15 செப்டம்பர் 2018

ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது.....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.இன்றைய மனிதவாழ்வின் சூட்சுமம் இதுதாங்க!...
எல்லாமும் ஒருவனுக்கு இருந்து விட்டால் அந்தக் கடவுளுக்கும் அது பொருக்காது....... !!!!!!!

             முகநூல் நண்பர் திரு. செந்தில்குமார் அவர்களது அனுபவத்தை நாமும் அறியலாமே!
                       நான் கோவை காளப்பட்டியில் கட்டி விற்கும் வீடுகளில் ஒரு வீட்டின் இரவு நேரத்து புகைப்படம் !!
இன்று ஒரு சகோதரர் என்னிடம் கேட்டார் "செந்தில் அண்ணா, தாங்கள் முகநூலில் நீங்கள் கட்டும் வீடுகளையும், உங்கள் கொடநாடு வீட்டையும் போடும் போது வாடகை வீட்டிலிருப்போரின் எண்ணம் எப்படியிருக்கும்?
அதற்கு என்ன பதில் மிகச்சரியாக சொல்வதென்று தெரியாமல் ஒரு பதிலை சொல்ல முற்படுகிறேன்.

கடினப்பட்டு நான் கோத்தகிரி கொடநாட்டில் கட்டிய வீட்டில் ஒரு நாளாவது நிம்மதியாக தங்கியிருந்திருக்கிறேனா என்றால் செய்யும் தொழிலின் மீது சத்தியமாக இதுவரையில் ஒரு நாள் கூட தங்கியது இல்லவே இல்லைங்க சகோ....
சைனாவிலிருந்து சோபா செட்களை வாங்கி வந்து இரவோடு இரவாக கொடநாடு வீட்டில் போட்டு விட்டு அதிகாலை 5 மணிக்கு கிளம்பி 7 மணிக்கு கோயம்புத்தூர் வந்து 10 மணிக்கு ஒரு கிரையம் செய்து விட்டு கிட்டத்தட்ட 30 மணி நேரங்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்திருக்கிறேன்....
என் உழைப்பை பறைசாற்ற நிச்சயமாக சொல்லவில்லை சகோதரா.... வாடகை வீட்டில் இருந்தாலும், எட்டடுக்கு மாளிகையில் இருந்தாலும் நிம்மதியான மனம் வேண்டும், நல்ல குடும்பம் வேண்டும், நல்ல நண்பர்கள் வேண்டும், மகிழ்ச்சியான தருணங்கள் வேண்டும்.....
நிம்மதியாக தொலைபேசி அழைப்பை அனைத்து விட்டு ஒரு வேளை உணவு சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது..... எனது கொடநாடு வீட்டை கட்டி முடிப்பதற்குள் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகள் பல காரணமாக "சிலைடிங் ஹியட்டஸ் ஹெர்னியா" என்று ஒன்று வந்து விட்டது !! அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்தால் உண்ட உணவு வாந்தியாக வந்து விடும் !! கோவை ஜெம் மருத்துவமனையில் நிவாரணம் தேடிக்கொண்டேன் சகோதரா !!
ஒரு காரை எந்த தொழில் சிந்தனையுமின்றி அரை மணி நேரம் என்னால் ஓட்ட முயற்சித்தாலும் ஓட்ட முடியாது..... இதயத்தை எப்போதும் நிமிடத்திற்கு 72 தடவை மட்டுமே துடிக்கச்செய்யும் வகையிலான நிலையையும் ஏற்படுத்திக்கொள்ள இதுநாள் வரையில் முடியவில்லை......
அப்படி என்ன சாதனையை நீங்கள் செய்து விட்டீர்கள் என்று கேட்டாலும் எதையும் செய்ததாக சொல்ல முடியவில்லை..... ஏதோ ஒரு வெற்றியை நோக்கி பயனிக்கிறேன் என்பதை மட்டுமே சிறு தைரியத்துடன் சொல்ல கொஞ்சம் துனிவு இருக்கிறது !!!
எனது குடும்பத்தாருடன் இரண்டு நாட்கள் தொடர்ந்தார் போல் கூடி மகிழ முடியவில்லை..... அதற்கான முயற்சியிலும் இதுவரை இறங்கியதில்லை....எனது குடும்பத்தாரை சுற்றுலா போன்று அழைத்து சென்று சில வருடங்கள் ஆகி விட்டது !! கடந்த ஒரு வருடத்தில் எனது கொடநாடு வீட்டிற்கு எனது குடும்பத்தாரை அழைத்து சென்று காண்பிக்க இயலவில்லை..... அதற்கான கால சூழ்நிலைகளும் ஏற்படவில்லை.... ஏற்படுத்துக்கொள்ள முயலவுமில்லை.....
நீங்கள் கேட்கலாம், பெருமைபட்டுக் கொள்ளவா கொடநாடு வீட்டின் புகைப்படத்தை முகநூலில் போடுகிறீகள் என்று...... முகநூலில் "அருமை" என்று வரும் ஒரு சொல்லில் தான் சிறு ஆனந்தத்தை சில நொடிகளாவது அடைகிறேன் !!
நீங்கள் கேட்கலாம், பின்னர் அதை ஏன் கட்டினீர்கள் என்று..... நீங்கள் கேட்கலாம், அப்படி என்ன கோவையில் நீங்கள் பிசியா என்று..... என்னிடம் சரியானதொரு பதில் ஏதுமில்லை...... 1000 பேருக்கு வேலை கொடுக்க தொழில் செய்ய முனைந்தேன்..... இன்று புலி வாலை பிடித்த கதையாகவும், கண்ணை விற்று அழகோவியம் ஒன்றை வாங்க முயன்று ஏமாந்த கதையாகவும் என் கதை ஆகிவிட்டது !!
நான் சொல்லிக்கொண்டிருக்கும் விளக்கங்கள் யாவும் கூட உங்களுக்கு எத்தகைய மன நிலையை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியவில்லை.....
ஆனால், நான் சென்ற பாதையிலிருந்து திரும்பி வந்து மீண்டும் ஒரு அழகிய ஞாயிரன்று நாட்டுக்கோழி வறுவலாவது நிம்மதியாக வேலையின் கவலை (work stress)யின்றி உண்ணும் ஒரு உண்ணத நாளுக்காக காத்திருக்கிறேன்.....
நல்ல துணிகளை எடுத்துடுத்தும் நாளை எதிர்பார்க்கிறேன்.... பணம் இருந்தால் மட்டும் வாழ்வில் வெற்றி பெற முடியாது.... என் வாழ்நாளில் நான் பியட் யூனோ வைத்திருந்து ஊர் சுற்றிய காலத்து சந்தோசங்களை இன்றைய வோல்வோ கார்கள் தருவதில்லை......
நான் குடிசையில் நிம்மதியாக கஞ்சி குடிப்பவனையும் கண்டதுண்டு..... கோவை ரேஸ்கோர்சில் 40 கோடி வீட்டில் தூக்கிட்டு சுயமரணத்தை முத்தமிட்டு இறந்தவனையும் கண்டதுண்டு
வாழ்ந்தாலும் ஏசும் உலகம் தான் இது சகோதரா.... ஆனால், தினமும் ஓடியோடி திரிவதால் ஏசுவோரின் வசைசொற்கள் என் காதுகளில் விழுவதில்லை......
அதனால், கலக்கம் வேண்டாம்..... எந்தவொரு பெரிய + (பிளஸ்) சிலும் ஆயிரம் சின்ன -- (மைனஸ்) கள் இருக்கும்...... அதுவே தான் வைஸ் வெர்சா.......
நான் கோவையில் கடைசியாக புரூக் பீல்ட்சில் ஒரு திரைப்படம் காண சென்ற போது என்னிடம் வேலை செய்யும் ஒரு கட்டிடத் தொழிலாளியை இடைவேலையில் பார்த்தேன்.... மகிழ்ச்சியாக இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.... அத்தொழிலாளி என்னிடம் கேட்டார் "சார், கிளைமாக்சில் என்ன முடிவை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
நான் சொன்னேன் "எனக்கு போன் வந்தது அதனால் வெளியே சென்று பேசிக்கொண்டிருந்தேன்.... திரைப்படத்தை சரியான முறையில் கவனித்துப் பார்க்க இயலவில்லையப்பா" என்று..... அத்தொழிலாளி "ஏங்க சார், குடும்பத்துடன் வரும் போது போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாதா? என்றார்..... அதற்கான சரியான பதிலை எனக்கு சொல்லத் தெரியவில்லை..... ஆனாலும் சொல்ல முயன்றேன்..... " என்னிடம் வீட்டினை புக் செய்தவர் பேசினார்" என்று..... அத்தொழிலாளி சொன்னார் "போங்க சார் தினமும் இதைத் தான செய்கிறீர்கள்.... குடும்பத்துடன் வெளியே செல்லும் போதும் அப்படியே செய்யலாமா? அதற்கு நான் என்னுடைய சிரிப்பை மட்டுமே பதிலாக்கினேன்......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...