07 செப்டம்பர் 2017

அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா-017


 ஆசிரியர் தினம் மற்றும் மரம் நடுவிழா!..
   நம்ம ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில்!!.

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம். இன்று செப்டெம்பர் 05 ஆம் தேதி சத்தியமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு விதைகள் வாசகர் வட்டம் சத்தியமங்கலம்  மற்றும் புதிய மாற்றம் ஈரோடு  சார்பாக  வாழ்த்துரை வழங்கி மரம் நடுவிழாவும் நடைபெற்றது. மாணவியர் தலைமையாசிரியை மற்றும் இருபால் ஆசிரியர் மேன்மக்களுக்குவாழ்த்து மடல் வாசித்தனர்.மரம் நடுதலின் சிறப்பு பற்றியும் உரையாற்றினர்.வீட்டில் நடுவதற்கான மருத்துவத்தாவரங்களின் பெயர்களையும் வாசித்தனர்.

 எனது சிறப்புரையில்.....
                         அவையில் சூழ்ந்திருக்கும் அறிவுசார்  இருபால் ஆசிரியர் மேன்மக்களே,ஈரோடு புதிய மாற்றம் குழு சார்பாக வருகைபுரிந்துள்ள மற்றும் சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக வருகை புரிந்துள்ள சமூக அக்கறையுள்ள சான்றோர்களே, மாணவக்குழந்தைகளே அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவரான  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களது  பிறந்தநாளான செப்டெம்பர் 05 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும்  ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் விழா எடுத்து ஆசிரியர் மேன்மக்களைப் போற்றி வாழ்த்துகிறோம்.

                 .மாதாவும் பிதாவும் ஆகிய நம்மைப் பெற்றோர் இந்த உலகத்திற்கு நம்மைத்தந்துள்ளனர்.குருவாகிய ஆசிரியரோ இந்த உலகத்தையே நமக்குத்தருகின்றனர்.
 நிலம்,மலை,நிறைகோல்,மலர்நிகர்மாட்சியும்.,உலகியல் அறிவோடு உயர்குணம் இயையவும்.,அமைவன நூலுரை ஆசிரியர் ...
                              என்ற சங்க இலக்கியமாம் நன்னூல் உரையின் விளக்கமான  – பூமியையும் மலையையும் தராசு கோலையும் பூவையும் ஒத்த உயர்ந்த குணங்களும் உலகத்தில் உள்ள நன்மை தரும் செயல்களை அறிந்திருக்கின்ற அறிவுடனும் இவை போன்ற மிக உயர்ந்த குணங்கள் அனைத்தும் சேர்ந்து
 பொருந்தியிருக்கப் பெற்றவனே நூலைக் கற்பிக்கும் நல்லாசிரியனாவான்.என்றஉரைக்கேற்ப பொறுமை,அப்ர்ரணிப்பு,மகிழ்ச்சியோடு தன்னை அர்ப்பணித்து கற்றல் மற்றும் கற்பித்தலின் ஊடாக மாணவக்குழந்தைகளுக்கு அறிவைத்தந்து பண்புள்ள மனிதனாக வாழக்கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர் மேன்மக்களே.,அதனால்தாங்க ஆசிரியரை, 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என ஔவையார் ஆத்திச்சூடியில் கூறி இருக்கிறார். 

ஆசிரியர்கள்
           வெறும் காகிதமாக பள்ளியில் நுழைந்து மாணவக் குழந்தைகளாகிய உங்களை அறிவுப்புதையல் நிறைந்த புத்தகமாக வெளிக்கொணர்கிறார்கள்.

                  மண்கலவையாக பள்ளியில் சேர்ந்த மாணவக் குழந்தைகளை நாட்டிற்குத் தேவையான சிறந்த  வல்லுநர்களாக வடிவமைக்கிறார்கள்.,

            நன்னூல்35வது பாடலில் பொதுப்பாயிரம் பகுதியில்  மாணாக்கரின் குணங்களைப்பற்றி கூறப்பட்டுள்ள,
                     ''அன்ன மாவே மண்ணொடு கிளியே.,இல்லிக்குடமா டெருமை நெய்யரி.,அன்னர் தலையிடைகடை மாணாக்கர்''' -
                  என்ற வரிகளுக்கேற்ப,
               அன்னப்பறவை,பசு போன்ற முதல் மாணவக் குழந்தைகளையும்,மண்,கிளி போன்ற இடை மாணவக் குழந்தைகளையும்,ஓட்டைக்குடம்,ஆடு,எருமை,நெய்யரி என்னும் நெய் வடிக்கி அல்லது பன்னாடை போன்ற கடை மாணவக் குழந்தைகளையும் ஆசிரியர்  ''எங்கு நடப்படுகிறாயோ அங்கேயே மலராகு'' என்ற பொன்மொழிக்கேற்ப தம் பணியின் அர்ப்பணிப்புத்தன்மையாலும்,பொறுமையாலும் கல்வி,ஆற்றல்,ஊக்கம்,தன்னம்பிக்கை,விடாமுயற்சி,என அனைத்தையும் ஒருசேரக் கற்றுக்கொடுத்து சிந்தனையாளர்களையும்,அறிவியலறிஞர்களையும்,அறிஞர்களையும்,
ஆட்சியர்களையும்,ஆட்சியாளர்களையும்,மருத்துவர்களையும்,பொறியியல் வல்லுநர் மற்றும் கணினி வல்லுநர்களையும்,வேளாண்மை விஞ்ஞானிகளையும்,முப்படைத்தளபதிகளோடு நிர்வாகத்தறமையுடையவர்களையும் உருவாக்கி படிப்பாளிகளோடு சிறந்த படைப்பாளிகள் போன்ற பல்துறை வல்லுநர்களை உருவாக்கி சமூகத்தின் ஏணிகளாகவும்,தோணிகளாகவும்,பாதைகளாகவும்,படிக்கற்களாகவும்,
பாலங்களாகவும்,மெழுகுவர்த்தியாகவும்,கலங்கரைவிளக்காகவும் தன்னை அர்ப்பணித்து நாட்டின் நலனுக்காக அறிவார்ந்த சமூகத்தின் முதுகெலும்பாக விளங்கிவருகிறார்கள்.ஆசிரியர் பணி என்பது உயிரோட்டமான பணி.,உளவியல் ரீதியான பணி.,சேவைரீதியான,ஆய்வுரீதியான எல்லைகளற்ற அற்புதப்பணி ஆசிரியர் பணி.பாடப்புதக்கங்களோடு பலதுறை சார்ந்த அறிவையும் பெற வாசிப்பை ஊக்குவித்து பொது அறிவை வளர்ப்பவர்கள் ஆசிரியர் மேன்மக்கள்.உதாரணமாக அரசினர் பெண்கள் மேனிலைப் பள்ளியாம் இந்தப் பள்ளியில் பயின்ற மாணவி காரோட்டியின் மகளான திருமிகு. சி.வான்மதி அவர்கள்  கடந்தஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று  இன்று ஆட்சியாளராக உயர்வடைய இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுடைய பயிற்றுவிப்பும் வழிகாட்டலும் காரணமாகும்.

                                        இன்னொரு உதாரணமாக 1880 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று  அமெரிக்காவிலுள்ள அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியா என்ற இடத்தில் பிறந்த ஹெலன் ஆடம்ஸ் கெல்லர் தமது 19 மாதக்குழந்தையாக இருந்தபோது கடுமையான மர்மக்காய்ச்சல் தாக்கியதால் தமது பார்வையையும்,கேட்கும் திறனையும் பேசும் திறனையும் முற்றிலுமாக இழக்க நேர்ந்தது.இவ்வாறாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது 7வயது குழந்தையானபோது ஹெலன் கெல்லருக்கு பாடம் கற்பிக்க  வந்து சேர்ந்த ஆசிரியை ஆன் சல்லிவன் என்பவரது நாற்பது ஆண்டுகால கற்பிக்கும் பணியால் அர்ப்பணிப்புத்தன்மையால் ஹெலன்கெல்லர்  கல்லூரியில் சேர்ந்து  பி.ஏ. பட்டம் பெற்றதோடு ஆங்கிலத்தோடு பிரெஞ்ச்,ஜெர்மன்,கிரேக்கம்,இலத்தீன் மொழிகளைகளையும் கற்றுத்தேர்ந்து  உலகிற்சிறந்த பேச்சாளராகவும்,எழுத்தாளராகவும்,சமூகப்போராளியாகவும் மாற்றி 88 வயதுவரை வாழ்வதற்கு காரணமாக இருந்தார்

      .இவ்வாறு
ஆசிரியர் பணியில் இறுதிவரை என்ன நடத்திமுடிக்கிறார் என்பதைவிட  எப்படி நடந்து கொள்கிறார் என்பதே முக்கியமாகும்.பாடம் நடத்திமுடிப்பவர்களைவிட பாடமாக நடந்துகாட்டுபவர்களையே மாணாக்கர் என்றும் நினைவில் வைத்துப்போற்றுவர்.என்பதையும் ஆசிரியர் மேன்மக்களுக்கு நினைவுபடுத்தி மனிதனை மனிதனாக உணரவைத்து ஒழுக்கமுள்ளவர்களாகவும்,பண்புள்ளவர்களாகவும்,பொறுப்புள்ளவர்களாகவும்,
அறிவுள்ளவர்களாகவும்சாதனையாளர்களைஉருவாக்குபவர்களை
மதிப்பெண்கள் பெறுவதோடு மதிப்போடு வாழவும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் மேன்மக்களை சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்கி உடலும் மனமும் வளம்பெற்று நீண்ட காலம் வாழவேண்டி வாழ்த்துகிறேன். நல்வாய்ப்பினை அளித்த இப்பள்ளிக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.


 சத்தி சைக்கிள் ஏ.ஜே.அப்துல் ஜப்பார் அவர்கள் வாழ்த்துரையில்.,

( மேடையில் நின்று பேசினால் நூற்றுக்கணக்கான மாணவ கண்மணிகளுடன் ஒன்றினைய முடியாது என கீழிறங்கி வாழ்த்தினார்)
ஐயா அவர்களது வாழ்த்துரையில்  குறிப்பிட்ட விஷயம் -
ஆசிரியர்களே நீங்கள் மாணவியரில்  யாரையும் மக்கு என ஒதுக்கித்
தள்ளாதீர்கள், அவர்களிடம் ஏதேனும் தனித்
திறமை இருக்கும் அதைக் கண்டு பிடித்து வெளிக்கொண்டு வரப் பாருங்கள்.
உலக மேதைகள் பெரும்பாலோர் லாஸ்ட்
பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ் தான்அதாவது கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள்தான்..
ஆசிரியர்களானாலும் சரி, ஸ்டூடன்ட்ஸ்களாக இருந்தாலும் சரி உங்களை UPDATE செய்து கொண்டே இருந்
தால் தான் முன்னேற முடியும்.
எந்த சந்தேகம் வந்தாலும் தயக்கமின்றி
ஆசிரியர்களிடம் கேளுங்கள் பயப்பட வேண்டாம்.
பேருக்கு ஆசிரியராக இருக்காமல்
பேராசிரியராக திகழ்ந்தால் உலகம் உங்களை சிறப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கும் /என்று உரையாற்றிய ஜப்பார் அவர்கள் இறுதியாக 24 பக்கங்கள் கொண்ட
' ஆயிஷா'என்ற சிறு புத்தகத்தை அனைவரும் படித்து புரிதலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அப்போது 
ஒரு கிறிஸ்துவப்பள்ளியில் பயின்றஆயிஷா என்ற மாணவிக்கும் அதே பள்ளியில் விடுதி காப்பாள யுவதியாகவும், அறிவியல் ஆசிரியையாகவும் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைக்கும் நடந்த மனப்போர் பற்றி குறிப்பிட்டு ஒருமுறை வகுப்பறையிலேயே ஆயிஷா விட்டுச்சென்ற சிறு குறிப்புநோட்டில் ஆசிரியையின் பெயரை நூற்றுக்கணக்கான முறைஎழுதி அதற்கு கீழே ஆசிரியைதான் என் முதல் தாயார்.,என் முதல் ஆசிரியை,என் முதல் உயிர் என ரத்தத்தால் எழுதியிருந்ததை அறிய நேர்ந்தபோது ஆசிரியை பட்ட வேதனைக்கு அளவே இல்லையெனக் குறிப்பிட்டார்.

 ஈரோடு புதிய மாற்றம் மரம் நடு குழு சார்பாக திருமிகு.அய்யப்பன் அவர்கள் மரங்கள் நடுவதன் சிறப்பு பற்றி விழிப்புரை ஆற்றினார்.

நிறைவாக விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர் திருமிகு.யாழினி ஆறுமுகம் அவர்கள் நன்றி கூறினார்.
புதிய மாற்றம் ஈரோடு மற்றும் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக பள்ளி வளாகத்தில் மரங்கள் நட்டு காடு வளர்ப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...