11 ஜனவரி 2019

பனங்கிழங்கு-


                                              பனங்கிழங்கா பனைத் தண்டா?




                                        பனங்கிழங்கு எப்படி உருவாகிறது?
                            என்பது எத்தனைபேருக்குச் சரியாகத் தெரியும் என்று தெரியவில்லை.
முதன்முதலாக பனங்கிழங்கு அறுவடை செய்தபோது உணர்ந்தேன்.
முன்பெல்லாம் கொட்டை யிலிருந்து கிழங்கு கீழ்நோக்கி வளரும் என்றும் குருத்து மேல்நோக்கி வளரும் என்றும் நினைத்திருந்தேன்.
அதனால் கொட்டையை ஒட்டிய கிழங்கின் பாகம் கனமாகவும் கீழே செல்லச்செல்லக் கூர்மையாகவும் இருக்குமென்றும் அதன்பின் வேர்பிடித்து அடிமரமாகும் என்றும் நினைத்தேன்.
ஆனால் கிழங்கில் வேர்பிடிப்பதே இல்லை.
மாறாக கிழங்கு மேல்நோக்கி வளர்கிறதையும் அதன் நுனி குருத்தோலையாக மாறுவதையும் காண முடிந்தது.
இது என்னடா அதிசயமாயிருக்கு என்று ஆச்சர்யப்பட்டேன்.
கண்டுபிடித்தே தீர்வது என்று புதைபொருள் ஆராய்ச்சியாளன்போல பக்குவமாகத் தோண்டினேன்.
கிழங்கின் அடிப்பாகத்தில் கொட்டை இல்லை.
மாறாக கிழங்கின் நுனியில் பட்டும் படாமல் பக்கவாட்டில் கொட்டை இருந்தது.
இன்னும் அதிசயம் என்னவென்றால் இளம் கிழங்கின் நுனிக்குச் சற்று உயரத்தில் சம்மந்தமில்லாமல் இருந்த கொட்டையை வற்றிப்போன உயிரற்ற ஒரு குளாய் இணைத்திருந்தது!
கொட்டைக்கும் கிழங்குக்கும் சம்பந்தமே இல்லாமல் கொட்டைக்குக் கீழே ஆழத்திலிருந்து கிழங்கு மேலே வந்து கொட்டையை ஒதுக்கிவிட்டு பூமிக்கு மேலே வருகிறது.
கொட்டை செத்துப்போய்க் கிடக்கிறது.
உண்மை விளங்கியது!
கண்டறிந்த உண்மையும் பாடமும் :
பனங்கொட்டையை மண்ணில் நட்டால் குறிப்பிட்ட நாட்களில் தொப்புள்கொடி போன்ற ஒரு தடித்த நுனியுடைய ஒற்றை வேர் முளைத்து குறிப்பிட்ட ஆழத்துக்குச் செல்கிறது.
அதன் பின் அங்கிருந்து வேர்விட்டு குருத்து மேல்நோக்கி வளர்கிறது.
அதுவரை அதற்குக் கொட்டை யிலிருந்து சத்துக்களை அளித்துவந்த தொப்புள்கொடி வேர் வற்றி ஒரு சருகால் ஆன குழாய்போல் ஆகி சும்மா ஒட்டிக்கொண்டிருக்கிறது.
கீழிருந்து மேல்நோக்கி வளரும் குருத்து அந்த வற்றிப்போன தொப்புள்கொடியைத் துளைத்துக்கொண்டு பூமிக்குமேல் வருகிறது.
உண்மையில் பனங்கிழங்கு என்பது வளரும் இளம் தண்டேதவிர கிழங்கு அல்ல.
ஆனால் கிழங்கு என்று சொல்லப்படுவதால் மேல்நோக்கி வளரும் கிழங்கு எனலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...