19 அக்டோபர் 2012

பேருந்துப் பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகள்-2012


அன்பு நண்பர்களே,வணக்கம்.
  இந்தப்பதிவில் பேருந்துப்பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகள் பற்றி சிறிது அலசுவோம்.கீழ் கண்ட புகைப்படம் (Face book Friend)  ஃபேஸ்புக் நண்பர் மரியாதைக்குரிய ஆதித்யா அவர்கள் பதிவிட்டது.


மரியாதைக்குரிய ஆதித்யா விசாகா, சோதிடர் அவர்கள் தமது ஃபேஸ்புக் பதிவில்  பயணத்தின்போது
பேருந்தில் நடத்துனர்களின் அணுகுமுறை சரியில்லை! எனத் தெளிவாக்கியுள்ளார்.
      (அதுவும் தனியார் பேருந்து மற்றும் அதில் பணி புரியும் நடத்துனர் புகைப்படத்துடன்)
      யாராக இருப்பினும் மரியாதைக்குறைவு என்பது! அதுவும் பொதுஜன ஊழியன் மரியாதைக்குறைவாக சமூகத்தினரிடம் நடப்பது ஏற்க முடியாதுங்க! தண்டனையே பெற்றுத்தரலாம்.முக்கியமான விசயம் மனித சமூகமாகிய நாமே ஒருவருக்கொருவர் நாகரீகம் கருதி ஏற்றதாழ்வு கருதாமல் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.அதுதாங்க நமது  பண்பாடு.அதுதாங்க ஒழுக்கமுள்ள நாகரீகம்.சரி விசயத்திற்கு வருவோம்.
 பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் படும்பாடு!
      அரசுப்பேருந்து ஓட்டுனர் என்பதால் எங்களுக்கு உள்ள சிரமங்கள் மற்றும் அனுபவங்கள்  சமூகத்தின் பார்வைக்கு கொண்டுவரவே இந்தப்பதிவுங்க!
       குறிப்பு;- சிலரின் தவறான அணுகுமுறையால் எங்களுக்கும் பாதிப்புங்க! நாங்களும் சமூகத்தின் அங்கத்தினரே!
  (1)பயணிகளுக்கான  சில்லறைப் பிரச்சினை;-
   பேருந்தில் பணிபுரியும் நடத்துனர்கள் தங்களது பணப்பையில் சொந்தப்பணம்  ஏதும் வைத்திருக்கக்கூடாது.அப்படியானால் சில்லறை எப்படிங்க வைத்துக்கொள்வது.(அதற்காகத்தான் நிர்வாகம், பேருந்தின் உட்புறம் சரியான சில்லறை கொடுத்து பயணச்சீட்டு பெறவும் என எழுதி வைத்துள்ளதுங்க!)அடுத்து நடத்துனர் பணப்பையின் கொள்ளளவு (SIZE) தங்களது கண்முன்னே தெரியும்.அனைவரும் சில்லறையாகக் கொடுத்தால் நடத்துனரால் தாக்குப்பிடிக்க முடியாதுங்க!.சாக்குப்பை ஒன்று (அதாங்க கோணிப்பை) வைத்துக்கொள்ள வேண்டியதாகிவிடும். அதே சமயம் நான்கு பேராவது சில்லறை கொடுத்து ஒருவர் பணமாகக்கொடுத்தால் சில்லறை கொடுக்க இயலும்.அவ்வாறு நடைமுறை இருந்தால் பிரச்சினைக்கே இடமில்லைங்க!

 (2) ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிச்சுமை;-
   (அ) நடத்துனர் ;-
    அடுத்த கட்டண நிலை வருவதற்குள் பேருந்தில் ஏறிய அல்லது ஏற்றிய அனைத்து பயணிகளுக்கும் மிக விரைவாக பயண தூரத்திற்குண்டான சீட்டு மற்றும் அதற்குண்டான தொகை பெறுதல் மற்றும் வாங்கும் ரூபாய்நோட்டு நல்ல நோட்டா? கள்ளநோட்டா? என சரி பார்த்து  சரியான சில்லறை கொடுத்தல் வழிவசூல் தாளில் பதிவிடுதல் போன்ற வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்ய வேண்டும்.அதுவும்  ஓட்டுனரின் ஓட்டும் தன்மை,பேருந்தின் நிலை,போக்குவரத்து நெரிசல்,பாதையின் தன்மைக்கேற்ப இதற்கிடையே பயண நேரம் கணக்கில் கொண்டு இயக்கும் சூழலில் அனைத்துக் குலுக்கல் மற்றும் பயணிகளின் நெருக்கமான இடிபாடுகள் என அனைத்து இடையூறுகளிலும் தமது தொழிலிலேயே கண்ணும் கருத்துமாக கால தாமதமின்றி! தன்னை சமநிலைப்படுத்திஒரு கையில் பேனா,ரூபாய் நோட்டுக்கள்,இன்னொரு கையில் வழிவசூல் தாள்,பயணச்சீட்டுக்கட்டுக்கள்,அக்குளில் பணப்பை அதுவும் சரியான தொகையுடன் -குறித்த நேரத்தில் இவைகள் அனைத்தையும்  ஒவ்வொரு பயணக்கட்டண நிலையிலும்!(Fare stage)செய்து முடிக்க வேண்டும் கிட்டத்தட்ட சர்க்கஸ் வேலை போல!?!?!!?! குறிப்பாக கிராமப்பகுதி இயக்கம் மற்றும் நகர்ப்புற பேருந்து இயக்கம் அதிலும் கோயமுத்தூர்,திருப்பூர் போன்ற பெருநகர்ப்பகுதி பேருந்துப்பணியில் நடத்துனரின் பணிச்சூழலின் கடுமையைதாங்கள் இனியாவது கண்ணுற வேண்டும்.இதில் போதிய கால அவகாசம் இல்லாமல் பணியின்போது பத்து ரூபாய்க்கு பதிலாக நூறு ருபாய் பெற்றதாக எண்ணி சில்லறைகளைக் கொடுத்துவிட்டு இரவு பதினொன்று மணியளவில் வசூல் கணக்கில் பற்றாக்குறை ஐநூறு,அறுநூறு பேருந்து பணிமனைக்குள் நுழைந்த ஒரு மணி நேரத்திற்குள் வசூல் பிரிவில் கணக்கு கட்ட நடத்துனர் படும்பாடு!?! தங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைங்க!

 (ஆ) ஓட்டுனர்;-
   
      நல்லமனநிலையில் பணி ஆரம்பிக்கும் ஓட்டுனர்  பேருந்தின் தன்மை,சாலையின் தன்மை,பிற வாகன ஓட்டிகளின் தன்மை,போக்குவரத்து நெருக்கம்,சாலையைப் பயன்படுத்தும் பிற வகையினரின் தன்மை,நடத்துனரின் தன்மை,பயணிகளின் தன்மை,முக்கியமாக நிர்வாகத்தின் கால நிர்ணயத்திற்குள் குறிப்பிட்ட இடம் செல்ல வேண்டிய கட்டாயம்
        (இந்த பயணதூரத்திற்கான காலம் நிர்வகித்து பல பல ஆண்டுகள் ஆகிவிட்டதுங்க!அன்றைய காலத்தில் போக்குவரத்திற்கு வாகனங்களைத் தேடிப் பிடிக்க வேண்டியதாக இருந்ததுங்க!) 
         என விவரித்துக்கொண்டே செல்லலாம்.அந்த அளவு மோசமான இடையுறுகளை எல்லாம் தாங்கி,சகித்துக்கொண்டு மனநிலை பாதிக்கும் அளவுக்கே செல்ல வேண்டிய சூழல் ஒவ்வொரு நாளின் பணியின் போதும் ஏற்படுவது தங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைங்க!
           குறிப்பாக நிர்வாகம் எரிபொருள் சிக்கனம் என்பதைக் காரணமாகக்கொண்டு ஓட்டுனருக்கு நெருக்கடி கொடுத்து  கட்டுப்படுத்திவிடுவது.ஆனால் வழித்தடத்தில் சமூகம் மத்தியில்   ஓட்டுனர்  குற்றச்சாட்டுக்கு ஆளாவது.கால தாமதம் செய்யறது ஓட்டுனர்தாங்க! என சிறிதும் இரக்கமின்றி ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு கூறுவது.ஐம்பத்தைந்து நபர்களுக்கான பேருந்தின் கொள்ளளவில் நூற்றிஐம்பதுக்கும் அதிகமான நபர்களை ஏற்றிச்சென்றும்.பேருந்தில் ஏற்ற இடமில்லாமல் விட்டுச்செல்லும் சூழலில், வழித்தடத்தில் பயணிகளை ஏற்றிவரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகுவது.
         அடுத்து அரசுப்பேருந்துகளில் மட்டும் ஒலிப்பான்களை ஒலிமாசு காரணம் காட்டி  தடை செய்வது.மற்றும் ஒளிமாசு காரணம் காட்டி முகப்பு விளக்குகளையும் வெளிச்சம் குறைவானதாகப் பொருத்துவது.
         அடுத்து பேருந்தில் பயணிக்கும் படித்த பண்பாளர்களே,விவரம் தெரிந்தவர்களே,அவர்கள்  விருப்பப் பட்டபோது அருகிலேயே இறக்கிவிட எதிர்பார்ப்பது.அவரது மாறான விருப்பத்தின்போது விரைவுப்பேருந்தாக அடுத்த முனையத்தில்தான் நிறுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது.இதற்கு மாறாக நடக்கும்சூழலில்  ஓட்டுனருக்குக் கிடைக்கும் திட்டு சொல்லி மாளாதுங்க! ஆனால் பேருந்தில் பயணிக்கும்போது திட்டியவரே, தனி வாகனப் பயணத்தின்போது பயணிகள் பேருந்துக்கு வழிவிட மறுப்பது.மற்றும் வேகமாகச் செல்லாமல் (வழிவிட இடமிருந்தும்) நடு ரோட்டில் சென்று கால தாமதம் ஏற்படுத்துவது.ஓட்டுனரைப் பகையாளியாகப் பார்ப்பது.ஓட்டுனரைப் பழிவாங்குவதாக எண்ணி பயணிக்கும் சமூகத்திற்கு கால தமதத்தை ஏற்படுத்துவது.வழக்குரைஞர் போன்ற மோட்டார் வாகன சட்ட நுணுக்கம் தெரிந்தவர்களின்
   (நல்ல குணமுள்ள பலரைப் புண் படுத்துமாயின் மன்னிக்க வேண்டுகிறேன்.இது எனது அனுபவத்தின் பதிவுங்க!) 
       மிகச் சிலருடைய  அதிகார மிரட்டல்,ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பெயரைப்பயன்படுத்தி சில அடிநிலை அரசியல்வாதிகளின் (அவர்களது சொந்த நலனுக்காக மிரட்டல்) அடுத்து காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்கும்,மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கட்டுப்பாட்டிற்கும்,நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கும்,நடத்துனரின் கட்டுப்பாட்டிற்கும்,பிற வாகன ஓட்டிகளின் கட்டுப்பாட்டிற்கும்,பயணிகளின் கட்டுப்பாட்டிற்கும் (இங்கு கவனிக்க வேண்டியது ஓட்டுனர் கட்டுப்பாடு மற்றும் வாகனக் கட்டுப்பாடு தவிர்த்து) என கட்டுப்பட்டு ஒவ்வொருநாளும் பணி முடிக்கும்போது மனநிலை பாதிக்கும்நிலைக்கு ஆளாகித்தான் வீடு செல்கிறார்.இன்னும் பல உள்ளன.
          எத்தனையோ விழா! எடுக்கும் நாம் சமூக நலன் கருதி போக்குவரத்து மற்றும் விபத்து பற்றிய விழிப்புணர்வு விழா எடுத்தால் அனைத்து பகுதிகளிலும்,வருடந்தோறும் இளைஞர்களையும்,அனைத்து ரக வாகன ஓட்டுகளையும்,சொந்த வாகன ஓட்டுகளையும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து கருத்தரங்கம் நடத்தினால் பொதுவான நல்லதொரு முடிவு காண முடியும்.சமூகத்தைக் காக்க முடியும்.விலைமதிப்பிடமுடியாத மனித உயிர்களைக் காக்க முடியும்.பொருட்சேதமும் தவிர்க்க முடியும்.நாட்டின் பொருளாதாரமும் காக்க முடியும்.
     
அரசு நிர்வாகமும்,தனியார் நிர்வாகமும்,காவல்துறை,போக்குவரத்துத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசுத்துறையும்,  சமூக நலனில் அக்கறையுள்ள தன்னார்வ அமைப்புகளும் ஒன்றிணைந்து சாலையின் தன்மை,சாலையைப் பயன்படுத்தும் பிறவகையினரின் தன்மை,பொதுமக்கள்,பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை,நிறுத்தங்களின் எண்ணிக்கை,போக்குவரத்து நெரிசலில் ஏற்படும் கால தாமதம்,இதற்கான தீர்வு காண பயணநேரத்தில் மாறுதல் செய்வது.பயணிகள் ஏறும் எண்ணிக்கை அளவு (இலவசப்பயணதாரர்கள் கணக்கு அப்போதைய வழிவசூல்தாளில் பதிவிட வாய்ப்பில்லை என்பதால் கணக்கு வருவதில்லை.பள்ளிக்குழந்தைகள் உட்பட இலவசப் பயண அட்டையில் பயணிப்போரையும் பேருந்து ஏற்றத்தில் கணக்கில் கொண்டுவந்து ) பொதுவான முடிவு எடுத்தால் முடிந்தவரை சிரமங்களும்,எதிர்பார்ப்பிற்கான தோல்விகளும் தவிர்க்கப்படும் என்பதே எனது தாழ்மையான கருத்துங்க!
இதனை முழுமையாகக் கண்காணிக்க இயலாது என்ற முடிவு சிலருக்கு ஆறுதலாக இருக்கலாம்.ஆனால் தற்போதைய சூழலில் கண்காணிக்க இயலாது என்ற பேச்சுக்கே இடமில்லைங்க.அந்த அளவு நவீன கண்டுபிடிப்புகளும்,தொழிற்நுட்பங்களும் மேம்பாடு அடைந்துள்ளதுங்க!              
             உதாரணமாக வேலூர் மாவட்டம் காட்பாடி-பாகாயம் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் இரண்டில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னால் பொருத்தப்பட்ட கண்காணிப்பு காமெரா போல அனைத்து பேருந்துகளிலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்திவிட்டால் பொதுமே!செலவும் மிகக்குறைவுதாங்க!இருபத்திநாலு மணி நேரமும் கண்காணிக்கலாம்.இதனால் உண்மையான நிலை பற்றி நடுநிலையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.இதனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது பொய்ப்புகார் பதிவு செய்வதும் தவிர்க்கப்படும்.
      
      
          யார் எங்கு தவறு செய்கிறார்கள்.எனக் கண்டறிந்து தண்டிக்க அல்லது அறிவுறுத்த வாய்ப்பு ஏற்படுத்தி திருந்த வைக்கலாம்.
இன்னும் பல அனுபவ சம்பவங்கள் உள்ளன. காலச்சூழல் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.நன்றிங்க! 
         குறிப்பு;- நண்பர்களே,தங்களது அனுபவங்களை,மனதில் பட்ட கருத்துக்களை,ஆலோசனைகளை,சமூக நலன் கருதி பதிவிடுங்கள்.இதுவும் நம்மை நாமே திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அமைத்துக்கொள்ளலாம்.
          தங்களது கருத்துகளுக்காக எதிர்நோக்கும் 
      அன்பன் -PARAMESWARAN.C //DRIVER // அரசுப்போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை.

3 கருத்துகள்:

  1. யாராக இருந்தாலும் தனி மனித ஒழுக்கம் இருக்க / வளர வேண்டும்... மனிதனை மனிதனாக மதிக்க முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்...

    வேறு எதுவும் சொல்வதற்கில்லை...

    விளக்கத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.தங்களது கருத்து மதிக்கப்படவேண்டியதே!.இங்கு நான் எதிர்நோக்குவது சமூகத்தின்பார்வையில் போக்குவரத்து பற்றி என்ன எதிர்பார்க்கிறார்கள்? ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தவறான எண்ணம் ஏற்படக் காரணம் என்ன? என்பதனை தங்களைப்போன்றோர்கள் வாயிலாக அறிய முயற்சிக்கிறேன்.தவறு என்றால் யாராக இருப்பினும் கண்டிக்கப்படவேண்டியவர்களே,அதே சமயம் புரிந்துகொள்ளாமல் இருக்கும்போது எங்களது நிலையை எடுத்துரைக்க விரும்புகிறேன்.அதையும் தவறாக எண்ணும்போது சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு மதிப்பளித்து எமது சமூகத்தை திருத்த விரும்புகிறேன்.இது ஒரு சிறு முயற்சிதாங்க! நன்றிங்க!

      நீக்கு
  2. "சமூக நலன் கருதி போக்குவரத்து மற்றும் விபத்து பற்றிய விழிப்புணர்வு விழா எடுத்தால் அனைத்து பகுதிகளிலும்,வருடந்தோறும் இளைஞர்களையும்,அனைத்து ரக வாகன ஓட்டுகளையும்,சொந்த வாகன ஓட்டுகளையும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து கருத்தரங்கம் நடத்தினால் பொதுவான நல்லதொரு முடிவு காண முடியும்.சமூகத்தைக் காக்க முடியும்.விலைமதிப்பிடமுடியாத மனித உயிர்களைக் காக்க முடியும்.பொருட்சேதமும் தவிர்க்க முடியும்"
    ஆண்டுதோறும் நடத்தப்படும் சாலை பாதுகாப்பு வார விழாவின்போது இதைச் செய்யலாம். உங்கள் ஆர்வத்திற்கு என் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...