27 செப்டம்பர் 2015

வகை (3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப்போட்டி

                     தலைப்பு;
                                    சமூகமே! பெண்களுக்கும் சம உரிமை கொடு.

 முன்னுரை;
          காலங்காலமாக தாயாகவும், தாரமாகவும், சகோதரியாகவும், மகளாகவும்  என குடும்பத்துடன் பின்னிப் பிணைந்து நம்முடைய இனத்தை விருத்தி செய்யும் மாபெரும் சக்தியாக விளங்கி வரும் பெண்களை இந்த சமூகமானது குறிப்பாக ஆணாதிக்கமானது அடிமைப்படுத்தி வைத்திருப்பது சமூகத்தின் முன்னேற்றத்திற்கே பெரும் தடையாக இருக்கிறது.ஆதிகாலத்தில் சமூகத்திற்கு தலைமையேற்று வழிநடத்திய பெண்ணினமானது  இயற்கையின் விதிப்படி மாதந்தோறும் அந்த மூன்று நாட்கள் போன்ற காரணங்களுக்காக சுகாதாரத்திற்காகவும்,ஓய்வெடுக்கவும்  வீட்டில் தங்கியது போன்ற  பல்வேறு காரணங்களைக்கூறி அடிமைப்படுத்தப்பட்டாள். 19ம் நூற்றாண்டுகளுக்குப்பிறகு விழிப்படைந்த பெண்கள் குழுக்களாக உருவாகி தங்களுக்கும் கருத்துரிமை,செயல்பாடுகள்,வாக்குரிமைகளில் சுதந்திரம் வேண்டும் என போராடியதன் விளைவாக உலக அளவில்  1848ஆம் ஆண்டு மார்ச் 8ந் தேதி முதல் சர்வதேச மகளிர்தினவிழா கொண்டாடப்பட்டு உலகெங்கும் கருத்தரங்குகளாலும்,விவாதங்களாலும்  பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு கொடுத்து வருகின்றனர்.

 பெண்கள் மீதான இன்றைய சமூகப்பார்வை;
             இந்த சமூகமானது  நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் பெண்ணினத்தை தன் தவறான கண்ணோட்டத்தால் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதோடு பெண்களை கருவிலேயே அழிப்பதும்,பிறந்துவிட்டால் கள்ளிப்பால்,நெல் கலந்த பால்,போன்றவற்றை ஊட்டிக் கொல்வதும் அல்லது அடிமைப்படுத்தி சமூகத்தில் இரண்டாம் நிலையில் வைத்து ஆண்களுக்கே முதலிடம் கொடுக்கிறது.
  பெண்ணானவள்  பருவநிலை எய்திய சமயத்தில் முதல்முறை மாதவிடாய் நிகழ்வை திருவிழா போல ஊரைக்கூட்டி கொண்டாடும் இந்த சமூகம் அடுத்துவரும் நிகழ்வுகளில்,சுகாதாரம் மற்றும் ஓய்வு கருதி ஒதுக்கிவைக்கப்படும் அந்த மூன்று நாட்களில் தீண்டத்தகாதவளாக ஒதுக்குகிறது.தூய்மையை ''தூமை என்னும் தீட்டு''  என்று சொல்லி கேவலப்படுத்துகிறது. இதனால் பெண்ணினமே கூனிக் குறுகும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது.மனித சமூகம் என்பது பலர்பால் ஆக இருந்தாலும் அது மரியாதை காரணமாக ஆண்களையே குறிப்பிடுகிறது.
எல்லா வகை நிகழ்வுகளிலும் வெற்றி என்றாலே அது ஆண்களே என்ற மனப்பான்மையை தருகிறது.பெண்கள் வெற்றியடைந்தால் ஏளனமாகப் பார்க்கும் நிலை நிலவுகிறது.

       அறிவியல் வழியானாலும் சரி,ஆன்மீக வழியானாலும் சரி பெண்களை தாழ்த்தியும்,ஆண்களை உயர்த்தியும் இந்த சமூகம் பார்க்கிறது.பெண்கள் என்றாலேஆணின் உடற்பசியை தீர்ப்பவளாகவும்,ஆணின் விருப்பத்திற்காகவே பிறந்தவளாகவும்,அலங்காரப்பொருளாகவும்,சமையல் வேலை உட்பட வீட்டுவேலைக்காரியாகவும்,குழந்தை பெற்று வளர்ப்பவளாகவும்,இந்த சமூகம் பார்க்கிறது.குறிப்பாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடையவளாக பார்க்கும் சமூகம்  பல பெண்களுடன் உறவு வைக்கும் ஆண்களை மட்டும்  கண்டுகொள்வதும் இல்லை,கண்டுகொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை.
பெண்களைப்பொறுத்தவரை தன்னுடைய கணவன் உயிருடன் இருந்தால் மட்டுமே பூவும்,பொட்டும் வைத்துக்கொண்டு  அணிகலன்கள் உட்பட அழகிய வண்ண ஆடைகளை உடுத்தும் தகுதியுடையவளாக இந்த சமூகம் பார்க்கிறது.கணவன் இறந்துவிட்டாலோ எவ்வித ஆசைகளோ,விருப்பங்களோ இருக்கக்கூடாது என்று கூறி வெள்ளை உடை உடுத்தி தனிமைப்படுத்தி சமூகத்தால் அடையாளப்படுத்தப்படுகிறாள்.உடன்கட்டை ஏற்றப்படுகிறாள்.(தற்போது இந்நிலை இல்லை என்பது வேறு) ஆனால் ஆண்களுக்கோ  தன் மனைவி இறக்க நேரிட்டால்  உடனே வேறொரு பெண்ணை மணமுடித்து வைக்கின்றது.பெண் குழந்தைகளையும் வயதான ஆணுக்கு திருமணம் செய்து வைக்கிறது.ஆண்களிடம் உள்ள குறை காரணமாக  குழந்தைப்பேறு நடைபெறாமல் போனால் கூட பெண்களே மலடி என்ற இழிசொல்லுக்கு ஆளாக்கப்படுகிறாள்.
                            இந்த சமூகமானது இலக்கியங்கள்,கிராமப்புறக் கலைகளான ஆடல்,பாடல்களிலும் பெண்களின் உடல் உறுப்புகளைப் பற்றிய ஆபாச வசனங்களையே உச்சரித்து  மனமகிழ் கொள்கிறது.

                   சிறு வணிகத்திலிருந்து பெரிய நிறுவனங்கள் வரை வியாபார விருத்திக்கான விளம்பரங்களில் பெண்களின் உடலமைப்புகளை  கவர்ச்சியாக காட்டுகிறது.இன்றைய பொழுதுபோக்கு அம்சங்களான திரைப்படங்கள்,இணையதளங்கள்,சமூக வலைத்தளங்கள், அலைபேசி வலைத்தளங்கள்,தொலைக்காட்சி நாடகங்கள்  போன்ற எல்லா நவீன தொழிற்நுட்ப சாதனங்களிலும் பெண்களை ஆபாசமாகவும்,போகப்பொருளாகவும் சித்தரித்துக் கேவலப்படுத்துகிறது.தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.

           ஆண்களின் செய்கைகள் மற்றும் நடத்தைகளைப் பற்றிக்  கண்டுகொள்ளாத சமூகம்  பல பெண்களோடு தொடர்பு கொள்வதை அலட்சியமாக கருதும் இந்த சமூகமானது ஒரு பெண் இன்னொரு ஆணுடன் பேசினாலே பாலியல் குற்றமாகக் கருதுகிறது.
  திருமண வயது வந்த ஆண் எப்படி இருந்தாலும் கவலைப்படாத சமூகமானது அவனுக்கு மனைவியாகத் தேடும் பெண் மட்டும் அழகுடையவளாக இருக்க வேண்டும்,பத்தினியாக இருக்கவேண்டும்,குடும்பத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்,பண்பாடு உடையவளாக,பணிவுடையவளாக இருக்க வேண்டும்.இள வயது உள்ளவளாகவும் வேண்டும்.உடலில் எவ்விதக்குறைகளும் இல்லாதவளாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.

                    தனது வயிறு,தொப்புள்,மார்பு என மேற்சட்டையில்லாமல் அரை நிர்வாணமாக திரியும் ஆண்களை கண்டுகொள்ளாத இந்த சமூகமானது பெண்களை மட்டும் அவளது விருப்பத்திற்க்கேற்றபடி சற்று அளவு குறைவான ஆடைகளை அணிந்திருந்தால் கூட ஆபாசமாகப் பார்க்கிறது.

            சமூகமானது பெண்கள் வேலைக்குச்சென்று சம்பாதிக்கும் இன்றைய காலத்தில்கூட  சம்பாதித்த பணம் உட்பட அனைத்து அதிகாரங்களையும் ஆணிடம் கொடுத்துவிட்டு சமைப்பது,துவைப்பது,சுத்தம் செய்வது, போன்ற வீட்டு நிர்வாகத்தை மட்டும் பெண்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது.பெண்களுக்கு நல்வழி காட்டவேண்டிய  வயதில் மூத்த பெண்களே இவ்வாறாக பெண்களைஅடிமைப்படுத்துவதுதான் வேதனை தருகிறது. ஆண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை பெண்குழந்தைகளுக்கு கொடுக்க இந்த சமூகம் மறுக்கிறது. குழந்தைப்பருவத்திலிருந்தே பெண்களுக்கு சின்னஞ்சிறு விசயங்களுக்குக்கூட கட்டுப்பாடுகள் விதிக்கிறது.பிஞ்சு மனதிலேயே அடிமைத்தனத்தை விதைக்கிறது.

 பெண்கள் முன்னேற யோசனைகள்;
               தாயில்லாமல் யாருமே இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.நம்மை ஈன்ற தாயே பெண்தான் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.முதலில் நம் வீட்டில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.பெண்கள் வீட்டில் சமைப்பது,சாப்பிடுவது,கணவனுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வது,குழந்தை பெற்று வளர்ப்பது,தொலைக்காட்சி நாடகங்களைப்பார்த்துவிட்டு தூங்குவது என்பதையே தங்களது வேலைகளாக ஏற்கும் நிலையில் மாறுதலைக்கொண்டுவர வேண்டும்.

                       கல்வி கற்க வேண்டும்,பொது விசயங்களை அறிந்து கொள்ள செய்திகளை பார்க்க வேண்டும்,வெளியுலக நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும்,வாய்ப்புக்கிடைத்த நேரங்களில் எல்லாம் வாசிப்புத்திறனை அதிகப்படுத்த வேண்டும்,அதற்காக நூலகங்களைப் பயன்படுத்த வேண்டும்.நல்ல புத்தகங்களை தோழியாக்கிக்கொள்ள வேண்டும்.இணையதளங்களிலுள்ள மின்னூல்களையும்,சமூக வலைத்தளங்களையும், படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.தன்னிடம் உள்ள குறைகளையும்,பலவீனங்களையும் அறிந்து அவற்றை நீக்க வேண்டும்.கணவனுக்கு மனைவியாகவும்,குடும்ப நிர்வாகத்தைமட்டும் கவனிப்பவளாகவும்,குழந்தை பெற்று வளர்ப்பதுமே வாழ்க்கை என்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும்.
 ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழ்வதே குடும்பம்  குடும்பங்கள் சேர்ந்ததே சமூகம் என்பதை உணர வேண்டும்.ஆணின் முன்னேற்றத்திற்கு ஒரு பெண்ணின் துணை அவசியத்தைப்போல ஒரு பெண்ணுக்கான சுதந்திரத்திற்கும் ஒரு ஆணின் ஆதரவு அவசியம்.ஆதலால் பெண்களும் சுதந்திரமாக சுய சிந்தனையுடன் தன் விருப்பம்போல வாழ அனுமதி கொடுக்க வேண்டும்.சம உரிமை கொடுக்க வேண்டும்.  சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்பதற்காக மது அருந்துதல்,போதைப்பொருட்கள் பயன்படுத்துதல்,புகை பிடித்தல் என பொரும்பாலான ஆண்கள் செய்யும் தவறுகளை  பெண்களும் செய்யக்கூடாது.சம உரிமை என்பது பெண்களைப்போல் ஆண்களும் தவறான பழக்கங்களை செய்யக்கூடாது என்பதாகும்.அதே நேரத்தில் சம உரிமை,சுதந்திரம் என்பதற்காக கட்டுப்பாட்டை இழக்காமல் எச்சரிக்கையுடன் தான் அணியும் உடையிலிருந்து,நமது குறிக்கோள், சமூக அக்கறை,பொது அறிவினை வளர்த்துக்கொள்ளல்  உள்ளிட்ட பழகும் தன்மை வரை அனைத்திலும் கவனமாக இருப்பது அவசியம் ஆகும்.

முடிவுரை;
               பெண்கள் அனைவருமே ஆண்களுக்கு நிகராக சம அறிவும்,ஆற்றலும்,செயலும் கொண்டவர்கள்,நமது இனவிருத்திக்காகவே இருபாலினமாக பிறந்துள்ளோம் என்ற உண்மையினை அனைவரும் உணர வேண்டும்.ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும்.
               சாலைப்பயணத்தில் முன்,பின் அறிமுகம் இல்லாத ஓட்டுநருக்கு முன் இருக்கையில் இடம் கொடுத்து அமரவைத்து நம்பிக்கையுடன் பயணிக்கும் நாம்,நமது வாழ்க்கைப்பயணத்திலும் முன்னேற நமது பெண்கள் மீது நம்பிக்கை வைத்து முன்னேறும் வாய்ப்பினை அளிக்க வேண்டும்.அரசாங்கமும் அக்கறைகொண்டு அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பாதுகாப்புடன் முன்னேறுவதற்கான உரிய வழிகாட்ட வேண்டும்.பெண்களின் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றமாகும்.

 வகை (3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைப்போட்டிக்கு எழுதிய  -   சமூகமே! பெண்களுக்கும் சம உரிமை கொடு.என்ற தலைப்பிலான  இந்தக் கட்டுரையானது எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன்.இந்த படைப்பு ,வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் ,மின் தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015 க்காவே எழுதப்பட்டது என உறுதியளிக்கிறேன்.இந்தப்படைப்பானது இதற்கு முன் வெளியான படைப்பல்ல,முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.
  எனது பெயர்;
C.பரமேஸ்வரன், 9585600733
வலைத்தள முகவரி
 http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.



13 கருத்துகள்:

  1. நல்ல விரிவான கட்டுரை பென்ணியம் பற்றி ஆண்கள் கூறுவது மாற்றத்தைக்காட்டுகிறது...வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய அம்மையீர்,
      வணக்கம். ஆண்,பெண் இருபாலரும் இன்றி இனமே கிடையாது!.அடுத்து நம்மை ஈன்றவளும்,இணையானவளும்,உடன்பிறந்தாளும்,எனக்குப்பிறந்தாளும் பெண் இனமே!!.ஆதலால் உண்மையை உரக்கச் சொல்லியாவது உணர வைப்போம்.தங்களது கருத்துரைக்கு நன்றிங்க.
      என அன்புடன்,
      C.பரமேஸ்வரன், 9585600733
      http://konguthendral.blogspot.com,
      முகநூல் முகவரி parameswaran driver

      நீக்கு
  2. மரியாதைக்குரிய அம்மையீர்,
    வணக்கம்.பிறக்கும்வரை நாம் அனைவருமே அந்த பத்து மாதங்கள் தாய் என்ற பெண்ணின் தூய்மையில் தாங்க முழுகிக் கிடந்தோம்.நடப்பன,ஊர்வன,பறப்பன என அனைத்து ஜீவன்களுக்கும் தாய்தாங்க பாதுகாத்து வளர்த்து பருவமடையும்வரை கண்காணிக்கிறாள்.தகப்பன் யார் என யாருக்குத் தெரியும்? மனித இனத்தில் மட்டும் தாய் குறிப்பிட்டவரே தகப்பனாக காட்சியளிக்கிறார்.
    என அன்புடன்,
    C.பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    பதிலளிநீக்கு
  3. அன்பு நண்பருக்கு கில்லர்ஜி.....
    பெண்களைப்பற்றிய உயர்வான சிந்தனைகளோடு அருமையான கட்டுரையை தந்து இருக்கின்றீர்கள் உலகில் ஆணில்லையேல் பெண்ணில்லை பெண்ணில்லையேல் ஆணில்லை இந்த உண்மை இன்ற சில ஆண் வர்க்கத்தினருக்கு கசக்கின்றது (ஆம் உண்மையின் சுவை கசப்பானதே...) சரியான சவுக்கடியான விடயங்கள் போட்டியில் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    நேரமிருப்பின் எனது போட்டிக்கட்டுரைகளை காண அழைக்கின்றேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய ஐயா,
      வணக்கம். தங்களது கட்டுரை உட்பட அனைத்து கட்டுரைகளையும் நேரம் உள்ளபோது படித்து வருகிறேன்.படித்துக்கொண்டே இருப்பேன்..தங்களது கருத்துரைக்கு நன்றிங்க,என அன்புடன்,
      C.பரமேஸ்வரன்,
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம்-638402

      நீக்கு
  4. நன்றிங்க ஐயா......
    மரியாதைக்குரிய தமிழாசிரியப்பெருந்தகையீர்,
    வணக்கம்.
    தங்களது கருத்துரைக்கு நன்றிங்க,
    என தங்களது முன்னாள் மாணவன்,
    C.பரமேஸ்வரன்,
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    பதிலளிநீக்கு
  5. மரியாதைக்குரிய திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களே,
    வணக்கம். தங்களைப்போன்ற சான்றோர்களால்தாங்க நானும் இந்தளவு கணினியிலும் இணையத்திலும் சிறப்பாக செயல்பட முடிகிறதுங்க.தங்களது அறிவிப்பினை ஏற்று வாழ்த்தி வணங்குகிறேன்.என அன்புடன்,
    C.பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்638402

    பதிலளிநீக்கு
  6. பெண்களை சமூகம் நடத்தும் விதமும் அதனின்றும் வெளிப்பட பெண்களுக்கு தாங்கள் சொன்ன ஆலோசனைகளும் மிகவும் சரியானதே.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய அம்மையீர்,
      வணக்கம். தங்களது கருத்துரைக்கு நன்றிங்க.
      என அன்புடன்,
      C.பரமேஸ்வரன்,
      http://konguthendral.blogspot.com
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம்638402

      நீக்கு
  7. மரியாதைக்கூறிய அய்யா! தங்கள் கட்டூரை விரிவாகவும் தற்போது நடைமுறையில் இருக்கும் அவலங்களையும் சரியாக சரவெடியாக சொல்லியுள்ளீர்கள்!

    ஆனால் இன்றைய பெண்கள் பலரும் பலதரப்பட்ட கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு வருவதற்கூட தயங்குகிறார்கள்! என்பதிலும் உண்மை இருக்கிறது!

    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய கரூர் பூபகீதன் அவர்களே,
      வணக்கம்.
      தங்களது கருத்துரைக்கு நன்றிங்க.என அன்பன்,C.பரமேஸ்வரன், சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம் 638402

      நீக்கு
  8. பெண்கள் மீதான இன்றைய சமூகப்பார்வையை மிகவும் தீர்க்கமான அவதானிப்புடன் எழுதியுள்ளீர்கள். பெண்கள் முன்னேறுவதற்கான யோசனைகள் அனைத்தும் நன்று. மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டக் கட்டுரைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரியவரே,
      வணக்கம். தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றிங்க.தங்களைப்போன்றோரின் அனுபவப் பகிர்ந்தளிப்பு மற்றும் அனுபவத்தால் என்னறிவுக்கு எட்டியவைகளை தொகுத்து பதிவிட்டுள்ளேன்.
      என அன்புடன்,
      Cபரமேஸ்வரன்,
      http://konguthendral.blogspot.com
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம் 638402

      நீக்கு

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...