07 ஜூன் 2025

தமிழ்மொழியில் சொற்புணர்ச்சி இலக்கணம்

 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்படன் வரவேற்கிறோம்.

  சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் சார்பாக மாணவக்குழந்தைகளுக்கு தமிழ்மொழியில் வளம்பெறுவதற்கான தனிப்பயிற்சிகளை இலவசமாக நடத்தி வருகிறோம். அதற்கான தேடலில்  புணர்ச்சி விதிகள்...

1.2 பொருள் புணர்ச்சி

சொற்றொடர்கள் கருத்தை உணர்த்தப் பயன்படுகிறன. சொற்றொடரில் இடம்பெறும் சொற்கள் ஒன்றோடு ஒன்று பொருள் தொடர்பு கொள்வதால் கருத்து உணர்த்தப்படுகிறது. சொற்களின் இத்தொடர்பு ‘புணர்ச்சி’ எனப்படும். புணர்ச்சிக்குக் குறைந்தது இரண்டு சொற்கள் தேவை. இவ்விரண்டு சொற்களில் முதலில் நிற்கும் சொல் ‘நிலைமொழி’ எனப்படும். நிலைமொழியை அடுத்துவரும் சொல் ‘வருமொழி’ எனப்படும்.

(எ.டு)  தாமரை மலர்ந்தது.

இத்தொடரில் ‘தாமரை’ என்பது நிலைமொழி. ‘மலர்ந்தது’என்பது வருமொழி. சொற்றொடரில் உள்ள சொற்களுக்கு இடையிலான பொருள் தொடர்பே பொருள்புணர்ச்சி எனப்படுகிறது. இஃது இரண்டு வகைப்படும். அவை,

  • வேற்றுமைப் புணர்ச்சி
  • அல்வழிப் புணர்ச்சி

சொற்றொடரில் நிலைமொழியும் வருமொழியும் பொருள்தொடர்போடுதான் புணரும் எனக் கூறமுடியாது.

(எ.டு) பவளக் கூர்வாய்ச் செங்கால் நாரை

இத்தொடரில் உள்ள முதல் இரண்டு சொற்களை எடுத்துக்கொள்ளலாம். பவளம் என்பது நிலைமொழி. கூர் என்பது வருமொழி. இந்நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் பொருள் தொடர்பு சரியாக அமையவில்லை. இங்குப் பவளம் என்பது செம்மை வண்ணத்தைக் குறித்து வந்துளளது. அதற்கும் கூர்மைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நிலைமொழிக்கும் வருமொழிக்கும் பொருள் தொடர்பில்லை என்பதை இலக்கணப்படி சொல்வதானால் ‘பவளம் என்னும் சொல் கூர் என்னும் சொல்லைத் தழுவாது தொடர்ந்தது’ என்பர். இவ்வாறு நிலைமொழியோடு வருமொழி பொருள் தொடர்பின்றிப் புணருமானால், நிலைமொழியும் வருமொழியும் சேர்ந்த அத்தொடரைத் ‘தழாத் தொடர்’ என்றும், பொருள் தொடர்போடு புணருமானால், அத்தொடரைத் ‘தழுவு தொடர்’ என்றும் கூறுவர்.

மெய்யுயிர் முதலீறு ஆமிரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப்
பொருளில் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே
                             (நன்னூல் : 151)

1.2.1 வேற்றுமைப் புணர்ச்சி

ஒரு சொற்றொடரில் வேற்றுமைப் பொருளில் சொற்கள் புணர்வதை வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.

(எ.டு)

கம்பன் பாடினான்.
கம்பனைப் பாடினான்.
கம்பனோடு பாடினான்.

முதல்சொற்றொடரில் கம்பன் என்னும் பெயர் எழுவாயாக உள்ளது. இரண்டாம் சொற்றொடரில் அப்பெயர் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு ஏற்றதால் செயப்படுபொருளாக மாறிவிட்டது; மூன்றாம் சொற்றொடரில் ‘ஓடு’ என்னும் உருபு சேர்ந்ததால் உடன்நிகழ்ச்சிப் பொருளாக அப்பெயர் மாறியது. இவ்வாறு ஒரு பெயர் பல்வேறு பொருளைத் தருவதாக மாறுவதற்குக் காரணம் அப்பெயருடன் சேரும் ஐ, ஓடு முதலிய உருபுகள் ஆகும். இவ்வுருபுகள் பெயரை வேறுபடுத்துவதால் ‘வேற்றுமை உருபுகள்’ எனப்படுகின்றன. வேற்றுமை உருபுகள் ஆறு ஆகும்.

  • வேற்றுமை உருபுகள்

    வேற்றுமை உருபுகள் பெயர்களையும் அவற்றின் உருபுகளையும் இனிக் காணலாம்.

  • 1)இரண்டாம் வேற்றுமை-
    2)மூன்றாம் வேற்றுமை-ஆல், ஆன், ஒடு, ஓடு
    3)நான்காம் வேற்றுமை-கு
    4)ஐந்தாம் வேற்றுமை-இன், இல்
    5)ஆறாம் வேற்றுமை-அது, ஆது
    6)ஏழாம் வேற்றுமை-கண்

    வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகவும் வரும்; மறைந்தும் வரும். எவ்வாறு வந்தாலும் அவ்வேற்றுமைப் பொருளை அப்பெயருக்குத் தரும்.

    (எ.டு)

    பாடம் படித்தான்
    பாடத்தைப் படித்தான்.

    முதல் சொற்றொடரும் இரண்டாம் சொற்றொடரும் ஒரே பொருள் தருவதைக் காணலாம். முதல் சொற்றொடரில் பாடம் என்னும் பெயரில் 'ஐ' உருபு மறைந்து வந்துள்ளது. அதனால் அச்சொற்றொடரை இரண்டாம் வேற்றுமைத்தொகை நிலைத்தொடர் என்பர். இரண்டாம் சொற்றொடரில் பாடம் என்னும் அப்பெயரில், 'ஐ' என்னும் வேற்றுமை உருபு, வெளிப்படையாக வந்துள்ளது. இதனை இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் அல்லது வேற்றுமை விரி என்பர்.

    வேற்றுமைத் தொடர் தழுவு தொடராயும் தழாத் தொடராயும் வரும்.

    (எ.டு)

    பால் குடம் (பாலை உடைய குடம்)
    பால் குடித்தான் (பாலைக் குடித்தான்)

    முதல் தொடராகிய ‘பால் குடம்’ என்பதற்கு என்ன பொருள்? ‘இக்குடம் பாலை உடையது’ என்பதே பொருள். பால் என்பது குடத்தைத் தழுவாமல் ‘உடைய’ என்பதைத் தழுவி உள்ளதை த்தொடர் காட்டுகிறது. எனவே இத்தொடர் தழாத் தொடர் ஆகும். இரண்டாம் தொடராகிய ‘பால் குடித்தான்’ என்பதில் பால் என்பது குடிக்கப்படும் பொருள். எனவே இத் தொடரில் உள்ள வினைமுற்றான ‘குடித்தான்’ என்பதைப் ‘பால்’ தழுவி வந்துள்ளது. எனவே இத்தொடர் தழுவு தொடர் ஆகும்.

    1.2.2 அல்வழிப் புணர்ச்சி
     

    ஒரு சொற்றொடரில் வேற்றுமை அல்லாத பொருளில் சொற்கள் புணர்வது அல்வழிப் புணர்ச்சி எனப்படும்.

    (எ.டு.) ஓடி விழுந்தான்

    இச்சொற்றொடரில் வேற்றுமை உருபு எதுவும் மறைந்தோ வெளிப்பட்டோ வரவில்லை. அதனால் இது வேற்றுமை அல்லாத  சொற்றொடர் ஆயிற்று. வேற்றுமை அல்லாத புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி ஆகும். அவை பதினான்கு வகைப்படும்.

    1)வினைத்தொகை-கொல்யானை
    2)பண்புத்தொகை-செந்தமிழ்
    3)உவமைத்தொகை-தாமரைமுகம்
    4)உம்மைத்தொகை-இராப்பகல்
    5)அன்மொழித்தொகை-பொற்றொடி (வந்தாள்)
    6)எழுவாய்த்தொடர்-ஆசிரியர் வந்தார்
    7)விளித்தொடர்-நண்பா வா
    8)பெயரெச்சத்தொடர்-வந்த மனிதர்
    9)வினையெச்சத்தொடர்-வந்து சேர்ந்தார்
    10)தெரிநிலை வினைமுற்றுத்தொடர்-உறவினர் வந்தனர்
    11)குறிப்பு வினைமுற்றுத் தொடர்-நண்பர் நல்லவர்
    12)இடைச்சொற்றொடர்-மற்றொன்று
    13)உரிச்சொற்றொடர்-மாநகர்
    14)அடுக்குத்தொடர்-உண்மை உண்மை

    அல்வழித்தொடர்கள் தழுவு தொடராகவும் தழாத் தொடராகவும் வரும்.

    ........... ......... ........அல்வழி
    தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி
    எழுவாய் விளிஈர் எச்சம்முற்று இடைஉரி
    தழுவு தொடர்அடுக்கு எனஈர் ஏழே (நன்னூல் : 152)


    வாழை மரம்
         இத்தொடரில் வாழை என்பது நிலையான சொல். இதனை நிலைமொழி என்பர்.மரம் என்பது வந்து சேர்ந்த சொல். இதனை, வருமொழி என்பர். நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவதை இயல்பு புணர்ச்சி என்பர்.
         நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது, ஏதேனும் ஓர் எழுத்துத் தோன்றுதல், இருக்கும் எழுத்துத் திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அடைவதை விகாரப் புணர்ச்சி என்பர்.
     
         வாழைமரம் - இயல்பு புணர்ச்சி
         வாழைப்பழம் - விகாரப்புணர்ச்சி
     
         இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு "இயல்பு புணர்ச்சி" என்ற தொடரே அமையும். இதே போல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, "விகாரப் புணர்ச்சி" என்பதே அமைதலையும் காண்க.
         இவ்வாறு 
    தோன்றல், திரிதல், கெடுதல் 
    என்பன யாவும் சில விதிகளின் படியே அமையும். அவ்விதிகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.
     
    பல, சில என்பனவற்றின் புணர்ச்சி
    பல + பல = பலபல
    சில + சில = சிலசில
     
    இவை இயல்பாகப் புணர்ந்துள்ளன.
    பல + பல = பலப்பல
    சில + சில = சிலச்சில
     
    இவை வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணர்ந்துள்ளன.
    பல + பல = பற்பல
    சில + சில = சிற்சில
     
    இவற்றில், நிலை மொழியில் ஈற்றில் உள்ள அகரம் கெட்டு, லகரம் றகரமாய்த் திரிந்துள்ளன. இவ்வாறு, பல, சில என்னும் இரு சொற்களும் தமக்கு முன் தாம் வருமாயின் (பல + பல ; சில + சில) இயல்பாகவும், வல்லெழுத்து மிகுந்தும், நிலைமொழி ஈற்றின் அகரம் கெட்டு லகரம் றகரமாகத் திரிந்தும் புணரும். மேலும், பல, சில என்னும் சொற்களின் முன், பிற சொற்கள் வந்தால் நிலைமொழியின் அகரம் கெட்டுப் புணரும் ; கெடாமலும் புணரும் என்பதையும் அறிந்து கொள்க.
     
    இதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு :
    பல + கலை = பலகலை ; பல்கலை
    பல + சாலை = பலசாலை ; பல்சாலை
    பல + தொடை= பலதொடை ; பஃதொடை
    பல + மலர்  = பலமலர் ;     பன்மலர்
    பல + நாடு   = பலநாடு ;      பன்னாடு
    பல + வேண்டி = பலவேண்டி; பல்வேண்டி
    பல + அரண் = பலஅரண் ; பல்லரண்
    சில + சொல் = சிலசொல் ; சில்சொல்
    சில + மலர் = சிலமலர் ;      சின்மலர்
    சில + வளை = சிலவளை ; சில்வளை
    சில + அணி = சிலவணி ;      சில்லணி
     
    இதற்கான புணர்ச்சி விதி கூறும் நூற்பா :
     
    பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்இயல்பும், மிகலும், அகரம் ஏகலகரம் றகரம் ஆகலும் பிறவரின்அகரம் விகற்பம் ஆகலும் உள பிற.
                                               - (நன்னூல் நூற்பா - 170)
     
    (விகற்பம் ஆகல் - ஒரே புணர்ச்சியில் அகரம் கெட்டுப் புணர்தல் ; கெடாது நின்றும் புணர்தல்)
     
    திசைப் பெயர்ப் புணர்ச்சி:
         வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்பன திசையை உணர்த்தும் பெயர்களாதலால் இவை திசைப் பெயர்கள் ஆகும்.
         ஒரு திசைப் பெயரோடு மற்றொரு திசைப் பெயரும் (வடக்கு + கிழக்கு = வடகிழக்கு) பிற பெயர்களும் (தெற்கு + நாடு = தென்னாடு) சேருவதைத் திசைப்பெயர்ப் புணர்ச்சி என வழங்குகிறோம்.
     
         திசைப் பெயர்ப் புணர்ச்சிக்கான விதிமுறைகளை இப்பகுதியில் காண்போம்.
     
    வடக்கு + கிழக்கு     = வடகிழக்குவடக்கு + மேற்கு     = வடமேற்குவடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்குடக்கு + திசை     = குடதிசை(மேற்கு)குணக்கு + திசை     = குணதிசை(கிழக்கு)
         இவை நிலைமொழியின் ஈற்றில் உள்ள க் என்னும் மெய்யெழுத்தும், கு என்னும் உயிர்மெய்யெழுத்தும் கெட்டுப் புணர்ந்தன.
     
    தெற்கு + கிழக்கு     = தென்கிழக்குதெற்கு + மேற்கு     = தென்மேற்குதெற்கு + குமரி     = தென்குமரிதெற்கு + பாண்டி     = தென்பாண்டி
         இவை, நிலைமொழியீற்றில் உள்ள கு என்னும் உயிர்மெய் கெட்டு, றகர மெய் னகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.
     
         மேற்கு + காற்று = மேல்காற்று
         மேற்கு + ஊர் = மேலூர்
    இத்திசைப் பெயர், திசைப் பெயரல்லாத வேறு பெயர்களோடு சேரும் பொழுது, நிலைமொழியிலுள்ள உயிர்மெய்யெழுத்தான கு கெட்டு, றகர மெய், லகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.
     
    கிழக்கு + கடல்     = கீழ்கடல்
    கிழக்கு + நாடு     = கீழ்நாடு
    இத்திசைப் பெயர், பிறவற்றோடு சேரும் பொழுது, நிலை மொழியில் உள்ள ககர ஒற்றும், ஈற்றும் உயிர்மெய்யெழுத்தான குவ்வும், கிழ என்பதில் உள்ள அகரம் கெட்டுக் கீழ் என முதல் எழுத்து நீண்டும் புணர்ந்தன.
     
    மேற்காட்டியவாறு, திசைப் பெயர்கள் புணரும் முறைகளைக் கூறும் நூற்பா 
    பின்வருமாறு :
     
    திசையொடு திசையும் பிறவும் சேரின்
    நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
    றகரம் னலவாகத் திரிதலும் ஆம் பிற.
                             - (நன்னூல் நூற்பா - 186)
     
    மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி:
    நன்மை, தீமை, மென்மை, மேன்மை, வெண்மை, செம்மை போல்வன, மை என்னும் விகுதியைக் கொண்டு முடிந்து பண்பை உணர்த்தும் பெயர்கள். ஆதலால் இவற்றை மையீற்றுப் பண்புப் பெயர்கள் என்பர்.
     
    இதனை அறிய, கீழ்க்காணும் நூற்பாவை அறிந்து கொள்க.
    செம்மை சிறுமை சேய்மை தீமை
    வெம்மை புதுமை மென்மை மேன்மை
    திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர்
    இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே
                                                - (நன்னூல் நூற்பா - 135)
     
    மேற்காட்டிய மையீற்றுப் பண்புப் பெயர்கள் நிலைமொழியாக நின்று, வருமொழியோடு புணரும் போது அடையும் மாற்றங்களைக் கீழ்வருமாறு அறிந்து கொள்க:
     
    1. நல்லன்      = நன்மை + அன்     வெண்பட்டு     = வெண்மை + பட்டு     வெண்குடை     = வெண்மை + குடை     செம்மலர்     = செம்மை + மலர்
    இவை மை விகுதி மட்டும் கெட்டுப் புணர்ந்தன.
     
    2. பெரியன்     = பெருமை + அன்     சிறியன்     = சிறுமை + அன்
    பண்புப் பகுதிகளின் மை விகுதி கெடுவதோடு, இடையில் உள்ள உகரம் (ரு, று) இகரமாகத் (ரி, றி) திரிந்துள்ளன.
     
    3. மூதூர்     = முதுமை + ஊர்     பாசி     = பசுமை + இ
         முதுமை என்பதன் ஈறு (மை) போய், ஆதி (முதல்) நீண்டு மூதூர் என்று ஆயிற்று.பசுமை என்பதில் ஈறு போய் ஆதி நீண்டு பாசி என ஆயிற்று.
     
    4. பைங்கொடி     = பசுமை + கொடி     பைந்தார்     = பசுமை + தார்
         இவற்றுள் பசுமை என்பதன் ஈறு போய் முதல் நின்ற அகரம் (ப) ஐகாரமாய்த் திரிந்து (பை) வருமொழியின் முதல் எழுத்து இனவெழுத்தாய் (ங், ந்) மெய் மிகுந்து புணர்ந்துள்ளன.
     
    5. சிற்றூர்     = சிறுமை + ஊர்     வெற்றிலை     = வெறுமை + இலை
         இவற்றின் ஈறு போய் (மை) நடுவில் உள்ள ஒற்று இரட்டித்துப் புணர்ந்துள்ளன.
     
    6. வெவ்வேல்     = வெம்மை + வேல்     வெந்நீர்     = வெம்மை + நீர்
         இவற்றில், வெம்மை என்பதன் ஈறு (மை) போய், முன் ஒற்றாகிய மகர வொற்று வகர ஒற்றாகவும், ‘ந’கர ஒற்றாகவும் (வ், ந்) திரிந்து முடிந்தன.
     
    7. செங்கோல்     = செம்மை + கோல்     செந்தமிழ்     = செம்மை + தமிழ்
         இவற்றில், செம்மை என்பதன் ஈறு (மை) போய், வருமொழி முதல் எழுத்துக்கு இனவெழுத்துகளான (ங், ந்) என்பன மிக்குப் புணர்ந்துள்ளன.
     
    மேற்காட்டிய, மையீற்றுப் பண்புப் பெயர்கள் புணர்ச்சியில் அடையும் மாற்றங்களைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகின்றது.
     
     ஈறுபோதல் ; இடை உகரம் இய்யாதல் ;
    ஆதி நீடல் ; அடியகரம் ஐஆதல் ;
    தன்னொற்று இரட்டல் ; முன்னின்ற மெய் திரிதல் ;
    இனம்மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே.
    -                                               (நன்னூல் நூற்பா - 136)
     
         மேற்காட்டிய நூற்பாவின் அடிப்படையில் கீழ்க்காணும் முறையில், மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சியை மீண்டும் நினைவு கூர்க.
     
            விதி                             எடுத்துக்காட்டு
    1. ஈறு போதல்                   - வெண்மை + குடை = வெண்குடை
    2. இடை உகரம் இய்யாதல் - பெருமை + அன் = பெரியன்
    3. ஆதி நீடல்                      - பெருமை + ஊர் = பேரூர்
    4. அடியகரம் ஐ ஆதல்         - பசுமை + பொழில்= பைம்பொழில்
    5. தன்னொற்று இரட்டல்      - சிறுமை + ஊர் = சிற்றூர்
    6. முன்னின்ற மெய் திரிதல் - வெம்மை + நீர் = வெந்நீர்
    7. இனம் மிகல்                    - செம்மை + தமிழ் = செந்தமிழ்
     
    உடலும் உயிரும்:
     
    தமிழ் + ஆசிரியர்     = தமிழாசிரியர்
    கடவுள் + அருள்     = கடவுளருள்
    பொருள் + அனைத்தும் = பொருளனைத்தும்
     
    நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவை தாமே ஒன்று சேர்ந்து விடும்.
     
    இதற்குரிய விதி,
    உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
                                                        -(நன்னூல் நூற்பா - 204)
    பூப்பெயர்ப் புணர்ச்சி
    பூ + கொடி     = பூங்கொடி
    பூ + சோலை = பூஞ்சோலை
    பூ + தோட்டம் = பூந்தோட்டம்
    பூ + பாவை     = பூம்பாவை
     
    பூ என்னும் சொல் நிலைமொழியாக இருந்து, வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அதற்கு இனமான மெல்லெழுத்து மிக்குப் புணரும்.
     
    இதற்குரிய விதி,
         
    பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்
                                                     - (நன்னூல் நூற்பா - 200)
    மென்மையும் - என்ற உம்மையால், அதே வல்லெழுத்து வந்து புணரும்.
    (பூ + கொடி = பூங்கொடி ; பூ + கொடி = பூக்கொடி
    பூ + கூடை = பூக்கூடை)
     
    தேங்காய் - புணர்ச்சி:
         தேங்காய் - இச்சொல்லின் பகுதி என்ன தெரியுமா ‘தெங்கு’  (தென்னை) என்பதாகும்.
         தெங்கு + காய் = தேங்காய்
         ‘தெங்கு’ என்பது தேங்கு என நீண்டு, ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய்யெழுத்துக் கெட்டு, தேங்காய் என ஆனது.
     
    இதற்குரிய விதி,
         
    தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின்
    என்பதாகும்.
    தனிக்குறில் முன் ஒற்று
    கண் + ஒளி = கண்ணொளி
    பண் + ஓசை = பண்ணோசை
    மண் + ஓசை = மண்ணோசை
     
    இவ்வாறு, நிலைமொழியில் தனிக்குற்றெழுத்தின் முன் மெய்வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், நிலைமொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்து இரட்டித்துப் புணரும்.
    (கண்ண்+ ஒளி = கண்ணொளி)
    இதற்குரிய விதி,
     
         
    தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
     
    என்பதாகும்.
     
    உடம்படுமெய்
     
    மணி + அடித்தது = மணியடித்தது.     (இ)
    தீ      + எரிந்தது = தீயெரிந்தது     (ஈ)
    வாழை + இலை     = வாழையிலை     (ஐ)
    நிலா + அழகு = நிலாவழகு     (வ)
    சே + அழகு = சேயழகு ; சேவழகு (ய,வ)
     
    நிலைமொழியில் இகர, ஈகார, ஐகார ஈறுகள் வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) யகர உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும். ஏகாரம் இருப்பிய் யகரம் வகரம் ஆகிய இரண்டுஉடம்படுமெய்களும் தோன்றும்.
     
    உடம்படுமெய் விதியாவது,
     
    இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை
    உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்
    உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும்.
     
    உடம்படுமெய் ஒரு விளக்கம் :
    இரண்டு சொற்கள் புணரும் பொழுது, நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் உயிரெழுத்துகளாக இருப்பின் அவ்விரு சொற்களும் ஒன்றுபடாது விட்டிசைக்கும். அவை சேர்ந்திசைக்க வேண்டி, உடம்படாத அவ்விரண்டும் உடம்படுதற்கு (ஒன்று சேர்வதற்கு) அவற்றின் இடையே யகரமும், வகரமும் தோன்றும். இவ்வாறு, ஒன்றுபடுத்தற்காக வரும் மெய்களை உடம்படுமெய் என்பர்” என்பதறிக.
     
    வல்லினம் மிகும் இடங்களும் மிகா விடங்களும்:
         தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும் பொழுது கருத்திற் கொள்ள வேண்டுவன பற்றிச் சிறிது காண்போம்.எழுதும் பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும் ; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகாஇடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும் ; மொழி மரபும் சிதையும்.
         எடுத்துக்காட்டாக, யானைத் தந்தத்தால் செய்த பொம்மையைக் குறிப்பிடும் பொழுது தந்தப்பொம்மை என்று வல்லினம் மிக்கு எழுத வேண்டும். அவ்வாறு எழுதாமல் தந்தபொம்மை (வல்லினம் மிகாமல்) என்று எழுதினால், ‘யாரோ ஒருவர் தந்த பொம்மை’ என்று பொருள் மாற்றம் ஏற்பட்டு விடும்.
         இது போன்ற பிழை ஏற்படாமல் எழுதிட, வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் பற்றிய இலக்கண மரபு மாணாக்கருக்குத் தெரிந்திருந்தல் வேண்டும்.
         அவை பற்றி, பின்வருமுறையில் சில எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து கொள்க.
     
    வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்
    1. அந்த, இந்த - முதலான சுட்டுத் திரிபுகளுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
         அந்த + பையன் = அந்தப்பையன்
         இந்த + பெட்டி = இந்தப்பெட்டி
     
    2. அத்துணை, இத்துணை, எத்துணை என்னுஞ் சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
         அத்துணை + புகழ் = அத்துணைப் புகழ்
         இத்துணை + செழுமை = இத்துணைச் செழுமை
    எத்துணை + கொடுமை = எத்துணைக்கொடுமை
     
    3. அவ்வகை, இவ்வகை, எவ்வகை என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
         அவ்வகை + காடு     = அவ்வகைக்காடு
         இவ்வகை + தோப்பு = இவ்வகைத்தோப்பு
         எவ்வகை + பெயர் = எவ்வகைப்பெயர்
     
    4. மற்ற, மற்று, மற்றை - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
         மற்ற + கலைகள்     = மற்றக்கலைகள்
    மற்று + சிலை     = மற்றுச்சிலை
    மற்றை + பயன்     = மற்றைப்பயன்
     
    5. “இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
         மோர் + குடம்     = மோர்க்குடம்
         மலர் + கூந்தல்     = மலர்க்கூந்தல்
         தயிர் + பானை     = தயிர்ப்பானை
         தண்ணீர் + தொட்டி = தண்ணீர்த்தொட்டி
     
    6. “மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
         மரம் + பெட்டி     = மரப்பெட்டி
         இரும்பு + தூண்     = இரும்புத் தூண்
    தங்கம் + தாலி     = தங்கத்தாலி
     
    7. “நான்காம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
         குடை + கம்பி     = குடைக்கம்பி
         சட்டை + துணி     = சட்டைத்துணி
     
    8. “ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
         அடுப்பு + புகை     = அடுப்புப்புகை
         விழி + புனல்     = விழிப்புனல்
     
    9. “பண்புத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.
         புது + குடம்     = புதுக்குடம்
         வட்டம் + பலகை     = வட்டப்பலகை
         பொய் + செய்தி     = பொய்ச்செய்தி
     
    10. ‘இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்’ வல்லினம் மிகும்.
         வேழம் + கரும்பு     = வேழக்கரும்பு
         தாமரை + பூ     = தாமரைப்பூ
         மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்
     
    11. ‘உவமைத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.
         தாமரை + கண்ணன் = தாமரைக்கண்ணன்
         பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்
         மலை + தோள்     = மலைத்தோள்
     
    12. “அரை, பாதி என்னும் எண்ணுப்பெயர்ச் சொற்களின்” பின்வரும் வல்லினம் மிகும்.
         அரை + காணி     = அரைக்காணி
         அரை + படி     = அரைப்படி
         பாதி + பங்கு     = பாதிப்பங்கு
         அரை + தொட்டி     = அரைத்தொட்டி
         பாதி + செலவு     = பாதிச்செலவு
     
    13. ‘முற்றிலுகரச் சொற்களின் பின்’ வரும் வல்லினம் மிகும்.
         திரு + கோவில்     = திருக்கோவில்
         புது + பை     = புதுப்பை
         பொது + சாலை     = பொதுச்சாலை
     
    14. “தனிக்குறிலை அடுத்து வரும் ‘ஆ’காரத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.
         வினா + குறி     = வினாக்குறி
         பலா + பழம்     = பலாப்பழம்
     
    15. ‘ஆய், போய் என்னும் வினை எச்சங்களுக்கப்’ பின்வரும் வல்லினம் மிகும்.
         கருத்தாய் + கேட்டாள் = கருத்தாய்க்கேட்டாள்
         அன்பாய் + சொன்னார் = அன்பாய்ச்சொன்னார்
         போய் + பார்     = போய்ப்பார்
     
    16. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
         முன்னர் + கண்டோம் = முன்னர்க்கண்டோம்
         பின்னர் + காண்போம் = பின்னர்க்காண்போம்
    முன்னர் + செல்க     = முன்னர்ச்செல்க
    பின்னர் + பணிந்தார் = பின்னர்ப்பணிந்தார்
     
    17. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.
         பட்டு + சேலை     = பட்டுச்சேலை
         பத்து + பாட்டு     = பத்துப்பாட்டு
     
    வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்
         வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.
     
    1. ‘அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
         அவ்வளவு + பெரிது     = அவ்வளவுபெரிது
         இவ்வளவு + கனிவா     = இவ்வளவு கனிவா?
         எவ்வளவு + தொலைவு     = எவ்வளவு தொலைவு?
     
    2. ‘அத்தனை, இத்தனை, எத்தனை’ - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
         அத்தனை + புத்தகங்களா = அத்தனை புத்தகங்களா?
         இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?
         எத்தனை + கருவிகள்     = எத்தனை கருவிகள்?
     
    3. வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.
         அவனா + கேட்டான்     = அவனா கேட்டான்?
         அவளா + சொன்னாள்     = அவளா சொன்னாள்?
         யாரே + கண்டார்     = யாரே கண்டார்?
     
    4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.
         பெரிய + பெண்      = பெரிய பெண்
         கற்ற + சிறுவன்     = கற்ற சிறுவன்
         நில்லாத + செல்வம்     = நில்லாத செல்வம்
         அழியாத + கல்வி     = அழியாத கல்வி
     
    5. ‘எட்டு, பத்து’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
         ஒன்று + கேள்          = ஒன்று கேள்
         ஒரு + பொருள்     = ஒரு பொருள்
         இரண்டு + புத்தகம்     = இரண்டு புத்தகம்
         இரு + பறவை     = இரு பறவை
         மூன்று + குறிக்கோள்     = மூன்று குறிக்கோள்
         நான்கு + பேர்     = நான்கு பேர்
         ஐந்து + கதைகள்     = ஐந்து கதைகள்
         ஆறு + கோவில்     = ஆறு கோவில்
         அறு (ஆறு)     + சீர்     = அறுசீர்
         ஏழு + சான்றுகள்     = ஏழு சான்றுகள்
         ஏழு + பிறப்பு     = எழு பிறப்பு
         ஒன்பது + சுவைகள்     = ஒன்பது சுவைகள்
     
    6. ‘இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்’ வல்லினம் மிகாது.கல + கல  = கலகல   சட + சட  = சடசட  - இரட்டைக் கிளவிகள்
    பள + பள  = பளபள  
    தீ + தீ  = தீதீ   பார் + பார்  = பார்பார் !  - அடுக்குத்தொடர்கள்
     
    7. வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.
         கற்க + கசடற      = கற்க கசடற
         வெல்க + தமிழ்     = வெல்க தமிழ்
         வீழ்க + தண்புனல்     = வீழ்க தண்புனல்
     
    8. ‘அஃறிணைப் பன்மை’ முன்வரும் வல்லினம் மிகாது.
         பல + பசு     = பல பசு
         சில + கலை     = சில கலை
         அவை + தவித்தன     = அவை தவித்தன
     
    9. ‘ஏவல் வினை’ முன் வரும் வல்லினம் மிகாது.
         வா + கலையரசி     = வா கலையரசி
         எழு + தம்பி     = எழு தம்பி
         போ + செல்வி     = போ செல்வி
         பார் + பொண்ணே     = பார் பெண்ணே !
     
    10. ‘மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.
    கோவலனொடு + கண்ணகி வந்தாள்     = கோவனொடு கண்ணகி வந்தாள்.
         துணிவோடு + செல்க     = துணிவோடு செல்க.
    அண்ணனோடு + தங்கை வந்தாள்     = அண்ணனோடு தங்கை வந்தாள்.
     
    11. ‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகாது.
         காணிய + சென்றேன்     = காணிய சென்றேன்
         உண்ணிய + சென்றாள்     = உண்ணிய சென்றாள்
    12. “பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்” பின்வரும் வல்லினம் மிகாது.
         தாய் + கண்டாள்     = தாய் கண்டாள்.
         கண்ணகி + சீறினாள்     = கண்ணகி சீறினாள்.
    13. ‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.
         மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.
         மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.
         மலையினின்று + சரிந்தது     = மலையினின்று சரிந்தது.
     
    14. “வினைத் தொகையில்” வல்லினம் மிகாது.
         விரி + சுடர்     = விரிசுடர்
         பாய் + புலி     = பாய்புலி
     
    15. “உம்மைத் தொகையில்” வல்லினம் மிகாது.
         காய் + கனி     = காய்கனி
         தாய் + தந்தை     = தாய்தந்தை
     
    16. ‘அது, இது’ என்னும் சட்டுகளின் பின் வல்லினம் மிகாது.
         அது + பறந்தது     = அது பறந்தது.
         இது + கடித்தது     = இது கடித்தது.
     
    17. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
         எது + பறந்தது = எது பறந்தது?
         யாது + தந்தார் = யாது தந்தார்?
     
    18. ‘விளித் தொடரில்’ வல்லினம் மிகாது.
         கண்ணா + பாடு     = கண்ணா பாடு.
         அண்ணா + கேள்     = அண்ணா கேள் !
     
    19. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும் பொழுது வல்லினம் மிகாது.
         எழுத்து + கள்     = எழுத்துகள்
         கருத்து + கள்     = கருத்துகள்
         வாழ்த்து + கள்     = வாழ்த்துகள்
         போற்று + தல்     = போற்றுதல்
         நொறுக்கு + தல்     = நொறுக்குதல்
     
    20. ‘இரண்டு வட சொற்கள்’ சேரும் பொழுது வல்லினம் மிகாது.
         கோஷ்டி + கானம்     = கோஷ்டி கானம்
         சங்கீத + சபா     = சங்கீத சபா

    12 மே 2025

    ஆபிரகாம் லிங்கன் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

                      கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

       ஆப்ரகாம் லிங்கன் தன்னுடைய மகனின் 

    பள்ளி ஆசிரியருக்கு எழுதிய அற்புதமான கடிதம்

    அனைவருமே படிக்கவேண்டிய கடிதம் 


    அன்பு மிக்க ஆசிரியருக்கு,


    எனது மகன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது


    எல்லா மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல. ஆனால் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்… ஒவ்வொரு போக்கிரி உள்ள இடத்திலும் ஒரு வீரன் உண்டு; ஒவ்வொரு சுயநலமான அரசியல்வாதி உள்ள இடத்திலும் ஒரு தன்னலம் கருதாத தலைவன் உண்டு. ஒவ்வொரு பகைவனுக்கு இடையிலும் ஒரு நண்பன் உண்டு.


    இதற்குக் காலம் அதிகம் எடுத்துக் கொள்ளும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களால் முடியுமானால் அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நாம் ஈட்டியது ஒரு டாலர் என்றாலும் கண்டெடுத்த ஐந்து டாலர்களைக் காட்டிலும் அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.


    தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


    பொறாமையிலிருந்து அவனை விலகி இருக்கச் சொல்லுங்கள்.


    மனம்விட்டு சிரிப்பதன் ரகசியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நயவஞ்சகர்களை எளிதில் அடையாளம் காணவும் ஆரம்பத்திலேயே அவன் கற்றுக் கொள்ளட்டும்.


    புத்தகங்கள் என்ற அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். மேலும், வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


    பிறரை ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


    மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரடர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி அளியுங்கள்.


    கும்பலோடு கும்பலாகக் கரைந்து போய் விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


    எல்லா மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என்றாலும் அதையெல்லாம் வடிகட்டி நல்லவற்றை மட்டுமே பிரித்து எடுத்துக் கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.


    துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.


    கண்ணீர் சிந்துவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


    போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.


    நம் திறமையையும், அறிவாற்றலையும் விற்பதில் தவறே இல்லை; ஆனால் அது நமது மனசாட்சியையும் ஆன்மாவையும் பணயம் வைப்பதாக இருந்து விடக்கூடாது என்பதை அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.


    பெருங்கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை அளியுங்கள்.


    அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் கொடுத்து மற்றவர்களைச் சார்ந்திருக்க வைத்து விட வேண்டாம். ஏனென்றால் புடம் போட்ட இரும்பு மட்டுமே மிகச் சிறந்ததாக மாறுகிறது.


    தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அதே வேளையில்தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.


    அவன் தன்மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் மகத்தான நம்பிக்கை கொள்வான்.


    இது ஒரு மிகப் பெரிய சவால்தான்; இருந்தாலும் இதில் உங்களுக்குச் முடிந்ததையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுத்து விடுங்கள்.அவன் மிக நல்லவன், எனது அன்பு மகன்.


    ஆப்ரஹாம் லிங்கன்.



    16 ஏப்ரல் 2025

    2.1 இதழ்கள்

    பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம்.

    2.1.1 இதழ்களின் வரையறை

    உலக ஆங்கில என்சாட்ரா அகராதி பின்வருமாறு இதழ்களை வரையறை செய்கிறது:

    செய்திகளைச் சேகரிப்பதும், சேகரித்த செய்திகளைச் செம்மையாக்கி, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முதலிய தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் பிற இலக்கிய வகைகளாகவும் வெளியிடுவதும் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வன இதழ்கள் என்று உரைக்கப்படுகின்றது. தகவல் தொடர்புச் சாதனங்களின் வழி இலக்கிய வகைமைகளாகச் செய்திகளைத் தனித்த நடையில் எழுதுவதும் வெளியிடுவதும் ஆகிய செயல்கள் முதலியவற்றை மேற்கொள்வனவற்றையும் இதழ்கள் எனலாம். இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் வகைப்படுத்தி வரையறுக்கலாம். சான்றாக நாள்தோறும் வெளியாகும் இதழ்களை நாளிதழ்கள் எனலாம்.

    2.1.2 இதழ்களின் வகைகள்

    இதழ்கள் பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலும், இடம்பெறும் செய்திகள் மற்றும் யாருக்காக வெளியிடப்படுகின்றன என்ற அடிப்படையிலும், தர அடிப்படையிலும் (Quality) வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்களின் உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபடுத்தி வகைகளாக்கப்படுகின்றன.

  • கால அடிப்படை

    பெரும்பாலும் இதழ்கள் வெளியாகும் காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் வெளியானால் நாளிதழ் என்றும், வாரந்தோறும் வெளியானால் வார இதழ் என்றும், மாதந்தோறும் வெளியானால் மாத இதழ் என்றும், ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ் என்றும் அழைக்கப்படுகின்றன.

    கால அடிப்படையிலான இதழ்களின் பகுப்பை வரைபடம் மூலம் விளக்கலாம். 

  • தர அடிப்படை
  • வெளியாகும் செய்திகள் மற்றும் எவ்வகையான வாசகர்களுக்காகப் பிரசுரமாகின்றன என்ற அடிப்படையில் இதழ்களைப் பகுக்கலாம். (1) தரமான இதழ்கள் (2) பொது மக்கள் இதழ்கள் (3) நச்சு இதழ்கள் எனப் பிரிப்பர்.

    துறை சார்ந்த ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என்றும், பொழுதுபோக்கிற்காகப் பொது மக்கள் படிக்கும் இதழ்களைப் பொது மக்கள் இதழ்கள் என்றும் படிப்பவர்களின் உள்ளத்தை நஞ்சாக்கும் இதழ்களை நச்சு இதழ்கள் என்றும் வரையறுக்கலாம்.

  • உள்ளடக்க அடிப்படை
  • இதழ்களில் இடம் பெறும் செய்திகள் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் இதழ்களை வரையறைப்படுத்தலாம். அதாவது வெளியிடப்படும் செய்திகள் மற்றும் படைப்புகள் எதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்ற அடிப்படையில் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான பகுப்பு மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளமையைப் பாடத்தின் போக்கில் காணலாம்.

    2.1 இதழ்கள்

    பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம்.

    2.1.1 இதழ்களின் வரையறை

    உலக ஆங்கில என்சாட்ரா அகராதி பின்வருமாறு இதழ்களை வரையறை செய்கிறது:

    செய்திகளைச் சேகரிப்பதும், சேகரித்த செய்திகளைச் செம்மையாக்கி, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முதலிய தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் பிற இலக்கிய வகைகளாகவும் வெளியிடுவதும் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வன இதழ்கள் என்று உரைக்கப்படுகின்றது. தகவல் தொடர்புச் சாதனங்களின் வழி இலக்கிய வகைமைகளாகச் செய்திகளைத் தனித்த நடையில் எழுதுவதும் வெளியிடுவதும் ஆகிய செயல்கள் முதலியவற்றை மேற்கொள்வனவற்றையும் இதழ்கள் எனலாம். இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் வகைப்படுத்தி வரையறுக்கலாம். சான்றாக நாள்தோறும் வெளியாகும் இதழ்களை நாளிதழ்கள் எனலாம்.

    2.1.2 இதழ்களின் வகைகள்

    இதழ்கள் பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலும், இடம்பெறும் செய்திகள் மற்றும் யாருக்காக வெளியிடப்படுகின்றன என்ற அடிப்படையிலும், தர அடிப்படையிலும் (Quality) வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்களின் உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபடுத்தி வகைகளாக்கப்படுகின்றன.

  • கால அடிப்படை

    பெரும்பாலும் இதழ்கள் வெளியாகும் காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் வெளியானால் நாளிதழ் என்றும், வாரந்தோறும் வெளியானால் வார இதழ் என்றும், மாதந்தோறும் வெளியானால் மாத இதழ் என்றும், ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ் என்றும் அழைக்கப்படுகின்றன.

    கால அடிப்படையிலான இதழ்களின் பகுப்பை வரைபடம் மூலம் விளக்கலாம். 

  • தர அடிப்படை
  • வெளியாகும் செய்திகள் மற்றும் எவ்வகையான வாசகர்களுக்காகப் பிரசுரமாகின்றன என்ற அடிப்படையில் இதழ்களைப் பகுக்கலாம். (1) தரமான இதழ்கள் (2) பொது மக்கள் இதழ்கள் (3) நச்சு இதழ்கள் எனப் பிரிப்பர்.

    துறை சார்ந்த ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என்றும், பொழுதுபோக்கிற்காகப் பொது மக்கள் படிக்கும் இதழ்களைப் பொது மக்கள் இதழ்கள் என்றும் படிப்பவர்களின் உள்ளத்தை நஞ்சாக்கும் இதழ்களை நச்சு இதழ்கள் என்றும் வரையறுக்கலாம்.

  • உள்ளடக்க அடிப்படை
  • இதழ்களில் இடம் பெறும் செய்திகள் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் இதழ்களை வரையறைப்படுத்தலாம். அதாவது வெளியிடப்படும் செய்திகள் மற்றும் படைப்புகள் எதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்ற அடிப்படையில் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான பகுப்பு மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளமையைப் பாடத்தின் போக்கில் காணலாம்.





    15 ஏப்ரல் 2025

    உலகின் முதல் தொழிற்நுட்ப வல்லுநர்....மண் வினைஞர்கள்...

     கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு

    வருகைபுரிந்துள்ள இணையதள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

     உலகின் முதல் தொழிற்நுட்ப வல்லுநர் மண்ணை நயம்பட பிசைந்து பக்குவமாக்கி மட்பாண்டங்களையும்,உருவங்களையும் வடிவமைக்கும் மட்பாண்டத்தொழிலாளர்தாங்க. அதனால்தாங்க சங்க இலக்கியமான புறநானூற்றுப்பாடல்களில்  கோவே என அழைக்கப்படுகின்றனர்.

    இதில் தனிச்சிறப்பு என்னவெனில் உலகத்திலேயே மட்பாண்டம் செய்வோரை அரசனுக்கு இணையாகப் போற்றி கொண்டாடியது சங்க இலக்கியத்தமிழ்நூல்கள்தாங்க.

    கோ என்றால் தலைவன் எல்லாவற்றுக்கும் மேலானவன்,உயர்ந்தவன் என்று பொருள்.தலைவன் இருக்கும் இடம்தான் கோயில். அதன்பொருள் வருகின்ற சொற்கள் எல்லாம் கோ,கோன்,கோட்டை என வரும்.இது ஆளுமையுடைய , ஆற்றலுடைய, அதிகாரமுடைய அதனால்தாங்க கடவுள் வழிபடும் இடத்தை கோவில் அல்லது கோயில் என்கிறோம்.

     நமது முனோர்களின் வாழ்வியல் மற்றும் வரலாற்றுச்சான்றுக்கு ஆதாரமாக  விளங்குபவை... 

    (1)அகழ்வாராய்ச்சி,

    (2) கல்வெட்டுகள் ஆராய்ச்சி,

    (3) செவிவழிச்செய்திகள்,

    (4) சங்கத் தமிழ் இலக்கியங்கள்...

      ஒரே நிகழ்வு, ஒரு சாவு, ஒரே போன்ற துயரம், அதனால் ஒரே போன்ற கோரிக்கை. அதிலும் ஓன்று போலவே தொடங்கும் இரண்டு பாடல்கள், இரண்டும் மரணத்தைப் பற்றிப் பேசுகிறது.இரண்டிலும் மண் வினைஞர்களான மட்பாண்டத்தொழில் செய்வோரை தலைவனாக விளிக்கும் ஓரசைச்சொல்லான  'கோ' என அழைத்து கோரிக்கை விடுக்கின்றனர்.ஏனென்றால் மன்னனுக்கும் பானை செய்பவன் குயவனே, சாமான்யனுக்கும் பானை செய்பவன் குயவனே....
    சங்க இலக்கியத்தில் இறையாண்மைக்குத்தலைவனாக போற்றப்பட்டவன்..ஆன்மீகத்துக்குத் தலைவனாக போற்றப்பட்டவன்...(அன்றாட வாழ்க்கையில் திருவிழாவினை மக்களுக்கு அறிவிப்பவனாகவும்இருந்துள்ளான்)
    உலகத்தில் சிறந்த விஞ்ஞானியாக அன்றாடம் மட்பாண்டம் செய்வோன் இருந்துள்ளான்.சுரையில் தண்ணீர் கொண்டுசெல்லும்நிலைக்கு மாற்றாக மண்பானை செய்து உலக நாகரீகத்துக்கு முன்னோடியாக இருந்துள்ளான்.சிந்துச்சமவெளியில் கட்டிடங்கள் எல்லாம் சுட்ட செங்கற்களால் ஆக்கப்பட்டிருந்தன.அனைத்து செங்கள்களும் ஒரே அளவில் சிறிதளவும் பிசகாமல் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன.அவ்வாறு மூதறிஞனான குயவனை சங்க‍இலக்கியத்தமிழ்ச்சமூகம் தலைவனாக கொண்டாடப்பட்டு வந்த நிலையை அதன்பின்னர் வந்த கி.பி.7நூற்றாண்டுகாலமான வேதகாலத்தில் புறக்கணிக்கப்பட்டு தூற்றப்பட்டனர்.சிந்துவெளி நாகரீகத்தில் மிக உயர்வாகப்போற்றப்பட்ட குயவன் வேதகாலத்தில் சூத்திரனாக மாற்றப்பட்டு சரிந்துவிழச்செய்துவிட்டனர்.ஆக நாம் மன்னர் வரலாறு மட்டும் தெரிந்துகொண்டால் போதாது.மக்களின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.அதற்கு சங்க இலக்கியங்களை வாசிக்கவேண்டும். இனி கலம்செய் கோவே என குயவனை போற்றிய சங்க இலக்கியப்பாடல்கள் இரண்டினை பார்ப்போம்.

    சங்கத்தமிழ்இலக்கிய நூலான புறநானூற்று நூல் 228 வது பாடலில் புலவனுக்கு ஆதரவளித்த  அரசன் இறந்து போகின்றான்.அதனால் அந்தப்புலவன்  'கலம் செய் கோவே' என குயவனிடம் கீழ்கண்டவாறு கோருகிறான்.

    புறநானூறு 228

    பாடியவர்: ஐயூர் முடவனார்

    பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

    திணை: பொதுவியல்

    துறை: ஆனந்தப் பையுள்.


                கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
    இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
    அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
    நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!

    5.     அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?
    நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
    புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
    விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
    சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்


    10.     கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
    தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
    அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
    வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
    இரு நிலம் திகிரியா, பெரு மலை

    15.     மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?



    பொருள் விளக்கம் ;

               இறந்த மன்ன‍ன் அதாவது நாட்டின் தலைவனுடைய பெருமையை புலவர் பாடத் தொடங்குகிறார். எப்படிப்பட்ட தலைவன் இவன் தெரியுமா ? நிலப்பரப்பு முழுவதும் பரந்து விரிந்த படையின் தலைவன் இவன், புலவர்கள் பாடும் பொய்யே இல்லாத புகழ் பெற்றவன், புகழில் வானில் கதிர் வீசி ஒளிரும் ஆதித்யனுக்கு சமமானவன், செம்பியன் ( சோழ ) குலத்தில் பிறந்தவன். யானையின் மீது வலம் வரும் நெடுமாவளவன் இவன். இன்று இவன் அமரர் உலகம் சென்றுவிட்டான்,

    இருள் கவ்வுவது போல புகையை எழுப்பி நீ இவனுக்கு ஈமத்தாழி செய்யத் தொடங்கி இருக்கிறாயே, இவன் புகழுக்கு ஏற்ற அளவில் தாழி செய்யவேண்டுமென்றால் இந்த நிலம் அளவுக்கு சக்கரம் செய்து, மலையளவு மண்ணை வைத்தல்லவா செய்ய வேண்டும். அதனை பெரிய தாழியை, ஈமத்தாழி செய்யும் கோமகனே ! உன்னால் செய்ய முடியுமா ? முடிந்தால் அத்தனை பெரிய தாழியை செய் என்று 'கலம்செய் கோவே' என கோருகிறான்.

    இன்னொரு பாடல் 256 வது பாடல்...

                      தலைவன் இறந்து விடுகிறான். அநேகமாக போரில்தான் அவன் இறந்தது போய் இருக்கவேண்டும். அவனுக்கான இறுதிச் சடங்குகள் தொடங்கப் போகின்றது. அன்றய பழக்கத்தில் அவனை மண்ணில் புதைக்க ஈமத்தாழி செய்யவேண்டும். அப்போது தலைவனை இழந்த தலைவி குயவனிடம் ..

    புறநானூறு 256, 

    பாடியவர்: பெயர் தெரியவில்லை

    திணை: பொதுவியல்

    துறை: முதுபாலை

    கலம்செய் கோவே கலம்செய் கோவே!

    அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய

    சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருளி,
    வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
    அகலிது ஆக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!



    பொருள் விளக்கம்...
    வண்டிச்சக்கரத்தில் உள்ள பல்லிபோல என் வாழ்க்கை அவனை மட்டுமே சுற்றி வந்துள்ளது. அவனில்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன், அதனால் என்னையும் உடன் வைத்துப் புதைக்கும் அளவுக்கு பெரியதாக ஒரு தாழியை செய்து கொடு.           அதாவது...
               வண்டியின் ஆரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு வண்டியும் அதன் ஆரமும் போகும் வழி எது என்பதை அறியாது அது போகும் போக்கில் தானும் ஒட்டிக் கொண்டு சென்ற சிறிய வெண்ணிறம் உடைய பல்லியைப் போலவே இந்தத் தலைவனுடன் நானும் அவனை அன்றி வேறு வெளி உலகம் அறியாது இத்தனை காலம் வறண்ட பல நிலங்களை அவனுடன் ஒட்டிக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக என் வாழ்க்கையையும் கடந்து விட்டேன். இப்பொழுது அவனை இழந்த பின் நான் தனியே வாழ்வது எங்கனம்? ஆகவே அவனுடன் கூடவே எனக்கும் ஒரு இடத்தை அந்தத் தாழியில் இருக்குமாறு அதை அகலமாகச் செய்வாயாக என்கிறாள். இதில் இருக்கும் சோகம் மனதை கலங்க அடிக்கும் ஒரு மாபெரும் சோகம். ஆழியை விடப் பெரிய ஒரு சோகத்தை இத்தனை சிறு வரிகளில் அடைத்துவிட்டிருக்கிறார் புலவர்....
     




     






    23 மார்ச் 2025

    திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

     திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு

    திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதில் பிழைகள் இருக்கக்கூடாது என்பதற்காக சைவத்திருமடங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்

    திருக்குறள் முதல் பதிப்பு

    திருக்குறளின் மூலப் பதிப்புகளுள் தமிழில் மிகத் தொன்மையான பதிப்பாக இன்று நமக்குக் கிடைப்பது கி.பி. 1812-இல் வெளியான

    “திருக்குறள் மூலபாடம் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்தது ”

    என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும்.

    ’இலக்கணவிலக்கிய வாராய்ச்சியுடையவர்கலிகிதப் பிழையற வாராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டது’

    என்னும் குறிப்புடனும்

    ‘கலியுகாப்தம் ௪த௯௬ சி. ககு ஆங்கீர ௵ தொண்ட மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம்-மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிக்கப்பட்டது

    மாசத் தினச்சரிதையின் அச்சுக்கூடம்.
    இ.ஆண்டு ௬௮ளய௨

    ( 1812 எனத் தமிழ் எண்ணில் தரப்பட்டுள்ளது )

    என்னும் குறிப்புடனும்

    தலைப்புப்பக்கம் திகழ்கின்றது. இந்நூலுடன் நாலடியார் மூலபாடமும், திருவள்ளுவமாலை மூலபாடமும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன.

    மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டுள்ள இப்பதிப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் நூலாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் முதன் முதலாக கி.பி. 1712-இல் தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் ஏற்பட்டது. எனவே, அச்சுக்கூடம் ஏற்பட்டுச் சரியாக ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பதிப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

    ‘வரலாறு’ என்னும் தலைப்பில் அந்நூல் தரும் செய்தி வருமாறு.

    ‘கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையினியற்றிய – இலக்கண விலக்கியங்களாகிய- அரிய நூல்களெல்லாம் – இந்நாட்டில் – அச்சிற் பதிக்கும் பயிற்சியின்றிக் கையினாலெழுதிக் கொண்டு வருவதில் – எழுத்துக்கள் குறைந்தும் மிகுந்தும் – மாறியுஞ் சொற்கடிரிந்தும் – பொருள் வேறுபட்டும் பாடத்துக்குப் பாடம்- ஒவ்வாது பிழைகள் மிகுதியுமுண்டாகின்றவால் – அவ்வாறு பிழைகளின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி – அச்சிற் பதித்தலை வழங்குவிப்பதற்கு உத்தேசித்து – நூலாசிரியர்களுள் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார ருளிச் செய்த – அறம் பொரு ளின்ப மென்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்கவுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் – முனிவர்க ளருளிச் செய்த நீதி நூலாகிய நாலடி மூலபாடமும்- இப்போதச்சிற் பதிக்கப்பட்டன’

    பதிப்பு நெறிகள்

    இந்நூலின் அச்சிற்பதிப்பதற்கு முன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்தப் பகுதி எடுத்துரைக்கும்

    “ இவை அச்சிற்பதிக்குமுன் தென்னாட்டில் பரம்பரை – ஆதீனங்களிலும் வித்வ செனங்களிடத்திலுமுள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்குமி ணங்கப் பிழையற- இலக்கண விலக்கிய வாராய்ச்சியுடையவர்களாலா ராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டன.

    இந்தக் குறிப்பு திருக்குறளின் அனைத்துச் சுவடிகளையும் தொகுத்துப் பார்த்த செய்தியை அறிவிக்கும்

    சுத்த பாடங்களைத் தீர்மானிப்பதற்குத் தனி ஒருவரின் முயற்சி பெரிதும் பயன் தராது; எனவே அறிஞர் குழு கூடி முடிவெடுத்தமையும், அவ்வாறு எடுத்த முடிவையும் பல்வேறு அறிஞர்களுக்கு அன்னுப்பி கருத்துரை பெற்றதையும் முதல் பதிப்பின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.

    “இஃதுண்மை பெற – திருப்பாசூர் முத்துசாமிப் பிள்ளை, திருநெல்வேலிச் சீமை – அதிகாரி – ம. ராமசாமி நாயக்கர் முன்னிலையி லன்னாட்டிலிருந் தழைப்பித்த சுத்த பாடங்களுட னெழுதி வந்த வரலாறு. ”

    ” இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார ருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் – நாலடியார் மூலபாடமும் திருவள்ளூவ மாலையும் – ஆக – மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள்- உரை பாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் – இலக்கண விலக்கியங்களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடந்தீர்மானஞ் செய்து – ஓரெழுத்து ஓர்சொல் நூதனமாகக் கூட்டாமற் குறையாமல னெக மூல பாடங்களுரைப் பாடங்களுங் கிணங்கனதாகத் தீர்மானம் பண்ணிய ந்தப்பாடம் பார்த்தெழுதிச் சரவை ( பிழை )பார்த்த பாடமாகையாலும் – அந்தப்படி தீர்மானம் பண்ணி யெழுதின பாடமென்பதும் – இவடங்களலிருக்குந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்றோன்றப்படும் ஆகையாலும் பாடங்களி லெவ்வளவேனுஞ் சந்தேகப்பட வேண்டுவதினன்று –

    இப்படிக்கு
    திருநெல்வேலி
    அம்பலவாணக் கவிராயர்.”

    இந்தப் பாடங்களை இவடம் வந்திருந்த திருவாவடுதுறை – ஆதீன வித்துவான்- அம்பலவாணத் தம்பிரான் சீர்காழி வடுகநாத பண்டாரம் இவர்களாலு மறுபடி கண்ணோட்டத்துடனா ராயப்பட்டன”.
    எனவே பல்வேறு அறிஞர் குழாம் கூடி மூலபாடம் தெளிந்த முயற்சி இவற்றால் புலனாகும்.

    —————————————————————————————————————————————————————————————

    ”இது பொத்தகம் கலியுகாப்தம் 4900-க்கு ஆங்கிரச தொண்டை மண்டலம் சென்னைப் பட்டணத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. மாசத் தினச் சரிதையின் அச்சுக்கூடம், ஆண்டு 1812. திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் பிழைதீர்த்துச் சென்னைப் பட்டினத்துக்கு அனுப்புவிச்சு, அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற்பதித்த காகிதப் பொத்தகத்தை ஆழ்வார் திருநகரியில், தேவர்பிரான் கவிராயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேடு எழுதியிருப்பது மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாணக் கவிராயரிடத்தில் தீர்மானமானது. ஆழ்வார் திருநகரியில் சோதித்தது 999 தை மீ……. நம்முடைய ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது

    என்னும் குறிப்பினால் அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பிலும் மூலபாடங்களைத் திருத்தி மீண்டும் பதிப்பாசிரியருக்கே அனுப்பித் தீர்மானம் செய்த பதிப்பு வரலாறு தெரிய வருகின்றது. பிழையான பாடங்கள் நூலில் புகுந்து விடக்கூடாது என்னும் உயரிய நோக்கம் இதனால் தெளிவாகும். இவ்வோலைச் சுவடியில் பிழை திருத்தங்கள் பற்றி விரிவான குறிப்புகள் இருப்பதுமல்லாமல் அட்டவணைப்படுத்தியும் எழுதியுள்ளனர்.

    அதிகாரம், குறள், ஆழ்வார்திருநகரி ஏடு, அச்சடி-பிழை -என்னும் நான்கு தலைப்புகளின் கீழ் அமைக்கப்ப்பட்டுள்ளது. எனவே, இச்சுவடி “திருக்குறள் பாட பேத ஆராய்ச்சி ஏடு” எனலாம்.

    திருக்குறளுக்குக் கிடைத்த முதல் அச்சுப்பதிப்பு நூலிலேயே, பதிப்பு நெறிகள், குறித்த பல அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்னையோர் ஒரு நூலினைப் பதிப்பிக்குமுன் மேற்கொண்ட குழு முயற்சிகள் புலனாகின்றன. அச்சு நூலினும் வரும் பிழைகளைக் களைகின்ற ஆய்வு நெறி “பாட பேத ஆராய்ச்சி ஏடு” ஒன்றினாலும் நமக்குத் தெளிவாகும்.
    —————————————————————————————————————————————————————————————
    1.ஆ.விநாயகமூர்த்தி, மூலபாட ஆய்வியல்.
    2. திருக்குறள் மூலபாடம் ( 1812 ) பக்கம் 2
    3. சரவை – எழுத்துப்பிழை ( தமிழ்ப் பேரகராதி தொகுதி 3. பக்கம் 1315 )
    4. கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச் சுவடிகள் ( மு. சண்முகம் பிள்ளை & இ.சுந்தரமூர்த்தி ) பக்கம் 30
    ———————————————————————————————————————————————

    வெள்ளி விழா மலர் , 1970-1975 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
    கட்டுரை எண் 31. திருக்குறள் முதல் பதிப்பு
    பேராசிரியர் டாக்டர் இ.சுந்தரமூர்த்தி
    தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம் ( 1995 )


    ஒரு மொழியில் எழுதப்பெற்ற எல்லாப் பனுவல்களையும் அம்மொழியைப் பேசும்/ எழுதும் மனிதர்கள் வாசித்து விடுவதில்லை; தங்கள் வாழ்வியலுக்குத் தேவையென ஏற்றுப் பயன்படுத்திக்கொள்வதுமில்லை. அவரவர் விருப்பம், அவரவர் தேவை, அவரவர் பயன்பாடு போன்றனவே அவரவர் மொழியில் எழுதப்படும் பனுவல்களை வாசிக்கச் செய்கின்றன; பயன்படுத்தச் சொல்கின்றன; கொண்டாடவும் தூண்டுகின்றன. அனைத்து வகையான அறிவுத்துறைப் பனுவல்களுக்கும் சொல்லப்படும் இக்கருத்துநிலை இலக்கியப் பனுவல்களுக்கும் பொருந்தும் என்பதை ஒருவர் மறுத்து விடமுடியாது. அதே நேரம் ஒரு மொழியில் தோன்றிய சிலவகைப் பனுவல்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன; பேசப்படுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இலக்கியப்பனுவல்கள் பலதரப்பினரிடமும் அறிமுகம் பெறுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் கிடைக்கும் பனுவல்களில் திருக்குறள் அப்படியானதொரு பனுவலாக இருக்கிறது. ஆகவே திருக்குறளைத் தமிழர்கள் திரும்பத்திரும்ப மறுவாசிப்புச் செய்கிறார்கள். கொண்டாடுகின்றார்கள். இக்கட்டுரை திருக்குறள் மறுவாசிப்பு செய்யப்படுவதின் காரணங்களையும் அதனைத் தொடர்ந்து,பல தளவாசிப்புகள் ஏன் தேவை என்பதையும் முன்வைக்கிறது. அத்துடன் அப்படியான வாசிப்புக் கொண்ட இரண்டு கட்டுரைகளையும் இணைத்துத் தருகிறது.
    உலகப் பரப்புக்குள் ஊடாட்டம்

    ஒரு மொழியில் கூடுதல் கவனம் பெறும் பனுவல்களை அம்மொழி பேசும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கான வேலைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள நினைக்கிறார்கள். தனிநபர்களாக மேற்கொள்ளப்படும் பணிகளோடு, அரசும் பொறுப்பேற்றுச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அரசு அமைப்புகளிடம் அத்தகைய கோரிக்கையை வைக்கும்போது சொந்தமொழி பேசுகின்றவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணிகளோடு, உலக மக்களுக்கும் கொண்டுபோய்த் தரவேண்டும் என்ற விருப்பமும் வெளிப்படுகிறது. அதன் மூலம் தனது மொழி உலகத்தவர்க்குத் தந்த கொடை இது எனக் காட்ட நினைக்கிறார்கள்.