30 அக்டோபர் 2014

பெரியகுளம் உடைப்பு ஏற்பட காரணமும்-எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கையும்

 அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா???.....
ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம்-வரதம்பாளையம் கிராமம்-பெரியகுளம் உடைப்பு ஏற்படக் காரணமும்?  மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கையும்!..
            
                 மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். 
                   
                           கடந்த வாரம் பெய்த மழையால் சத்தியமங்கலம்-பெரிய குளம் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான விவசாய பூமிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதுவரை இல்லாத அளவு தற்போது மட்டும் ஏன் ?.இவ்வாறு பாதிப்புக்குள்ளானது.
            இனிவருங்காலங்களில் அரசு எடுக்கவேண்டிய தடுப்பு நடவடிக்கை என்ன?என்பது பற்றி என்னறிவுக்கு எட்டியவரை பதிவிட்டுள்ளேன்.
  சத்தியமங்கலத்திலுள்ள பெரியகுளம் பகுதிக்குட்பட்ட   விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டு வருடம் முழுவதும் பாதுகாத்திருந்து அறுவடை நேரத்தில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளானவர்களை  நேரில் சென்று பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.
  

             மாண்புமிகு அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் நமது ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் S.R.செல்வம் அவர்கள் பெரியகுளம் சாலையை சீரமைக்கும் பணியினை பார்வையிட்டுள்ளனர்.பெரியகுளம் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



             சத்தியமங்கலம்- பெரியகுளத்திற்கு நீர்பிடிப்பு பகுதியான தனவாசி கரடு உட்பட அப்பகுதி மலைப்பகுதியிலிருந்து வரும் நீர்வரத்துப்பகுதி மிக அதிக பரப்பளவைக்கொண்டது. இந்த பரப்பிலிருந்து வரும் தண்ணீர் எளிதாக கடந்துசெல்ல கீழே காட்டப்பட்டுள்ள  ஒரு கண்மாய் பாலம் போதுமானதாக இல்லை? தரைமட்ட பாலத்தை உயர்த்திய அரசு அதிகாரிகள் இதனை கவனித்திருக்க வேண்டும்.இதனால் பின்நாட்களில் மழைநீர் பெருக்கால் ஏற்படும் சேதம் பற்றிய அக்கறை எடுத்து இருக்க வேண்டும்.


     பெரியகுளத்திற்கு வரும் நீர்வரத்து அனைத்தும் உபரியாக வெளியேற இந்த சிறிய கண்மாயில்தான் புகுந்து செல்ல வேண்டும்.ஏற்கனவே கட்டமைப்பில் உள்ள உபரிநீர் வெளியேற்றப்பகுதி கீழே உள்ள படம்.
         மேற்கண்ட படம் உபரி நீர் வெளியேறும் பகுதி.கிழக்கு கடைசியில் அமைந்துள்ளது.ஆனால் உடைப்பு ஏற்பட்டது உறுதியாக இருக்கவேண்டிய குளத்தின் மேற்கு கரைப் பகுதி.
         எனது எண்ணப்படி இதற்கு காரணம் 
(1)குளத்தின் கரையின் மேற்கு பகுதி அகலமில்லாதது.மற்றும் வலுவற்றது.(2)சரியான திட்டமிடல் இல்லாமல் நீர்வரத்து உபரியாக செல்ல போதிய பாதை இன்றி தடுக்கும்விதமாக குளத்தின் நடுவே தார்ச்சாலை உயர்த்திப் போடப்பட்டது .

                      பெரிய குளத்தை துண்டாக்கிய தார்ச்சாலை போட்டுள்ள காட்சியை பாருங்க.மேல் படம் ஏறக்குறைய தடுப்பு சுவரைப்போல் போடப்பட்டுள்ளது..
இவ்வாறு உபரிநீரை வெளியேற்ற இடமில்லாமலும் சரியான திட்டமிடல் இல்லாமலும் தார்ச்சாலை அமைத்திட அனுமதியளித்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிக்கு வணக்கங்கள் பல சொல்ல வேண்டும்...
  இந்த தார்ச்சாலை வழியாகவும்  அதிகமான தண்ணீர் வெளியேறியுள்ளது. இருந்தாலும் கீழ்கண்ட படத்தில் உள்ள மேற்குப்பகுதி கடைசியில் உடைப்பு ஏற்பட்டு அதிக விளைநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
                (இப்படத்தை கொடுத்துதவிய சத்தியமங்கலம் செய்திகள் நண்பருக்கு நன்றிகள் பல.) பெரியகுளத்தின் நீர்வரத்து உபரியை தார்ச்சாலை தடுத்த காரணத்தால் தண்ணீர் கிழக்குப்பகுதிக்கு செல்வதை விட்டுவிட்டு மேற்கு பகுதியிலேயே எதிர்த்து தோட்டத்தினுள் புகுந்து கரையை உடைத்து வெளியேறிய காட்சி...எனது உடல்நலக்குறைவினால் அன்றையதினம் சம்பவ இடத்திற்கு செல்ல இயலவில்லை.
   
 குளத்தின் கிழக்கு கடைசியில் உபரி நீர் வெளியேறும் பகுதியின் அகலத்தை நீங்களே கவனியுங்கள்..ஏறக்குறைய 150அடி இருக்கும் என நினைக்கிறேன்.இத்தனை தண்ணீரும் கீழ் கண்டுள்ள  25அடி கண்மாய் பாலத்தில் உட் புகுமா?


   புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் கண்மாய் பாதையில் மண்மேடும் தடுப்புகளும் உள்ளன.இதையாவது சரிப்படுத்தி இருக்க வேண்டும்.                    
                தார்ச்சாலையிலும் தண்ணீர் வெளியேறியும் அதனையும் மீறி உடைப்பு ஏற்பட்டுள்ளது.அதனால் தண்ணீரை தடுத்து குளத்தை உடைத்துவிட்டது.
 

       ( மழையால் வந்த காய்ச்சல்தாங்க!.  நான் சென்று பார்வையிட்ட இன்றைய தினமும் (30.10.2014) எனக்கு  இன்னும் உடல்நிலை சீராகவில்லை .....)


                       
பெரிய குளத்தின் கரையில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.படம் எடுத்த தேதி -30.10.2014 கரை விரிசல் பற்றிய விவரம் எனது காணொளியில் காண்க..
 
        பெரியகுளத்தின் பரப்பளவு சுமாராக 185 ஏக்கர் இருக்கலாம்.முப்பதிலிருந்து ஐம்பது அடி ஆழமாகவும் இருக்கலாம்.பெரிய குளத்தின் கரை கிழக்கிலிருந்து மேற்காக சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் நீளம் இருக்கலாம்.முழுவதும் மண்ணால் போடப்பட்ட கரை இது.
             ஏனோ தெரியவில்லை கிழக்கிலிருந்து மேற்கு வரை அகலமாக அதாவது பத்து முதல் பதினைந்து அடி அகலமாகப் போடப்பட்ட மண்கரை மேற்கு பகுதியில் மட்டும்  அரைகிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமாக இரண்டு அடி அகலத்தோடு நிறுத்திவிட்டார்கள்.அதுவும் இளகிய மண்ணால் போடப்பட்டுள்ளதும் உடைப்பிற்கு காரணம் ஆகும்.
           மேலும், அந்த மண்கரை விரிசல் ஏற்பட்டு அபாயமாக உள்ளது.இனியும் உடையலாம்.பேராபத்தை நிகழ்த்தலாம்.
             அடுத்து குளத்தின் நடுப்பகுதியில் ஏற்கனவே சென்றுகொண்டிருந்த தார்ச்சாலை தரைமட்டமாகத்தான் இருந்தது.அந்த தார்ச்சாலையை மேம்படுத்திய போது கரைக்கு மட்டமான உயரத்தில் தண்ணீரை தடுக்கும் வகையில் தார்ச்சாலையை போட்டதும் உடைப்பிற்கு காரணமாகும்.
                  அவ்வாறு கரைமட்டத்திற்கு போடப்பட்ட தார்ச்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருபத்தைந்து அடி அகலமுள்ள கண்மாய் மட்டும் விடப்பட்டிருப்பதும் குளம் உடைய காரணம்.
                அதாவது நீர்பிடிப்பு பகுதி தனவாசி கரடு உட்பட மலைப்பகுதி மழைநீர் முழுவதும் குறுக்காக போடப்பட்ட தார்ச்சாலையின் மேற்கு பகுதியிலிருந்துதான் நீர்வரத்துவருகிறது.
               அவ்வாறு வரும் நீர் வரத்தானது உபரி நீர் வெளியேற்றும் கிழக்குப்பகுதிக்கு கடந்துசெல்ல போதுமான அகலம் இல்லாததும் குளம் உடைப்பிற்கு காரணம் ஆகும்.உபரி நீர் வெளியேற்றும் மடைப்பகுதி அகலம் 150அடிக்கும் அகலமாக இருக்கும்போல் தோன்றுகிறது.ஆனால் பாலத்தின் கண்மாய் 25அடிதான் இருக்கும்போல் உள்ளது.அவ்வாறானால் எப்படி தண்ணீர் வெளியேற்றப் பகுதிக்கு செல்ல முடியும்.

                போக்குவரத்திற்கான சாலை மேம்பாடு அவசியம்தான்.அதற்காக நீர்வரத்தை தடுக்கும்படி கட்டமைப்பை செய்தவிளைவு இன்று எத்தனை விவசாய நிலங்கள் பாழ்பட்டுள்ளன.உபரி நீர் வெளியேறும் பகுதியின் அகலத்தைப்போன்று அல்லது 100அடி அகலமாவது பாலத்தின் கண்மாய்கள் கட்டியிருக்க வேண்டும்.ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கண்மாயில் தண்ணீர் செல்லும் பாதையை தடுக்கும் மண் மேட்டினை அகற்ற வேண்டும்.அந்த ஒரே கண்மாய் பாதையில் தடுப்பாக மண்மேடு இருப்பதும் தண்ணீரை தடுத்து கரையை உடைத்துள்ளது.இதனையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.
            அடுத்து மேற்குப்பகுதி கரை அகலம் மிகக்குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.மற்றும் உறுதியற்ற நிலையில் போடப்பட்டுள்ளது.
                  தற்போதும் இன்றைய (30.10.2014) எனது பார்வையின்படிவிரிசல் ஏற்பட்டு அபாயமாக உள்ளது.அதனையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும்
 தேவையான தடுப்பு நடவடிக்கைகள்;
        முதலில் தெற்குப் பகுதியிலுள்ள மண்கரையினை  கிழக்கிலிருந்து மேற்கு வரை ஒரே அளவான அகலத்தில் உறுதியான மண்ணிட்டு கரையை பலப்படுத்த வேண்டும்.
      குளத்தின் குறுக்கே செல்லும் தார்ச்சாலையின் பாலத்தை இன்னும் அகலமாக்கி கூடுதலாக உபரிநீர் வெளியேறும் பகுதியின் அகலத்தின் அளவுக்கு தார்ச்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில்  அதிக கண்மாய்கள் அதாவது 100அடி அகலமாவது தண்ணீர் வெளியேறுமாறு பாலத்தை சீர்படுத்தவேண்டும்.
   தார்ச்சாலையின் குறுக்காக கட்டப்பட்டுள்ள பாலத்தின் 25அடி அகல கண்மாய் கண்டிப்பாக போதாது.இந்நிலை நீடித்தால் இனி வருங்காலங்களிலும் அழிவிலிருந்து மீளமுடியாது..கரையை இன்னும் உயர்த்த வேண்டும்.உபரிநீர் வெளியேறும் பகுதியின் அளவு இன்னும் ஒருமுறை ஆய்வு செய்தாவது மேல்படி நடவடிக்கை  எடுக்க வேண்டும். பெரியகுளம் பகுதிக்குட்பட்ட 
          விவசாய நிலங்களை காக்க வேண்டும்.
          விவசாயிகளை காக்க வேண்டும்.
             நீர் ஆதாரத்தை காக்க வேண்டும்.
                        செய்வார்களா?....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...