து நான்கு நாட்களை ஒருவாரம் முன்னதாக (17-8-2018தேதியிட்ட விடுப்பு விண்ணப்ப எண்D-131853) கேட்டும் சமூகப்பணி எனது சொந்த வேலை என கூறியதோடு எனது விடுப்பினை வழங்க மறுத்து அங்குமிங்கும் அலைக்கழித்தது இன்றுவரை மிகுந்த மனவேதனையை தருகிறது.(சமூகப்பணிகளுக்கே தராத எனது விடுப்புகளை பணி ஓய்வு பெறுவதற்குள்ளாகும் வருகிற மூன்று ஆண்டுகளுக்குள் எப்போது வழங்கப்படும் என்பதனையும் தெரிவிக்க பணிவுடன் இதன் மூலமாக பணிந்து கேட்டுக்கொள்கிறேன்).  தாளவாடி கிளையின் தற்போதைய கிளை நிர்வாகம் சமூக நலப்பணியினை தேவையற்றதாக கருதினால் அந்த தவறைச்செய்த அதாவது சமூகத்திற்கு சேவை செய்வது நமது அரசின் பணி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் உட்படஅனைத்து அரசுத்துறைகளின் முக்கிய பணி என்று எனக்கு அறிவூட்டிய நமது கழகத்தின் முன்னாள கிளைமேலாளர்களும்,பொதுமேலாளர்களும்,மாவட்ட ஆட்சியருமே பொறுப்பு ஆவார்கள் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு ஐம்பத்தைந்து வயதைக் கடந்துவிட்ட நிலையிலும் தாளவாடி வட்டார மாணவ,மாணவிகளின் எதிர்பார்ப்பால் நான் செய்துவரும் சேவைகளை தவறாக நமது போக்குவரத்துக்கழகத்தின் கிளை நிர்வாகம் கருதுதுவது நமது நாட்டின் எதிர்காலத்தின் முன்னேற்றத்தையே சந்தேகப்படும்படும்படியாகவே கருதுகிறேன்.எனவே நான் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை அரசுக்கு எதிராக செயல்பட்டதாக நிர்வாகம் கருதினால் அதன் விபரங்களைத்தொகுத்து பட்டியல்படுத்தி எனக்கு ஆவணமாக அளித்து உதவுமாறு தங்கள் மேலான சமூகம் அவர்களை மிகவும் பணிவுடன் கோரி இம்மனுவினை சமர்ப்பிக்கிறேன்.
தேதி : 11-09-2018
  இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
C.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுனர்,
  தாளவாடி கிளை.

06 செப்டம்பர் 2018

பான் கார்டு Pan card

                                         Pan card பற்றிய ஒரு தகவல்.!
அன்புடையீர்,
                                 வணக்கம். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பான்கார்டு என்னும் நிரந்தர கணக்கு எண் அடையாள அட்டை வாங்கி வைத்திருப்போம். அந்த பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. 
பான் கார்டில் ( Pan Card )உள்ள எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும்.
உதாரணத்திற்கு பான் கார்டு எண் ACHPL456B என்று வைத்துக்கொள்வோம்.
இதில் முதல் மூன்று எழுத்துக்கள் வரிசைப் பதிவு ஆகும்.
நான்காவது எழுத்து என்பது தனிப்பட்ட நபரையோ, ஒரு நிறுவனத்தையோ அல்லது கீழே கொடுக்கப்பட்ட துறைகளில் ஒன்றையோ குறிக்கும்.
C – Company (நிறுவனம்)
P – Person (தனி நபர்)
H – Hindu Undivided Family (இந்து கூட்டுக்குடும்பம்)
F – Firm (தொழில்)
A – Association of Persons (கூட்டிணைவு/கூட்டாளிகள்)
T – Trust (அறக்கட்டளை)
L – Local authority (உள்ளூர் அதிகாரத்துறை)
J – Juridical Person (நீதித்துறையை சேர்ந்தவர்கள்)
G – Government Personnel (அரசு பணியாளர்கள்/அதிகாரிகள்)
ஐந்தாவது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவருடைய பெயரின் முதல் எழுத்தாக இருக்கும். உங்கள் பெயர் அருண்(ARUN) என்றால் ஐந்தாவது எழுத்து A என்று வரும்.
அடுத்து வரும் எண்கள் வரிசை எண்கள் ஆகும். இவை 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையதே.
எனவே உங்கள் பான் கார்டில் நான்காவது மற்றும் ஐந்தாவது எழுத்துக்கள்தான் முக்கியமானவை. இந்த எழுத்துக்களை உங்களால் எளிதாக சரிபார்க்க முடியும். இந்த பின் நம்பர் சரியாக இருந்தாலே உங்களது பான் கார்டு உண்மையானது.

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...