23 மே 2017

மது குடிப்பதைத் தடுப்போம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். குடிப்பதை தடுப்போம் என்ற தலைப்பில் நாமக்கல்.வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய கவிதை இதோ தங்களுக்காக..
   

குடிப்பதைத் தடுப்பதே



கோடிகோடி புண்ணியம்
அடிப்பினும் பொறுத்துநாம்
அன்புகொண்டு வெல்லுவோம்! . .(குடி)

மக்களை வதைத்திடும்
மனைவியை உதைத்திடும்
துக்கமான கள்ளினைத்
தொலைப்பதே துரைத்தனம். . .(குடி)

பித்தராகி ஏழைகள்
பேய்பிடித்த கோலமாய்ப்
புத்திகெட்டுச் சக்தியற்றுப்
போனதிந்தக் கள்ளினால். . .(குடி)

பாடுபட்ட கூலியைப்
பறிக்குமிந்தக் கள்ளினை
வீடுவீட்டு நாடுவிட்டு
வெளியிலே விரட்டுவோம்! . .(குடி)

கஞ்சியின்றி மனைவிமக்கள்
காத்திருக்க வீட்டிலே
வஞ்சமாகக் கூலிமுற்றும்
வழிபறிக்கும் கள்ளினை . . .(குடி)

மெய்தளர்ந்து மேனிகெட்டுப்
போனதிந்தக் கள்ளினால் ;
கைநடுக்கங் கால்நடுக்கங்
கண்டதிந்தக் கள்ளினால். . .(குடி)

தேசமெங்கும் தீமைகள்
மலிந்ததிந்தக் கள்ளினால் ;
நாசமுற்று நாட்டினார்
நலிந்ததிந்தக் கள்ளினால். . .(குடி)

குற்றமற்ற பேர்களும்
கொலைஞராவர் கள்ளினால் ;
கத்திகுத்துச் சண்டைவேண
கள்ளினால் விளைந்தவே. . .(குடி)

குற்றமென்று யாருமே
கூறுமிந்தக் கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை
விதைப்பதென்ன விந்தயே! . .(குடி)
==========================================================
(2)போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
புத்தி யுடைஓர் அரசாமோ?

   விட்டது சனியன் விட்டது சனியன்


விட்டது நம்மை விட்டதடா!
கொட்டுக முரசு கொம்பெடுத் தூது
கொடும்பாவி கள்ளைக் கொளுத்திவிட்டோம்!

செத்தது கள்பேய் இத்தினம் ; இதையினி
தீபா வளிபோல் கொண்டாடு ;
பத்திரம் கள்மேல் சித்தம்வா ராவிதம்
பார்ப்பதும் காப்பதும் உன்பாரம்!

ஈஸ்வர வருஷம் புரட்டா சியிலே
இங்கிலீஷ் ஒன்றுபத்து முப்பத்தேழில்
சாஸ்வதம் போலவே நமைப்பிடித் தாட்டிய
சனியன் கள்கடை சாத்திவிட்டார்!

கூலியைத் தொலைப்பதும் தாலியை இழுப்பதும்
கூசிட ஏசிடப் பேசுவதும்
சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும்
சந்தி சிரிப்பதும் இனியில்லை!

அழுதிடும் மக்களும் தொழுதிடும் மனைவியும்
ஐயோ! பசியுடன் காத்திருக்க,
பொழுதுக்கும் உழைத்தது முழுவதும் கூலியைப்
போதையில் இழப்பதும் இனியில்லை!

பெற்றதன் குழந்தைகள் சுற்றி நடுங்கிப்
பேயெனும் உருவொடு வாய்குளற
உற்றவர் உறவினர் காறி உமிழ்ந்திட
ஊரார் நகைப்பதும் ஒழிந்ததினி!

விடிகிற வரையிலும் அடிதடி ரகளை
வீதியில் மாதர்கள் ரோதனமும்
குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும்
கூண்டோ டொழிந்தன இனிமேலே!

எல்லா விதத்திலும் கள்ளால் வரும்பணம்
ஏளனத் துக்கே இடமாகும் ;
நல்லார் சரியெனக் கொள்ளா வரியிதில்
நம்மர சடைந்திட்ட பழிநீங்கும்.

போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
புத்தி யுடைஓர் அரசாமோ?
பேதைக ளாக்கிப்பின் பிழைபுரிந் தாயெனல்
பேச்சுக் காகிலும் ஏச்சன்றோ?

காந்தியின் அருந்தவம் சாந்தமும் பலித்தது ;
காங்கிரஸ் ஆட்சியும் ஓங்கிடுமே ;
போந்தது புதுயுகம் ; தீர்ந்தது கலிபலம் ;
பூமிக் கேஒரு புதுமையிது!

சக்கர வர்த்திநம் ராஜா ஜீக்கொரு
சன்மா னம்நாம் தந்திடுவோம் ;
அக்கறை யோடவர் ஆணைப் படிகள்ளில்
ஆசை புகாவிதம் காத்திடுவோம்.

பாழும் கள்ளால் பட்டதை நினைத்தால்
பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா!
வாழும் நாடினி ; ஏழைக ளில்லை ;
வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...