13 ஜூலை 2015

நார்வே நாட்டில் மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் எடுக்கப்போறீங்களா?

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். நார்வே நாட்டில் இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற கட்டுப்பாடுகளும்,சோதனைகளும்,சிக்கல்களும்,செலவுகளும்..இதோ அனுபவத்தை பகிர்கிறார் நண்பர் மரியாதைக்குரிய இல.கோபால்சாமி ஐயா அவர்கள்..நீங்களும் படித்துப்பாருங்க..

இல கோபால்சாமி
8 ஜூலை இல் 05:25 PM ·
சாதனை படைத்தேன் !
இந்திய துணைக்கண்ட வரலாற்றில் முதன் முறையாக....
நார்வே நாட்டின் ஹெவி மோட்டார் சைக்கிள் உரிமம் பெறும் முதல் இந்தியன் , முதல் தமிழன் என்கிற பட்டதை இன்று இலகோபல்சாமி பெறுகிறார்.
இனி எந்தவித கட்டுப்பாடும் இன்றி, எத்தனை குதிரைசக்தி இருந்தாலும், எத்தனை சிசி யாக இருந்தாலும் தடையின்றி இயக்கலாம்.
இந்த இரண்டு வரி ஸ்டேடஸ் போடுவதற்காக, நான் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு பதிவை இட்டிருந்தேன் (லிங்க் முதல் கமெண்டில்) . அப்போதுதான் உரிமம் பெறுவதற்கான முதல் அடியை எடுத்து வைத்தேன். மிகக் கடினமான பாடத்திட்டத்தை பயின்று , பரிட்சையில் தேர்ச்சி பெற்றேன். முதல் படியே மிகக் கடினமான ஒன்று. ஏனெனில், புத்தகங்கள் எதுவும் ஆங்கிலத்தில் இல்லை. அத்தனை பக்கங்களையும் ஸ்கேன் செய்து, ஆப்டிகல் ரெககினிசன் மூலம் மொழியாக்கம் செய்து படித்து பரிட்சையில் பாஸ் ஆனேன்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே பயிற்சி மேற்க்கொள்ள இயலும், மேலும் மூன்றண்டுகளுக்குள் முழு உரிமம் பெற வேண்டும். இல்லையேல் மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்பது விதி. பயிற்சி வகுப்புகளுக்கு முன்பதிவு செய்து காத்திருந்த வேளையில், பணி இடமாற்றம் , புதிய ஊர், புதிய சூழல் என மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டது. வந்த புதிய இடத்தில் பயிற்சி வகுப்புகளுக்கு முன்பதிவு செய்ய முற்பட்டால், இடம் கிடைக்கவில்லை. அதில் ஒருவருட காலம் தாமதம் ஆயிற்று.
மேலும், இங்கே மோட்டார் சைக்கிள் பயிற்சி (அல்லது இயக்குவது) குறிப்பிட்ட சில பருவ மாதங்களில் மட்டுமே இயலும். அதுதான் மோட்டார் சைக்கிள் சீசன் . அடுத்த சீசன் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. கடந்த ஆண்டே முன்பதிவு செய்து வைத்திருந்ததால், இந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதம் பயிற்சி மேற்கொண்டேன்.
இங்கே கவனிக்க வேண்டிய விடையம், அங்கீகரிக்கப் பட்ட ஓட்டுனர் பயிற்சி நிலையங்கள் மூலமே உரிமம் பெற இயலும். ஏனெனில், பல படிநிலைகள் கொண்ட ´´ கட்டாயப் பயிற்சிகள் ´´ , அவர்கள் மூலமே நம்மால் பெற இயலும்.
உரிமம் பெறுவதில் உள்ள படிநிலைகள் என்ன??
1. எழுத்துத் தேர்வு - 300 பக்க புத்தகத்தை படிக்க வேண்டும். அதில் சாலை விதிகள், மோட்டார் சைக்கிள் இயக்கம் குறித்த பிரத்தியேகப் பாடங்கள், பாதுகாப்பு, சாலை சட்டங்கள், தண்டனைகள், அபராதங்கள் முதலியவை அடங்கும்.
2. பேஸிக் கோர்ஸ் - 3 மணி நேரம் , மோட்டார் சைக்கிள் குறித்து வகுப்புப் பாடம்.
3. சிட்டி டிரைவிங் - நெரிசல் மிக்க நகர்ப்புறங்களில் இயக்குதல்
4. ரூரல் டிரைவிங் - புறநகர் , கிராமப் பகுதிகளில் இயக்குதல்
5. லாங் டிரைவிங் - நெடுந்தூரப் பயணம் (150-200 கிமீ) ஒன்றை திட்டமிட்டு, 6-7 மணி நேரத்தில் பூர்த்தி செய்தல்.
6. நைட் டிரைவிங் - இரவு நேரங்களில் கவனித்தில் கொள்ளவேண்டிய பிரத்தியேக பாதுகாப்புகள்.
7. ப்ரிசைஸ் டிரைவிங் டெக்னிக் - வேகமாகச் செல்லும் பொழுது வளைவுகளில், சந்திகளில் கவனத்தில் கொள்ள வேண்டிய நுணுக்கங்கள். ( இதுகுறித்த லிங்க் கமெண்டில்)
8. முதலுதவி - நமக்கோ அல்லது சாலையில் வேறு எவருக்கோ முதலுதவி தேவைப்பட்டால் அதற்குறிய அடிப்படை அறிவும், பயிற்சியும், சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு வாகன இயக்குனருக்கும் கட்டாயம்.
9. முதல்நிலை சோதனை தேர்வு - 5 வகையான நுணுக்கங்களை சோதிப்பர். 50 கிமீ வேகத்திற்கு மேல் பயணித்து, 5 மீட்டர் தூரத்திற்குள் அவசர நிறுத்தம் செய்தல், வளைவுகளில் திரும்பிக் கொண்டிருக்கும் பொழுதே பிரேக் பயன்படுத்துதல், குறுகிய வட்டத்திற்குள் கால் ஊன்றாமல் வளைந்து நெளிந்து செலுத்தல் , வேகமாக செல்லும் பொழுது வழியில் தடங்கள் வந்தால், தடையை தவிர்த்து ஒதுங்கிச் செல்லுதல் (வேகத்தைக் குறைக்காமல்) முதலியன அந்த சோதனையில் அடங்கும்.
10. இரண்டாம் நிலை சோதனை தேர்வு - சாலையில் ஒரு மணி நேரம் இயக்கிக் காண்பிக்க வேண்டும். ஆய்வாளர் பின்னால் அமர்ந்திருப்பார். வழி சொல்லுவார். சொல்கிற வழியில், சாலை குறியீடுகளை கவனத்தில் கொண்டு , விதிகளைப் பின்பற்றி முறையாக இயக்க வேண்டும். இத்தனைக்குப் பிறகும் , நம் பயிற்சி போதவில்லை, பாதுகாப்பை அலட்சியம் செய்கிறோம் என்கிற சந்தேகம் சிறிதளவு ஏற்பட்டாலும் சோதனை தேர்வில் தோல்விதான் !!

இதுபோக, பல்வேறு போக்குவரத்துச் சூழல்களில் நுணுக்கமாகக் கையாளும் மேலதிகமான பயிற்சி வகுப்புகள் என மூன்று மாத காலம் கடும் பயிற்சிகள் இருந்தன. இதில் எனக்கு இருந்த பெரிய சிக்கல் என்னவென்றால், பயிற்சி வகுப்புகள் அலுவல் நேரத்தில் மட்டுமே வழங்கப்பட்டன. மாலை அல்லது வார இறுதிகளில் அவை இயங்குவதில்லை ! எனவே அலுவலில் இருந்து சில மணி நேரங்கள் அனுமதி பெற்று, பின்னர் அவற்றை ஈடு கட்டி, மற்ற சில பொறுப்புகளையும் கவனமாகக் கையாண்டு என நேர மேலாண்மை மிகச் சிரமமாக இருந்தது.
Last but not least .... பொருட்செலவு... ஒன்னரை மணி நேர வகுப்புக்கு கட்டணம் 18,000 ஆம் பதினெட்டாயிரம் ரூபாய். ஒரு முறை, ஒரு நாள், ரேஸ் டிராக் குத்தகைக் கட்டணம் வேறு. பரிட்சைக்குப் போகிற பொழுது வாகனத்திற்கான வாடகைக் கட்டணம் 25ஆயிரம். ஆக மொத்தத்தில் எவ்வளவு செலவானது என நீங்கள் கேட்பீர்கள்.. நான் அதை சொல்ல மாட்டேன்.. அரைடவுசர் போட்ட வயதில் இருந்து இருசக்கர வாகனம் இயக்குகிறேன் என்றாலும், சராசரியை விட குறைந்த மணி நேரப் பயிற்சிகளே தேவைப்பட்டது என்றாலும், சில லட்சங்கள் செலவு ஆனது!! ஒரு சராசரி இந்திய மனநிலை இத்தகைய பொருட்செலவையும், மெனக்கெடலையும் ஒருபோதும் அனுமதிக்காது என்பதே நம் நாட்டவர் எவரும் இங்கே இத்தகைய உரிமம் பெறவில்லை என்பதற்கான காரணமாக இருக்க வேண்டும்.
சரி... விஷயத்துக்கு வருவோம்... இன்று தேர்வு நாள். முதல் சோதனைத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு மாதம் கழித்தே தேதி கிடைத்தது. அதுவும் ஆங்கிலத்தில் வழிநடத்தும் ஆய்வாளர் வேண்டும் எனக் கோரியதால். தேர்வு முடிந்தது. ஆய்வாளர் தனது அறைக்கு அழைத்தார். பொதுவாகவே ஆய்வாளர் என்பவர் மோட்டார் சைக்கிள் மீது அதிக நட்டம் கொண்டவராக இருப்பார். அதுவே அவரது பணிக்கான அடிப்படைத் தகுதி. ( Remember: Motorcycling attitude here is completely different than in our countries.)
அவர் என்னிடம்... எனது சர்வீசில், வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆங்கிலத்தில் சோதனை தேர்வு நடத்தியது இதுவே முதன் முறை எனக் கூறிவிட்டு, அரை மணி நேரம் ´´ மோட்டார் சைக்கிள் ´´கள் குறித்த பல்வேறு பொது விடயங்களை ஆர்வமுடன் பேசிக் கொண்டிருந்தார்.(it is uncommon). தேர்வில் எனது செயல்பாடு குறித்து குறிப்பிடுகையில், மிக நன்று, அத்தனை விதிகளும் பின்பற்றி, பொசிசனிங், பாதுகாப்பு என அத்தனை அம்சங்களையும் சிறப்பாகச் செய்தீர்கள். குறை கண்டுபிக்க என்னால் இயலவில்லை. பாராட்டுக்கள். Drive safe, enjoy your motorcycling எனக் கூறி வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.
அப்பாடி... இரண்டாண்டுக் காலம் நிலுவையில் இருந்த திட்டம், மூன்று மாத கால மெனக்கெடல் இத்தோடு சிறப்பாக நிறைவடைந்த திருப்தியில், வீட்டிற்குள் நுழைந்ததும் இப்பதிவை இடுகிறேன்...
ஏதவாது சாதனை படைக்கலாம் என்றால் , எல்லா துறைகளிலும் ஏற்கெனவே எவனோ சாதனைகளைப் படைத்தது வைத்துவிட்டுப் போயிருக்கிறான். எனவே, ´´´ நார்வே நாட்டின் ஹெவி மோட்டார் சைக்கிள் உரிமம் பெறும் முதல் இந்தியன் , முதல் தமிழன் என்கிற பட்டதை இன்று பெறுகிறேன் ´´ என்கிற பெருமையை எனது சாதனையாக , முழுத் தகுதியோடும், தன்னடக்கதோடும் நானே உரிமை கோரிக் கொள்கிறேன்... சரிதானே நண்பர்களே. Anyways... mission accomplished!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...