16 ஏப்ரல் 2025

2.1 இதழ்கள்

பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம்.

2.1.1 இதழ்களின் வரையறை

உலக ஆங்கில என்சாட்ரா அகராதி பின்வருமாறு இதழ்களை வரையறை செய்கிறது:

செய்திகளைச் சேகரிப்பதும், சேகரித்த செய்திகளைச் செம்மையாக்கி, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முதலிய தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் பிற இலக்கிய வகைகளாகவும் வெளியிடுவதும் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வன இதழ்கள் என்று உரைக்கப்படுகின்றது. தகவல் தொடர்புச் சாதனங்களின் வழி இலக்கிய வகைமைகளாகச் செய்திகளைத் தனித்த நடையில் எழுதுவதும் வெளியிடுவதும் ஆகிய செயல்கள் முதலியவற்றை மேற்கொள்வனவற்றையும் இதழ்கள் எனலாம். இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் வகைப்படுத்தி வரையறுக்கலாம். சான்றாக நாள்தோறும் வெளியாகும் இதழ்களை நாளிதழ்கள் எனலாம்.

2.1.2 இதழ்களின் வகைகள்

இதழ்கள் பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலும், இடம்பெறும் செய்திகள் மற்றும் யாருக்காக வெளியிடப்படுகின்றன என்ற அடிப்படையிலும், தர அடிப்படையிலும் (Quality) வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்களின் உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபடுத்தி வகைகளாக்கப்படுகின்றன.

  • கால அடிப்படை

    பெரும்பாலும் இதழ்கள் வெளியாகும் காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் வெளியானால் நாளிதழ் என்றும், வாரந்தோறும் வெளியானால் வார இதழ் என்றும், மாதந்தோறும் வெளியானால் மாத இதழ் என்றும், ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ் என்றும் அழைக்கப்படுகின்றன.

    கால அடிப்படையிலான இதழ்களின் பகுப்பை வரைபடம் மூலம் விளக்கலாம். 

  • தர அடிப்படை
  • வெளியாகும் செய்திகள் மற்றும் எவ்வகையான வாசகர்களுக்காகப் பிரசுரமாகின்றன என்ற அடிப்படையில் இதழ்களைப் பகுக்கலாம். (1) தரமான இதழ்கள் (2) பொது மக்கள் இதழ்கள் (3) நச்சு இதழ்கள் எனப் பிரிப்பர்.

    துறை சார்ந்த ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என்றும், பொழுதுபோக்கிற்காகப் பொது மக்கள் படிக்கும் இதழ்களைப் பொது மக்கள் இதழ்கள் என்றும் படிப்பவர்களின் உள்ளத்தை நஞ்சாக்கும் இதழ்களை நச்சு இதழ்கள் என்றும் வரையறுக்கலாம்.

  • உள்ளடக்க அடிப்படை
  • இதழ்களில் இடம் பெறும் செய்திகள் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் இதழ்களை வரையறைப்படுத்தலாம். அதாவது வெளியிடப்படும் செய்திகள் மற்றும் படைப்புகள் எதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்ற அடிப்படையில் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான பகுப்பு மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளமையைப் பாடத்தின் போக்கில் காணலாம்.

    2.1 இதழ்கள்

    பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம்.

    2.1.1 இதழ்களின் வரையறை

    உலக ஆங்கில என்சாட்ரா அகராதி பின்வருமாறு இதழ்களை வரையறை செய்கிறது:

    செய்திகளைச் சேகரிப்பதும், சேகரித்த செய்திகளைச் செம்மையாக்கி, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முதலிய தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் பிற இலக்கிய வகைகளாகவும் வெளியிடுவதும் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வன இதழ்கள் என்று உரைக்கப்படுகின்றது. தகவல் தொடர்புச் சாதனங்களின் வழி இலக்கிய வகைமைகளாகச் செய்திகளைத் தனித்த நடையில் எழுதுவதும் வெளியிடுவதும் ஆகிய செயல்கள் முதலியவற்றை மேற்கொள்வனவற்றையும் இதழ்கள் எனலாம். இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் வகைப்படுத்தி வரையறுக்கலாம். சான்றாக நாள்தோறும் வெளியாகும் இதழ்களை நாளிதழ்கள் எனலாம்.

    2.1.2 இதழ்களின் வகைகள்

    இதழ்கள் பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலும், இடம்பெறும் செய்திகள் மற்றும் யாருக்காக வெளியிடப்படுகின்றன என்ற அடிப்படையிலும், தர அடிப்படையிலும் (Quality) வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்களின் உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபடுத்தி வகைகளாக்கப்படுகின்றன.

  • கால அடிப்படை

    பெரும்பாலும் இதழ்கள் வெளியாகும் காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் வெளியானால் நாளிதழ் என்றும், வாரந்தோறும் வெளியானால் வார இதழ் என்றும், மாதந்தோறும் வெளியானால் மாத இதழ் என்றும், ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ் என்றும் அழைக்கப்படுகின்றன.

    கால அடிப்படையிலான இதழ்களின் பகுப்பை வரைபடம் மூலம் விளக்கலாம். 

  • தர அடிப்படை
  • வெளியாகும் செய்திகள் மற்றும் எவ்வகையான வாசகர்களுக்காகப் பிரசுரமாகின்றன என்ற அடிப்படையில் இதழ்களைப் பகுக்கலாம். (1) தரமான இதழ்கள் (2) பொது மக்கள் இதழ்கள் (3) நச்சு இதழ்கள் எனப் பிரிப்பர்.

    துறை சார்ந்த ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என்றும், பொழுதுபோக்கிற்காகப் பொது மக்கள் படிக்கும் இதழ்களைப் பொது மக்கள் இதழ்கள் என்றும் படிப்பவர்களின் உள்ளத்தை நஞ்சாக்கும் இதழ்களை நச்சு இதழ்கள் என்றும் வரையறுக்கலாம்.

  • உள்ளடக்க அடிப்படை
  • இதழ்களில் இடம் பெறும் செய்திகள் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் இதழ்களை வரையறைப்படுத்தலாம். அதாவது வெளியிடப்படும் செய்திகள் மற்றும் படைப்புகள் எதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்ற அடிப்படையில் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான பகுப்பு மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளமையைப் பாடத்தின் போக்கில் காணலாம்.





    15 ஏப்ரல் 2025

    உலகின் முதல் தொழிற்நுட்ப வல்லுநர்....மண் வினைஞர்கள்...

     கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு

    வருகைபுரிந்துள்ள இணையதள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

     உலகின் முதல் தொழிற்நுட்ப வல்லுநர் மண்ணை நயம்பட பிசைந்து பக்குவமாக்கி மட்பாண்டங்களையும்,உருவங்களையும் வடிவமைக்கும் மட்பாண்டத்தொழிலாளர்தாங்க. அதனால்தாங்க சங்க இலக்கியமான புறநானூற்றுப்பாடல்களில்  கோவே என அழைக்கப்படுகின்றனர்.

    இதில் தனிச்சிறப்பு என்னவெனில் உலகத்திலேயே மட்பாண்டம் செய்வோரை அரசனுக்கு இணையாகப் போற்றி கொண்டாடியது சங்க இலக்கியத்தமிழ்நூல்கள்தாங்க.

    கோ என்றால் தலைவன் எல்லாவற்றுக்கும் மேலானவன்,உயர்ந்தவன் என்று பொருள்.தலைவன் இருக்கும் இடம்தான் கோயில். அதன்பொருள் வருகின்ற சொற்கள் எல்லாம் கோ,கோன்,கோட்டை என வரும்.இது ஆளுமையுடைய , ஆற்றலுடைய, அதிகாரமுடைய அதனால்தாங்க கடவுள் வழிபடும் இடத்தை கோவில் அல்லது கோயில் என்கிறோம்.

     நமது முனோர்களின் வாழ்வியல் மற்றும் வரலாற்றுச்சான்றுக்கு ஆதாரமாக  விளங்குபவை... 

    (1)அகழ்வாராய்ச்சி,

    (2) கல்வெட்டுகள் ஆராய்ச்சி,

    (3) செவிவழிச்செய்திகள்,

    (4) சங்கத் தமிழ் இலக்கியங்கள்...

      ஒரே நிகழ்வு, ஒரு சாவு, ஒரே போன்ற துயரம், அதனால் ஒரே போன்ற கோரிக்கை. அதிலும் ஓன்று போலவே தொடங்கும் இரண்டு பாடல்கள், இரண்டும் மரணத்தைப் பற்றிப் பேசுகிறது.இரண்டிலும் மண் வினைஞர்களான மட்பாண்டத்தொழில் செய்வோரை தலைவனாக விளிக்கும் ஓரசைச்சொல்லான  'கோ' என அழைத்து கோரிக்கை விடுக்கின்றனர்.ஏனென்றால் மன்னனுக்கும் பானை செய்பவன் குயவனே, சாமான்யனுக்கும் பானை செய்பவன் குயவனே....
    சங்க இலக்கியத்தில் இறையாண்மைக்குத்தலைவனாக போற்றப்பட்டவன்..ஆன்மீகத்துக்குத் தலைவனாக போற்றப்பட்டவன்...(அன்றாட வாழ்க்கையில் திருவிழாவினை மக்களுக்கு அறிவிப்பவனாகவும்இருந்துள்ளான்)
    உலகத்தில் சிறந்த விஞ்ஞானியாக அன்றாடம் மட்பாண்டம் செய்வோன் இருந்துள்ளான்.சுரையில் தண்ணீர் கொண்டுசெல்லும்நிலைக்கு மாற்றாக மண்பானை செய்து உலக நாகரீகத்துக்கு முன்னோடியாக இருந்துள்ளான்.சிந்துச்சமவெளியில் கட்டிடங்கள் எல்லாம் சுட்ட செங்கற்களால் ஆக்கப்பட்டிருந்தன.அனைத்து செங்கள்களும் ஒரே அளவில் சிறிதளவும் பிசகாமல் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன.அவ்வாறு மூதறிஞனான குயவனை சங்க‍இலக்கியத்தமிழ்ச்சமூகம் தலைவனாக கொண்டாடப்பட்டு வந்த நிலையை அதன்பின்னர் வந்த கி.பி.7நூற்றாண்டுகாலமான வேதகாலத்தில் புறக்கணிக்கப்பட்டு தூற்றப்பட்டனர்.சிந்துவெளி நாகரீகத்தில் மிக உயர்வாகப்போற்றப்பட்ட குயவன் வேதகாலத்தில் சூத்திரனாக மாற்றப்பட்டு சரிந்துவிழச்செய்துவிட்டனர்.ஆக நாம் மன்னர் வரலாறு மட்டும் தெரிந்துகொண்டால் போதாது.மக்களின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.அதற்கு சங்க இலக்கியங்களை வாசிக்கவேண்டும். இனி கலம்செய் கோவே என குயவனை போற்றிய சங்க இலக்கியப்பாடல்கள் இரண்டினை பார்ப்போம்.

    சங்கத்தமிழ்இலக்கிய நூலான புறநானூற்று நூல் 228 வது பாடலில் புலவனுக்கு ஆதரவளித்த  அரசன் இறந்து போகின்றான்.அதனால் அந்தப்புலவன்  'கலம் செய் கோவே' என குயவனிடம் கீழ்கண்டவாறு கோருகிறான்.

    புறநானூறு 228

    பாடியவர்: ஐயூர் முடவனார்

    பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

    திணை: பொதுவியல்

    துறை: ஆனந்தப் பையுள்.


                கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
    இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
    அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
    நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!

    5.     அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?
    நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
    புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
    விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
    சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்


    10.     கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
    தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
    அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
    வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
    இரு நிலம் திகிரியா, பெரு மலை

    15.     மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?



    பொருள் விளக்கம் ;

               இறந்த மன்ன‍ன் அதாவது நாட்டின் தலைவனுடைய பெருமையை புலவர் பாடத் தொடங்குகிறார். எப்படிப்பட்ட தலைவன் இவன் தெரியுமா ? நிலப்பரப்பு முழுவதும் பரந்து விரிந்த படையின் தலைவன் இவன், புலவர்கள் பாடும் பொய்யே இல்லாத புகழ் பெற்றவன், புகழில் வானில் கதிர் வீசி ஒளிரும் ஆதித்யனுக்கு சமமானவன், செம்பியன் ( சோழ ) குலத்தில் பிறந்தவன். யானையின் மீது வலம் வரும் நெடுமாவளவன் இவன். இன்று இவன் அமரர் உலகம் சென்றுவிட்டான்,

    இருள் கவ்வுவது போல புகையை எழுப்பி நீ இவனுக்கு ஈமத்தாழி செய்யத் தொடங்கி இருக்கிறாயே, இவன் புகழுக்கு ஏற்ற அளவில் தாழி செய்யவேண்டுமென்றால் இந்த நிலம் அளவுக்கு சக்கரம் செய்து, மலையளவு மண்ணை வைத்தல்லவா செய்ய வேண்டும். அதனை பெரிய தாழியை, ஈமத்தாழி செய்யும் கோமகனே ! உன்னால் செய்ய முடியுமா ? முடிந்தால் அத்தனை பெரிய தாழியை செய் என்று 'கலம்செய் கோவே' என கோருகிறான்.

    இன்னொரு பாடல் 256 வது பாடல்...

                      தலைவன் இறந்து விடுகிறான். அநேகமாக போரில்தான் அவன் இறந்தது போய் இருக்கவேண்டும். அவனுக்கான இறுதிச் சடங்குகள் தொடங்கப் போகின்றது. அன்றய பழக்கத்தில் அவனை மண்ணில் புதைக்க ஈமத்தாழி செய்யவேண்டும். அப்போது தலைவனை இழந்த தலைவி குயவனிடம் ..

    புறநானூறு 256, 

    பாடியவர்: பெயர் தெரியவில்லை

    திணை: பொதுவியல்

    துறை: முதுபாலை

    கலம்செய் கோவே கலம்செய் கோவே!

    அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய

    சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருளி,
    வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
    அகலிது ஆக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!



    பொருள் விளக்கம்...
    வண்டிச்சக்கரத்தில் உள்ள பல்லிபோல என் வாழ்க்கை அவனை மட்டுமே சுற்றி வந்துள்ளது. அவனில்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன், அதனால் என்னையும் உடன் வைத்துப் புதைக்கும் அளவுக்கு பெரியதாக ஒரு தாழியை செய்து கொடு.           அதாவது...
               வண்டியின் ஆரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு வண்டியும் அதன் ஆரமும் போகும் வழி எது என்பதை அறியாது அது போகும் போக்கில் தானும் ஒட்டிக் கொண்டு சென்ற சிறிய வெண்ணிறம் உடைய பல்லியைப் போலவே இந்தத் தலைவனுடன் நானும் அவனை அன்றி வேறு வெளி உலகம் அறியாது இத்தனை காலம் வறண்ட பல நிலங்களை அவனுடன் ஒட்டிக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக என் வாழ்க்கையையும் கடந்து விட்டேன். இப்பொழுது அவனை இழந்த பின் நான் தனியே வாழ்வது எங்கனம்? ஆகவே அவனுடன் கூடவே எனக்கும் ஒரு இடத்தை அந்தத் தாழியில் இருக்குமாறு அதை அகலமாகச் செய்வாயாக என்கிறாள். இதில் இருக்கும் சோகம் மனதை கலங்க அடிக்கும் ஒரு மாபெரும் சோகம். ஆழியை விடப் பெரிய ஒரு சோகத்தை இத்தனை சிறு வரிகளில் அடைத்துவிட்டிருக்கிறார் புலவர்....
     




     






    23 மார்ச் 2025

    திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

     திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு

    திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதில் பிழைகள் இருக்கக்கூடாது என்பதற்காக சைவத்திருமடங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்

    திருக்குறள் முதல் பதிப்பு

    திருக்குறளின் மூலப் பதிப்புகளுள் தமிழில் மிகத் தொன்மையான பதிப்பாக இன்று நமக்குக் கிடைப்பது கி.பி. 1812-இல் வெளியான

    “திருக்குறள் மூலபாடம் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்தது ”

    என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும்.

    ’இலக்கணவிலக்கிய வாராய்ச்சியுடையவர்கலிகிதப் பிழையற வாராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டது’

    என்னும் குறிப்புடனும்

    ‘கலியுகாப்தம் ௪த௯௬ சி. ககு ஆங்கீர ௵ தொண்ட மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம்-மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிக்கப்பட்டது

    மாசத் தினச்சரிதையின் அச்சுக்கூடம்.
    இ.ஆண்டு ௬௮ளய௨

    ( 1812 எனத் தமிழ் எண்ணில் தரப்பட்டுள்ளது )

    என்னும் குறிப்புடனும்

    தலைப்புப்பக்கம் திகழ்கின்றது. இந்நூலுடன் நாலடியார் மூலபாடமும், திருவள்ளுவமாலை மூலபாடமும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன.

    மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டுள்ள இப்பதிப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் நூலாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் முதன் முதலாக கி.பி. 1712-இல் தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் ஏற்பட்டது. எனவே, அச்சுக்கூடம் ஏற்பட்டுச் சரியாக ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பதிப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

    ‘வரலாறு’ என்னும் தலைப்பில் அந்நூல் தரும் செய்தி வருமாறு.

    ‘கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையினியற்றிய – இலக்கண விலக்கியங்களாகிய- அரிய நூல்களெல்லாம் – இந்நாட்டில் – அச்சிற் பதிக்கும் பயிற்சியின்றிக் கையினாலெழுதிக் கொண்டு வருவதில் – எழுத்துக்கள் குறைந்தும் மிகுந்தும் – மாறியுஞ் சொற்கடிரிந்தும் – பொருள் வேறுபட்டும் பாடத்துக்குப் பாடம்- ஒவ்வாது பிழைகள் மிகுதியுமுண்டாகின்றவால் – அவ்வாறு பிழைகளின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி – அச்சிற் பதித்தலை வழங்குவிப்பதற்கு உத்தேசித்து – நூலாசிரியர்களுள் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார ருளிச் செய்த – அறம் பொரு ளின்ப மென்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்கவுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் – முனிவர்க ளருளிச் செய்த நீதி நூலாகிய நாலடி மூலபாடமும்- இப்போதச்சிற் பதிக்கப்பட்டன’

    பதிப்பு நெறிகள்

    இந்நூலின் அச்சிற்பதிப்பதற்கு முன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்தப் பகுதி எடுத்துரைக்கும்

    “ இவை அச்சிற்பதிக்குமுன் தென்னாட்டில் பரம்பரை – ஆதீனங்களிலும் வித்வ செனங்களிடத்திலுமுள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்குமி ணங்கப் பிழையற- இலக்கண விலக்கிய வாராய்ச்சியுடையவர்களாலா ராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டன.

    இந்தக் குறிப்பு திருக்குறளின் அனைத்துச் சுவடிகளையும் தொகுத்துப் பார்த்த செய்தியை அறிவிக்கும்

    சுத்த பாடங்களைத் தீர்மானிப்பதற்குத் தனி ஒருவரின் முயற்சி பெரிதும் பயன் தராது; எனவே அறிஞர் குழு கூடி முடிவெடுத்தமையும், அவ்வாறு எடுத்த முடிவையும் பல்வேறு அறிஞர்களுக்கு அன்னுப்பி கருத்துரை பெற்றதையும் முதல் பதிப்பின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.

    “இஃதுண்மை பெற – திருப்பாசூர் முத்துசாமிப் பிள்ளை, திருநெல்வேலிச் சீமை – அதிகாரி – ம. ராமசாமி நாயக்கர் முன்னிலையி லன்னாட்டிலிருந் தழைப்பித்த சுத்த பாடங்களுட னெழுதி வந்த வரலாறு. ”

    ” இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார ருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் – நாலடியார் மூலபாடமும் திருவள்ளூவ மாலையும் – ஆக – மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள்- உரை பாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் – இலக்கண விலக்கியங்களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடந்தீர்மானஞ் செய்து – ஓரெழுத்து ஓர்சொல் நூதனமாகக் கூட்டாமற் குறையாமல னெக மூல பாடங்களுரைப் பாடங்களுங் கிணங்கனதாகத் தீர்மானம் பண்ணிய ந்தப்பாடம் பார்த்தெழுதிச் சரவை ( பிழை )பார்த்த பாடமாகையாலும் – அந்தப்படி தீர்மானம் பண்ணி யெழுதின பாடமென்பதும் – இவடங்களலிருக்குந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்றோன்றப்படும் ஆகையாலும் பாடங்களி லெவ்வளவேனுஞ் சந்தேகப்பட வேண்டுவதினன்று –

    இப்படிக்கு
    திருநெல்வேலி
    அம்பலவாணக் கவிராயர்.”

    இந்தப் பாடங்களை இவடம் வந்திருந்த திருவாவடுதுறை – ஆதீன வித்துவான்- அம்பலவாணத் தம்பிரான் சீர்காழி வடுகநாத பண்டாரம் இவர்களாலு மறுபடி கண்ணோட்டத்துடனா ராயப்பட்டன”.
    எனவே பல்வேறு அறிஞர் குழாம் கூடி மூலபாடம் தெளிந்த முயற்சி இவற்றால் புலனாகும்.

    —————————————————————————————————————————————————————————————

    ”இது பொத்தகம் கலியுகாப்தம் 4900-க்கு ஆங்கிரச தொண்டை மண்டலம் சென்னைப் பட்டணத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. மாசத் தினச் சரிதையின் அச்சுக்கூடம், ஆண்டு 1812. திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் பிழைதீர்த்துச் சென்னைப் பட்டினத்துக்கு அனுப்புவிச்சு, அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற்பதித்த காகிதப் பொத்தகத்தை ஆழ்வார் திருநகரியில், தேவர்பிரான் கவிராயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேடு எழுதியிருப்பது மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாணக் கவிராயரிடத்தில் தீர்மானமானது. ஆழ்வார் திருநகரியில் சோதித்தது 999 தை மீ……. நம்முடைய ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது

    என்னும் குறிப்பினால் அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பிலும் மூலபாடங்களைத் திருத்தி மீண்டும் பதிப்பாசிரியருக்கே அனுப்பித் தீர்மானம் செய்த பதிப்பு வரலாறு தெரிய வருகின்றது. பிழையான பாடங்கள் நூலில் புகுந்து விடக்கூடாது என்னும் உயரிய நோக்கம் இதனால் தெளிவாகும். இவ்வோலைச் சுவடியில் பிழை திருத்தங்கள் பற்றி விரிவான குறிப்புகள் இருப்பதுமல்லாமல் அட்டவணைப்படுத்தியும் எழுதியுள்ளனர்.

    அதிகாரம், குறள், ஆழ்வார்திருநகரி ஏடு, அச்சடி-பிழை -என்னும் நான்கு தலைப்புகளின் கீழ் அமைக்கப்ப்பட்டுள்ளது. எனவே, இச்சுவடி “திருக்குறள் பாட பேத ஆராய்ச்சி ஏடு” எனலாம்.

    திருக்குறளுக்குக் கிடைத்த முதல் அச்சுப்பதிப்பு நூலிலேயே, பதிப்பு நெறிகள், குறித்த பல அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்னையோர் ஒரு நூலினைப் பதிப்பிக்குமுன் மேற்கொண்ட குழு முயற்சிகள் புலனாகின்றன. அச்சு நூலினும் வரும் பிழைகளைக் களைகின்ற ஆய்வு நெறி “பாட பேத ஆராய்ச்சி ஏடு” ஒன்றினாலும் நமக்குத் தெளிவாகும்.
    —————————————————————————————————————————————————————————————
    1.ஆ.விநாயகமூர்த்தி, மூலபாட ஆய்வியல்.
    2. திருக்குறள் மூலபாடம் ( 1812 ) பக்கம் 2
    3. சரவை – எழுத்துப்பிழை ( தமிழ்ப் பேரகராதி தொகுதி 3. பக்கம் 1315 )
    4. கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச் சுவடிகள் ( மு. சண்முகம் பிள்ளை & இ.சுந்தரமூர்த்தி ) பக்கம் 30
    ———————————————————————————————————————————————

    வெள்ளி விழா மலர் , 1970-1975 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
    கட்டுரை எண் 31. திருக்குறள் முதல் பதிப்பு
    பேராசிரியர் டாக்டர் இ.சுந்தரமூர்த்தி
    தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம் ( 1995 )


    ஒரு மொழியில் எழுதப்பெற்ற எல்லாப் பனுவல்களையும் அம்மொழியைப் பேசும்/ எழுதும் மனிதர்கள் வாசித்து விடுவதில்லை; தங்கள் வாழ்வியலுக்குத் தேவையென ஏற்றுப் பயன்படுத்திக்கொள்வதுமில்லை. அவரவர் விருப்பம், அவரவர் தேவை, அவரவர் பயன்பாடு போன்றனவே அவரவர் மொழியில் எழுதப்படும் பனுவல்களை வாசிக்கச் செய்கின்றன; பயன்படுத்தச் சொல்கின்றன; கொண்டாடவும் தூண்டுகின்றன. அனைத்து வகையான அறிவுத்துறைப் பனுவல்களுக்கும் சொல்லப்படும் இக்கருத்துநிலை இலக்கியப் பனுவல்களுக்கும் பொருந்தும் என்பதை ஒருவர் மறுத்து விடமுடியாது. அதே நேரம் ஒரு மொழியில் தோன்றிய சிலவகைப் பனுவல்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன; பேசப்படுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இலக்கியப்பனுவல்கள் பலதரப்பினரிடமும் அறிமுகம் பெறுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் கிடைக்கும் பனுவல்களில் திருக்குறள் அப்படியானதொரு பனுவலாக இருக்கிறது. ஆகவே திருக்குறளைத் தமிழர்கள் திரும்பத்திரும்ப மறுவாசிப்புச் செய்கிறார்கள். கொண்டாடுகின்றார்கள். இக்கட்டுரை திருக்குறள் மறுவாசிப்பு செய்யப்படுவதின் காரணங்களையும் அதனைத் தொடர்ந்து,பல தளவாசிப்புகள் ஏன் தேவை என்பதையும் முன்வைக்கிறது. அத்துடன் அப்படியான வாசிப்புக் கொண்ட இரண்டு கட்டுரைகளையும் இணைத்துத் தருகிறது.
    உலகப் பரப்புக்குள் ஊடாட்டம்

    ஒரு மொழியில் கூடுதல் கவனம் பெறும் பனுவல்களை அம்மொழி பேசும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கான வேலைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள நினைக்கிறார்கள். தனிநபர்களாக மேற்கொள்ளப்படும் பணிகளோடு, அரசும் பொறுப்பேற்றுச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அரசு அமைப்புகளிடம் அத்தகைய கோரிக்கையை வைக்கும்போது சொந்தமொழி பேசுகின்றவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணிகளோடு, உலக மக்களுக்கும் கொண்டுபோய்த் தரவேண்டும் என்ற விருப்பமும் வெளிப்படுகிறது. அதன் மூலம் தனது மொழி உலகத்தவர்க்குத் தந்த கொடை இது எனக் காட்ட நினைக்கிறார்கள்.


    02 பிப்ரவரி 2025

     நடவடிக்கை கோருதல் மனு 🙏

    தமிழார்வலர்கள் அனைவருக்கும்

     வணக்கம்.

    மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் உலகப்பொதுமறையான திருக்குறள் வாசகம் புதியதாக இயக்கப்படுகின்ற பேருந்துகளிலும் காட்சிப்படுத்தாமலும், பழைய பேருந்துகள் பலவற்றில் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் அலட்சியப்படுத்திஇருப்பது வேதனையாக உள்ளது. திருவள்ளுவர் பெருமகனார் பெயரைத் தாங்கி அண்டைமாநிலங்களுக்கும் அரசு விரைவுப்பேருந்துகளை இயக்கி பெருமைப்படுத்திய காலம் கடந்து தற்போது திருக்குறளை அலட்சியப்படுத்திவரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் இயக்கப்படுகின்ற எல்லா பேருந்துகளிலும் மீண்டும் திருக்குறள் வாசகங்களை காட்சிப்படுத்துவதுடன் பாதுகாப்பாக பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தமிழியக்கம்,தலைமை அலுவலகம்,விஐடி பல்கலைக்கழகம்,வேலூருக்கும்  கோரிக்கை மனு அனுப்ப உள்ளேன்.என வேதனையுடன்,

    தமிழியக்கம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர்,

    செ.பரமேஸ்வரன்


    25 ஜனவரி 2025

    தஞ்சைப்பெரிய கோவில் விசித்திரமான வரலாறு ...

        தஞ்சைப் பெரியகோவிலை கட்டியவர் யார்..?

                  பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே. ஆம் இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

                   ஆனால் இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால்.

        கி.பி.1858 ல். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்து, பிரிட்டனின் நேரடி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது. அப்போதைய ஆங்கில அரசால் 1886 ல் இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. Archaeological survey of india ( ASI) .

    இத்துறையின் சென்னை மாகாண கல்வெட்டியல் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Dr. Euger julius theodor Hultzsch. சுருக்கமாய் E.ஹூல்ஸ்.

       கி.பி.1886 ல் அசோகரது கல்வெட்டை படியெடுத்தார். 1886 டிசம்பரில் மாமல்புரம் கல்வெட்டைப் படித்தார். 1887 டிசம்பர் மாதம் தஞ்சை பெரியகோவிலுக்கு வருகிறார். கோவிலைக் கட்டியது கரிகால்ச்சோழன், தனக்கு வந்த வியாதி தீர கைங்கரியமாய் கோவிலைக் கட்டினான். மோர் வித்த அழகி என்னும் மூதாட்டி கதை என்று செவிவழிச் செய்திகள் வழக்கத்தில் இருந்த நேரம் அது.

    கோவிலுக்கு வருகிறார் ஹுல்ஸ். கோவிலின் அமைப்பும் பிரம்மாண்டமும் அவரை உறைய வைத்தது. தன்னிச்சையாக அவரிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தை.

    கோவிலின் வாயில் முதல் கொண்டு எங்கெங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள். அழகான தமிழ் எழுத்துக்களில் அமைந்த கல்வெட்டுகள்.

    தனக்கு இங்கு நிறையவே வேலை இருக்கிறது என்று முடிவு செய்கிறார். ( பிற்பாடு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இத்தகவல்களை விவரிக்கிறார். )

    பொறுமையாகக் கல்வெட்டுகளை வாசிக்கத்தொடங்கிய அவர், கல்வெட்டுகளின் தொடக்கத்தை தேடினார். மிகச்சரியாக ஸ்ரீவிமானத்தின் வடபுறம் சென்றடைந்தார்..

    சண்டிகேசர் கோவிலுக்கு எதிரே விமானத்தின் வடபுற அதிஷ்டானத்து பட்டிகை..

    அங்குதான் அந்த வரிகள் இருந்தன.

    இராஜராஜனின் மெய்கீர்த்தியுடன் தொடங்கும் அக்கல்வெட்டில்,

    " பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி இராஜராஜீவரம் "

    கோவிலைக் கட்டியது பேரரசன் இராஜராஜன் என்று வெளியுலகிற்கு முதன் முதலாக அறிவிக்கிறார்.

    அப்போது .. இராஜராஜனை இவ்வாறு அழைத்தார்.

    பிறகு தனது பரிவாரங்களுடன் கோவிலில் முகாமிட்டு அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து அச்சு நூலாக வெளியிடுகிறார். இவரது பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் இவரது உதவியாளர் வெங்கையா..

    1887 - 1891.. நான்கு ஆண்டுகள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்கும் வேலை நடந்தது. தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதி எண் 2 ல்... படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சு நூலாக வெளிவரத் தொடங்கியது..

    இராஜராஜேச்சரமும், இராஜராஜனும், பெருவுடையாரும், அனைத்து மக்களின் இதயங்களை ஆக்ரமித்தார்கள்.

              மராட்டிய மன்னர்களுக்கு ஏன் முதல் மரியாதை?

                       மராட்டிய மன்னர்களுக்கு ஏன் முதல் மரியாதை என்று தொடர்ச்சியாக பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு அவர்கள் செய்தது என்ன. வரலாறு விசித்திரமான ஒன்றுதான்.

                       தஞ்சை சமஸ்தானத்தின் அதிபதியாக இருந்த வாரிசு ஒருவர் அடுத்த வேளை உணவுக்கும் ஆடைக்கும் ஆங்கிலேயரிடம் கைகட்டி நின்ற விசித்திரம்.

                        ராஜ்ய அதிகாரம் வேண்டாம். கோவில் போதும் .. என்று கோவிலுக்கு தன்னை அர்ப்பணம் செய்த மராட்டிய அரசர்.வட்டிக்கு கடன் வாங்கி லிங்கத்தை பூஜை செய்த சரபோஜி.

                     தஞ்சையும், பெரியகோவிலும் அந்நியர்களின் தாக்குதலுக்கு பலமுறை உட்படுத்தப்பட்டாலும்...

                     கி.பி. 1758 ல் .. தஞ்சை பெரியகோவில் மீது பீரங்கி தாக்குதல் தொடங்கியது. இத்தாக்குதல் நடத்தியவன் பிரஞ்சு தளபதி லாலி..

                      கி.பி. 1771 மற்றும் 1773 ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியினரின் தாக்குதலும் பெரியகோவில் மேல் நடைபெற்றது. இக்காலத்திய மராட்டிய அரசர் இரண்டாம் துளஜா.

               Robert orme என்னும் ஆங்கிலேய வரலாற்று அறிஞர் தான் எழுதிய

                          " A History of the military transaction of the British nation in indostan " என்னும் நூலில் தஞ்சை கோவிலின் மீது நடந்த தாக்குதலை வரைபடத்துடன் பதிவு செய்கிறார்.

                        நவாப் முகமது அலி, ஆங்கிலேயப் படையின் உதவியுடன் 1773 இல் தஞ்சையை கைப்பற்றி தஞ்சையின் மராட்டிய அரசன் துளஜாவை சிறை வைத்தான். அதிகாரம் படைத்த அந்த தஞ்சை அரசனின் அடுத்த வேளை உணவு நிச்சயமில்லை.

                             கி.பி. 1773 - 1776 வரை மூன்று வருடம்.. தஞ்சை பெரியகோவில் ஆற்காடு நவாப் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியினரின் இரானுவவீரர்கள் தங்கும் படைவீடாக இருந்தது. கோவிலில் துப்பாக்கி சுடும் பயிற்சி. பூஜைகள் வழக்கொழிந்து துப்பாக்கி முழக்கம் கேட்டுக்கொண்டேயிருக்கும்..

                             இன்றும் பெரியகோவிலில் நாம் அந்தத் தோட்டாத் தடங்களைப் பார்க்கலாம். பெரியகோவிலில் உள்ள முருகன் கோவிலில் " Shelter for 36 person " என்ற எழுத்துப்பொறிப்பு.

                   கருவறை அர்த்தமண்ட வாயிலில் ARP என்னும் படைக்குறியீடு.. திருச்சுற்றில் ARP WARD. என்ற அடையாளக்குறியீடுகளை இன்றும் நாம் காணலாம். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஆங்கிலேய அரசு துளஜாவை விடுவித்தது..

                    அதற்குப் பிறகு நடந்த அரசியல் உள்ளடி வேலைகள். 1798 ல் தஞ்சை அரசராக இரண்டாம் சரபோஜியை ஆங்கிலேயர்கள் நியமித்தனர்.

                         வெறும் அரசன் என்னும் அந்தஸ்து மட்டும் உனக்கு.. ஆட்சி அதிகாரம் அனைத்து வரிவசூல் எங்களுக்கு. சம்மதமா என ஆங்கிலேயர்கள் சரபோஜியிடம் கேட்க..சரபோஜியும் ஒரு நிபந்தனை விதித்தார். அனைத்தும் எடுத்துக்கொள்ளுங்கள். பெரியகோவிலை மட்டும் விட்டு விடுங்கள். அங்கு எந்த ஒரு படைப்பிரிவும் தங்கக்கூடாது. கோவிலில் தொடர்ந்து பூஜைகள் நடைபெறவேண்டும்.

                    சரபோஜியின் நிபந்தனை ஏற்கப்பட்டு, பெரியகோவிலில் மீட்கப்பட்டது. பெரியகோவிலில் பல புனரமைப்பு பணிகளை செய்கிறார் சரபோஜி. ஆங்கிலேயப்படையினரால் சிதைவுற்ற கோவிலை நன்கு சீரமைத்து, செங்கற்களால் தரைத்தளமும் அமைத்தார்.

                     தஞ்சை அருகே வீரசிங்கம் பேட்டை என்னும் ஊரில் சிதறுண்டும் புதையுண்டும் இருந்த 108 சிவ லிங்கங்களை பத்திரமாக எடுத்து பெரியகோவிலின் திருச்சுற்று மண்டபத்தில் பிரதிட்டை செய்தார். இந்நாள் 1801 மார்ச் 18 .

                    லிங்கங்களுக்கு தினசரி பூஜை செய்ய 1802 மே 29. இல் சென்னையைச் சேர்ந்த ஹாரிங்டன் என்பவரிடம் 5000 புலி வராகன் கடன் வாங்கி இக்காரியத்தை செய்கிறார்.

                    இச்செய்திகள் அனைத்தும் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணத்தில் உள்ளது. ( ஆவண மொழிபெயர்ப்பு Vol 1 no 14 /7 )..

                        இவ்வாறு தஞ்சை பெரியகோவிலை சீர்படுத்திய, சரசுவதி மகால் நூலகத்தை அமைத்துத் தந்த இரண்டாம் சரபோஜி 1832 மார்ச் 7 ஆம் தேதியில் இறைவனடி சேர்ந்தார்.

                  இவருக்குப்பிறகு இவரது மகன் இரண்டாம் சிவாஜி தஞ்சை மன்னராக ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்டார். இவரது ஆட்சி 1832 - 1855 வரை நடந்தது. இதன் பிறகு தஞ்சை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் முழுவதுமாக ஆட்பட்டது.

                     இந்த சிவாஜி மன்னர் காலத்தில் 1843 ம் ஆண்டு செப்டம்பர் 7 ம் நாள் தஞ்சை பிரகதிசுவர சுவாமிக்கு சிகரப் பிரதி ஷசை செய்து அஷ்டபந்தனம் முதலான சீரணோத்ரம் கும்பாபிசேகம் செய்தார். இச்செய்தி விமான கலசத்திலும், தஞ்சை சரசுவதி நூலக ஓலைச்சுவடியிலும் ஆவணமாக உள்ளது. 1729 ஆம் ஆண்டும் ஒரு கும்பாபிசேகம் நடந்த தகவலும் உள்ளது.

                    தஞ்சை பெரியகோவிலை அரும்பாடுபட்டு மீட்டு, இன்றைய நிலைக்கு இருக்க காரணமான சரபோஜி வாரிசை வந்தேறி என்று வசைபாடுவது தவறு. 1729 மேற்றும் 1843 ஆண்டுகளில் நடைபெற்ற வைதீக கும்பாபிசேகத்தை, 300 ஆண்டு வழக்கத்தை, ஆண்டாண்டு கால வழக்கம் எனக்கூறுவதும் தவறு.

                       சரபோஜிகளின் பிரகதிசுவரர் என்னும் பெயர் பலகை பெரியகோவில் என்றும் பெருவுடையார் கோவில் என்றும் மாறியதைப் போல்.வழக்கம் என்பது 300 ஆண்டுகள் அல்ல.கோவில் வழக்கம் 1000 ஆண்டுகளுக்கும் மேல்..

                          நன்றி.Malaichamy chinna

    திரைப்படப்பாடல்களில் இசைத்தமிழ்

       அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... 

     இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - திருவிளையாடல்

    இசை கேட்டால் புவி அசைந்தாடும், அது இறைவன் அருளாகும்.

    இசையால் வசமாக இதயமேது?

    எனப் பாடும் தமிழ் திரைப்பாடல்களில் தமிழ் இசையின் அருமை பெருமைகள் வியந்து பாடப்படுகிறது.

    எவனொருவன் நல்ல ரசிகனோ அவன் நல்ல கலைஞனாகிறான். எவனொருவன் நல்ல கலைஞனோ அவன் அறிஞனாகிறான். ஆக இசையைக் கேட்கவும், ரசிக்கவும் நம் மனதிற்கு நல்ல ஒரு ரசனை உணர்வு வேண்டும். அந்த ரசனை உணர்வு இல்லாதவர்கள் இங்கே உயிர் இருந்தும் சடங்களாகவும், உடல் இருந்தும் சவங்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

    விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இக்காலச் சூழலில் மனிதர்களுக்கு பற்பல நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புதுக் கண்டுபிடிப்புகளும் ஒரு புதிய நோய் உருவாக்கி வருகிறது என்பதே உண்மை. ஆக இன்றைய மனிதர்களின் வாழ்க்கை இயந்திரத்தனமான வாழ்வாக பலருக்கும் மாறிவருவது காலம் செய்த கோலமாகும்.

    இப்படிப்பட்ட இயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் இம்மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள் ஆங்கில மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.

    இச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம் குணமாக்க முடியும்? இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா? எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால் பற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.

    இசையால் இறை நிலை அடையாளம் என்கின்றனர் சில இசை வல்லுனர்கள். அவ்வளவு ஏன், உலகத்தில் உள்ள எல்லா மதங்களின் வழிபாட்டின் போதும் எதோ ஒரு இசைக்கருவியை வாசித்தும், பாடல்கள் பாடியும் இறைவனை வழிபட்டு வருகின்றனர். இச்சூழலில் கர்நாடக சங்கீத இசையில் சில குறிப்பிட்ட ராகங்களைக் கேட்டால் நோய்கள் குணமாகும் என தமிழகத்தில் நடந்த சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தாலி நாட்டில் உள்ள பாவியா என்ற நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவுப் பேராசிரியர் லூசியானா பெர்னார்டி தலைமையில் இந்த இசை தொடர்பான ஆய்வுகள் நடை பெற்றன. இசை மூலம் நோய்களைக் குணமாக்க முடியும் என இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். கிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம். அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்தோ அல்லது வலி குறைப்பு மருந்தோ இல்லாமல், மெல்லிய இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மெல்லிசையைக் கேட்கும் போது இதய நோய் குணம் ஆகிறதாம். அதிலும் குறிப்பாக மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகள் குணமாக மெல்லிசை பெரிதும் பயன்படுகிறது.

    நல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம், தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர். துடும்பு, பறை, மத்தளம், டிரம்ஸ் போன்ற தொல்கருவிகள் ஒலிகளைக் கேட்கும்போது நம் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தி நமது தசை நார்களை தளரச் செய்கின்றன. நமது கிராமங்களில் இன்றும் கூட தீ மிதித்தல், அலகு குத்துதல், சாமி இறக்குதல், சீர்வரிசை கொண்டு வருதல், பால் குடம் கொண்டு வருதல், தேர் இழுத்தல் போன்ற சுப காரியங்கள் நிகழும் போது தவில், பறை, உருமி, பம்பை, உடுக்கை போன்ற தொல்கருவிகள் வாசிக்கப்படுவதால் இதைக் கேட்பவர்களுக்கு ஒரு வித மனக்கிளர்ச்சி ஏற்பட்டு உள்ளத்திற்கும், உடலுக்கும் ஒரு புதிய வேகம், உற்சாகம், உண்டாவதை நாம் யாராலும் மறுக்க முடியாது. இவ்விசையைக் உற்சாகத்தில் நடனம் ஆடுவதையும், சாமி வந்து ஆடுவதையும் பார்க்கலாம்.

    இந்திய மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க மைல் கல் இசைமருத்துவம் ஆகும். அதாவது கர்ப்பிணிகளுக்கு இனிய இசை வாயிலாக சுகப்பிரசவம் நிகழுகின்ற அதிசயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் காலை, மாலை வேளையில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நல்ல ராகமுள்ள பாடலைப் பாடி வந்தால் அல்லது இனிய இசையைக் கேட்டு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் சுகப்பிரசவம் ஏற்படுகிறதாம். இந்த முறை இந்தியாவில் தமிழகத்தில் தான் முதலாவதாக அமலுக்கு வந்திருக்கிறது என்பது தமிழ்ப் பெண்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

    இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன் என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.

    நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.

    அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் – பூபாளம்
    பாடல் : சலங்கயிட்டால் ஒரு மாது
    படம் : மைதிலி என்னைக் காதலி

    பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
    படம் : முள்ளும் மலரும்

    அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்
    பாடல் : கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்
    படம் : தென்றலே என்னைத் தொடு

    பாடல் : நீ பாதி நான் பாதி கண்ணே – சக்கரவாகம்
    படம் : கேளடி கண்மணி

    பாடல் : பூப்பூக்கும் மாசம் தை மாசம் – மலையமாருதம்
    படம் : வருசம் 16

    பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம – சக்கரவாகம்
    படம் : கர்ணன்

    பாடல் : ஓராறு முகமும் ஈராறு கரமும்
    படம் : டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்

    பாடல் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
    படம் : தியாகம்

    சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி
    பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு.
    படம் : அக்னி நட்சத்திரம்

    கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி
    பாடல்: கண்ணுக்கு மை அழகு
    படம் : புதிய முகம்

    பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்
    படம் : புதிய பறவை

    பாடல்: ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    படம் : எங்கிருந்தோ வந்தாள்.

    *பாடல்: பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
    படம் : வருசம் பதினாறு.

    மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி

    பாடல்: நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி
    படம் : கோபுர வாசலிலே

    பாடல்: வசந்த காலங்கள் இசைந்து – ஸ்ரீ ரஞ்சனி
    படம் : ரயில் பயணங்களில்

    பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி
    படம் : டூயட்

    பாடல்: கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் – ஆனந்த பைரவி
    படம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.

    பாடல்: வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி – நீலாம்பரி
    படம் : சிப்பிக்குள் முத்து.
    பாடல்: பூவே இளைய பூவே – நீலாம்பரி
    படம் : கோழி கூவுது
    பாடல்: சித்திரம் பேசுதடி என் சிந்தை – கமாஸ்
    படம் : சபாஷ் மீனா

    மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ்
    பாடல் : காலம் மாறலாம் நம் காதல் – அம்சத்வனி
    படம் : வாழ்க்கை
    பாடல்: சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் – பீம்பிளாஸ்
    படம் : நல்லதொரு குடும்பம்
    பாடல்: தொகை இளமயில் ஆடி வருகுது – அம்சத்வனி
    படம் : பயணங்கள் முடிவதில்லை

    பாடல்: வா…வா…வா… கண்ணா வா – அம்சத்வனி
    படம் : வேலைக்காரன்
    பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை – பீம்பிளாஸ்
    படம் : திருவிளையாடல்
    பாடல்: பன்னிரு விழிகளிலே பணிவுடன்
    படம் : சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்
    பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா

    படம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்
    பாடல்: வாராய் நீ வாராய்
    படம் : மந்திரி குமாரி
    இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்

    நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி,ஜகன் மோகினி
    பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-அடான
    பாடல்: யார் தருவார் இந்த அரியாசனம் – அடான
    படம் : சரஸ்வதி சபதம்
    பாடல்: வருகிறார் உனைத் தேடி – அடான
    படம் : அம்பிகாபதி
    மனதை வசீகரிக்க, மயக்க – ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

    பாடல் : தானா வந்த சந்தனமே – கரகரப்பிரியா
    படம் : ஊருவிட்டு ஊரு வந்து
    பாடல் : கம்பன் எங்கே போனான் – கரகரப்பிரியா
    படம் : ஜாதிமல்லி
    பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு –ஆனந்த பைரவி
    படம் : டூயட்
    பாடல்: சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா – கரகரப்பிரியா

    படம் : அழகன்
    *பாடல்: மாதவிப் பொன் மயிலாள் – கரகரப்பிரியா
    படம் : இருமலர்கள்
    சோகத்தை சுகமாக்க – முகாரி , நாதநாமக்கிரியா
    *பாடல்: கனவு கண்டேன் நான் – முகாரி
    படம் : பூம்புகார்
    *பாடல்: சொல்லடி அபிராமி
    படம் : ஆதிபராசக்தி
    பாடல்: எந்தன் பொன் வண்ணமே அன்பு
    படம் : நான் வாழவைப்பேன்
    பாம்புகளை அடக்குவதற்கு – அசாவேரி ராகம்
    வாயுத்தொல்லை தீர – ஜெயஜெயந்தி ராகம்

    வயிற்றுவலி தீர – நாஜீவதாரா
    எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?
    திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு வரையறை கூறுகிறார்.

    நேரம் ,ராகம் ;
    5-6 மணி (காலை நேரம்) பூபாளம்
    6-7 மணிக்கு பிலஹரி
    7-8 மணிக்கு தன்யாசி
    8-10 மணிக்கு ஆரபி, சாவேரி
    10-11 மணிக்கு மத்யமாவதி
    11-12 மணிக்கு மனிரங்கு
    12-1 மணி (மதிய நேரம்) ஸ்ரீராகம்
    1-2 மணிக்கு மாண்டு
    2-3 மணிக்கு பைரவி, கரகரப்பிரியா
    3-4 மணிக்கு கல்யாணி, யமுனா கல்யாணி
    4-5 மணிக்கு (மாலை நேரம்)
    காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம் ,

    இப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள ராகங்களின் அடிப்படையிலான பாடல்களையும், இசைகளையும் கேட்டு நோயாளிகள் தங்கள் நோய்களைக் குணப்படுத்த வேண்டும். பாட்டைக் கேட்டல் நோய் தீரும் என்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த ராகங்களில் உள்ளது. இனியாவது இருக்கமானவர்கள் இனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும் ரசிப்பார்கள், கேட்பார்கள், அமைதி பெறுவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. நன்றி .தமிழ் நியூஸ் கூகுள்

    2.1 இதழ்கள் பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம். 2.1...