10 செப்டம்பர் 2012

வெளிநாடு வேலை செல்லுமுன் கவனியுங்க

அன்பு நண்பர்களே,வணக்கம்.
        வெளிநாடு வேலை தேடிப் போறீங்களா? ஒருநிமிடம் இந்த பதிவினை படியுங்கள்!!!


 



    

            தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிவரும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி இளங்கோவன் அவர்கள் தரும் விளக்கம் இதோ!
        திறமை இருப்பவர்களுக்கான அயல்நாட்டு வேலை வாய்ப்பு எப்படி? அவற்றை அரசு வகுத்திருக்கும் சட்டங் களின் கீழ் முறையாக பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? மோசடிக்கார ஏஜென்ஸிகளிடம் ஏமாறாமல் சுதாரிப்பது எப்படி? என தெரிந்து கொள்ள வேண்டும்.

காத்திருக்கும் வேலைகள்!
           "வெளிநாட்டில் வேலையை நாடுபவர்கள், முதலில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன வேலை வாய்ப்புகள் சாத்தியப்படும் என்பது குறித்து அறிய வேண்டும். பொதுவாக துபாய், ஓமன், அபுதாபி போன்ற கல்ஃப் நாடுகளில் எப்போதும் கட்டட வேலை நடந்துகொண்டே இருக்கும். அதனால் கட்டடத் கூலித் தொழிலாளர்கள், எலெக்ட்ரீஷியன் கள், பொறியாளர்களுக்கு அங்கே தேவை அதிகம்.

           மலேசியா, சிங்கப்பூரில் ரப்பர் தோட்டங்கள் அதிக அளவில் இருப்பதால், அங்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக தேவை இருக்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் சாஃப்ட்வேர் துறையினருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு, எல்லா நாடுகளிலும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது'' என்ற இளங்கோவன், 'ஏஜென்ஸிகள்' மூலம் வெளிநாடு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கினார்.

ஏஜென்ஸிகளிடம் உஷார்!
             மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உரிமம் பெற்ற ஏஜென்ஸிகளே, வெளிநாட்டுக்குப் பணியாட்களை அனுப்பும் தகுதி பெற்றவையாகின்றன. ஒருவேளை நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு ஏதாவது ஒரு ஏஜென்ஸியை அணுகும்பொருட்டு, அவர்களிடம் அரசாங்கத்தின் லைசென்ஸ் எண்ணைக் கேட்டு, அதை அயல்நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் வெப்சைட்டில் பரிசோதித்துக் கொள்ளுங்கள் (www.moia.gov.in). பின் அந்த ஏஜென்ஸிக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் ஆட்கள் தேவைக்கான டிமாண்ட் லெட்டரில் அளிக்கப்பட்டிருக்கும் வேலை விவரம், சம்பளம், விடுமுறை நாட்கள், விதிமுறைகள் என அனைத்தையும் அந்த லெட்டரை கேட்டுப் பெற்று, தெரிந்துகொள்ளுங்கள். அந்த டிமாண்ட் லெட்டரில் வேலை வழங்கும் நிறுவனம் அந்த நாட்டில் பெற்ற லைசென்ஸ் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் மூலம் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள லாம். கூடவே, சம்பந்தப்பட்ட நிறுவனம், 'எங்களுக்கு பணியாட்களை தேர்வு செய்ய இந்த ஏஜென்ஸிக்கு உரிமை உண்டு' என்று அளித்திருக்கும் 'பவர் ஆஃப் அட்டர்னி'யையும் செக் செய்துகொள்ளுங்கள்...'' என்றவர்,

               "இதில் பெரும்பாலானவர்கள் ஏமாந்து போவது, இந்த ஏஜென்ஸியின் கீழ் செயல்படும் சப்-ஏஜென்ட்களிடம்தான். அவர்களிடம் மெயின் ஏஜென்ஸி தந்த 'அக்னாலட்ஜ்மென்ட்' இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் பணம் கட்டியதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள்...'' என்று பட்டியலிட்ட இளங்கோவன், வெளிநாடு வேலைக்குச் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களையும் குறிப்பிட்டார்.

முக்கியமாக கவனிக்க வேண்டியவை!
         "வேலைக்காக கம்பெனி உங்களுக்குத் தந்த விசா, பாஸ்போர்ட் போன்ற அத்தியாவசிய ஆவணங்களின் ஒரு ஜெராக்ஸ் காப்பியை, உங்கள் வீட்டில் வைத்துவிட்டுச் செல்லுங்கள்.

         நீங்கள் நம்பிக்கையான ஏஜென்ட் மூலம் வெளிநாடு செல்லும்பட்சத்தில், ஒருவேளை நீங்கள் பணிபுரியவிருக்கும் அயல்நாட்டு நிறுவனத்தில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், சட்டப்படி அதிலிருந்து மீள்வதற்கான கவுன்சிலிங்கை அந்த ஏஜென்ஸியிலேயே தருவார்கள்.

         விசாவிலேயே, நீங்கள் டூரிஸ்ட், பிஸினஸ், எம்ப்ளாய்மென்ட் என எந்த நோக்கத்துக்காக செல்கிறீர்கள், என்ன வேலை என்பதும் குறிப்பிடப்பட்டுஇருக்கும். பிஸினஸ் அல்லது டூரிஸ்ட் விசாவில் சென்று நீங்கள் வேலை பார்த்தால், அது குற்றம்.

              
வெளிநாட்டு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் அடிக்கடி சோதனைகள் நடக்கும். அப்போது உங்கள் பாஸ்போர்ட்டின் தகவல்களும், எம்ப்ளாய்மென்ட் எண்ணும் சரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறை தண்டனைக்கு ஆளாக நேரிடும். எனவே, ஒரு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு மற்றொரு நிறுவனத்துக்கு மாறாதீர்கள். புதிதாக சேர்ந்த நிறுவனத்தில் உங்களுக்கு எம்ப்ளாய்மென்ட் எண் கிடைக்காது என்பதால், அவர்கள் சம்பளம், சலுகைகளை குறைத்தாலும், அதை நீங்கள் கேள்வி கேட்க முடியாது. அந்த நாட்டு அரசாங்கமும் உங்களை குற்றவாளியாக்கும்.
            வேலைக்கு ஆள் எடுக்க, சம்பந்தப்பட்ட கம்பெனி தன் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து 'நோ அப்ஜெக்ஷன்' லெட்டர் வாங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை பார்ப்பவர், நிறுவனம் இருவருக்கும் அது சிக்கல்களைத் தரும். எத்தனை ஆண்டுகளுக்கு உங்களுக்கு வேலைக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பதை முதலிலேயே தெரிந்து கொள்ளுங்கள்'' - விளக்கமாக வலியுறுத்திய இளங்கோவன், அரசின் கீழ் இயங்கி வரும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் குறித்தும் விளக்கினார்.


'
வேலைக்காக எங்களிடமும் பதிவு செய்யலாம்!'
               "வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது போலவே, இங்கேயும் உங்கள் பயோடேட்டாவுடன் பதிவு செய்ய வேண்டும். நாங்கள் ஏஜென்ஸிகளுக்கு உங்களை பரிந்துரைப்பதில்லை. மாறாக, சம்பந்தபட்ட வெளிநாட்டு நிறுவனமே எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும்பட்சத்தில், அவர்கள் கேட்கும் டேட்டாக்களை நாங்கள் தருகிறோம். ஒருவேளை அவர்கள் கேட்கும் தகுதியுள்ள நபர்கள் எங்கள் அலுவலகப் பதிவில் இல்லையென்றால், உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தகவல் தெரிவிப்போம். அவர்கள் செய்தித்தாள்களில் அதுகுறித்து செய்தி வெளியிடுவார்கள். அதைப் பார்த்துவிட்டு வேலை தேவை யுள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

           வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணியாளர்கள் குறித்த விவரம் பிடித்துப் போகும்பட்சத்தில், அவர்களும் விண்ணப்பதாரர்களும் சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, இன்டர்வியூ மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இங்கு பதிவு செய்வதற்கான பதிவுக் கட்டணம் பட்டப்படிப்பு, பொறியியல், மருத்துவம், பாராமெடிக்கல் என்று படிப்பை பொறுத்து மாறுபடும்.

              பொதுவாக பணியாட்கள் வெளிநாட்டுக்குச் சென்றபின், எங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்களைத் தெரிவித்தால், பின்னாளில் அவர்களுக்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் உதவுவதற்கு எளிதாக இருக்கும்'' என்ற இளங்கோவன், வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்னை ஏற்படும்பட்சத்தில், தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள், இ-மெயில் ஐ.டி. உள்ளிட்ட தகவல்களையும் தந்து  நிறைவு செய்தார்.
       வெளிநாடு செல்ல  விசா எடுக்கும் முன் இந்த விஷயங்களும் நினைவில் இருக்கட்டும்!

 
இங்கே புகார் செய்யலாம்...


டோல் ஃப்ரீ எண்: 1800113090 (இந்தியாவிலிருந்து மட்டுமே அழைக்கலாம்). டோல் ஃப்ரீ எண்: 8000911913 (அரபு நாடுகளிலிருந்து மட்டும் அழைக்கலாம்).


மினிஸ்டரி ஆஃப் ஓவர்சீஸ் இண்டியன் அஃபேர்ஸ் ஹாட்லைன் டெலிபோன் நம்பர் - +9111-40503090 (இதில் எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் அழைக்கலாம். இது கட்டண தொலைபேசி).

இமெயில் முகவரிகள்: owrc.helpline@kankei.com,info@moia.nic.in

-
ந‌ன்றி அவ‌ள் விக‌ட‌ன்

3 கருத்துகள்:

  1. மிக அருமையான, உபயோகமான பதிவு! இங்கே [ துபாய் அருகே, ஷார்ஜா] நாங்கள் கடந்த 35 வருடங்களாக, முறையான ஏஜென்ஸி மூலம் வராமல் பல லட்சங்களை செலவு செய்து, நிலம், சொத்துக்களை விற்று, ஏராளமான தமிழர்கள் ஏமாந்து போவதைப்பார்த்து வேதனைப்படுவதுதான் எப்போதும் வழக்கம். அப்படி ஏமாந்து போன சில பேருக்கு வேலையும் வாங்கிக்கொடுத்து, தங்குமிடம், உண‌வும் அளித்து தைரியமும் அவ்வப்போது கொடுப்பதுண்டு. ஆனால் இன்னும் விபரம் புரியாமல் பணத்தை இழந்து தவிப்பவர்கள் தான் அதிகம். அந்த மாதிரி சிலருக்கு நிச்சயம் உங்கள் பதிவு உபயோகப்படும் என்பதில் சந்தேகமில்லை!!

    பதிலளிநீக்கு
  2. மரியாதைக்குரிய அம்மையீர்,இனிய வணக்கம்.எனது பதிவு இந்த அளவு எல்லை கடந்து பிரதிபலிக்கும்! என எள்ளளவும் எண்ணிப்பார்த்ததில்லைங்க!சமூகத்திற்கு உபயோகமானது என்று தங்களது கருத்துரையைக் கண்டவுடன் உண்மையிலேயே எனக்கு ஆத்ம திருப்திங்க! இனி இது போன்ற சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளை தேடி பதிவிடுவேன்.தங்களது கருத்துக்கு மிக்க நன்றிங்க!!!! என PARAMES DRIVER - THALAVADY - ERODE Dt.

    பதிலளிநீக்கு
  3. dear sir i am waiting for Australia visa there what is the role and regulation please answer to me

    பதிலளிநீக்கு

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...